சுற (Sura)

திரைவிமர்சனம் (அகில்)

நடிகர்கள்:    விஜய், தமன்னா, தேவ் கில், வடிவேல், வெண்ணிற ஆடை மூர்த்தி, ராதாரவி

இசை:             மணிஷர்மா

தயாரிப்பு:    சங்கிலிமுருகன்

இயக்கம்:    எஸ்.பி.ராஜ்குமார

ஓளிப்பதிவு:  ஏகாம்பரம்

 

கதைச் சுருக்கம்: தமிழகத்தில் உள்ள கடற்கரைக் கிராமமான யாழ்நகர் குப்பத்தில் தாயுடன் வசித்து வருகிறார் சுறா என்று அழைக்கப்படும் விஜய். அக்குப்பத்தில் வாழும் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை தீர்க்கும் அறிவிக்கப்படாத தலைவன் சுறா. அந்த மீனவக் குடும்பங்களை விரட்டி அவ்விடத்தை அபகரிக்கப் பார்க்கிறான், வழமையான வில்லன்கள் பாணியில் கொலை, கள்ளக்கடத்தல் என்பவற்றில் ஈடுபடும் மந்திரி. அந்த  வில்லனை அழித்து அவனது பணத்தைக் கொண்டே  மீனவ மக்களுக்கு வீடுகட்டிக் கொடுத்து தனது சபதத்தை நிறைவேற்றுகிறான் நாயகன்.

 

தனது நாய் காணாமல் போனதற்காக கடலுக்குள் குதித்து தற்கொலை செய்துகொள்ள வருகின்ற தமன்னாவை சுறா காப்பாற்றுகிறான். படத்தில் வெகுளிப் பெண்ணாக வந்து நான்கு பாடல்களுக்கு விஜய்யுடன் ஆட்டம் போடுவதுடன் தமன்னாவின் வேலை முடிந்து விடுகிறது.

 

தமிழ் பேசும் மக்களை கவரும் விதமாக யாழ்நகர் குப்பம் என்று அந்த இடத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. கதையில் ஆங்காங்கே இரட்டை அர்த்தம் தொனிக்கும் விதமாக இலங்கைப் பிரச்சனையும் பேசப்படுகிறது.

 

வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தியின் கலவையாய் வரும் நகைச்சுவை மட்டுமே படத்தில் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.

 

வில்லனாக நடிக்கும் தேவ் கில் மீசை துடிக்க, கண்களை உருட்டி, மிரட்டி செய்யும் வில்லத்தனங்கள் ஓகே.

 

'என் பேரைக் கேட்டா வெடிக்கும் தோட்டா...'  பாடல் இளம் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. குத்துப் பாட்டுக்கு விஜய்யின் ஆட்டம் பலே. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்திற்கு குறைவில்லை.

 

ஓளிப்பதிவாளர் ஏகாம்பரம், மற்றும் இசையமைத்த மணிஷர்மா இருவரும் தங்கள் பணியை ஓரளவுக்கு நன்றாகச் செய்திருக்கிறார்கள்.

 

நடிகர் விஜய் இனி வரும் காலங்களிலாவது ரசிகர்களை திருப்திப்படுத்தும் நல்ல படங்களை தெரிவுசெய்து நடிக்க வேண்டும். விஜய்யின் ஐம்பதாவது படம் என்றவகையில் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது.

 

தயாநிதி மாறனின் படம் என்பதால் சன் தொலைக்காட்சி, தினகரன் பத்திரிகை போன்றவற்றின் பெரும் எடுப்பிலான விளம்பரத்துக்கு சற்றும் பொருத்தமில்லாமல் கதை சப்பென்று இருந்தது. வழமையான ஹீரோத்தனங்களும், நாயகியைக் கடத்திச் சென்று மிரட்டுதல், கதாநாயகன் ஆகாயம் வரை எம்பிக் குதித்து சண்டை போடுவது என்று வழமையான அயிட்டங்களையே படத்தில் காணமுடிகிறது.  

 

மொத்தத்தில் சுறா நாறிப் போன பழைய மீன்தான்.