சமகால வாழ்க்கையும், இலக்கியமும்

மன்னார் அமுதன்

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த 
நிலைகெட்ட
மனிதரை நினைந்துவிட்டால் என எதிர்மறைச் சமூகச் சூழலுக்கும், பிரிவினைகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக அன்றே பாடினான் மகாகவி. மூடநம்பிக்கைகளில் இருந்து பெருமளவில் விடுபட்டிருக்கும் இன்றைய பகுத்தறிவுச் சமுதாயம், நாகரிக மோகத்திலும், வழி தவறிய வாழ்வியல் நெறிகளிலும் சீரழிந்து கொண்டிருப்பது மனச்கசப்பான விடயமே. அன்றைய காலம் தொட்டு, இன்றை காலம் வரை வெளிவருகின்ற அனைத்து இலக்கிய நூல்களும், கலை வடிவங்கங்களும் மக்களுக்கு ஏதோவொரு வகையில் விழிப்புணர்வூட்டக் கூடிய கருத்துக்களையே மையக் கருக்களாகக் கொண்டுள்ளன. படைப்பாளிகள் காலத்தின் கண்ணாடிகள் என எடுத்துக் கொண்டால்இவர்கள் சமகாலத்தில் இருட்டில் நடக்கும் நிகழ்வுகளைத் தான் வெளிச்சமிடுகிறார்கள்என்பதை உணர முடியும். “மக்களை நோக்கி இவ்வாறு தான் வாழ வேண்டும்என்றும் சில இலக்கியங்களும், எவ்வாறெல்லாம் வாழக் கூடாது என்பதைச் சில இலக்கியங்களும், இப்படித் தான் சீரழிந்து வாழ்கிறீர்கள் என சில இலக்கியங்களும் சுட்டிக்காட்டுகின்றன. ஆக மொத்தத்தில் இலக்கியம் என்பது தனது சமூகத்தை இருக்கும் நிலையிலிருந்து ஒரு படி உயர்த்துவதற்காகவே அன்றி, தாழ்த்துவதற்காக அல்ல என்பது தெளிவாகிறது.

பல தனி மரங்களின் கூட்டே தோப்பாகும். இது போன்றதே நம் ஈழத்தமிழ் சமூகமும். சமூகம் என்பது மனிதர்களின் கட்டமைப்பாகும். இத்தகைய சமூகத்திற்குத் தேவையான மனித வளத்தையும், தலைமைகளையும், உற்பத்தி செய்வதிலும், அவர்களைச் சமூகத்திற்கு வழங்குவதிலும், குடும்பம் எனும் உற்பத்திக்கூடம் மிக முக்கியப் பங்காற்றுகிறது. தமிழர்களின் வாழ்வியல் நெறிகளில் சங்க காலம் தொட்டு மாற்றமின்றி கடைப்பிடிக்கப் பட்டு வரும் ஒரு கலாச்சாரமேகாதல்எனத் துணிந்து கூறலாம். காதலைப் பேசும் காலங்களிலெல்லாம் நம் மனக் கண்ணில் வந்து நிற்பது

செம்புலப் பெயனீர் போல 
அன்புடை
நெஞ்சம் தாங்கலந் தனவே எனும் மனமொத்த துணைகளின் அன்பினைக் குறிக்கும் குறுந்தொகைப் பாடல் தான். செம்மண்ணில் விழும் மழைநீர் மண்ணின் நிறத்தை பெற்று, மணத்தைப் பெற்று, அதில் கலந்துள்ள அத்தனை அம்சங்களையும் தன்னுள் ஏற்றுக் கொண்டு செல்வதைப் போல காதல் கொண்ட தலைவனும், தலைவியும் வாழ வேண்டும் எனும் இல்லற நெறியினை எடுத்தியம்புகிறது இப்பாடல். இல்லறக் கட்டிடத்தின் அடித்தளங்கள் எவையென்றால், அவை அன்பும், விட்டுக்கொடுப்புமே. இவை இரண்டும் இல்லாத குடும்பத்தில் இருந்து சமூகத்திற்கு வழங்கப்படும் உறுப்பினர்களே சமூகத்தின் புற்று நோயாகக் கருதப் படுகிறார்கள்

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!
சான்றோன்
ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல்
வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை
நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு
வால் அருஞ்சமம் முருக்கிக்
களிறு
எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

--- எனும் பொன்முடியாரின் புறநானூற்றுப் பாடலில் இருந்து ஒரு இளைஞனை சமூகப் பங்காளியாக மாற்றுவதில் குடும்ப உறுப்பினர்களுக்கும், சமூக உறுப்பினர்களுக்கும் உள்ள கடமைகள் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும். நவீன இளைஞனொருவன் தன் வாழ்நாளில் ஒரு பகுதியைத் தன் குடும்பத்திற்குள்ளேயும், பெரும் பகுதியைச் சுற்றியுள்ள சமூகத்திலும் கழிக்கிறான் என்பது கண்கூடு. கால சுழற்சியில் ஒவ்வொரு பிள்ளையும் ஒரு குடும்பத்திற்கு தலைவர்களாகிறார்கள். பின்பு தன் பிள்ளைகளையும் சமூக உறுப்பினர்களாக மாற்றி, அவர்களையும் ஒரு குடும்பத் தலைவராக மாற்றி விடுகிறார்கள். இந்தப் படிமுறை ஒரு சுழற்சிக்கு உட்பட்டதாகும். இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

இந்தச் சுழற்சி வேகத்தில், இன்று பல குடும்பங்களின் அடிப்படைத் தேவையான அன்பும், விட்டுக் கொடுப்பும், விசுவாசமும், ஒளிவுமறைவின்மையும் காணமல் போய் விடுகிறது. சந்தேகம் மிகுந்து யாரை யார் கட்டுப்படுத்துவது என்ற ஆதிக்க வெறியில் பல குடும்பங்கள் சிதைந்து விடுகின்றன. ஒருவரை ஒருவர் பழி வாங்குவதாகக் கூறிக் கொண்டு, நெறியற்ற வாழ்க்கை முறையினைக் கடைப்பிடிக்கிறார்கள். இவர்களே சமூக குற்றங்களுக்கும், சீரழிவுகளுக்கும் வித்திடுபவர்கள்

ஒவ்வொரு சமூகமும் ஓர் இனக் குழுமத்திற்குள் உள்ளடக்கப் பட்டுள்ளன. ஒவ்வோர் இனக்குழுமத்திற்குமென சில வாழ்வியல் நெறிகளும் கடைப்பிடிக்கப் படுகின்றன. அவை தான் கலாச்சாரமும், பண்பாடும். கலாச்சாரமும் பண்பாடும் ஆங்கிலத்தில் culture என்ற ஒற்றை வார்த்தையில் அர்த்தப் படுத்தப்படுத்தப்படுகின்றன. கலாச்சாரம் என்பது பண்டைய காலம் தொட்டு நம் முன்னோர்களால் வாழையடி வாழையாக வழக்கில் இருந்து வரும் நிகழ்வுகளாகும். இவை உணவுப் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், வழிபாட்டு முறைகள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சடங்குகள் போன்றவையாகும். சில இனக் குழுமங்களின் கலாச்சாரம் என்பது பிற குழுமங்களால் மூடநம்பிக்கைகளாகவும் பார்க்கப் படுகின்றன.  

ஆனால் பண்பாடு எனும் வார்த்தைபண்படுத்தல்” (refine - நேர்த்தியாக்குதல்) என்ற மூலச் சொல்லிருந்து வருகிறது. கலாச்சாரம் என்பது, வழி வழியாக முன்னோர் செய்த விவசாயத்தை நாமும் அப்படியே பின்பற்றுவது போன்றதாகும். ஆனால் பண்பாடு என்பது களர் நிலத்தை விளைநிலமாக்குதல் (பண்படுத்தப் பட்ட நிலம்) போன்றதாகும். ஒரு காலத்தில் பலதார மணம் என்பது கலாச்சாரமாக இருந்தது. பலவாறான பண்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட இன்றைய நாகரிக வளர்ச்சி பெற்ற சமுதாயம் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, அல்லது அவரது சம்மதமின்றியோ மறு மணம் முடித்தலை தடைசெய்துள்ளது. இதுவே பண்பாடாகும்

இவ்வாறான ஒரு பண்பாடாகவே இருந்து வந்த சங்க காலக் காதல், இன்று ஒரு கலாச்சாரமாக மாறியுள்ளது. “செம்புலப் பெயனீர்க் காதலைஎவ்வாறு வெளிப்படுத்த வேண்டும், எங்கு காதல் புரியக் கூடாது எனவும் நற்றினை அழகாகக் கூறுகிறது.

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம்
துறந்த காழ்முளை அகைய
நெய்பெய்
தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினும்
சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை
கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம
நாணுதும் நும்மோடு நகையே
விருந்திற்
பாணர் விளரிசை கடுப்ப
வலம்புரி
வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு
கொண்க நீ நல்கின்
நறைபடு
நிழல் பிறவுமார் உளவே-  நற்றிணை 172

காலத்தால் முந்திய அகநானூற்றிலும், நற்றினையிலும் புன்னையின் சிறப்புகள் வெகுவாகக் பேசப்படப் பட்டுள்ளன. மாலை மயங்கியதொரு வேளையிலே புன்னை மரத்தடியில், காதல் கொள்ள தலைவியை அழைக்கிறான் தலைவன். அவளோ புன்னை என் சகோதரி என செல்ல மறுக்கிறாள். தலைவன் தன் காதலை வெட்டி விடவே தலைவி வெட்டிப் பேசுகிறாள் என மனமொடியும் வேளை, தலைவி உரைக்கிறாள்சிறுவயதில் புன்னை விதைகளை வைத்து விளையாடுகையில், விளையாட்டாய்ப் புதைத்த விதை இன்று மரமாகி நிற்கிறது. நெய்யையும், பாலையும் ஊற்றி, வளர்க்கப்பட்ட இப்புன்னையின் நிழலிலே தான் எமது இளமைப் பிராயத்தைக் கழித்தோம். ஆகவே இப்புன்னை என் சகோதரி. இவள் முன்னால் என்னால் உன்னோடு காதல் கொள்ள முடியாதுஎனும் வார்த்தைகளில் இன்றைய பேருந்தின் பின்னிருக்கைகளில் நடைபெறும் காதல் லீலைகள் அனைத்தும் தூக்கிட்டுக் கொள்ள வேண்டும்

தமிழனின் பண்பாட்டையே இப்பாடல் வரிகள் தெளிவு படுத்துகின்றன. நம் பண்பாடு, இன்று எந்த நிலையில் உள்ளது என்பதை பேருந்தில் பயணிக்கும் ஒவ்வொருவரும் கண்டு கொள்ளலாம். காதல் என்பது தவறல்ல. அத்தகைய காதலை வாழ்வியல் நெறிகளை மீறிப் பிரக்ஞையற்று வெளிப்படுத்தலே பண்பாடற்ற செயலாகும்.

என்னதான் சமூக மாற்றம், மறுமலர்ச்சி, எழுச்சி என்று சந்திக்கு, சந்தி நின்று நாம் முழங்கினாலும், இவை தனி மனித மன மாற்றம் மற்றும் சீரான குடும்ப வாழ்விலிருந்து தான் உருவாக முடியும். பெற்றோர் ஒருவரை ஒருவர் பழி தீர்த்துக் கொள்வதால் சீரழிவது, அவர்களின் சின்னச் சிறு குழந்தைகளே. அதனாலேயேநல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக் கழகம், அன்பு மணி வழங்கும் சுரங்கம்என்று பாடுகிறான் ஒரு கவிஞன்.

இன்றைய ஈழத்துக் குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரில் ஒருவரையே சார்ந்து வாழ்கின்றனர். பெரும்பாலான குழந்தைகளின் தந்தை அல்லது தாய் இறுதி யுத்தத்தில் இறந்தவர்களாகவோ அல்லது தடுப்பு முகாம்களிலோ காலத்தைக் கழிக்கிறார்கள். இத்தகைய குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை எவ்வாறு இருக்கும் எனும் கேள்வி மனதில்  ஒரு உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது.

இவ்வாறு அழிந்த சமுதாயம் ஒரு பக்கமும், மற்றொரு பக்கம் மீதமுள்ள எம்மினம் போதை வஸ்துக்களிலும், தீய ஒழுக்கங்களிலும் தம்மைத் தாமே அழித்துக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். வெளிநாட்டு மணமகன் மோகத்தில் எத்தனையோ முதிர்கன்னிகள் வாழ்க்கையின் மதியத்தைத் தாண்டி விட்டார்கள். இதற்கு ஆண்களும் விதிவிலக்கல்ல.

வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
யாராகியரோ
தோழி” 

எனும் (குறுந்தொகை) பாடலுக்கு இணங்க சில தலைவியர்திரைகடல் ஓடித் திரவியம் தேடச்சென்ற தலைவர்களைத் துறந்து, அவர் தம் நண்பரொடு உறவாடித் திளைப்பது மலிந்துவிட்டது. தலைவனின் அருகாமையின்றி குளிர் இரவின் கடும் பனியில் தலைவி எவ்வாறு ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள் என ஒளவையின் குறுங்தொகைப் பாடல் மிக அருமையாக விளக்குகிறது

முட்டு வேன்கொல்?தாக்க வேன் கொல்?
ஒரேன்
யானும்ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ! ஒல்! எனக் கூவு வேன்கொல்?
அலமரல்
அசைவளி அலைப்பஎன்
உயவுநோய்
அறியாது துஞ்சும் ஊர்க்கே.

இவ்வாறு பிறந்த மண்ணைத் துறந்து, மணந்த பெண்ணைத் துறந்து, சுற்றத்தையும் நட்பையும் துறந்து, உழைக்கச் சென்றவர்கள் இளமையையும், உறக்கத்தையும் விற்று ஈட்டும் பணம் பெரும்பாலும் விழலுக்கு இறைத்த நீராகி விடுகிறது.

இவை இப்படி என்றால், காதலியைக் காணாத ஒருவன் தன் நிலையை எவ்வாறு வெளிப்படுத்துக்கிறான் என்பதை

ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்
கைஇல்
ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய்
உணங்கல் போலப்
பரந்தன்று
இந்நோய், நோன்றுகொளற்கு அரிதே

என்னும் குறுந்தொகைப்பாடல் மூலம் அறியலாம். சூரியன் சுட்டெரிக்கும் மதியப் பொழுதில் ஒரு பாறையின் மேல் வைக்கப்பட்டுள்ள வெண்ணையைக் காணும் கையில்லாத ஊமை ஒருவன், அந்தவெண்ணைவீணாவதை எவ்வாறு தடுக்க முடியாதோ அவ்வாறே காதலியைக் காணாததால் ஏற்பட்ட ஏக்க உணர்விலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள முடியாமல் தவிப்பதாய்க் கூறுகிறான்.

இலக்கியக் காதல் பாடல்கள் காதலை உரைப்பதற்காக மட்டும் பாடப்படவில்லை. இவை நம் முன்னோர்கள் தம் வாழ்வில் கற்றறிந்த பாடங்கள். அவர்கள் தம் கருத்துக்களைத் தெளிவாக நம்முடன் பகிர்ந்து சென்றுள்ளார்கள். இருப்பினும் நாம் அவற்றைக் கற்பதும் இல்லை. தவறிக் கற்றாலும், கடைப் பிடிப்பதும் இல்லை.

வம்ச விருத்திமட்டுமே திருமணத்தின் நோக்கமல்ல. ”ஒருவனுக்கு ஒருத்திஎனும் நெறி பிறழாத வாழ்வைக் கடைப்பிடிப்பதற்காகவே திருமணங்கள் தேவைப்படுகின்றன. பால்ய காலம் முதல், பாடையில் செல்லும் வரை மனிதனுடைய தேவைகள் காலத்திற்குக் காலம் வித்தியாசப்படுகிறதே இன்றி, ஒருபோதும் குறைவதே இல்லை. ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் சேர்ந்தும், ஒருவரை ஒருவர் சார்ந்தும் வாழும் படி அமைக்கப்பட்டுள்ள நம் சமூகக் கட்டமைப்பு இரு மனம் ஒத்த திருமணத்தை வலியுறுத்துவதுதிறன்மிக்க மனிதவளத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், சமூகக் குற்றங்களைக் குறைப்பதற்குமே

பெருங் குற்றங்கங்களுக்கும் துஸ்பிரயோகங்களுக்கும் அடிப்படையாக அமைவது பூர்த்தியாகாத பாலியல் தேவைகளே என்கிறது அண்மைய ஆய்வு ஒன்று. இத்தகைய பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முறையற்ற உறவுகளைப் பேணுவதால் கடந்த வருடத்தில் மட்டும் (19 வயதிற்குட்பட்ட) இலங்கையில் 1300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு நடத்தப் பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது உறவினர்களாலேயே இந்நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து இன்று உறவு முறைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அறிந்து கொள்ள முடியவில்லையா?

உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்
பிற
புலத் துணையோடு உறை புலத்து அல்கி
வந்ததன்
செவ்வி நோக்கி பேடை
நெறி
கிளர் ஈங்கைப் பூவின் அன்ன
சிறு
பல் பிள்ளையடு குடம்பை கடிதலின்
துவலையின்
நனைந்த புறத்தது அயலது
கூரல்
இருக்கை அருளி நெடிது நினைந்து
ஈர
நெஞ்சின் தன் வயின் விளிப்ப   (நற்றினை)

 

இந்த நற்றினைப் பாடலானது வீட்டுக் குருவிகளின் வாழ்க்கை முறை மூலம் தலைவன் பரத்தையரொடு கொண்டிருந்த முறையற்ற உறவை மறைமுகமாக விளக்குகிறது. பிறிதொரு துணையோடு கூடி விட்டு வீட்டிற்கு வரும் ஆண் குருவியை, பெண் குருவியும் அதன் குஞ்சுகளும் சேர்ந்து கூட்டிற்குள் வர விடாமல் தடுக்கின்றன. அதே போன்று தலைவியும் வீட்டிற்குள் வர விடாமல் தடுத்தாள் என்று கூறுகிறது

ஆணிற்கு அழகு எது?

மலைஎன, எழுஎன வழங்கும் தோள்களும்
பாயல்
ஆம்எனப் படர்தரு மார்பமும்
காளையர்க்கு
உரித்துஎனக் கழறினர் கற்றோர்.  (அறுவகை இலக்கணம்)

கற்றறிந்த பாவலர்கள் குன்றுகள் எனவும், எஃகு எனவும் சொல்லப்படுகின்ற புயங்களும், படுக்கையைப் போன்று பரந்து அகன்றுள்ள மார்பும் வாலிபர்களுக்கு உரியன என்று கூறியுள்ளனர். மனையாள் கட்டித் தளுவுவதற்கும், பிள்ளைகள் ஏறி விளையாடுவதற்கும் உகந்த அகன்ற மார்பைப் பெறுதலே ஆணிற்கு அழகென்கிறது இப்பாடல். மேலும் இப்பாடல் மூலம் நாம் ஆணிற்கு அழகு வினைமாட்சி என்பதையும் அறிந்து கொள்ளலாம். ஆனெனப்படுபவன் கடுமையாக உழைத்து தன் குடும்பத்தைக் காப்பதென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிந்து கொள்லாம். அதனையும் தாண்டிய அழகு அவன் ஆண்மை என்கிறது வள்ளுவம்

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனோன்றோ
ஆன்ற ஒழுக்கு

எனும் குறள் மூலம் பிறருடைய மனைவியை காமக் கண் கொண்டு நோக்காமல் இருப்பதே பேராண்மையிலும் சிறந்த ஒழுக்கம் என்கிறது.  ஆனால் இன்று வயது பேதமின்றி அனைவரையும் காமக்கண்களால் துகிலுரிப்பதும், மது மற்றும் போதையில் திளைப்பதையுமே ஆண்மையாகக் கொண்டு பலர் வாழ்கிறார்கள். இவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்வதுடன், தாம் சார்ந்து வாழும் குடும்பங்களையும் மீள முடியாத துன்பங்களுக்குள் தள்ளிவிடுகிறார்கள்

யார் யாரோடு இருக்கிறார்கள்? யாரை யார் வைத்திருக்கிறார்கள் ? என்பதை அறிந்து கொள்வதும், பேசுவதும் தான் இன்றைய பெரும் பொழுதுபோக்காக உள்ளது

உரிய கல்வியறிவை அளித்து, அறியாமையை அழிக்கும் போதே நமது சமூகம் இத்தகைய சீரழிவிலிருந்து வெளியேறி ஒரு பண்பட்ட சமூகமாக மாறும். உரிமையை இழந்துவிட்டோம். நாம் உணர்வையும் இழந்து விடுவோமோ எனும் கேள்வி இன்றைய இளைய சமுதாயத்தின் கைகளில் தான் உள்ளது. அதற்கு அவர்களுக்கு தேவையான கல்வியை உரிய முறையில் வழங்க வேண்டும்.

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் 
மஞ்சள்
அழகும் அழகல்ல - நெஞ்சத்து 
நல்லம்யாம்
என்னும் நடுவு நிலைமையால் 
கல்வி
அழகே அழகு     

என்று நிலையான அழகு பற்றி நாலடியார் கூறுகிறது. கல்விக்கான முக்கியத்துவம் இன்று சிறிது சிறிதாக அழிந்து வருவது பெருகி வரும் தனியார்க் கல்வி நிலையங்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. இன்றைய ஈழத்து மாணவர்கள் ஒரு பாடத்திற்கு நான்கு ஆசிரியர்களிடம் சென்று கற்கிறார்கள். இந்த நான்கு ஆசிரியர்களின் வேறுபட்ட பயிற்றுவிப்பு முறைகளை மாணவர்கள் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடன் உள்ளார்களா என்பது கேள்விக்குறியே. மாணவர்களுக்காக ஆசிரியர்கள் என்ற நிலை இன்று மாறிவிட்டது. இலவசமாகக் கிடைக்க வேண்டிய கல்வியை மணித்தியாளக் கணக்கில் விற்கும் விற்பனைப் பிரதி நிதிகளாக கற்றறிந்த ஆசிரிய சமூகம் செயல்பட்டு வருவது வேதனையழிக்கிறது.

எதற்குச் செலவு செய்ய வேண்டுமென்ற எந்த வரையறையுமின்றி, செலவு செய்து இறுதியாக பிள்ளைகளை மருத்துவராகவோ, பொறியியலாளராகவோ, கணக்காளராகவோ, அல்லது வெளிநாட்டில் எரிவாயு நிறப்புவராகவோ உருவாக்கி விடும் பெற்றோர், தாம் செய்த செலவுகளை வரதட்சனை மூலம் பெற்றுக் கொள்ள பெற்ற பிள்ளைகளையே விற்கத் துணிவது சமூக சீரழிவைத் தொடர்ந்து மேற்கொள்ள உதவி புரிகிறது

கல்விக்காக 30 வயது வரை பாடுபடும் நம் இளைஞர்கள், அதன் பின் தான் உழைப்பதற்கான முனைப்புகளில் ஈடுபடுகிறார்கள். நாற்பது வயது வரை உழைத்து விட்டு, தன்னால் முடியாது எனும் சூழலில், இறுதி வருமானமான சீதனத்தையும் வாங்கிக் கொண்டு திருமண பந்தத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த நாற்பது வயதில் யாருமற்ற தனிமையில், எவராவது என் மேல் அன்பு காட்ட மாட்டார்களா என்ற கழிவிரக்கமே மிஞ்சி நிற்குமே தவிர, நிச்சயமாக நம்மிடம் இருக்கும் அன்பைப் பகிர்ந்து கொள்ளும் மனநிலை இருக்காது

இதை விட சற்று இராஜாங்க மனநிலையுடன் தான் சீதனம் கொடுத்து வந்த மணமகள் இருப்பார். ”நீ கேட்டதெல்லாம் தான், கொடுத்தாகி விட்டதே, பிறகென்னஎன்ற மனநிலையில், அவர் நிச்சயமாக மணமகன் எதிர்பார்க்கும் அன்பைப் பகிர்ந்து கொள்ள மாட்டார். மேலும் இந்தத் திருமணத்திற்காய் கடன் வாங்கிச் சீதனம் கொடுத்த மற்றுமொரு அண்ணணோ, தம்பியோ ஏதோவொரு நாட்டில் தன் இளமையை விற்றுக் கொண்டிருப்பான்

இலங்கையில் பெண்கள் முதிர்கன்னிகளாக இருக்க வரதட்சணை மட்டும் ஒரு காரணமாக இருப்பதில்ல... ஏனென்றால் இவர்களில் பலர் வெளிநாட்டு மணமகனைத் தவிர வேறொருவரை முடிக்க மாட்டேன் என்று ஒன்றைக் காலில் நிற்பவர்கள். இன்று பெண்களே மணமகனைப் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கிறார்கள். இது வரவேற்கக் கூடிய விடயமாக இருந்தாலும், மணமகன் தெரிவு முறை என்பது முற்று முழுதாகவெளிநாடுசார்ந்த ஒன்றாகவே உள்ளது

சப்பிரதாயச் சந்திப்பின் போது பெரும்பாலான மணமகளின் தாயார்கள் கேட்கும் கேள்வி, “வெளிநாடு போற வாய்ப்பு இருக்கா..?, சீவியத்தில ஒருக்காவாவது சுவிசுக்கு கூட்டிட்டு போவிங்களா..? இவவுக்கு அந்த லண்டன் மணியைப் பார்க்க சரியான விருப்பம்.. அங்கயாவது ஒருக்கா கூட்டிட்டுப் போவிங்களா..? 

இவ்வாறு கேள்விகளைக் கேட்பவர்கள் இலங்கையில் உள்ள நுவர எலியாவிற்குக் கூடச் சென்று எட்டிப் பார்த்திருக்க மாட்டார்கள்

திருமணம் என்பது நாட்டைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளாதீர்கள். நல்ல குணத்தினையும், அளவான வருமானத்தையும் பார்த்து, விட்டுக் கொடுப்போடு வாழ முன்வந்தால் திருமணம் என்பது ஒரு சிக்கலாக இருக்காது.

நான் சார்ந்து வாழும் சமூகத்திலிருந்து அறிந்து கொண்டது என்னவென்றால் சாதாரண தரம் அல்லது உயர்தரம் வரை படித்த மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், சிறிது அழகு குறைந்தவர்கள் என்று பிறர் சொல்லும் நிலையில் இருந்தாலும், திருமணம் முடித்து நன்றாகவே வாழ்கிறார்கள். ஆனால் நல்ல நிறமாக இருந்து, சிறிது வசதியாகவும், கையில் தொழிலுடனும் இருப்பவர்கள் தான் முதிர் கன்னிகளாகவும், மணமுறிவுடனும் வாழ்கிறார்கள்

இதற்கான காரணம், பட்டதாரிப் பெண்களோ, ஆசிரியைகளோ ஒரு ஆசிரியரை முடிக்க பெரும்பாலும் விரும்புவதில்லை. அவர்கள் ஒரு மருத்துவரையோ, பொறியியலாளரையோ, அல்லது வெளிநாட்டு மணமகனையோ தான் மணமுடிக்க விரும்புகிறார்கள். இது போல பல காரணங்கள் உள்ளன. பல பெண்கள் தம் திருமண வயதில் பெற்றோர் பார்க்கும் உள்ளூர் வரன்களை தட்டிக் கழித்து விட்டு, வெளிநாட்டில் உள்ள ஒருவரை அலைபேசியில் விரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் பகலாக இருக்கும் போது இலங்கையில் இரவாக உள்ளது. அங்குள்ள இளைஞர்கள் பொழுதுபோக்காக கணணியில் பகலில் உரையாடுவார்கள். ஆனால் நம்மவர்கள், இரவுத் தூக்கத்தை தொலைத்துவிட்டு விடி விடிய பேசுகிறார்கள். இதன் விளைவாக, சிறு வயதிலேயே, கண்ணின் கீழ் கருவளையமும், முதுமைத் தோற்றமும் வந்து விடுகிறது

கனடாவில் வாழும் இலங்கை எழுத்தாளர் ஒருவர், இலங்கைப் பெண்ணை மணமுடித்து விட்டுச் சென்றவர் தான். இன்று வரை வரவேயில்லை.. இப்பொழுது தகவல் அனுப்பியுள்ளாராம் .. ஜனவரியில் இலங்கையில் நடைபெற இருக்கும் ஒரு மாநாட்டிற்கு வருகை தர உள்ளதாக... இவர்களை என்ன செய்வது..? யாரைக் குறை சொல்வது..? அதிஷ்டமற்ற பிள்ளை என மணமகளைக் குறை கூறி தம் தவறை பெற்றோறை என்ன செய்வது.

பெற்றோரிடமும், இளைஞர், யுவதிகளிடமும் இருக்கும் இந்த வெளிநாட்டு மாயைகள் மறைய வேண்டும். திருமணம் என்பதை அதிஸ்டச் லாபச் சீட்டுப் போல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வாழ்வில் படிப்படியான வளர்ச்சியே நிரந்தரமான இன்பத்தைத் தரும். ஒரே நாளில் வெளிநாட்டு மணமகனாகவோ, மணமகளாகவோ மாறி எல்லா இன்பத்தையும் அனுபவித்து விட வேண்டும் எனும் அதிகப் படியான எதிர்பார்ப்பேமுற்று முழுதான தோல்விக்கும்மணமுறிவிற்கும் வழி வகுக்கிறது.

வரதட்சிணையையும், முதிர்கன்னிகளையும் பற்றிப் பேசுமளவிற்கு நாம் ஒரு போதும், திருமணத்திற்கு பின்னரான வாழ்வையும், மணமுறிவுகளையும் பற்றிப் பேசுவதில்லை. நம்மைப் பொறுத்தவரை எப்பாடு பட்டாவது திருமணம் முடிந்தால் சரி என்ற என்ற மனோநிலையே பெரும்பாலோனோருக்கு உள்ளது. மணமகன் தேவை எனும் விளம்பரங்கள் எல்லாம்வெளிநாட்டு மணமகன் / மணமகளுக்கு முன்னுரிமைஎன்று கொடிபிடிப்பதை இலங்கையின் எல்லா திருமண விளம்பரங்களிலும் காணலாம்

நானறிந்தே பல பெண்களின் வெளிநாட்டுக் கணவர்கள் நாடு திரும்பியதே இல்லை. இப்பெண்கள் தம்மையும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணாக நினைத்துக் கொண்டு, உடைகளையும், பேச்சு வழக்கையும் மாற்றிக் கொண்டு, மன நிலை குன்றிவர்கள் போல் என் முன் அமர்ந்து உரையாடுகையில்நீ இப்பொழுது இலங்கையில் தான் இருக்கிறார்; நீ ஒரு தமிழன்; என்று நான் கூறும் வார்த்தைகள் அவர்களின் போலி உறக்கத்தைக் கலைத்துவிடுவதில்லை. மாறாகநான் பொறாமையுடையவனாக சித்தரிக்கப் பட்டு விடுகிறேன்”. 

சிலர் திருமணத்தின் பின் பொருளாதார தேவைகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று தம்மை அடகு வைத்து வீட்டிற்கு பணம் அனுப்புகிறார்கள். இத்தகையவர்களின் நோக்கம் தம் குடும்பத்தின் பொருளாதார உயர்வாக இருந்தாலும், குடும்ப அங்கத்தவர்கள் ஆடம்பர வாழ்க்கையை காலம் முழுதும் அணிந்து கொள்வதற்காகவும், கானல் கெளரவத்திற்காகவும் இவர்களை மீண்டும் வீடு திரும்ப அனுமதிபதே இல்லை. இவர்களின் பிள்ளைகளும், சமூக உணர்வோ, பொறுப்போ அற்றவர்களாக சார்ந்து வாழும் ஒட்டுண்ணிகளாகவே வாழப் பழகி விடுகிறார்கள்.

சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்() எண்ணியப்
பிணைமான்
இனி துண்ண வேண்டிக்கலைமாத்தன்
கள்ளத்தின்
ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம்
படர்ந்த நெறி

என்னும் மாறன் பொறையனாரின் ஐந்திணைப் பாடல் கணவன் மனைவியின் அன்பைப் பறை சாற்றுகிறது. நதிகளற்ற நிலத்திலே, தாகத்தோடிருக்கும் ஜோடி மான்கள் ஒரு குட்டையில் தேக்கிக் கிடக்கும் சிறிதளவிலான நீரைக் காண்கிறது. நீரோ சிறிது. ஒருவர் குடிப்பதற்குக் கூட காணாது. இந்த நிலையில் ஆண்மான்நீ போய் நீரைப் பருகுஎன தன் துணையிடம் சொல்கிறது. நீர் இருவர் பருகக் காணாது என்பதால் பிணை கூறுகிறதுஇல்லை. எனக்குத் தாகமாக இல்லை, நீயே பருகு”. சரி, இந்தப் பிரச்சினை வேண்டாம்வா, இருவரும் சேர்ந்தே பருகுவோம்என இரண்டும் சேர்ந்து சுனையில் வாயை வைத்து நீரைப் பருகுகிறது. ஆனால் நீரின் அளவு குறையவே இல்லை. ஏனென்றால் கலைமான் குடிக்கட்டும் என பிணையும், பிணைமான் குடிக்கட்டும் என கலையும்”  ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்ததால் இருவருமே குடிக்கவில்லை என இல்லறத்தைப் பாடுகிறது இப்பாடல்

சங்க இலக்கியங்கள், விலங்குகளின் ஊடாக நம் முன்னோர்களின் காதல் நெறியினை எவ்வளவு அழகாக எடுத்துரைக்கிறது. தாம் வாழும் இயற்கை எழில் கொஞ்சும் காட்டுப்  பகுதியிலிருந்து விதி வசத்தால் இடம் பெயர்ந்த மான்கள், பாலை நிலத்திலும் தம் அடிப்படைப் பண்பான அன்பை விட்டு விடவில்லையே.... நாம் மட்டும் ஏன், முற்று முழுதாக மாறி விடுகிறோம்

பொருளாதாரத் தேவைக்காகவும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவுமென வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வாழும் குடிமகன்களில் எத்தனை பேரால் தம் பிள்ளைகளை அன்போடும், அரவணைபோடும் வளர்க்க முடிந்துள்ளது. எத்தனை பிள்ளைகள், தாய் தந்தையரின் சொல்லிற்கு கீழ்ப்படிகிறார்கள்? எத்தனை தாய் தந்தையர்களால் தம் பிள்ளைகளோடு நேரத்தைச் செலவிட முடிகிறது...  

பெற்றோர்களே,

உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையும், நம் பண்பாட்டையும் கற்றுக் கொடுத்து இச்சமுதாயத்தில் சிறந்த குணங்களையுடைய ஒருவராக, அவரை அறிமுகப் படுத்த வேண்டியது உங்கள் கடமை தான். அதற்கு உங்கள் அன்பும் அரவணைப்பும் தான் அவர்களுக்கு அதிகமாகத் தேவைப் படுகிறது.

கணவன்மார்களே,

உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டியது உங்கள் கடமையே... அதே அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது உங்கள் மனைவி உங்களிடம் எதிர்பார்க்கும் அருகாமையையும், அன்பையும் அவர்களுக்கு உணர்த்துவது.

மனைவியர்களே,

குடும்பப் பொருளாதாரத்தில் நீங்கள் உதவினாலும், உங்களின் தேவைகளையும் நிறைவு செய்யும் பொருட்டே உங்கள் கணவன், உறக்கத்தை விற்றுக் கொண்டிருக்கிறான்... நீங்கள் சிறந்த தாயாகவும், தாரமாகவும் இருப்பதே அவர்களுக்குச் செய்யும் கைமாறு.

பிள்ளைகளே,

ஒவ்வொரு பெற்றோரின் கனவுகளும் நீங்கள் தான். உங்கள் அழகான உடைகளும், போசாக்கான உணவும் அவர்களின் இரத்தமே. பெற்றோர்கள் தமங்கள் நிகழ்காலத்தை விற்று, உங்களுக்கான எதிர்காலத்தை அமைத்துத் தருகிறார்கள் என்பதை ஒரு போதும் மறந்துவிடாதீர்கள்.

நமது சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் இல்லை. நாம் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு உருப்படியான செயலைச் செய்வதற்காகவே இவ்வுலகிற்கு அழைக்கப் பட்டிருக்கிறோம். தனி மனித மாற்றமே சமூக மாற்றம் என்பதை மனதில் நிறுத்தி நாம் சார்ந்து வாழும் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குவோம்.

 

amujo1984@gmail.com