குவைத் தமிழோசையின் இன்பத் தமிழ் இசைவிழாவும்; சில விருதுகளும்..

 

- வித்யாசாகர்

 

ரவுநிலா குளிருதிர்த்து காதுமடல் திறந்து அந்த அரங்கத்தை நோக்கி அமர்ந்திருந்தது. அறைநிறைந்த தமிழதன் வெளிச்சத்தில் அடர்ந்த ஓரிருள் விலக காரிருள் சூழ்கொண்டு இடையெரியும் விளக்குகளால் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. இருட்டின் காதுகளில் கவியரங்கச் சிந்தனைகள் குடைந்துக் கொண்டிருக்க, பாட்டரங்கமும் கைதட்டும் ஓசையின் ஆர்ப்பரிப்பும் அரேபிய மண்ணின் நீண்ட பாலைவனத்தில் இன்னும் நெடுநாட்களுக்கு அழியாதவண்ணந்தனில் ஒட்டிக்கொண்டுவிட்டதை அந்த அரங்கமும், அந்த விழாவை எடுத்த தமிழோசை மாமன்றமும் அத்தனை கவனித்திடவில்லைதான்.
 

குழந்தைகளின் ஆட்டமும் பாட்டும், கவிஞர்களின் சீரிய சிந்தனைக்கொத்த கவிதைகளும், மேடையில் சிதறிய வார்த்தைச் சில்லுகளில் மிளிரும் தமிழின் அழகும், ஆர்ப்பாட்டத்தின் மகிழ்ச்சியை கைதட்டி மட்டுமே வெளிப்படுத்திக் கொண்ட ரசிக உள்ளங்களின் அநாகரிக கூச்சலில்லா அமைதியும், தலைவர் ஆற்றிய காந்தியத் தன்மை நிறைந்த நல்லுரையும், முத்து தெறித்தாற்போல் கொத்து கொத்தாக வந்து கைகோர்த்துக் கொண்ட செயலாளரின் வரவேற்பும், நிகழ்ச்சி அலுத்துப் போகாமல் நிகழ்ச்சிக்கு வந்தோரை ஈர்ப்புடன் வைத்திருந்த ஐயா அலாவுதீன் அவர்களின் எளியநடையிலான தொகுப்புரையும் தமிழரின் கலைத் தன்மையின் சிறப்பையும் நமது ஒற்றுமையினால் கிடைக்கப்பெறும் நீண்ட நிறைவையும் பறைசாற்றி முடிவுற்றது அந்த இன்பத் தமிழ் இசைவிழா.
 

சொல்லருவி திரு. பட்டுக்கோட்டை ராசப்பா அவர்களின் "தாமதமேன் தமிழினமே" எனும் உரைவீச்சும், "பைந்தமிழ்ச் சுவடுகள்" எனும் தலைப்பில் கவியரங்கமுமென இடம் மீறி எங்கெங்கோ பேச்சின் தடம் நகர, இடையே வீரம் பற்றி ஈழத்து இளைஞர் ஒருவர் கவிதை படிக்க வருகையில் ஈழம் பற்றியும் வீரம் பற்றியும் சொல்லருவி பட்டுக்கோட்டை ராசப்பா அவர்கள் கவிதை நயத்திலேயே எடுத்துச்சொல்லி அவரையழைக்க, அவர் தனது கவிதையின் ஊடாகக் கேட்ட ஒவ்வொரு கேள்வியின் கனமும் நெஞ்சை மிக தைத்தது.
 

இயலாமையின் அடர்த்தியான உணர்வு பொருந்தியவனாக அமர்ந்திருக்கையில் ஐயா ராசப்பா அவர்கள் உரைவீச்சின் நிறைவாக முடிக்கும்போது, 1857-இல் நமது முதலாம் இந்திய சுதந்திர யுத்தத்தின் போது ஒரே வருடத்திற்குள் வீரம் பொருந்திய மங்கள்பாண்டேயிலிருந்து, நானா சாகேப், தாந்தியா தோபே, ஜான்சிராணி லட்சுமி பாய் வரைஎண்ணற்ற வீரர்கள் இறந்துப் போனார்கள் என்றாலும், அதன்பின் தொண்ணூறு வருடம் கழித்து நமது சுதந்திரத்தை நாம் பெற்றோம் என்பது உண்மை. அதுபோல இன்னும் எத்தனை வருடம் கழிந்தாலும் நமக்கான நீதி நம்மையே வந்துச் சேரும் என்றார். ஈழம் என்றொரு தனிநாடு அமையும் என்றார். அரங்கம் முழுதும் வலிக்க வலிக்க தனது கைகளைத் தட்டிக் கொள்ள, எனக்கும் 'அது சரிதான், இப்படிப்பட்ட மக்களிருக்கையில், உலகளாவிய தமிழுறவுகளின் விடுதலைக் குறித்த அக்கறை இந்தளவிற்கு எல்லோருக்குமிருக்கையில் நிச்சயம் தர்மம் வெல்லுமென்றே எண்ணி உள்ளூர மகிழ்ச்சி பொங்கியது.
 

ஈரம், காதல், ஈதல்வீரம் எனும் நான்கு தலைப்புகளில் கவிதாயனி திருமதி. அமுதா கோபால், கவிஞர்கள் திரு. சாதிக் பாட்சா, திரு. .கு.சி, திரு. கணேசன் போன்றோர் தனது சீரிய கருத்துக்களை முன்வைத்து ஆழ்ந்த சிந்தனையின் அமைதியில் எல்லோரையும் ஆழ்த்த, என் சக படைப்பாளி பேச இருக்கையில் எனக்கு நெருப்பில் நிற்கும் கணமென இத்தருணங்கள் நகர்கிறது எனவே மீண்டுமொரு முறை குவைத் வருகையில் இன்னும் நிறையவே பேசுவேன் இப்போதைக்கு விடைகொடுங்கள் என்று கேட்டுக்கொண்டு தன் தமிழ்ச்சுவையின் பெருஞ்சுவை அடங்க ராசப்பா ஐயா அவர்கள் அமர்ந்தார்.
 

ஆக, கவியரங்கம் தான் இந்த விழாவின் உச்சம் என்று எண்ணியிருக்க பாட்டரங்கம் துவங்கியது, காதுகளில் தேனூர, கேட்கையில் உணர்வுகளஅதிர, காலத்திற்கும் நிலைப்பது பழைய பாடல்களா புதிய பாடல்களா நாட்டுப்புறப் பாட்டுகளா என்றதொரு வாதத்தோடு பாடகர்கள் திரு. ராமகிருஷ்ணன், திரு. நம்மபாட்டு மாணிக்கம், திருமதி ராணிமோகன், திரு. கணேசன், திரு. கங்கேஷ், திருமதி. லலிதாமணி, போன்றோர் களமிறங்கினர்.
 

"ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்தைப் போல
தூளி கட்டி ஆட
தொட்டில் கட்டித் தூங்க
ஆத்துல மீன் பிடிக்க
அப்பனுக்கு தலை துவட்ட
பார்த்தாலே சேர்த்தணைக்கத் தோணும்;

நான் செத்தாலும்
என்னைப் பொத்த வேணும்.." 
எனும் தாயின் வலி நிறைந்த பாடலின் கனத்தோடு ராமகிருழ்ணன் நாட்டுப்புற பாட்டு தான் காலத்திற்கும் நிலைக்கும் என்றுப் பாடியமர, அவ்வையாருடைய ஆத்திச்சூடி பாடலை அத்தனை தரமன்றி புதுப்பாட்டில் இணைக்கும் அவலம் போன்றில்லாது என்றும் நிலைப்பது பழைய பாடல்கள் தான், அதுதான் என்றும் இம்மண்ணில் நிலைக்குமென்று பாடகி திருமதி ராணிமோகன் சொல்லியமர, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்; அம்மாவை வாங்கமுடியுமா போன்ற அன்பினைப் போற்றும் பல பாடல்கள் புதுப்பாடலில்தான் நிலைத்திருக்கிறது எனவே என்றும் புதுப்பாட்டுதான் நிலைக்குமென்று வலியுறுத்தி பாடகர் திரு கங்கேஷ் அமர, இல்லைஇல்லை .. காதல் பாடல்களுக்கு இடையேயும் சமூகச் சிந்தனையை பற்றிப் பேசும் நிறைய நாட்டுப்புற பாடல்கள் இருக்கிறது, அவைகள் தான் நிலைக்குமென்று மீண்டும் நம்மபாட்டு மாணிக்கம் சொல்ல வர, எதிர்வாதமாக எழுந்து "அடி ஆத்தாடி இள மனசொன்னு ரக்கைகட்டிப் பறக்குது சரிதானா..." என்று தனது தேனினுமினிய குரலில் காதலொழுக திரு. கணேஷ் பாடத் துவங்கி வரிசையாக பல நினைவிலிருந்து மறக்காத இனிய பாடல்களைப் பாடி எப்போதும் எல்லோரின் மனதிற்குள்ளும் நிலைத்திருப்பது இதுபோன்ற பழைய பாடகள்தானென்று அழுத்தமாக சொல்லியமர,
 

"காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கைதொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா என் தாய்போல் ஆகிடுமா..."
என்றதுதான் தாமதம், அரங்கம் முழுதும் தலைதிருப்பி பாடகி லலிதா மணி சொல்வதே சரியென்பது போல் பார்த்தது. ஆக.. இக்கட்டான ஒரு சூழலில் திறமையான ஆறு பேருக்கு மத்தியில் எப்படி நான் தீர்ப்புச் சொல்வதென தன் உணர்வுகளை பெருந்தன்மையோடு மன்றத்தின் முன்வைத்து, ஆச்சர்யத்தை அந்த படைப்பாளிகளுக்குப் பரிசாகத் தந்த பாட்டரங்கத்தின் நடுவர் ஐயா கலக்கல் காங்கேயனுக்கு தெரிய வாய்ப்பில்லைதான் அப்போது மணி இரவு பதினொன்றை தாண்டியிருந்ததென்று.

என்றாலும், எத்தனையோ மேடை கண்டவராயிற்றே' இதுபோலவே தன் ஆரம்பக் காலத்தில் பாடி பாடி அசத்தியவராயிற்றே' அடங்கிப் போவாரா? போகவில்லை. மாறாக சாமார்த்திய தீர்ப்பினை வழங்கினார். நாட்டுப்புற பாட்டென்பது மண்ணிலிருந்து வெட்டியெடுக்கும் தங்கத்தைப் போன்றது. அங்கிருந்து தான் அத்தனைப் பாடல்களும் நம் காதுகளுக்குள் தன் உணர்வுகளைப் புகுத்தி தனது ஆட்சியை செலுத்தத் துவங்கின. என்றாலும் சுத்த தங்கம் மட்டுமே, ஆபரணமாகிடாதில்லையா ? கட்டித் தங்கம் மட்டுமே நிலைப்புத் தன்மையை ஏற்படுத்துமா? கலப்படம் செய்தால் தானே காதுக்கு கம்மலும், கேட்பதற்கு இனிய பாடல்களும் காலத்திற்கு ஏற்றவாறு கிடைக்கும். எனவே கலப்படமில்லா உணர்வுகளின் வெளிப்பாடாக வந்த நம் மண் சார்ந்தப் பாடலான நாட்டுப்புறப் பாட்டுகளை அங்கேயே விடுவோம், அது நம் தாய்க்கீடு. என்று சொல்ல எல்லோரும் கூடி சோ....வென கைதட்டினர்.
 

இப்போது புதுப்பாட்டா அல்லது பழைய பாடல்களா என்று எடுத்துக் கொண்டால், புதுப்பாடல்கள் மிகையாக கவரும், ஏனெனில் கால மாறுதல்களுக்கு உட்பட்டு அப்போதைய ரசனையை இளைஞர்களின் உணர்வுகளை எட்டக்கூடியது புதுப்பாட்டுகள் தான். என்றாலும், அவைகள் கவர்ந்துவிடுவதைப் போல நெஞ்சில் என்றும் நிலைத்திருப்பதில்லை. அதே பழைய பாடல்கள் நமை புரட்டிப் போடுகிறது. இந்த காலத்திலிருந்து நமைக் கொண்டுபோய் அந்த காலத்தில் சேர்க்கிறது. உணர்வுகளால் புரட்டிப் போட்டு உயிரின் ஆழத்தில் என்றைக்குமாய் நினைவில் எட்டிநிற்கிறது. இன்றும் கேட்க நிலைக்கிறது, அவைகளை அதிகம் பேரால் மறக்கமுடிவதில்லை, எனவே காலத்திற்கும் இருப்பது அனைத்துப் பாடல்களுமே என்றாலும்; அதிகம் இன்றும் கேட்க நிலைத்திருப்பது நம் பழைய பாடல்கள் தான் என்று சொல்லி இன்பத் தமிழ் இசைவிழாவை இதோடு நிறைவுசெய்கிறேன் என்று சொல்ல அரங்கம் அதிர கைதட்டல் ஓசையும் மனசு நிறைய விழாவின் வெற்றி நிறைவும் துல்லியமாக மனதை நிரம்படித்தது. துவக்கத்தின் வெற்றி கவியரங்கத் தலைமை ஐயா திரு. பட்டுக்கோட்டை ராசப்பா அவர்களுக்குச் சொந்தமெனில், நிறைவின் நற்புகழ் ஐயா திரு. கலக்கல் காங்கேயன் அவர்களைச் சார்ந்துக் கொண்டது.
 

இப்படி பாட்டென்றும் கவிதையென்றும் குழந்தைகள் ஆடிய நடனமென்றும் விருதுகளால் நிறைந்த படைப்பாளிகளென்றும் விழாவின் சிறப்பாக பல விஷயங்கள் இருப்பினும், எனைக் கவர்ந்தது அந்த முச்சான்றோர் அரங்கம். அதென்ன முச்சான்றோர் அரங்கம் என்று நன்றாக கவனிக்கையில் தான் தெரிந்தது, அது தமிழ் தாத்தா .வே.சா நினைவாகவும், சதாவதானி செய்கு தம்பி பாவலர் நினைவாகவும், மொழிஞாயிறு தேவநேயப் பாவலர் நினைவாகவும் மும்மத ஒற்றுமையை உணர்த்தும் விதத்தில் அமைக்கப்பட்ட அரங்கமென்று.
 

என்னதான் சாதியென்றும் மதமென்றும் நாம் நம் உணர்வுகளை தனித்தனியே பிரித்துக்கொண்டாலும், நாளாக ஆக நமக்குள் பல காலப்போக்கின் பாகுபாடுகளை வாழ்வின் முறைப்படி நமக்குள் ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் அதயெல்லாம் களைந்து ஒரு இனமென்னும் கோட்டிலிருந்து பிற மனங்கள் வாடாத மனிதத் தன்மையை நிலைக்கச் செய்வதிலும் உறுதியாகவேயுள்ளோமெனும் நிம்மதியோடு அங்கிருந்து புறப்பட்டோம்..
 

விழாவின் முதற்புள்ளியாகத் துவங்கிய மாளவிகாவின் பரதநாட்டியமும், அருவிக் கவிஞர் திரு. ஆனந்தரவியின் எழுச்சிமிகு தனிக்கவிதையும், பெண்ணிற்கெதிரே நடக்கும் வன்கொடுமையைக் கண்டித்த திரு. அன்பழகனின் கண்டனக் கவிதையும், கண்ணீரைக் கவிதையாக்கிய திரு. யாகூப் அலியின் மீனவர்களின் வலியுணர்வு பற்றியக் கவிதையும், திரு. சுப்ரமணியனின் அறிமுகக் கவிதையும், மூத்த படைப்பாளி திரு. சம்சுதீன் அவர்களின் பங்களிப்பும், மரபுப் பெருங்கவி திரு. பட்டுக்கோட்டை சத்யாவின் நறுமுகையே பாடலும், பாடகர் திரு. லுக்மான் மற்றும் படிக்கும் மாணவர்களின் மெல்லிசைப் பாடல்களுமென விழாவின் ஐந்தாறு மணிநேரத்தை மனம் அசைபோட்டுக் கொண்டேயிருந்தது..
 

கவிஞர் திரு. முபாரக்கின் புதிய கவிதைத் தொகுப்பான "நீர் துளிகள்" எல்லோரின் கரவொலியோடும் வெளியிடப்பட்டு, "தேன் தமிழ்ச் சுரங்கம்" என ஐயா பட்டுக்கோட்டை ராசப்பா அவர்களுக்கும், "பண்ணிசைப் பாவலர்" என்று ஐயா கலக்கல் காங்கேயன் அவர்களுக்கும் விருது தந்து கௌரவித்த மேடை எனக்கும் "பன்னூல் பாவலர்" என்று விருதளித்து மரியாதை செய்ய மேடைக்கழைக்க அதை என் மனைவி செல்லம்மா ஏற்றுக்கொள்ள ஏற்புரையின் மகிழ்வோடு இறங்கியதன் நினைவில் நால்வரும் நடையைத் துவங்கினோம்..
 

மேடையேறி விருதினைப் பெற்றுக்கொண்டதன் நன்றியுணர்வு பொங்கி அன்புப் பார்வையில் வழிய; தனியாக நேரம் கிடைத்தால் ஓடிவந்து கட்டிப்பிடித்து ஒரு முத்தமிட்டுவிடத் துடித்த மனைவி செல்லம்மாவின் உணர்வதிர்வின் ததும்பலோடு குழந்தைகளின் உறங்கா தூக்கத்து மிச்சங்களையும் தூக்கிக்கொண்டு குளிர் நடுங்கும் வெளி யிறங்கி அதே பழைய வாழ்க்கையோடு பயணிக்கத் துவங்கினோம்..
 

மீண்டும் மீண்டும் இதுபோன்ற விழாக்களும் நிகழ்ச்சிகளும் நடக்கட்டும், நமது உணர்வுகளின் ஓட்டைகளை அவைகளும் உடன்சேர்ந்து அடைக்கட்டும், காலம் தாங்கிய நம் மண்ணிற்குரிய விடியலின் அவசரம் பொதிந்ததொரு தருணத்தை தனது தலைமேல் மட்டுமே தூக்கிக் கொண்டு ஓடும் அக்கறை நம் அனைவருக்குள்ளும் வந்துசேரட்டும் என்றெல்லாம் எண்ணிக்கொண்டு நாங்களும் சாலையில் பூச்செரியும் வாகன வெளிச்சங்களோடு கலந்து வீடுநோக்கிப் போகலானோம்..
 

என்னதான் நம் வாழ்க்கை குவைத் மண்ணிலேயே இப்படி வருடங்களாய் புதைந்துக்கொண்டிருந்தாலும் தமிழர் இம்மண்ணில் இப்படியும் தன் கலையுணர்வு குன்றாது வாழ்ந்தனர் எனும் நினைவை இவ்விழாவோடு சேர்த்து இதுவரை நடந்த விழாக்களும் இனி வரும் பெரிய விழாக்களும் தனது சுவடுகளை வரலாற்று நினைவிலிருத்து அகற்றாது பத்திரமாக வைத்துக் கொள்ளுமென்பது திண்ணம்..
 

நிறைவில், முச்சான்றோர்களின் அரங்கில் இன்பத் தமிழ் இசைவிழா எடுத்து எனையும் கௌரவித்து எனது எழுத்திற்கும் மரியாதை செய்த "குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின்" தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும், இத்தகு விழாக்கள் எடுக்க காரணமாக விளங்கும் டிவிஎஸ் நிறுவனம் மற்றும் அல் அவ்தா தச்சுப்பட்டறைப் போன்ற இதர பல கொடையாளர்களுக்கும் இத்தருணத்தின் மனம் நிறைந்த நன்றிகளைப் பகிர்ந்துக்கொண்டு, என் எழுத்தோடு இணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கமும் சொல்லி நிறைவுசெய்கிறேன்....

அனைவருக்குமெனது நன்றியும் கைகூப்பிய வணக்கமும் வித்யாசாகர்

 

 

vidhyasagar1976@gmail.com