சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி 16

 

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா               

 

 

(பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.)

 

ஊடல் தணிப்பான், கூடிக் களிப்பான்!

 

வனும் அவளும் கண்களால் கலந்து, காதலில் விழுந்து இல்லறத்தில் இணைந்து இன்பமாக வாழ்ந்து வந்தார்கள். சில வருடங்களில் அவன்-தலைவன்- தன் நிலை பிறழ்ந்து பரத்தையரின் உறவிலே நாட்டம் கொள்கின்றான். ஒருநாள் தன் வீட்டையும். மனைவியையும் பிரிந்து சென்ற தலைவன் நெடுநாட்களாகப் பரத்தையர் வீட்டிலே தங்கிவிடுகின்றான். பரத்தையர்களோடு கூடிக்களித்து இன்பமடைகின்றான். ஆசை அறுபது நாள் மோகம் முப்பதுநாள் என்பதைப்போல சில நாட்களில் அவனுக்குப் பரத்தையரின் உறவு சலித்துவிடுகிறது. அவர்களிடம் கிடைக்கும் இன்பம் புளித்து விடுகிறது. அவர்களின் தொடர்பே வெறுத்துவிடுகின்றது. தனது மனைவியை நினைத்துப் பார்க்கிறான். அவளது தூய்மையான அன்பும், தனக்கே சொந்தமான அவளின் உறவும், அதிலே கிடைத்த மகிழ்வும் அவனது உள்ளத்தில் மீண்டும் துளிர்விடுகின்றன. பரத்தையர் இல்லத்தை விட்டுத் தனது வீட்டிற்குத் திரும்புகிறான். மனைவியோடு உறவாட விரும்புகின்றான். அங்கே அவனோடு ஊடல்கொண்டிருக்கும் மனைவிடம் பேசுவதற்கு அவனக்குத் தயக்கமாக இருக்கிறது. உண்மையில் அவனுக்கு அச்சமாக இருக்கிறது என்றுகூடச் சொல்லலாம். அதனால் தனக்காகத் தனது மனைவியிடம் பேசிச் சமரசம் செய்து உதவுமாறு அவளது தோழியிடம் வேண்டுகோள் விடுக்கிறான். தோழியும் அதற்கு இணங்குகிறாள். தலைவியிடம் சென்று தலைவனுக்காகப் பரிந்துரை செய்கின்றாள். அவனை மீண்டும் ஏற்றக்கொள்ளும்படி வேண்டுகின்றாள்.

 

அதற்குத் தலைவி பின்வருமாறு சொல்கிறாள்.

 

'அழகான யானையொன்று தனது பகையாளியான புலியோடு மோதித் தன் பகையைத் தணித்துக்கொள்வதை விட்டுவிட்டு புலியிடமிருந்து ஒதுங்கிப் போய்த் தன்னோடு எந்தப் பகைமையும் இல்லாது சும்மா நின்றுகொண்டிருந்த வேங்கை மரமொன்றை எதிரியாக நினைத்து அதனை முட்டி, மோதிச் சிதைத்தத் தன் கோபத்தைத் தீர்த்துக்கொண்டதாம். யானையினடைய அந்தச் செயல் நகைப்பிற்கிடமானதல்லவா? அதனைப் போலவே தன்னோடு அன்புள்ள மனைவியான என்னோடு உறவாடி இன்பமடைவதை விட்டுவிட்டு, அன்பில்லாத பரத்தையை அன்புடையவள் என மயங்கி உறவாடியிருக்கிறார். தன் தவறினையும், என் வேதனையையும் அவர் உணர்ந்து கொள்வதற்காக அவருடன் ஊடல் கொள்வேன். அவர் உணர்ந்துகொள்வார். என்னைப் புரிந்து கொள்வார். என்னிடம் நெருங்கி வருவார். என்னோட உறவாடி மகிழ்ச்சியடைவார். நிச்சயமாக அது நடக்கும் நீ இருந்துபார்' என்கின்ற கருத்துப்பட தலைவி தோழியிடம் கூறுகின்றாள்

 

பாடல்:

 

இசைபட வாழ்பவர் செல்வம் போலக்

காண்டொறும் பொலியும் கதழ்வாய் வேழம்

இருகேழ் வயப்புலி வெரீஇ அயலது

கருங்கால் வேங்கை ஊறுபட மறலிப்

பெருஞ்சினம் தணியும் குன்ற நாடன்

நனிபெரிது இனியன் ஆயினும் துனிபடர்ந்து

ஊடல் உறுவேன் தோழி! நீடு

புலம்புசேண் அகல நீக்கிப்

புலவி உணர்த்தல் வண்மையானே!

 

                                      (நற்றிணை பாடல் இல: 217 குறிஞ்சித்திணை. பாடியவர்: கபிலர்)

 

இதன் கருத்து:

 

தோழி! புகழோடு வாழ்கின்றவருடைய செல்வத்தைப்போல காணும்போதெல்லாம் அழகுடன் விளங்கியது ஒரு யானை. அந்த யானை வலிமைபொருந்திய கரிய நிறத்தையுடைய புலியினைக் கண்டு பயந்து அவ்விடத்தை விட்டு அகன்று சென்றது. அவ்வாறு சென்றுகொண்டிருக்கையில் எதிரேயிருந்த கரிய நிறத்திலான அடிப்பாகத்தைக் கொண்டிருந்த வேங்கை மரத்தை மோதி, முறித்துச் சிதைத்துத் தனது கோபத்தைத் தணித்துக்கொண்டது. அத்தகைய யானை வாழ்கின்ற குன்றுகளுக்கு உரியவனான நாடன் என் தலைவன்அவன் எனக்கு இனியவன்தான். ஆனாலும் அவனோடு ஊடல்கொள்வதற்குக் காரணம் உள்ளதால் ஊடல்கொள்கிறேன். எனினும், அவனைப் பிரிந்திருப்பதால் நீண்டுகொண்டே போகின்ற தனிமைத் துயரம் அகன்றுபோகச் செய்து என் ஊடலைத் தணிப்பதற்காக தன் சொல்லாலும், செய்கையாலும் என்மீது அன்புகாட்டுவான் என்பதை நீ காண்பாய்.(என்று தலைவி தோழியிடம் கூறுகின்றாள்)

 

இதனைப்பாடிய கபிலர் சங்கப்புலவர்களில் மிகவும் பகழ்பெற்றவர். இவர் இயற்றிய 235 பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. கலித்தொகையில் குறிஞ்சிக்கலி, ஐங்குறுநூறில் குறிஞ்சித் திணைக்கான நூறு பாடல்கள், பதிற்றுப்பத்தில் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட ஏழாம் பத்து மற்றும் குறிஞ்சிப்பாட்டு என்பன இவரது ஆக்கங்கள். இவர் பறம்புமலை அரசனான பாரியின் உற்ற நண்பனாக விளங்கியவர். பாண்டிநாட்டிலுள்ள திரவாதவூரிலே பிறந்தவர். பண்டைத்தமிழகத்தின் வரலாற்றை அறியத்தருகின்ற பல்வேறு செய்திகளை இவரது பாடல்களிலே காணலாம்.




                                                                                                (காட்சிகள் தொடரும்....................................)

 

 

 

 

srisuppiah@hotmail.com