ஜெயமோகனுக்கு இயல் விருது 2014

 

னடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது இவ்வருடம் திரு.பா.ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சமகாலத்தில் 'எழுத்து அசுரன்' என்று வர்ணிக்கப்படும் இவர் புதினங்கள், சிறுகதைகள், காப்பியம், இலக்கியத்திறனாய்வு, பழந்தமிழ் இலக்கியம், மொழியாக்கம், அனுபவம், தத்துவம், ஆன்மீகம், பண்பாடு, திரைப்படம் என தமிழ் இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் தனது எழுத்தின் மூலம் ஆழமான முத்திரையை தொடர்ந்து பதித்து வருகிறார்.

 

இந்த விருதைப் பெறும் 16வது எழுத்தாளர் இவராகும். இதற்கு முன்னர் சுந்தரராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ;ணன், நாஞ்சில்நாடன், சு.தியடோர் பாஸ்கரன், டொமினிக் ஜீவா போன்றவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.

 

ஜெயமோகன் 1962ல் அருமனையில் (கன்னியாகுமரி) பிறந்தார். நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பை பாதியிலே விட்டுவிட்டு இந்தியா முழுவதும் இரண்டு வருடமாக அலைந்து வாழ்கையை கற்றுக்கொண்டார்.

 

1984ல் கேரளத்தில் காசர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைக்குச் சேர்ந்தார். எழுத்தாளர் சுந்தர ராமசாமியால் ஆற்றுப்படுத்தப்பட்டு தமிழ் இலக்கியத்துக்குள் நுழைந்தார். 1987ல் அவர் எழுதிய 'நதி' சிறுகதை முதன்முறையாக கணையாழியில் பிரசுரமாகி அவர் எழுத்து வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தது. இவருடைய 'விஷ;ணுபுரம்' நாவல் பரவலாக வாசகர்களை அடைந்து பெரும் புகழ்பெற்றது. அதைத் தொடர்ந்து காடு, ஏழாம் உலகம், கொற்றவை, வெள்ளை யானை ஆகிய 13 நாவல்களையும், 11 சிறுகதை தொகுப்புகளையும், 50 கட்டுரை நூல்களையும் இதுவரை எழுதியிருக்கிறார். 1990 ஆண்டு அகிலன் நினைவுப்போட்டிப் பரிசு, 1992 ஆண்டுக்கான கதா விருது, 1994 ஆண்டுக்கான சம்ஸ்கிருதி சம்மான் தேசியவிருது, 2008 ஆண்டு பாவலர் விருது, 2011 ஆண்டு 'அறம்' சிறுகதைத் தொகுதிக்காக முகம் விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார்.

 

ஜேயமோகன் பங்கேற்று வெளிவந்த திரைப்படங்கள் கஸ்தூரிமான், நான் கடவுள், அங்காடித்தெரு, நீர்ப்பறவை, ஒழிமுறி, கடல், ஆறு மெழுகுவர்த்திகள், காஞ்சி, காவியத்தலைவன் ஆகியவை பெரும் வெற்றியீட்டின.

 

1998 முதல் 2004 வரை 'சொல்புதிது' என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார். 2010ஆம் ஆண்டு முதல் இவரது படைப்பான விஷ;ணுபுரம் பெயரால் 'விஷ;ணுபுரம் இலக்கிய வட்டம்' இலக்கிய ஆளுமைகளுக்கு விருது அளித்து வருகிறது. அபூர்வமான சொல்லழகும், பொருள் செறிவும் கொழிக்கும் மொழியில் 2014 புத்தாண்டின் முதல்நாள் தொடங்கி மகாபாரத்தின் மறுஆக்கமாக இவர் தற்போது இணையத்தில் 'வெண்முரசு' நாவலை, ஒவ்வொரு நாளும்  ஓர் அத்தியாயம் எனப் பத்தாண்டுகள் திட்டமிட்டு, எழுதி வருகிறார்.

ஏறக்குறைய நாற்பது நாவல்களாக இது நிறைவுபெறும். தமிழில் வேறு யாருமே முயற்றிராத பிரம்மாண்டமான பணி இது.

 

இவருடைய மனைவி அருண்மொழி நங்கை, மகன் அஜிதன், மகள் சைதன்யாவுடன் நாகர்கோவிலில் வசித்து வருகிறார். 'இயல் விருது' கேடயமும், 2500 டாலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா ரொறன்ரோவில் 2015 ஜீன் மாதம் வழமைபோல நடைபெறும்.

 

 



 

 

 

 www.tamilauthors.com