பள்ளு இலக்கியத்தில் மள்ளர்களின் வாழ்க்கை முறைகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா


முன்னுரை


சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும். பள்ளு நூல்களில் பாட்டுடைத் தலைவனின் பெயர் மட்டும் கூறப்படும். மற்றவர்களின் பெயர்கள் கூறப்படுவது இல்லை. பள்ளனின் பெயர் பாட்டுடைத் தலைவனின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். மூத்த பள்ளியின் பெயர் பாட்டுடைத் தலைவனின் ஊர் அல்லது நாட்டின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். இளைய பள்ளியின் பெயர் பாட்டுடைத் தலைவனின் ஊரின் பக்கத்து ஊர் அல்லது பக்கத்து நாட்டின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். இரண்டு பள்ளியர்களில் ஒருத்தி சிவன் அடியாராகவும் மற்றொருத்தி திருமால் அடியாராகவும் காணப்படுவர்.

பெயர்க் காரணம்

பள்ளர்களின் வாழ்க்கையை விளக்கிக் கூறும் இலக்கியம் ஆதலால் இதற்குப் பள்ளு என்ற பெயர் ஏற்பட்டது. பள்ளர்கள் என்போர் யாவர்? உழவுத் தொழில் செய்யும் மக்கள் பள்ளர்கள் ஆவர். இவர்களில் பெண்கள் பள்ளியர், பள்ளத்தியர் என அழைக்கப்படுவர். எனவே, வயல்களில் உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் இலக்கியம் பள்ளு இலக்கியம் எனலாம்.

சிலப்பதிகாரத்தில் உழவர் பாடல்கள்

சிலப்பதிகாரம் மருத நில மக்கள் வாழ்க்கையை, அதாவது வயலும் வயலைச் சார்ந்த இடத்திலும் உள்ள மக்களின் வாழ்க்கையைக் கூறுவதைக் காணமுடிகின்றது. அப்போது இளங்கோவடிகள் 'ஏர் மங்கலம், முகவைப் பாட்டு' என்பனவற்றைக் குறிப்பிடுகின்றார். (நாடுகாண் காதை,
125 :134-137)

ஏர்மங்கலம்

ஏர்மங்கலம் என்பது யாது? முதன் முதலாக ஒரு நல்ல நாளில் ஏரைப் பூட்டி உழத் தொடங்குவதைப் பொன்னேர் பூட்டல் என்பர். இவ்வாறு, பொன் ஏர் பூட்டி நின்ற உழவர்கள் தம் உழவுக் கருவியாகிய ஏரை வாழ்த்தி, நன்கு விளையுமாறு வேண்டிப் பாடும் பாட்டு ஏர் மங்கலம் எனப்படும்.

வயல்களில் நெற்ப்பயிர்கள் நன்றாக விளைந்த பின்பு அவற்றை உழவர்கள் அறுப்பர். அவற்றை வீட்டிற்குச் சுமந்து வந்து பரப்பி, மாடுகளால் மிதிக்கச் செய்து நெல்லையும் வைக்கோலையும் பிரிப்பர். அப்போது பாடும் பாட்டு முகவைப் பாட்டு எனப்படும். எனவே, சிலப்பதிகாரம் காட்டும் ஏர் மங்கலம், முகவைப் பாட்டு என்பன உழவர்களின் வாழ்க்கையையே காட்டுகின்றன எனலாம்.

பள்ளு இலக்கியத்தின் தோற்றம

இவ்வாறு காணப்படும் உழவர்கள் பற்றிய செய்திகளும், உழத்திப்பாட்டு முதலிய வழக்காறுகளும், பாட்டும் கூத்துமாக அமைந்துள்ள பள்ளு என்ற சிற்றிலக்கிய வகை தோன்ற வழி செய்திருக்கலாம். பழங்காலத்தில் உழவுத் தொழிலில் ஈடுபட்ட பள்ளர், பள்ளியர்களின் வாழ்க்கையை ஒட்டிய கூத்து வகைகள் பாட்டும் தாளமும் பொருந்தச் சாதாரண மக்களால் விரும்பி ஆடப்பட்டு வந்தன. இந்த ஆட்டங்களையும் பாடல்களையும் கவனித்து மகிழ்ந்த புலவர்கள் அவற்றை இலக்கியமாகப் படைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கலாம். அதன் விளைவாகவே பள்ளு இலக்கியம் தோன்றியது என்றும் கருதுவர்.

பள்ளு நூல்களின் வகைகள்

பள்ளு இலக்கியத்தின் முதல் நூலாக முக்கூடற்பள்ளு என்ற நூல் அமைகின்றது. இந்நூல்
17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியது என்பர். அதன் பின்னர் ஞானப்பள்ளு, திருவாரூர்ப் பள்ளு, குருகூர்ப் பள்ளு, சிவசயிலப் பள்ளு, வைசியப்பள்ளு, வடகரைப் பள்ளு, திருமலை முருகன் பள்ளு, சீகாழிப் பள்ளு, செண்பகராமன் பள்ளு, தில்லைப் பள்ளு, வையாபுரிப் பள்ளு, கண்ணுடை அம்மை பள்ளு, திருப்புன வாயிற் பள்ளு, கதிரை மலைப் பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு, குற்றாலப் பள்ளு, திருச்செந்தில் பள்ளு, போரூர்ப் பள்ளு, இருப்புலிப் பள்ளு, திருவிடை மருதூர்ப் பள்ளு, புதுவைப் பள்ளு போன்ற பல நூல்கள் தோன்றின.

இலக்கணம்

பல்வேறு சிற்றிலக்கிய வகைகளுக்கு உரிய இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால், இப்பாட்டியல் நூல்களில் பள்ளு என்ற சிற்றிலக்கிய வகையின் இலக்கணம் காணப்படவில்லை. ஆனால், நவநீதப் பாட்டியலில் பிற்காலத்தில் சேர்க்கப்பெற்றுள்ள பல பாடல்கள் காணப்படுகின்றன. அவற்றுள் நான்கு பாடல்களில் உழத்திப் பாட்டு என்றால் என்ன என்று விளக்கப்படுகின்றது. உழத்திப் பாட்டைக் குறிப்பிட்டுவிட்டு இதைப் பள்ளும் என்பர் எனக் கூறுகின்றன.

வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியில் தொகை அகராதி என்ற பிரிவில் சிற்றிலக்கிய வகைகள் பலவற்றின் விளக்கங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் உழத்திப் பாட்டு என்பதன் விளக்கமும் உள்ளது.


வேறு பெயர்கள்

பள்ளு என்ற இலக்கிய வகைக்குப் பள்ளு நாடகம், பள்ளு மூவகைத்தமிழ், பள்ளேசல், பள்ளிசை என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இப்பெயர்களால் பள்ளு என்ற இலக்கிய வகை நடித்தற்கு உரியது; பாடுவதற்கு உரியது இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரியது என்பன தெரிய வருகின்றன.

செய்திகள்

விவசாயத் தொழில் செய்யும் உழவர்கள், உழத்தியர்கள் ஆகியோரின் ஏழ்மை வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிமையாக, இனிமையாக, சுவையாகக் கூறுவதே பள்ளு இலக்கியத்தின் நோக்கம் ஆகும். இவ்வகையில் பள்ளு இலக்கியத்தின் செய்திகள் பின்வருமாறு அமைகின்றன.

ஏராளமான நிலங்களைக் கொண்ட ஒரு செல்வந்தர் பண்ணையில் பள்ளன் ஒருவன் பரம்பரை பரம்பரையாக விவசாய வேலை செய்து வருகின்றான். அவனுக்கு இரண்டு மனைவியர். பள்ளன் தன் விவசாய வேலைகளைக் கவனிக்காது இளைய மனைவியிடம் மயங்கிக் கிடக்கின்றான். மூத்த மனைவியைக் கவனிக்கவில்லை. அப்போது நல்ல மழை பெய்கின்றது. ஆற்றில் தண்ணீர் நிரம்ப வருகின்றது. பள்ளனோ விவசாய வேலைகளைச் செய்யாமல் இளைய மனைவியின் வீட்டிலேயே இருக்கின்றான். இதை மூத்த மனைவி பண்ணையிடம் கூறுகின்றாள். பண்ணைக்காரன் கோபம் கொள்கின்றான். இதை அறிந்த பள்ளன் பயந்து போய் பண்ணையிடம் வருகின்றான். பண்ணை பள்ளனிடம் விவசாய வேலைகள் பற்றிக் கேட்கிறான். பள்ளன் கூறுகின்றான். பின், பண்ணையின் ஆணைப்படி வயல்களில் ஆட்டுக் கிடை வைக்க இடையனை அழைத்து வருகின்றான். பின், பள்ளன் இளைய மனைவியின் வீட்டிற்குச் செல்கின்றான். இதை அறிந்த மூத்த மனைவி மீண்டும் பண்ணையிடம் சென்று கூறுகின்றாள். இதை அறிந்த பள்ளன் விவசாய வேலைகளைச் செய்வது போல் நடிக்கின்றான். இதனால், பண்ணை அவனைத் தண்டிக்கும் பொறி ஆகிய தொழுவத்தில் மாட்டித் தண்டிக்கின்றான். இதனால் பள்ளன் வருந்துகின்றான். இதைக் கண்ட மூத்த மனைவி மனம் வருந்துகின்றாள். பள்ளனை மீட்கின்றாள். விடுபட்ட பள்ளன் ஒரு நல்ல நாளில் வயல்களை உழச் செல்கின்றான். பள்ளனை ஒரு மாடு முட்டி விடுகின்றது. அதனால் பள்ளன் மயங்கி விழுகின்றான். பின் மயக்கம் நீங்கி வயலை உழுகின்றான். சில நாட்கள் சென்றதும் பயிர் நன்கு விளைகின்றது. அவன் மூத்த மனைவிக்கு உரிய பங்கு நெல்லைச் சரியாகக் கொடுக்கவில்லை என அவள் பள்ளர்களிடம் முறையிடுகின்றாள். இதை இளைய மனைவி கேட்கின்றாள். மூத்த மனைவிக்கும் இளைய மனைவிக்கும் சண்டை ஏற்படுகின்றது. இறுதியில் இருவரும் சமாதானம் அடைகின்றனர். பள்ளனுடன் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இவையே பெரும்பாலான பள்ளு நூல்களின் செய்திகள் ஆகும்.

சான்றாக, முக்கூடற்பள்ளு என்ற நூலை எடுத்துக் கொள்வோம். இது ஒரு வைணவ சமய நூல். பாட்டுடைத் தலைவன் அழகர். திருமாலின் மற்றொரு பெயர் இது. பள்ளனின் பெயர் அழகக் குடும்பன். மூத்த பள்ளியின் பெயர் முக்கூடற் பள்ளி, இளைய பள்ளியின் பெயர் மருதூர்ப் பள்ளி.

சைவ சமய நூலாகிய திருவாரூர்ப் பள்ளில் பாட்டுடைத் தலைவன் வன்மீக நாதன். பள்ளனின் பெயர் வன்மீகப் பள்ளன். மூத்த பள்ளியின் பெயர் வன்மீகப் பள்ளி. இளைய பள்ளியின் பெயர் சீரங்கப் பள்ளி என்பது ஆகும்.

பள்ளும் குறமும்

பாட்டியல் நூல்களால்
96 என வரையறுக்கப்பட்டவை சிற்றிலக்கியங்கள். புத்திலக்கியங்களை 'விருந்து' எனக் குறிக்கின்றது தொல்காப்பியம்.

'விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'
என்பது தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுள்
231.
இவற்றுள் பள்ளு இலக்கியங்கள்
16-ம் நூற்றாண்டையும் குறம் 18-ம் நூற்றாண்டையும் சார்ந்தவை. நொண்டி, உழத்திப் பாட்டு, ஏசல் என்பனவும் இந்தக் குடும்பத்தைச் சார்ந்தவை.35 பள்ளுகளும் 34 குறவஞ்சிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறம் என்பதன் பிறபெயர்கள் குறவஞ்சி, குறவஞ்சித் தமிழ், குறவஞ்சி நாடகம், குறத்திப் பாட்டு என்பன.

பள்ளு இலக்கியத்திற்கான இலக்கணம் ஏதும் இல்லை. கி.பி. பதினாறாம் நூற்றாண்டு முதல் பள்ளு நூல்கள் எழுதப்பட்டுள்ளன. உழவர்களின் வாழ்வியல் பேசப்படும் இலக்கியம் இது. பள்ளுவில் சிறந்தது முக்கூடற் பள்ளு எனவும் குறவஞ்சியில் சிறந்தது குற்றாலக் குறவஞ்சி என்றும் புலவர் பெருமக்கள் உறுதியாகச் சொல்கிறார்கள். இந்த இரண்டைத் தவிர மற்றெதுவும் நான் வாசித்ததில்லை. எனவே என்னால் ஒப்பீட்டளவில் உரையாட இயலாது. வேறெந்தக் குறவஞ்சியின் பெயர் கூட எனக்குத் தெரியாது. செண்பகராமன் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு என்று இரண்டின் பெயர் மட்டும் அறிவேன். எனக்குத் தெரிந்ததை விளம்புவதில் தவறில்லை.
உழத்திப் பாட்டு எனும் வகையைப் பள்ளு என்பாரும் பள்ளு அன்று என்பாரும் உளர். உழத்திப் பாட்டு பற்றி எழுதும் உத்தேசம் இல்லை, கைவசம் நூலும் இல்லை.

பிற பிரபந்த வகைகளில் பள்ளும் குறமும் வாசிக்க இலகுவானவை, எளிதானவை, உரை எழுத அவசியம் அற்றவை. எனினும் முன்னூறு ஆண்டுகள் முந்தியன என்பதால் அரும்பத உரை அவசியமாகலாம்.

ஆண்டை அல்லது பண்ணையார் உறவு, பள்ளன்-பள்ளிகள் பூசல், உழவு செயல்வகை எனச் சுவைபட பேசப்படுகின்றன முக்கூடற்பள்ளுவில்.

முக்கூடற்பள்ளு

பள்ளு இலக்கியத்தில் சிறந்தது முக்கூடற்பள்ளு என்கிறார்கள். முக்கூடல் தலத்தில் கோயில் கொண்ட அழகர் மீது பாடப் பெற்றது, ஆனால் வைணவ இலக்கியம் என்று கூறி விட இயலாது.

மூன்று நதிகள் கூடும் இடம் முக்கூடல். கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்பது போல் தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு எனும் ஆறுகள் கூடும் இடம் முக்கூடல். இந்த நூலின் காலம் கி.பி.
1680 என குறிப்பிடப்படுகின்றது.

பள்ளு இலக்கியம் இசைப்பாடல் தன்மை உடையது. இந்த நூலில் பந்துவராளி, பைரவி, காம்போதி, சங்கராபரணம், ஆனந்த பைரவி, புன்னாகவராளி, கேதார கௌளம், காம்போதி, மத்யமாவதி, மோகனம், நாட்டை, சுருட்டி போன்ற ராகங்களில் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீர்வளம், நிலவளம் பேசும் இலக்கியம். வளை மேழி, நோக்கால், பரம்பு, மேழி, வடம், வள்ளக்கை, குத்தி, கொழு, கலப்பை, நுகம், கயமரம், கழுந்தேர்க்கால், கைக்கோல், கொட்டு, உழவுகோல், ஏர்க்கால் எனும் உழவு கருவிகள் பலவும் பேசப்படுகின்றன.

மீன்கள் பற்றிய பட்டியல் உண்டு- அயிந்தி, அயிரை, ஆரால், உய்யம், உழுவை, எண்ணெய் மீன், ஓரா மீன், கசலி, கடந்தாய், கருங்கண்ணி, கெண்டை, கெளிறு, கெளுத்தி, குறவை, கூனி, கோளை, சாம்பன், மணலி, மத்தி, மயிந்தி, மலங்கு, வரால், வாளை, சள்ளை, சாளை, திருக்கை, துதிக்கைமூக்கன், தேளி, நொறுக்கி, பசலி, பஞ்சலை, பண்ணாக்கு, பறவை, பாசிமீன், பொத்தி, மகரம், மடந்தை என இலக்கியங்கள் பதிவு செய்யாமற் போனால் பல தகவல்கள் நமக்குத் தெரிய வராமலேயே போயிருக்கும்.

பள்ளன் அழகர் அபிமானி. அழகர் அபிமானிகளாக இல்லாதவரை எவ்விதம் தண்டிப்பேன் என்பதற்குப் பாட்டுச் சொல்கிறான்.

'ஒரு போது அழகர் தாளைக்
கருதார் மனத்தை வன்பால்
உழப்பார்க்கும் தரிசு என்று
கொழுப் பாய்ச்சுவேன்
சுருதி எண்ணெழுத்து உண்மை
பெரிய நம்பியைக் கேளாத்
துட்டர் செவி புற்றெனவே
கொட்டால் வெட்டுவேன்
பெருமாள் பதி நூற்றெட்டும்
மருவி வலம் செய்யாரைப்
பேய்க்காலில் வடம் பூட்டி
ஏர்க்கால் செய்வேன்
திருவாய் மொழி கல்லாரை
இருகால் மாடுகளாக்கித்
தீத்தீயென்று உழக்கோலால்
சாத்துவேன் ஆண்டே'


மாணிக்கவாசகர் திருவெம்பாவையில், 'எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க' என்பதன் தீவிர வடிவமாயுள்ளது இந்த பக்தி.

பள்ளன் தன் பெருமை கூறுவது, மூத்த பள்ளியும் இளைய பள்ளியும் தத்தம் குடித்தரம் கூறும் பாடல்கள் தமிழ் மணப்பது.

'மைக்கடல் முத்துக்கு ஈடாய்
மிக்க நெல் முத்து உண்டாக்கும்
வடிவழகக் குடும்பன் நானே'


எனத் தான் விளைவிக்கும் நெல்லின் செருக்கு பேசும் பள்ளனை அறிமுகம் ஆகிறோம். மூத்த குடியாள், பெருமாள் பக்தையாகிய முக்கூடற்பள்ளியும், இளைய குடியாள், சிவனடியாளாகிய மருதூர்ப்பள்ளியும் போட்டிக்குப் பாடும் பாடல்கள் மிகவும் சுவையானவை.

வடகரையில் உள்ள, வளம் மிக்க ஆசூர் நாடு பற்றி மூத்த பள்ளி புகழ்கிறாள். அவள் நாடு அது, பெருமை பெற்றது. அந்த நாட்டில் கறை என்பதைத் திங்களில் மட்டுமே காணலாம். கடம் பட்டிருப்பது- கட்டப்பட்டிருப்பது மதங் கொண்ட யானை மட்டுமே. சிறைப்பட்டவை பறவைகள் மட்டுமே. திரிக்கப்பட்டிருப்பது நெய் விளக்கு ஏற்றுவதற்காகத் திரிக்கப்பட்ட திரி மட்டுமே, குறைப்பட்டிருப்பது கொத்தப்படுவதால் குறைபட்ட கம்மாளர்களின் அம்மி மட்டுமே. குழைத்திருப்பது பூங்கொடிகளும் பூங்கொத்துக்களும் மட்டுமே, மறைக்கப் பட்டிருப்பது உயர் செய்யுள்களின் பொருள் மட்டுமே. இவையல்லால், பிற குறைகள் ஏதுமில்லா நாடு எங்கள் நாடு என்கிறாள் மூத்த பள்ளி. பாடலைப் பாருங்கள்.

'கறைபட்டுள்ளது வெண்கலைத் திங்கள்
கடம்பட்டுள்ளது கம்பத்து வேழம்
சிறைபட்டுள்ளது விண்ணெழும் புள்ளு
திரிபட்டுள்ளது நெய்படும் தீபம்
குறைபட்டுள்ளது கம்மியர் அம்மி
குழைபட்டுள்ளது வல்லியம் கொம்பு
மறைபட்டுள்ளது அரும்பொருட் செய்யுள்
வளமை அரசூர் வடகரை நாடே'


பொறுக்குமா இளைய பள்ளிக்கு? தனது நாடான சீவல மங்கைத் தென்கரை நாட்டைப் போற்றுகிறாள். தனது நாட்டில் சூரியன் மட்டுமே காய்வான், கட்டித் தயிர் மட்டுமே மத்தால் கடையப்பட்டுக் கலங்கும். அழிந்து போவது நாழிகைகளும் கிழமைகளுமே, சுழன்று வருவது வான்மழை பொழிந்த வெள்ளம் மட்டுமே, சுமை தாங்காமல் சாய்ந்தது நெற்கதிர் மட்டுமே, தவம் செய்வோர் மனம் மாட்டுமே ஆசைகள் ஒடுங்கி இருப்பது, தேய்ந்து போவது உரைக்கப்படும் சந்தனம் மட்டுமே என்கிறாள். பாடலைப் பாருங்கள்:

'காயக் கண்டது சூரிய காந்தி
கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம்
மாயக் கண்டது நாழிகை வாரம்
மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்
சாயக் கண்டது காய்க்குலைச் செந்நெல்
தணிப்பக் கண்டது தாபதர் உள்ளம்
தேயக் கண்டது உரைத்திடும் சந்தனம்
சீவல மங்கைத் தென்கரை நாடே'


இங்கு காய்க்குலை என்பதற்கு வாழைக்குலை என்றும் பொருள் கொள்ளலாம். மலையாளத்தில் இன்றும் வாழைக்குலையைக் காய்க்குலை என்கிறார்கள்.
இவ்வாறே தமிழ் பாடிச் செழிக்கிறார்கள் மூத்த பள்ளியும் இளைய பள்ளியும்.

'மீது உயர்ந்திடும் தெங்கு இளநீரை
மிடைந்த பூகம் சுமந்து தன் காயை
சூதம் ஒன்றிச் சுமக்கக் கொடுக்கும்
சூதம் தன்கனி தூக்கும் பலாவில்
ஓதும் அந்த பலாக்கனி வாழை
உறுக்கவே சுமந்து ஒண்குலை சாய்க்கும்
மாதுளம் கொம்பு வாழை தாங்கும்
வளமை ஆசூர் வடகரை நாடே'


என்பாள் மூத்த பள்ளி.

தெங்கின் இளநீரை, நெருங்கி வளர்ந்திருக்கும் கமுகு தாங்கும். கமுகு, தன் குலையை அருகில் வளர்ந்திருக்கும் மாமரங்களைச் சுமக்கச் செய்யும். மாமரங்கள் தன் கனிகளை அருகில் வளர்ந்திருக்கும் பலா மரங்களில் சாரச் செய்யும். பலாக்கனிகளை வாழை மரங்கள் சுமக்கும். வாழைக் குலைகளை மாதுளங் கொம்பு தாங்கும் ஆசூர் வடகரை நாடே என்பாள் மூத்தாள்.

'பங்கயம் தலை நீட்டிக் குரம்பினில்
பச்சை இஞ்சியின் பாசடை தீண்டும்
தங்கும் இஞ்சியும் மஞ்சட் கழுத்தைத்
தடவி மௌ;ளத் தொடும் அந்த மஞ்சள்
அங்கு அசைந்திடும் காய்க்கதிர் செந்நெல்
அளாவி நிற்கும் அச்செந்நெலும் அப்பால்
செங்கரும்புக்குக் கைதரும் போல் வளர்
சீவல மங்கை தென்கரை நாடே'
என்பாள் இளையாள்.
கிராமத் தெய்வம் போற்றுவாள்
'திங்கள் மும்மாரி உலகெங்கும் பெய்யவே
தெய்வத்தைப் போற்றி வந்து கைதொழும் காண்
பொங்கலும் இட்டுத் தேங்காயும் கரும்பும்
பூலா வுடையாருக்குச் சாலவே கொடும்
குங்குமத்தோடு சந்தனம் கலந்து
குமுக்காவுடையாரயர் தமக்குச் சாத்தும்
கங்கணம் கட்டி ஏழு செங்கிடாயும்
கரையடிச் சாத்தா முன்னே விரைய வெட்டும்'
என்று. இளைய பள்ளியோ:
'பூத்தலைச் செஞ்சேவல் சாத்திரத்தாலே
புலியூர் உடையார் கொள்ளப் பலிதான் இடும்
வாய்த்த சாராயமும் பனை ஊற்றுக் கள்ளும்
வடக்குவாய்ச் செல்லி உண்ணக் குடத்தில் வையும'


என்கிறாள்.

என் வயதுக்காரர் அனைவரும் நினைவில் வைத்திருக்கும் சிந்து ஒன்றுண்டு. முக்கூடற்பள்ளு நூலில், அட தாளம், ஆனந்த பைரவி ராகம்.

'ஆற்று வெள்ளம் நாளைவரத்
தோற்றுதே குறி – மலை
யாள மின்னல் ஈழ மின்னல்
சூழ மின்னு தே
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக்
காற்றடிக்குதே – கேணி
நீர்ப்படு சொறித் தவளை
கூப்பிடு குதே
சேற்று நண்டு சேற்றைக் குழைத்து
ஏற்றடைக்குதே – மழை
தேடியொரு கோடி வானம்
பாடி ஆடுதே
போற்று திரு மாலழகர்க்கு
ஏற்றமாம் பண்ணைச் – சேரிப்
புள்ளிப் பள்ளர் ஆடிப் பாடித்
துள்ளிக் கொள்வோமே'


என்பது அந்த மழைக்குறிப் பாடல்.

நெல்விதைகளின் வகைகளைச் சொல்கிறான் பள்ளன் ஒரு பாட்டில், ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வகை நெல் இனங்களின் பெயர்களைக் காண முடிகின்றது.

'சித்திரக் காலி வாளாண் சிறை மீட்டான் மணல்வாரி
செஞ்சம்பா கருஞ்சூரை சீரகச்சம்பா
முத்து விளங்கி மலை முண்டன் பொற்பாளை நெடு
மூக்கன் அரிக்கிராவி மூங்கிற் சம்பா
கத்தூரி வாணன் கடைக கழுத்தன் இரங்கல் மீட்டான்
கல்லுண்டை பூம்பாளை பார்கடுக்கன் வெள்ளை
புத்தன் கருங்குறுவை புனுகுச் சம்பா'


என, மத்தியானம் சாப்பிட்ட நெல்லரிசிச் சோற்றின் பெயர் தெரியாமற் போய் விட்டோமே நாம் இன்று? எங்கே போயின இந்த நெல்லினங்கள்? விதையாவது எங்கேயும் கருதப் பட்டிருக்குமா? நெல்வகை போக, மாட்டு வகை சொல்கிறான் பள்ளன்.

'குடைக் கொம்பன் செம்மறையன் குத்துக் குளம்பன் மேழை
குடைச் செவியன் குற்றாலன் கூடு கொம்பன்
வடர்ப் புல்லை கரும்போரான் மயிலை கழற்சிக் கண்ணன்
மட்டைக் கொம்பன் கருப்பன் மஞ்சள் வாலன்
படப்புப் புடுங்கி கொட்டைப் பாக்கன் கருமறையன்
பசுக்காலன் அணிற்காலன் படலைக் கொம்பன்
விடர்த்தலைப் பூ நிறத்தான் வெள்ளைக் காளையும் இந்த
உண்டு ஆயிரமே'

பசுவையும் காளையையும் எருமையையும் எருமைக் கடாவையும் மாடு என்றழைக்கும் பருவத்துக்கு வந்து விட்டோம் நாம். இந்த யோக்கியதையில் மாட்டின் சுழிகள் பற்றியும் அவற்றுள் யோகச் சுழிகள் எவை, யோகமற்ற சுழிகள் எவை என்றும் சொன்னால் நமக்கு என்ன விளங்கும்? தாமணிச் சுழி, இரட்டைக் கவம், பாஷிகம் சுழி, கோபுரச் சுழி, நீர்ச் சுழி, ஏறு பூரான், லக்ஷ்மிச் சுழி, பட்டிச் சுழி, வீபூதிச் சுழி, ஏறு நாகம் என்பன நல்ல சுழிகள் என்றும் முக்கண் அல்லது அக்னிச் சுழி, குடைமேல் குடை, ஒத்தைக் கவம், விளங்குச் சுழி, பாடைச் சுழி, பெண்டிழந்தான் சுழி, இறங்கு பூரான், நாகபடம், அவற்றுள் முன்னாகம், பின்னாகம், தட்டுச் சுழி, துடப்பச் சுழி, விறிக்கட்டு அல்லது புட்டாணிச் சுழி, ஏழு கட்டுப் பாடைக் கட்டு, வால் முடங்கி, இறங்கு நாகம் என்பன தீய சுழிகள் என்றும் பள்ளனால் அடையாளம் கண்டிருக்க இயலும்.




முனைவர் பூ.மு.அன்புசிவா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-
641 028
பேச:
098424 95241.

 

 

 

 

 www.tamilauthors.com