முத்தொள்ளாயிரத்தில் கற்பனைகள்

இரா.விஜயராணி

 

ந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆராய்ச்சி அறிஞர் தி.வை.சதாசிவம் பண்டாரத்தார் இந்நூலில் உள்ள சில அகச்சான்றுகள் எடுத்துக்காட்டி இந்நூலாசிரியரை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என்கிறார். காதலையும் வீரத்தையும் தங்கள் வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் நம் தமிழர்கள். இந்நூலின் பெயர் இரு வகைகளில் விளக்கப்படுகிறது.

 

மூன்று வேந்தர்களைப் பற்றிய 900 பாடல்களகை; கொண்டது.

 

ஒவ்வொருவரையும் தனித்தனியே தொள்ளாயிரம் பாடல்களில் புகழும் நூல் இது.

மூவேந்தர்களின் வீரம், கொடை, புகழ், படைச்சிறப்பு (யானை மறம், குதிரை மறம்) பகையரசர்களிடம் திறை பெற்றமை, நாடு, நகர் வளம், பகைப்புலம் பழித்தல், களம், வெற்றி, எயில்கோடல், கைக்கிளை போன்ற பொருண்மைகளில் கற்பனைச் சுவையுடன் முத்தொள்ளாயிரம் பாடல்கள் அமைந்துள்ளன. மூவேந்தர்களைப் புகழ்வதற்குக் கைக்கிளை என்னும் அகத்திணைப் பிரிவை இவ்வாசிரியர் பயன்படுத்தியுள்ளார். இடைக்காலத்தில் எழுந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும் நாயகன் நயகி பாவத்துடன் ஜீவாத்மா-பரமாத்மாவுடன் கூடுவதற்குத் துடிக்கும் துடிப்பைத் தங்கள் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். முத்தொள்ளாயிர ஆசிரியர் தன்னை ஒருதலைக்காதல் கொண்ட பெண்iணாகவும், சேரன், சோழன், பாண்டியன் என்னும் மூவேந்தர்களின்பால் தமக்குள்ள அன்பினை மையப்படுத்தி பல பாடல்கள் பாடியுள்ளார்.

 

வித்துவான் .சேதுரகுநாதன் அவர்கள் உரை எழுதியுள்ள முத்தொள்ளாயிரத்தில்

 

கடவுள் வாழ்த்து      1

பாண்டியன்                60

சோழன்                      46

சேரன்                          23
---
130
---

என அமைந்துள்ளன. பிற உரையாசிரியர்களின் உரைகளில் பாடல்களின் எண்ணிக்கையும் (108, 109, 110) வைப்பு முறையும் (சேரன், சோழன், பாண்டியன்) மாறுபடுகின்றன. மூவேந்தர்களும் தொன்மை மரபிற்கு ஏற்பவும், சிறப்பிற்கேற்பவும் சிறப்புப் பெயர்கொண்டு சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

 

சேர மன்னர்கள் : கோதை, மாந்தைக்கோ, வஞ்சிக்கோ, பூமியர் கோ, வானவன், முசிறியர் கோமான் எனவும்

 

சோழ மன்னர்கள் : விந்தையர்கோன், கோழிக்கோமான், வளவன், செம்பின், கிள்ளி, நீர்நாடன், புகாஅர்ப்பெருமான் சென்னி, காவிரி நாடன் எனக் குடிப் பெயர்களாலும்

பாண்டிய மன்னர்கள் : மாக்கடுங்கோன், மாறன், கூடற்கோமகன், தென்னன், செழியன், வழுதி, தமிழ்நர் பெருமான், பொதியற்கோன், செலேக வண்ணன், வையையார் கோமான், கொற்கைக் கோமான், பஞ்சவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 

கற்பனை வளம் : கவிதைக்கு உயிர் மூச்சாக விளங்குவது கற்பனையே. சேரநாட்டின் வளத்தினையும் மக்களின் அச்சமற்ற வாழ்வினையும் ஆசிரியர் சுவைபடவிளக்கியுள்ளார்.
 

நாட்டு வளம் : விரும்பத்தக்க வேற்படையைக் கொண்ட சேரனது நாட்டில் சேறுபட்ட (அள்ளல்) நீர் நிறைந்த வயல்களில் அரக்காம்பல்கள் பூத்துக் கிடந்தன. அவைகளைப் பார்த்துப் பறவைகள் தங்கள் சிறகால் பக்கத்தில் நீந்தி வந்த குஞ்சுகளை அனைத்து ஒடுக்கிக் கெண்டனவாம். குஞ்களின் சிறகுகளில் எங்கே தீப் பற்றிக்கொள்ளுமோ என்ற அச்சத்தால்தான்...

 

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாய்அவிழ

வெள்ளம்தீப் பட்டது எனவெரீஇப் - புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்குமு; கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கைக்கோதை நாடு (முத். 110)
 

நெருப்புக் கொளுந்துகளாய்ச் செந்தாமரப் பூக்கள் வயல்நீர் மீது வாயவிழ்ந்து பூத்ததும் தண்ணீர்தான் தீப்பற்றிக் கொண்டதோ என்று பறவைக் கூட்டம் பதபதைத்து அச்சத்தால் ஆரவாரம் செய்தன.

 

நாட்டில் பயப்பட வேண்டிய காரியம் ஒன்றும் இல்லைதான், ஆனாலும் பயப்பட்டுத் தவிக்கின்றன இந்த பறவைகள். சேரமன்னது ஆட்சி முற்றிலும் அமைதியைக் கெடுத்துவிடும் என்று எப்படிச் சொல்லக்கூடும்? இந்தவிதமாக எக்களிப்போடும் நகைச் சுவையோடும் நாயகி தோழியிடம் கூறுகிறாள். பெருமிதமும் நகையும் தோழியின் கூற்றில் அமைந்துள்ளது. வெள்ளத்தில் ஆரக்காம்பலாகிய தீப்படித்திருக்கின்றது எனக்கூறி நாட்டுவளம் கூறப்பட்டுள்ளது.
 

பாண்டிய நாட்டின் வளம்: பாண்டிய நாடு முத்துக்களுக்குப் பெருமை பெற்ற நாடு. பாண்டிய நாட்டில் ஒரு பெண் தன் தோழியிடம் தன் நாட்டின் வளமை பற்றிக் கூறுவதாக இக்காட்சி அமைந்துள்ளது. பக்கத்தில் உள்ள கடற்கரைச் சோலைக்குச் சென்றபோது அங்கு எங்கு பார்த்தாலும் முத்துக்களாகவே தோன்றுகின்றன. கமுக பாளையிலிருந்து உதிர்ந்த மணிகளும், புன்னையின் அரும்புகளும், சங்கு ஈன்று போட்ட முதிரா முத்துக்களின் தொகுதியும் இவ்வாறு காட்சியளிக்கின்றன.
 

முத்துக் குடையினால் உலகுக்கு நிழல் செய்கின்ற வழுதிநாட்டில் எங்கும் முத்துக்களே மிளிர்கின்றன. அவன் வெண்கொற்றற் குடையைப் போலல்லவா நாடும் விளங்குகின்றது. நந்து (சங்கு) முதிர்ந்த முத்துக்களை ஈன்றால் மக்கள் அணிவதற்கு எடுத்துச் செல்வர். முதிரா முத்துக்கள் எடுப்பாரின்றி சிதறிக் கிடக்கும்.
 

நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்

பந்தர் இளங்கமுகின் பாளையும் - சிந்தித்

திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன்

நகைமுத்த வெண்குடையான் நாடு. (முத்.36)

 

முத்துப்போன்ற வடிவுடைய பொருட்களை எல்லாம் முத்துக்களாகக் கற்பனை செய்திருப்பதைக் காணமுடிகிறது.
 

பாண்டிய நாட்டில் மக்கள் துணையுடன் கூடிக்களித்து மகிழும் மற்றொரு காட்சியும் இவண் ஒப்பு நோக்கத் தக்கது.

 

மைந்தோடு மகளிர் திமிர்ந்திட்ட

குங்கும ஈர் சாந்தின் சேறிழுக்கி எங்கும்

தடுமாறல் ஆசிய தன்மைத்தே தென்னன்

நெடுமாடக் கூடல் அகம். (முத். 37)
 

கூடல் மகளிர் மேல்மாடத்திலிருந்து கொழுநரோடு ஊடிச் சிதறவீசிய குங்குமச் சந்தனச் சேறு வீதிமுழுவதும் பரவிக்கிடத்தலால் அவ்வீதிகள் வழிச்செல்வோரை வழுக்கிவிட்டுத் தடுமாறச்செய்யும் இயல்புடையது. இப்பாடலில் நெடுமாடக் கூடல் நகரின் செல்வச் செழிப்பும் இன்பப் பெருக்கமும், சுட்டப்பட்டுள்ளது.
 

சோழமன்ணின் உறையூர் நகர்வளம் மாற்றாரைப் போரில் வெல்லும் வளவனது அழகு நிறைந்த உறையூரினிடத்திலுள்ள வீதிகள், பூ விற்பவர்கள் முதல்நாள் மாலைப் பொழுதிற் கிள்ளிக் களைத்தெறிந்த பல வண்ணபூக்கள் மிகுதியாகப் பரவியிருக்கின்ற விதத்தைத் தெருக்கள் வில்லோடு பொருந்திய விண்ணகம் (வானவில்) போன்று கண்ணுக்கு இனியனவாயக் காட்சியளிக்கிறது. கிள்ளிக் களைந்த பூவின் மிகுதி இவ்வளவென்றால் தொடுத்த பூக்களுக்கு அளவு எவ்வளவாகும்? அவற்றை சூடியிருப்பவர் (அணிந்திருப்பவர்) அதிகமாக இருப்பர்.

 

அம்மலர்ப் பொழில்கள்தாம் எவ்வளவோ என்று ஆராயும் போது உறந்தையின் சிறப்பு, பொழிலின் மிகுதி, இன்பப்பெருக்கம் அறியமுடிகிறது. தரையில் கிள்ளிக் களைந்த சிதறிக் கிடக்கும் பூக்களை வானவில்லுடன் கற்பனை செய்து பார்ப்பது சுவைபயக்கிறது.
 

சேரன் ஆட்சிச்சிறப்பு
 

மூவேந்தர்களும் அன்று ஆண்ட நாட்டின் எல்லைப்பரப்பும் கற்பனையின் விரிவாக்கமாகத்தான் அமைந்துள்ளது.

 

வானிற்கு வையகம் போன்றது வானத்து

மீனிற் கனையார் மறமன்னர் வானத்து

மீன்சேர் மகியனையான் விண்ணுயர் கொல்லியர்

கோன்சேரன் கோதையென்பான். (முத். 16)
 

கோதை அரசாளும் காலத்தில் அவன் ஆளும் நிலப்பரப்பின் அகலம், அவனுக்கு அடங்கி சிற்றசர்தொகை, அவனுடைய இயல்பு ஆகியவற்றிற்கு மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாக புலவர் அளவீடு தந்துள்ளார்.
 

கோதையின் ஆட்சியின் நிலப்பரப்புவானப் பரப்பின் அளவுள்ளது. அவனாட்சியில் அடங்கியுள்ள சிற்றரசர்களின் எண்ணிக்கைவானவெளியில் மின்னுகின்ற விண்மீன்கள் அளவாகும் - கோதையோ வெண்மதியை ஒத்தவன் என்கிறார்.
 

சோழனின் ஆட்சிப் பரப்பு
 

குடை, செங்கோல் என்பன அரசர்க்குச் சிறந்தவை, செங்கோல் பிடித்தல் முறை கோடாமைக்கு அறிகுறியாகும். சோழமன்னன் உலகிற்கு நிழல் செய்கின்ற குடை மிகமிகப் பெரியது; மந்தர மலைதான் அதற்குக் காம்பு; நீல ஆகாயப் பரப்பு முழுவதும் அதற்கு மேற்பரப்பு ஒலை; சந்திரன் நடுவட்டம். அந்தக் குடை உலகம் முழுவதும் நிழல் செய்து காக்கின்றது என்று அவன் குடையின் தண்மையையும், கோலின் செம்மையையும் புலவர் கூறியுள்ளார்.

 

பாண்டினின் ஆட்சிப் பரப்பினைச் சுட்டும் விதமாக கீழ்க்காணும் பாடல் அமைந்துள்ளது
 

நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன்

காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால்

ஏம மணிப்பூண் இமையார் திருந்தடி

பூமி மிதியாப் பொருள். (முத். 97)
 

தேர்ச் சக்கரத்தை நிமிர்த்தவல்ல தோள்களில் ஒளி செய்யும் மாலையணிந்தவன் பாண்டியன் அழகிய வெண்கொற்றக் கொடையினை உடைய அம்மன்னனது ஆணையினால், பொன்னால் ஆகிய அழகிய அணிகலன்களை அணிந்த கண்ணிமைக்காத தேவர்களின் திருந்திய அடிகள் இம்மண்ணுலகை மிதிக்க மாட்டா. பாண்டியனது உடமை எனக் கருதி தேவர்கள் பூமியை மிதிக்கமாட்டாத செய்திக்குப் பாண்டியனின் திறத்தினைக் கற்பனையாக ஆசிரியர் படைத்துக் காட்டியுள்ளார்.
 

யானை மறம்
 

முத்தொள்ளாயிரத்தில் மொத்தம் 33 பாடல்களில் யானைகள் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.
 

பெருமை
 

மூவேந்தர்களில், படைச்சிறப்பு, நாடுகளின் பெருமை, யானைகளின் வீரம், ஆற்றல், போரிடும் தன்மை, நாணம், இரக்க உணர்வு முதலியனவற்றைச் கற்பனை கலந்து சுட்டும் விதமாக இப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
 

நீர்வளம் மிக்க வஞ்சி மாநகரில் கள் குடிப்பவர்கள் கள் குடிக்கும் பாத்திரத்தில் அதை வாங்கி, கள்ளின் மேற்பரப்பில் மிதக்கும் நுரையைக் கையால் வழித்து வெளியே எறிந்துவிட்டுக் கள்ளைக் குடிப்பார்கள். அவ்வாறு நுரையை வழித்து எறியும் போது கள்ளும் நிலத்தில் சிந்தும் அந்த வீதியில் அரசனின் அழகிய யானைகள் செல்லும்போது வீதியில் கிடக்கும் கள்ளிலும், நுரையிலும் யானையின் கால்கள் படும். அப்போது கள்ளும், நுரையும் மண்ணுடன் கலந்து வீதியெங்கும் சேறாகிவிடும்.

 

களிகள் களிகட்கு நீட்டத்தம் கையால்

களிகள் விதிர்த்திட்ட வெங்கள் - துளிகலந்து

ஓங்கெழில் யானை மிதிப்பச்சே றாகுமே

பூம்பொழில் வஞ்சி அகம். (முத். 14)
 

ஒரு அரசனின் போர் திறத்தைப் பற்றிப் பேசவேண்டும் என்றால் அவன் மிகவும் பலமுள்ளவன் என்று சொல்லும்போது படைபலம் பற்றியும் பேசப்படுகிறது 'பல்யானை மன்னீர்' என்று அழைத்துப் படுதிறை தந்துய்ம்மின் என்று அறிவுறுத்துகிறார். ஒரு அரசனின் புகழைப்பாடவும் பலயானைகள் கொண்ட பேரரசர்கள் தேவைப்படுகிறார்கள்.

 

'செங்கண்மாக் கோதை' என சிவந்த கண்களையுடைய சேரமன்னனைப் பற்றிக் குறிப்பிடும்போது சிவந்த கண்களை உடையவன் - போர்நாட்டம் மிகுந்தவன் அவனைப் போலவே அவனுடைய யானையும் 'சினவெங் களியானை' என அழைக்கப்படுகிறது.
 

பாண்டியனின் யானைகள்
 

'மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்

உருத்தரு மார்போலை யாகத் - திருத்தக்க

வையக மெல்லா மெமதென் றெழுதுமே

மெய்யிலை வேல் மாறன் களிறு' (முத். 47)
 

வீரம் கனல்கின்ற வேற்படைமன்னர் திரள்திரளாகக் கூடியிருக்கின்றனர். பகை வீரர்களின் அகன்ற பரந்த பெரியமார்பைப் பார்த்தது பாண்டியனின் யானை பாய்ந்தது: மார்பைத் துளைத்துவிட்டது. தன் தந்தத்தை மருப்பூசியாகக் கொண்டு பகை வீரனின் மார்பை ஓலையாக எண்ணி 'இந்நாடு எமதென்று எழுதும்' என்பதாக யானையின் வீரச் செயலை பாண்டியனின் படைவீரன் ஒருவன் கூறுகிறான். சீவக சிந்தாமணியில் கட்டியங்காரன் கந்துக்கடனிடம் யானையின் வீரச்செயல்பாட்டை கூறியிருப்பது ஒப்பு நோக்கத்தக்கது.
 

யானையின் இரு தந்தங்கள்
 

பேய்க்கு அச்சத்தை உண்டாக்கும் வேப்பந்தாரினை அணிந்த பாண்டியனது உயர்வும் அழகும் பொருந்திய யானையின் இரண்டு கொம்புகளும் பகைவரிடம் அச்சத்தைத் தோற்றுவித்தன. பகைவரின் மதிலை ஒரு கோட்டால் இடித்துத் திறந்து உள்ளே சென்றது, பகையரசனது மார்பாகிய வயலில் மற்றொரு கோடாகிய கலப்பையால் உழுதது. உழுதவுடனே வெற்றி விளைந்துவிட்டது. ஒருகோடு கதவுகோலின் வேலையையும், மற்றொன்று கலப்பையின் வேலையையும் செய்ததாக வீரர்கள் பேசிக் கொள்கின்றனர்.

 

உருவத்தார்த் தென்னவன் ஓங்குஎழில் வேழத்து

இருகோடும் செய்தொழில் தேரில் ஒரு கோடு

வேற்றார் அகலம் உழுமே ஒருகோடு

மாற்றார் மதில்திறக்கு மால் (முத். 15)
 

மற்றொரு பாடலில் யானையின் தோற்றமும், செயலும் கற்பனையின் எல்லைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

 

தோற்ற மலைகட லோசை புயல்கடாம்

காற்றி னிமிர்ந்த செலவிற்றாய்க் கூற்றுங் (முத். 16)

 

யானையின் தோற்றம் மலையைப் போன்றது, அதன் ஓசை கடல் முழக்கத்தைப் போன்றது, மேகம் மழைபொழிதல் போல் மதநீர் பொழிந்து கொண்டே செல்லும், கடுங்காற்றினும் விரைந்து நிமிர்ந்து செல்லும்: பகைவரைக் கொல்லுதலில் எமனுங்கூட அதனிடம் கடன்வாங்க வேண்டியதுதான், என யானையின் செயல்பாட்டில் புலவரின் கற்பனை வளத்தைக் காணமுடிகிறது.

 

யானையின் நாணம்

 

'அடுமதில் பாய வழிந்தன கோட்டைப்

பிடிமுன்பு அழகழிதல் நாணி - முடியுடை

மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்மேல்

றென்னவர் கோமான் களிறு (முத். 17)

 

போர் தொடங்கிற்று, தென்னவனுடைய சினக்களிறு நிமிர்ந்து சென்று பகைவர் மதிலை இடித்தது. மதிலின் கண் இருந்த பொறிகள் அனைத்தையும் உடைத்தது. மதிலும் உடைந்தது. கொம்புகளும் உடைந்தன. பகைமன்னரை கீழே தள்ளிக் குத்திக் கிழிக்கின்றது.

மதிலை ஒடித்ததினால் ஒடிந்த கொம்பைப் பிடியானைப் பார்த்து இழிவாக நினைக்கும் என்று எண்ணி நாணிப் பகையரசனுடைய குடiலைக் கிழித்து அதனால் கொம்பை மறைக்கின்றது. சிலம்பு அடைக்கலக்காதையிலும் பகைமன்னனின் குடலைக் குத்தியிழுக்கின்ற யானையைக் காணலாம்.

 

(சிலப் - அடைக்கலக்காதை, 20-உகசு})

 

மலையையொத்த தோள்களையுடைய கிள்ளியின் யானைக் கொடி கட்டிய மதிலில் பாய்ந்து ஒடிந்த தன் கொம்புகளும், மாற்று வேந்தர் தம் மணிமுடியைக் காலால் எற்றித் தேய்ந்த தன் நகங்களும் பெண் யானையின் முன் அழகிழந்து தோன்றும் பொல்லாமைக்கு நாணி பிடியானை நிற்கும் அந்தப்புரத்திற்குச் செல்லாமல் புறங் கடையிலேயே நின்று விட்டதாம் இந்த ஆண் யானை. யானைக்கும் நாணமா?

 

சோழநாட்டு யானையின் செயல் கற்பனை வானத்தைத் தொடவைக்கின்றது. கோயர்கோக்கிள்ளி - உறையூர்ச் சோழனது யானை, போர் தொடங்கிவிட்டால் வடக்கே உச்சயினி வரைபோய் வென்று, பின்பு தெற்கே வந்து ஈழ நாட்டையும் வென்று, உறையூருக்கே வந்து சேர்தல் கிள்ளியின் வழக்கம் அவனுடைய யானையும் அவ்வளவு தொலைவு சென்று வரும். போரில் அது தாவிப்பாய்ந்த ஓட்டத்தைப் பார்த்த வீரர்கள் ஒரு காலால் காஞ்சியிலும், இரண்டாவது காலால் உச்சியினியிலும், மூன்றாவது காலால் தெற்கே திரும்பி இலங்கையிலும் மிதித்து நாலவது காலால் உறையூருக்கு வந்துவிடும் என்று நாலுகாலுக்கும் உள்ள பெருமையைக் கூறுகின்றார்கள்.

 

கிள்ளியின் யானைப் படைகள் நிற்கும் இடத்தை படைவீரர்கள் காண்கின்றனர். அவ்வீரர்கள் வியப்பது போல புலவர் நம்மை வியக்க வைக்கின்றனார்.

யானைக் கூட்டங்கள் மலை மலையாக நிற்கின்றன. ஆயிரக் கணக்கான யானைகள் மறிகடல் போல முழங்குகின்றன. அவற்றின் கால்கள் பெரிய சங்கிலிகளால் கட்டிப் போடப் பட்டுள்ளன.

 

ஒரு வீரன்: யானை தன் காலை நிமிர்ந்தால் சங்கிலிக் கண் அற்றுப்போய்விடும்போல் உள்ளது.

 

மற்ற வீரன்: காலை நிமிர்ந்தால் சங்கிலியை அறுத்துக் கொண்டு போய் பகைவரையெல்லாம் அழித்துவிடும் பகைவருடைய மனைவியர்;தம் கழுத்திலுள்ள மங்கலக் கயிறுகளும் அற்றுப் போய்விடும் என யானையின் மறத்தன்மை இப்பாடலில் சுட்டப்பட்டுள்ளது. (முத். 70)
 

மற்றொரு பாடலிலோ : யானைகள் மதிலுக்கு புறத்தில் உள்ள வேல் வடிவுள்ள இரும்புக் கதவுகளை முதலிற் பாய்ந்து ஒடித்தன. பின்பு உட்சென்று மதிற்கதவைக் கோத்து எடுத்த கோட்டுடன் விளங்குவதால் 'பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றும்' என்றார் புலவர். யானை சேனைக் கடலின் நடுவில் பாய்கட்டிய மரக்கலம்போல விளங்குவதாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. செல்கின்ற வழியில் நன்றாக ஊனுண்ணலாம் என்றுதான் பேய்க் கூட்டங்களும் வந்துவிட்டன. களத்தில் இறந்தவர்களுடைய குடல்களை இழுத்து மாலையாக அணிந்து கொண்டு ஊன்தின்ற மகிழ்ச்சியினால் பேய்மகளிர் ஆடுகின்றனர். இத்தகைய ஆரவாரத்துடன் மலை நடந்து வந்ததுபோல் வருகின்றது யானை.

 

சினவெங்களி யானையின் கொலைத்தொழில் போருக்கு யானை செல்கின்றது. நெடுநாளாக எதிர்பார்த்திருந்த கழுகுக் கூட்டம், பருந்துக் கூட்டம், நரிக் கூட்டம் எல்லாம் பின் தொடர்கின்றன. போர் நடந்த நாள் முழுநிலவு நாள். வானில் உள்ள முழுநிலவின் தோற்றம் பகை மன்னர்களின் விரிக்கப்பட்ட வெண்கொற்றக் குடையைப் போல் அமைந்ததனால் அதனை யானை பற்றத் தன்துதிக்கையை நீட்டியது. சேரமன்னின் சினமுள்ள கொடிய மதயானை முழுநிலவினை பகையரசனின் வெண்கொற்றக்கொடை என்றெண்ணி தன் துதிக்கையைக் கொண்டு இழுக்க நிற்பது அருமையான கற்பனை.

 

குதிரை மறம்

மாறனுடைய குதிரைப்படையே அவன் பகைவனுடைய யானைப்படையைத் தாக்கி அழிக்கின்றன என்ற கூற்றின் வாயிலாகச் சேரனிடம் வலிய குதிரைப்படைகள் இருந்ததை அறியமுடிகிறது.

 

'நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப்

புரைசை அறநிமிர்ந்து பொங்கா அரசர்தம்

முன்முன்னா வீழ்ந்தமுடி கள்ளைதத்த மாப்

பொன்னுரைகல் போன்ற குளம்பு' (முத்.13)

 

அணிகளாக அமைந்த ஒளிபொருந்திய வேல்படையைக் கொண்ட பாண்டிய மன்னனைப் போரிட எதிர்த்து நின்ற மாறனுடைய குதிரைப் படையே அவன் பகைவருடைய யானைப் படையைத் தாக்கி அழிக்கின்றன என்ற கூற்றின் வாயிலாகச் சேரனிடம் வலிய குதிரைப் படைகள் இருந்ததை அறிய முடிகின்றது.
 

பகைவர்களை கழுத்தணி கயிறு அறுபடும்படிச் சினந்து பாண்டிய அரசனுக்கு முன்னர், போரிடுவதற்கு முன்னர் எண்ணிப் பார்க்காமல் தோல்வியுற்று வீழ்ந்த பகை மன்னர்களின் முடிகளை உதைத்துத் தேய்ந்த பாண்டிய மன்னனுடைய குதிரைகளின் குளம்புகள் பொன்னை உரைத்துப்பார்க்கப் பயன்படுத்தப்பெறும் பெரிய கட்டளைக்கல் போன்ற வடிவில் அமைந்திருந்தன. பகைவரின் ஆண்மையின் தரத்தை இது அறிய உதவியது.

 

நெற்கதிர் அறுது;ததபின்பு அந்த வைக்கோலால் மடைகளை அடைக்கும்படி நகர்வளமிக்க சோழநாட்டுவேந்தன் மழைபோல் கொடைத்தொழில் செய்பவன் போர்க்களத்தில் வளவனுடைய குதிரைகள் காற்றினும் கடுகிச் சென்று பகை மன்னருடைய பொன்முடிகளை உதைத்தன. மார்பிலுள்ள பொன்னணிகளை எற்றி உதைத்துத் தங்கம் உரைத்த கட்டளைக் கற்போன்ற குளம்புகள் உடையனவாயின. வளவனின் நாட்டின் நீர்வளமும், போர்ப் பரிகளின் வீரமும் சுட்டப்பட்டுள்ளன. கற்போன்ற கால்குளம்புகள் என இப்பாடலில் இடம்பெற்றுள்ள தகவல்போல் மற்றொரு பாடலில் பகையரசனின் கீரிடத்தையும், மார்பில் அணிந்துள்ள பொன்னணிகளை எத்தியதால் யானையின் கால் நகங்கள் சிதைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

 

மன்னர் முடியுதைத்து மார்பகத்துப் பூணுழக்கிப்

பொன்னுரைகள் போன்ற குளம்பு (முத்.68)

கைக்கிளை

கைக்கிளை என்பது ஒருதலைக் காமம். கை-சிறுமை. கிளை-உறவு. அதாவது இருபாலருள் ஒருவரிடத்தே மட்டும் தோன்றிய மனத்தின் அன்பு நெகிழ்ச்சி. இயற்பெயர் சார்த்திக் கூறப்படும் புறத்திணைக் கைக்கிளை. இது ஆண்பாற்கைக்கிளை, பெண்பாற் கைக்கிளை என இருவகைப்படும். இவற்றில் இங்கு இடம் பெறுவன எல்லாம் புறத்திணைச் சார்பான பெண்பாற் கைக்கிளை ஆகும். பாண்டியன் (24-61) சோழன் (75-107) சேரன் (117-130) என்ற பாடல்களின் எண்ணிக்கையில் அதிக அளவு கை;கிளை பற்றிய பாடல்கள் இடம் பெறுவதைக் காணலாம்.

 

தலைவி உலாவரும் மன்னனைக் கண்டு காதல் கொள்கின்றாள். இதனால் தலைவியின் மனத்தில் ஏற்படும் காதல் உணர்வையும், வருந்தும் நிலையையும் அதன் மூலம் மூவேந்தர்களின் சிறப்பினையும் ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளனர். மன்னனின் மீது காதல் கொள்ளும் பெண்கள் பலவாறாகச் சுட்டப்படுள்ளனர். காட்சி, வேட்கை, மெலிதல், ஒரு தலையுள்ளல், ஆக்கஞ் செப்பல், நாணுவரை இறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என்ற இப்பத்து நிலையையும் ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார் எங்கும் நிறைந்த தோன்றாத துணைவனாகிய இறைவனிடத்துத் தாங்கொள்ளும் அன்பினை வளர்த்தற் பொருட்டு அவனைத் தலைவனாகவும் தம்மைத் தலைவியாகவும் கொண்டு பாடுவது மரபு இங்கு தோன்றாத்துணையாக கருதப்படும் இறைவனை, தோன்றுந் துணைவனான மன்னனோடு ஒப்புமையாகக் கருதிக் கொண்டு தலைவி பலவாறாகப் புலம்புகிறாள்.
 

பாண்டியன்
 

பாண்டிய மன்னனிடம் உள்ளம் பறிகொடுத்த பெண் பாண்டிய மன்னன் வந்த பொன் தேரை இழுத்துச்சென்றக் குதிரையின் குழம்புகள் பதித்த பள்ளத்தில் உள்ள புழுதியை எடுத்து நெற்றியில் பூசுகிறாள், தலையில் சூடுகிறாள், மேனியில் தேய்த்து மகிழ்கிறாள். (முத். 103) மண்ணுயிர்க் காக்கும் வேந்தன் தன்னிடம் பாராமுகமாய் இருப்பதால் பால் ஒருவருக்கும், நீர் ஒருவருக்கும் தரும் பாரபட்சத் தாய்போல் மன்னன் திகழ்வதாய்ப் பழிக்கின்றாள் (முத். 136)

 

தளைய விழும் பூங்கோதைத் தாயரே ஆவி

களையினும்என் கைதிறந்து காட்டேன் - வளைகொடுப்போம்

வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன் வந்து

என் கண் புகுந்தான் இரா. (முத். 38)
 

எனத் தலைவி இரவில் பாண்டியன் பெரிய பட்டத்து யானையுடன் வந்து என் கண்ணுள் புகுந்தான். கட்டு நீங்கி மலரும் பூமாலையணிந்த செவிலித்தாய்மார்களே! என் கண்ணுள் புகுந்துள்ள தலைவனை என் ஆவி நீங்கினாலும் கண்களை மூடியுள்ள கைகளைத் திறந்து காட்ட மாட்டேன் எனத் தலைவி கூறியுள்ளாள். மற்றொரு தலைவியோ பாண்டிய மன்னனை சுமந்து செல்லும் பெண் யானையிடம் மன்னனை நன்கு பார்ப்பதற்காக மெதுவாகச்செல் பிடியே என வேண்டுகிறாள். (முத். 100, 101, 102)

 

சோழன்

சோழ நாட்டுப்பெண் சோழ மன்னனிடம் வாடைக்காற்றை (முத் 51) நெஞ்சை (முத் 49) தூதாக அனுப்புகின்றாள். சோழமன்னனைப் பிரிந்து தவிக்கும் தவிப்பு வலையிடைப்பட்ட மீன்போல் உள்ளது. (முத். 35)

 

செங்கால் மடநாராய்! தென்னுறந்தை சேறியேல்

நின்கால் மேல் வைப்பன் என் கையிரண்டும் - நன்பால்

கரை உறிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடற்கு

உரையாயோ யான்உற்ற நோய் (முத். 95)

தலைவி காமமிக்க கழிபடர் கிளவியால் கேளா புள்ளினத்தைக் கேட்பனவாகக் கருதி, சிவந்த கால்களும் இளமையும் பொருந்திய நாரையோ! தெற்கில் உள்ள உறையூரை அடைவாயேயானால் என் இரு கைகளையும் நின் கால்களின் மேல் வைத்து வணங்குவேன். நுல்லிடமாகிய கரையில் மீன்கள் கரைமோதி பிறழ்ந்து செல்லும் காவிரி நீர் வளம் பொருந்திய சோழ நாடானாகிய சோழ வேந்தனுக்கு யான் அடைந்த காதல் நோயைப் பற்றிச் சொல்ல மாட்டாயோ? என்று தலைவி கூறுகின்றாள். சோழனைச் சுமந்து செல்லும் பெண்யானை விரைவாகச் செல்வதால் தலைவி அதனைப் பழிக்கின்றாள். (முத். 134) இவ்வாறாக தலைவியன் ஒரு தலைக் காதல் உணர்வினை ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சேரன்

சேர நாட்டில் தலைவி சேரனின் உலாக் கண்டபின் தன்மனம் அரண்மணை வாயிலில் காத்து நிற்பதாக கூறுகின்றாள். (முத். 17)

 

தலைவி தோழியிடம் தன்தாய் தன்னை வீட்டுக்குள் அடைத்து வைப்பதன் வாயிலாக தன் உடலை மட்டுமே காவலில் வைக்க முடியும் என்றும் மனமோ அரசன் பின்னே சென்றுவிட்டது என்றும் கூறுகின்றாள்.

 

காதல் நோயும், கண்டிக்கும் தாயும்

 

நாட்டை ஆளும் மன்னன் நல்லவன், வீரத்தில் வல்லவன், பேரழகன், அவன் வீதியிலே பவனிவரும்போது அவனைக் காணவும், அவனது அழகை இரசிக்கவும், இளம்பெண்கள் தத்தம் வீடுகளிலேயிருந்து வெளியே வருவார்கள். அப்படி வருகின்ற சமயத்திலே, மன்னன்மீது தன் பிள்ளை காதல் கொண்டுவிட்டால் நிறைவேறாது போய்விடக்கூடிய அந்தக் காதலால் தன்மகளின் வாழ்வு பாழாகிப்போய்விடுமே என்ற அச்சத்தால் மன்னனைப் பார்க்கவிடாது தாய் தடுப்பாள். இது இளம்பெண்கள் இருக்கும் இல்லங்களில் சாதாரணமாக நடைபெறுவது வழக்கம். இதுபற்றி முத்தொள்ளியிரத்தில் உள்ள ஒரு பாடல் வருமாறு.

தாயர் அடைப்ப மகளிர் திறந்திட

தேயத் திரிந்த குடுமியவே ஆய் மலர்

வேண்டுலாஅம் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்

கண்டுலாஅம் வீதிக் கதவு (முத்.10)

வண்டுகள் மொய்க்கின்ற மலர்மாலைகளை அணிந்துகொண்டு சேரமன்னன் தேர்மீது அமர்ந்த தெருவிலே பவனி வருகின்றான். அவனைக் காணும் ஆர்வத்தில் இளம்பெண்கள் தங்கள் வீடுகளுக்குள்ளிருந்து வெளிப்பட்டு வாசலுக்கு வர முயல்கிறார்கள் தம்பிள்ளைகள் மன்னனைக் கண்டால் மன்னனம்மேல் காதல் கொண்டுவிடுவார்களே என்று கவலைப்பட்ட அவர்களின் தாய்மார். வெளிக்கதவைப் பூட்டிவிடுகின்றார்கள். தாய் கதவிற்குத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு அப்பால் சென்றதும். மகள் மீண்டும் கதவைத் திறக்க முற்படுகின்றாள். அதைக்கண்ட தாய் ஓடிவந்து மறுபடியும் கதவை நன்றாகப் பூட்டிவிடுகின்றாள். மகள் திரும்பவும் திறக்கின்றாள். தாய் பூட்டுகின்றாள். மகள் திறக்கின்றாள். இப்படியாக இளம் பெண்களும் அவர்களின் தாய்மாரும், கதவுகளைத் திறப்பதும், பூட்டுவதுமாக இருந்ததால் கதவின் பூட்டில் உள்ள குமிழ்கள் தேய்ந்துபோகின்றன. இதுதூன் பாடலின் பொருள்.

 

காலத்தால் பழசாகி, பயன்பாட்டால் பழுதாகி பூட்டுக் குமிழ்கள் தேய்வது வழமை. இங்கோ காதலால் குமிழ்கள் தேய்வதாகச் சொல்லப்பட்டிருப்பது எவ்வளவு அருமை!

 

காதல்வயப்பட்ட கன்னி ஒருத்திக்கும் அவளது தாய்க்கும் நடக்கும் போரட்டத்தை இன்னும் ஒரு பாடல் மிகவும் சுவையாகச் சித்தரிக்கின்றது.

 

கடல்தானைக் கோதையைக் காண்கொடாலள் வீணில்

அடைத்தாள் தனிக்கதவம் அன்னை அடைக்குமேல்

ஆயிழையாய் என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்

வாயும் அடைக்குமோ தான்  (முத். 14)

 

கடல் போன்ற மிகப்பெரிய படையினைக்கொண்ட மன்னனைப் பார்க்கவிடாமல் என்னைத் தடுத்து ஒரேயொரு வெளிக்கதவையும் மூடிவிடுகிறாள் எனது தாய். ஆனால், அழகிய நகைகளை அணிந்துள்ள என் தோழியே! அந்த மன்னன்மேல் நான் காதல் கொண்ட விடயம் ஊர்மக்கள் எல்லோருக்கும் தெரியும். அவர்கள் மன்னனிடம் சென்று என் காதலைப்பற்றிச் சொல்வார்கள். அதைத் தடுக்க அவளால் முடியுமா? என்று தோழியிடம் கேட்பதுபோல இந்தப்பாடல் அமைந்துள்ளது. வீட்டுக்குள் என்னைப் பூட்டி வைத்து, வெளிக்கதவை அடைத்துவிடத்தான் முடியும். ஊர்வாயை அடைக்க உன்னால் முடியுமா? என் காதல் மன்னனிடம் சென்று சேர்வதைதத் தடுக்க உன்னால் முடியுமா? என்று தாய்க்கு விடுக்கப்படுகின்ற கேள்விக்கணைதான் அது. அந்தக்கேள்வி அவள் அரசன்மேல் வைத்துள்ள காதலின் ஆழத்தை நன்கு உணர்த்துகின்றது.

 

இளம் பெண்களின் இதயத்தில் எழுகின்ற காதல் அவர்களைப் படுத்தும் பாட்டை மற்றும் ஒருபாடல் வேறொரு கோணத்தில் புலப்படுத்துகின்றது.

 

வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்

நிரைபொரு வேல் மாந்தைக் கோவ!-நிரைவளையார்

தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார்

செங்கோலன் அல்லன் என (முத். 11)

முத்தொள்ளாயிரம் சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் வீரத்தை, போர்த்திறனை, படைச்சிறப்பை, திரைகொள்ளும்விதம், கொடை போன்றவற்றை கற்பனைச் சுவையுடன் நம்முன் விவரித்து உரைக்கின்றது. கைக்கிளைப் பாடல்களாக தலைவியர் மூவேந்தர்களின் உலாவினைக் கண்டு உள்ளம் பறிகொடுத்து புலம்பும் புலம்பல் சுவையாக உள்ளன.

பண்டையத் தமிழ் இலக்கியங்கள் என்றாலே படிப்பதிலும் படித்ததை எண்ணிக் கழிப்பதிலும் ஏற்படும் சுவையே தனியானதுதான். நமக்கு கிடைத்துள்ள இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் தேனில் தோய்த்தெடுத்த பலாச்சுவைப்போல் இனிமையானது. பக்க எல்லைக்கருதி ஒருசிலப் பாடல்கள் மட்டும் இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. முத்தொள்ளாயிரத்தில் வீரமும் காதலும் போட்டிப் போட்டுக்கொண்டு கற்பனை வளத்துடன் படைக்கப்பட்டுள்ளன.

 

இவ்வாறாக மூவேந்தர்களின் ஆட்சியில் காணப்பட்ட தொன்மைக் கூறுகளையும் பண்டைய மக்களின் வாழ்வியலையும் விளக்கியுள்ளன. முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களின் சிறப்பினையும், வீரத்தையும் நாட்டு வளத்தையும், தலைவியின் ஒருதலைக் காதலையும் இந்நூலின்வழி சுவைக்கமுடிகிறது.
 

 

ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்

உலகநாதன், செ., - முத்தொள்ளாயிரம் - தெளிவுரையுடன்,

முல்லை நிலையம்,

சென்னை,

2010, மறுபதிப்பு.

கதிர் முருகு., - முத்தொள்ளாயிரம்,

சாரதா பதிப்பகம்,

சென்னை,

2013, ஐந்தாம்பதிப்பு.

 

கபிலன், வே., - முத்தொள்ளாயிரம் - உரைவிளக்கம்,

அருணோதயம்,

சென்னை,

1979, மூன்றாம்பதிப்பு.

சேதுரகுநாதன், நா., - முத்தொள்ளாயிரம்,

சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்,

திருநெல்வேலி,

1946, முதற்பதிப்பு.

சொக்கன், என்., - முத்தொள்ளாயிரம் எளிய தமிழ் வடிவம்,

கிழக்கு பதிப்பகம்,

சென்னை,

2010, முதற்பதிப்பு.

டி.கே.சி., - முத்தொள்ளாயிரம்,

பாரி நிலையம்,

சென்னை,

2004, முதற்பதிப்பு.

துறவி., - முத்தொள்ளாயிரம் (புதுக்கவிதை வடிவில்)

புழனியப்பா பிரதர்ஸ்,

சென்னை,

2005, முதற்பதிப்பு.

மாணிக்க வாசகன், ஞா., - முத்தொள்ளாயிரம் விளக்கவுரையுடன்,

உமா பதிப்பகம்,

சென்னை,

2005, இரண்டாம்பதிப்பு.

முத்துகணேசன், ரெ., - முத்தொள்ளாயிரம் - தெளிவுரையுடன்

முல்லை நிலையம்,

சென்னை,

1995, இரண்டாம்