இன்றைய இளைஞர்களிடம் இலக்கிய நூல்களைப் படிக்கிற ஆர்வம் குறைந்திருக்கிறது
 

கவிஞர் மு.முருகேஷ்
 


கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு

வந்தவாசி.மார்ச்
.19.

 

கநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் அதிகமாய் அக்கறை செலுத்திவரும் இன்றைய இளைஞர்களிடம் தமிழ் இலக்கியம் சார்ந்த நூல்களைப் படிக்கிற ஆர்வம் வெகுவாய் குறைந்தே காணப்படுகிறது என்று கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.

வேலூர் கவிஞர் பிரதீப் ரவி எழுதிய ' வீடு திரும்பும் வேளையில்... ' கவிதை நூலை இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் தொழிலதிபர் இரா.சிவக்குமார் வெளியிட, வந்தவாசி ரோட்டரி சங்கத்தின் முன்னாள் துணை ஆளுநர் எம்.எஸ்.முத்துராஜ் பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப் பிரதிகளை தலைமையாசிரியர் ஞா.சேவியர், லயா அறக்கட்டளை செயலாளர் மா.யுவராஜ், செம்பூர் லீலாவதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவிற்கு தலைமையேற்ற கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது, பல்லாயிரமாண்டுகால சிறப்பையும் பெருமையையும் உடையது நமது தமிழிலக்கியம். ஆனால், அவற்றின் பெருமையை சிறப்பை நாம் இன்னும் உணராதவர்களாய் இருக்கிறோம். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் தமிழகம் முழுக்க தேடித்தேடி சிதைந்துகிடந்த பல பழந்தமிழ் இலக்கியங்களை நூல்களையும் ஓலைச்சுவடிகளையும் சேகரித்து நூல்களாக்கி தந்தார். ஆனால், அவற்றை நாம் முறையாக படிக்காமலும் பாதுகாக்காமலும் இருக்கிறோம். தமிழரின் அடையாளமாகவும் முகமாகவும் இருப்பவை பழந்தமிழ் இலக்கியங்களே. நாம் எந்த துறையில் படித்தாலும், உலகின் எந்த நாட்டில் பணி செய்தாலும் தமிழ் மொழியின் சிறப்பறிந்து அவற்றை பரப்பிட வேண்டும். நம் குழந்தைகளுக்கும் தமிழ் சொல்லித்தர வேண்டும். யுனெஸ்கோ இன்னும் நூறாண்டுகளில் அழிய இருக்கிற மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கிறது. இதை மனதில் கொண்டு நாம் வீடுகளில், பணியிடங்களில் தமிழில் பேசுவதை நடைமுறை படுத்தினால் தமிழ்மொழி என்றைக்கும் அழியாமல் வாழும் என்று குறிப்பிட்டார்.

நூலாசிரியர் கவிஞர் பிரதீப் ரவி ஏற்புரையாற்றினார். நிறைவாக, எஸ்.மகேஸ்வரி நன்றி கூறினார்.

படக் குறிப்பு
--------------------

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வேலூர் கவிஞர் பிரதீப் ரவி எழுதிய ’ வீடு திரும்பும் வேளையில்... ' கவிதை நூலை தொழிலதிபர் இரா.சிவக்குமார் வெளியிட, ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் எம்.எஸ்.முத்துராஜ் பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். நடுவில், நூலாசிரியர் கவிஞர் பிரதீப் ரவி, (இடமிருந்து ) ஞா.சேவியர், கவிஞர் மு.முருகேஷ், யுவராஜ் ஆகியோர் உள்ளனர்.