மனிதன் சமூக ஞானத்தை பெறுவதற்கு
 

மனிதன் சமூக ஞானத்தை பெறுவதற்கு
புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன

              - வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில் பேச்சு -

ந்தவாசி.ஜூன்.21. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற கவிதை நூல் அறிமுக விழாவில், ஒரு மனிதன் சமூக அக்கறையையும், சமூக ஞானத்தையும் பெறுவதற்கு புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.

கிளை நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். தொழிலதிபர் இரா.சிவக்குமார், தென்னாங்கூர் அரசு கலைக்கல்லூரி இணைப் பேராசிரியர் ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில், தேசூர் கவிஞர் பால.வெங்கடேஷ் எழுதிய ‘சாம்பலில் உயிர்த்தெழும் பீனிக்ஸ்’ கவிதை நூலை வந்தவாசி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் பெ.சம்பத் வெளியிட, வந்தவாசி நகர்மன்ற உறுப்பினர் சி.பி.பாபு பெற்றுக் கொண்டார்.

விழாவிற்கு தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் ’புத்தக வாசிப்பும் சமூக ஞானமும், எனும் தலைப்பில் பேசியதாவது: ” கல்வியறிவு மட்டுமே ஒரு மனிதனுக்கான உலக அறிவைத் தந்துவிடாது. கண்டதையும் படித்தால் பண்டிதன் ஆவான் என்பார்கள். உலகில் புதிய சிந்தனைகளை விதைத்த தலைவர்கள் பலரும், தங்களை மாற்றியவை புத்தகங்களே என்றுதான் கூறியிருக்கிறார்கள். இன்றைக்கு புத்தகங்கள் அதிகம் வெளியாகின்றன. ஆனால், புத்தகம் வாசிக்கிற பழக்கம் வெகுவாய் குறைந்து வருகிறது. வீட்டில் புத்தகம் படிக்கிற நேரத்தை காட்சி ஊடகங்கள் குறைத்துவிட்டன. ஒரு மனிதன் சமூக அக்கறையுடையவனாக வளர்வதற்கும், சமூக ஞானத்தைப் பெறுவதற்கும் புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன” என்றார்.
விழாவில், ரூ. ஆயிரம் செலுத்தி நூலகப் புரவலராக இணைந்த செய்யாறு அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி முன்னாள் பேராசிரியர் ஜீவிதன் சேசுராஜா, கொரக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.செல்லக்குட்டி, கரூர் வைஸ்யா வங்கி ஊழியர் பி.அஸ்வின் ஆகியோருக்கு பாராட்டு செய்யப்பட்டது.

நிறைவாக, மூன்றாம்நிலை நூலகர் பூ.சண்முகம் நன்றி கூறினார்.

படக்குறிப்பு :
வந்தவாசியில் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் தேசூர் கவிஞர் பால.வெங்கடேஷ் எழுதிய ‘சாம்பலில் உயிர்த்தெழும் பீனிக்ஸ்’ கவிதை நூலை வந்தவாசி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் பெ.சம்பத் வெளியிட, வந்தவாசி நகர்மன்ற உறுப்பினர் சி.பி.பாபு பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். அருகில், நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேஷ், தொழிலதிபர் இரா.சிவக்குமார், கிளைநூலகர் கு.இரா.பழனி, நூலாசிரியர் பால.வெஙக்டேஷ் ஆகியோர் உள்ளனர்.