சக்திஜோதி கவிதைகளில் நவீனமும் பெண் புனைவு
 

முனைவர் பூ.மு.அன்புசிவா


னித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய குறிக்கோள்'' பெண்ணியம் என்ற கோட்பாட்டின் ஆணிவேராக அமைந்திருப்பவை, பல ஆழமான சமூக, பொருளாதார, வரலாற்றுக் காரணங்கள். அவற்றை அடிமுடி கண்டு ஆய்ந்து தெளியாமல் மேலோட்டமாக அதிகம் பேசிவிட்டதனாலேயே பெண்ணியத்தின் எல்லாப் பரிமாணங்களையும் விவாதித்து முடித்து விட்ட உணர்வும்,இனிமேல் அது பற்றி விவாதிக்க எதுவுமில்லை என்ற மன நிலையும் மெத்தப்படித்த மனிதர்களையும் கூட இன்று பீடித்திருக்கிறது.

பெண்ணின் புறத் தோற்றம்,புற உலக நடவடிக்கைகள் ஆகியவற்றில் இன்று சில மாற்றங்கள் நேர்ந்திருப்பது உண்மைதான். பெண்ணின் வாழ்க்கைத் தரம் - கல்வி, வேலை வாய்ப்பு ஆகிய பலதுறைகளிலும் சென்ற நூற்றாண்டுகளை விடவும் இன்று பன்மடங்கு மேம்பட்டே இருக்கிறது.பெண் குறித்த சமூகக் கண்ணோட்டங்களிலும் சில வரவேற்கத் தக்க மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனாலும் ஆணுக்கு நிகரான கல்வி,பொருளாதாரத் தற்சார்பு ஆகியவற்றைப் பெற்ற பின்னும் கூடப் பெண்ணை இரண்டாம் நிலையில் மட்டுமே வைத்துப் பார்க்கும் போக்கு ,மரபுகள் ஆழமாக வேரூன்றிப் போன சமூக அமைப்பில் இன்றும் கூடக் கடுமையாக நிலவி வருகிறது.

''ஒரு பெண் வெறும் தாயாகவும், மனைவியாகவும் இருந்தால் மட்டும் போதாது. வேறு வகையிலும் அவள் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவது எளிது. ஆனால் தொன்றுதொட்டு வரும் சமூக மரபுகளும், உடற்கூறுகளும் மாற்றம் காணாத நிலையில் அவள் தன்னை எந்த வகையில் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வரயறுத்தலும், அதை நிறைவேற்றலும் அரிது'' என்கிறார் கார்ல் பியர்சன் என்னும் சமூக இயலார்.

பெண்ணாக இருப்பதனாலேயே உணரும் மனத் தடைகள், இறுக்கங்கள் , மரபுவழிக் கடமைகள் ,அவளைத் தளைப்படுத்தும் சமூகக் கட்டுக்கள் - இவற்றையெல்லாம் குறித்துப் பொறுப்புணர்வோடு சிந்தித்துப் பெண்ணின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதே பெண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையாகும்.

தொடக்க நிலையில் 'பெண்ணுரிமை' என்றும், 'பெண் விடுதலை' என்றும் எளிமையாகக் குறிப்பிடப்பட்டு 20ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் 'பெண்ணியம்' அல்லது 'பெண் நிலை வாதம்' என்ற பெயர்களுடன் ஆழமாக நிலைப்பட்டுப் போயிருக்கும் இச் சித்தாந்தம் குறித்த வரையறையை அறிவியல் துறைகளைப் போல 'இதுதான் அது' என ஓரிரு வரிகளுக்குள் அடக்கிக் கூறிவிட முடியாது.

'அனைத்துப் பெண்களுக்கும் எக்காலங்களிலும் பொருந்தக் கூடிய வரையறை இதற்குக் கிடையாது'' என்கிறார் மொலீனா தேன்மொழி.

'...............உனக்கு உள்ளது போல
உரிமைகள் எனக்கும் உண்டு
ஏனெனில்
நான்
மானிடப் பெண்ணாகப்
பிறந்திருக்கிறேன்
எனக்கும் உனக்குமிடையிலுள்ளது
ஓர் ஒப்பந்தம் மட்டுமே!'


'இதன் விளக்கம் ஒரு சமுதாயத்தின் வரலாறு, பண்பாடு, இவற்றைப் பற்றிய உணர்வு, நோக்கு, செயல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்' என்று தன் கருத்தைக் குறிப்பிடுகிறார் சமூகவியல் துறை சார்ந்த முத்துச்சிதம்பரம் இவ்விருவரும் முன் வைத்துள்ள சிந்தனைகள் பெண்ணியம் குறித்த வரையறை ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்தந்தச் சூழல்களுக்கேற்பச் சில மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

தனிப்பட்ட ஓர் ஆணை எதிர்ப்பதோ, ஆணினத்தின் மீதே வெறுப்புக் கொண்டு கசப்பை உமிழ்வதோ பெண்ணியத்தின் நோக்கம் இல்லை. சமூக உருவாக்கத்தில் பெண் என்பவள் படிப் படியே பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆண் முதன்மை பெறத் தொடங்கியதையும், பிறகு அவனே அதிகார மையமாக்கப்பட்டதையும் வரலாற்று ரீதியாகக் காண்பதும் - அதன் உடனிகழ்வாகவே பெண் மீதான (உடல்,மனம் சார்ந்த ஒடுக்குமுறைகளும்,வன்முறைகளும்) இன்று வரையிலும் கூடத் தொடர்ந்து கொண்டிருப்பதை ஆராய்வதுமே பெண்ணியத்தின் இன்றியமையாத இலக்குகள்.

'இப்பவும் கூட
உந்தன் துணை இல்லாமல்
எமது விடுதலைப் புயலைக் கடப்பதாய்
உத்தேசமில்லை !..........
அதற்கு முன்
என் கரங்களின் மீது
உன் கால்கள் இருந்தால்-
கொஞ்சம் நகர்த்திக் கொள்ளேன்''


என ஆணைத் தன் சக தோழனாக்கி இவ்விடுதலைப் போரில் பங்கு பெற அழைக்கிறார் ஒரு பெண் கவிஞர்.

இந்தியப் பெண்கள் எல்லா உச்சங்களையும் தொட்டுவிட்டதாகவும், சாதனைச் சிகரங்களில் ஏறி நிற்பதுமான பிரமையைத் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகையாகவே ஏற்படுத்தி வரும் இன்றைய சூழலில், பாலின வேறுபாடு கடந்த சமத்துவத்தைப் பெண்கள் அனைத்துத் தளங்களிலும் பெற்றுவிட்டார்களா என்ற கேள்வியை விவாதத்திற்கு உட்படுத்த முனைகையில்...சில கசப்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு வருவதையும் காணமுடியும்.

'சுயத்தையெல்லாம்
ஒப்படைத்து விட்டு
வைக்கோல் பொம்மையாகி
உன் இழுப்புக்கு
ஆட வேண்டுமென்றே
நீ நினைக்கிறாய்
நீ சொல்வது தான் வேதம்
நீ காட்டுவது தான் உலகமெனில்
எனக்கென்று
இதயமும் கண்களும் எதற்கு?'


இவ்வாறாக, பெண்களுக்கெதிரான வன்முறைகளையும், அதற்கான தமது எதிர்வினைகளையும் பல பெண்கள் பதிவுசெய்துள்ளனர்.
பொதுவான மக்கள் வழக்கில் 'அந்தஸ்து' என்ற சொல்லால் குறிப்பிடப்படும் தகுதிப்பாடு ,
கீழ்க்காணும் இரண்டு காரணங்களை அடிப்படையாக வைத்தே பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது.

1. அடிப்படை மனித உரிமைகளை முழுமையாகப் பெற்றிருக்கும் தனி மனிதத் தகுதிப்பாடு
( human status )



2.பொருளாதார,சமூக உயர்வுகளைப்பெற்று அவற்றால் கணிக்கப்பெறும் பயன்பாட்டு அடிப்படையிலான தகுதிப்பாடு
(material status)



இவ்விரு வகைத் தகுதிப்பாடுகளிலுமே இந்தியப்பெண் இன்னமும் பின் தங்கியிருக்கிறாள் என்பதே புள்ளி விவரங்களும், நடப்பியல் செய்திகளும் நமக்கு எடுத்துரைக்கும் நிதரிசனங்கள்.

இன்றளவும் மரபு வழிப்பட்டதாகவே இருந்து வரும் இந்திய சமூக அமைப்பில் - பழைய மரபுகளில் சில நெகிழ்வுப் போக்குகள் விளைந்திருந்த போதும், அவற்றை அடியோடு கைவிடத் தயங்கும் மனப்பான்மையும் நிலவுவது வெளிப்படை.

இவை தவிர குடும்பத்திலும் சமூகத்திலும் நிலவும் பெண்ணுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் என்பவற்றையும் நம் பெண்களின் கவிதைகள் பல்வேறு கோணங்களில் பேசுகின்றன.

'அக்காவின் கணவரின்

அந்த ரகசியத்தொடுகைகள்...

அடுத்த வீட்டுக் கிழட்டு மாமாவின்

அர்த்தமுள்ள பார்வைகள்...

இளவட்டங்களின் சின்னச் சின்ன

கண் சிமிட்டல்கள்...

எதற்குமே அலட்டிக் கொள்ளாத

என் குடிகார அப்பாவோடு

நானும், இளையதுகளும்...

நீ வரத்தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்

எனக்கு 'அக்கினிப் பரீட்சை தான்.'


பெண் என்பதால் அவள் அனுபவிக்கும் அன்றாட இடர்ப்பாடுகளை அடையாளப்படுத்துகின்றது. பழைய மரபுகளுக்கும், புதிய மாற்றங்களுக்கும் இடையே தோன்றும் சிக்கல்கள் புதிது புதிதான போராட்டங்களையும், குழப்பங்களையும் தோற்றுவித்துக் கொண்டேதான் இருக்கின்றன.

கல்வி கற்று அலுவல் புரியும் பெண்ணால் குடும்பப் பொருளாதாரம் மேம்படுவதைக்காணுகையில் சமூகம் பெண்கல்வியை வரவேற்கிறது. அதே வேளையில் மரபு வழியாக அவளுக்கென்று ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள கடமைகளை அவள்தான் செய்ய வேண்டுமென்பதிலும் அதிகமாற்றமில்லை.

வெளியே சென்று பொருள் ஈட்டும் செயல்,மனைவியின் மதிப்பை மேல்நிலைஆக்கமாக உயர்த்துகிறது; ஆனால் வீட்டு வேலைகளைக் கணவன் செய்வதோ கீழ்நிலை ஆக்கமாக... மதிப்புக்குறைவானதாகவே சமூகத்தால் கருதப்படுகிறது. இதனால் புறக்கடமைகளை ஆணுடன் பகிர்ந்து கொள்ளப்பெண் முன் வருவது போல இல்லக்கடமைகளை அவளுடன் பகிர்ந்து கொள்ளப்பெரும்பாலான ஆடவர்கள் முன் வருவதில்லை. இதனால் பெண் மீது ஏற்றப்படும் கூடுதல் சுமைகள் அவளை அமைதி இழக்கச் செய்கின்றன.

'நிறைவேறாத கனவுகளோடு
நான்
மரணத்தைத் தழுவ விரும்புவது குறித்து
துக்கமில்லை
ஆசைகள்
லட்சியங்கள்
கனவுகள்
உன் முன் அணிவகுக்கின்றன
மரணத் தருவாயில்'


என்ற கவிதையில் பெண் பணி புரிவதால் கிடைக்கும்பொருளாதாரப்பயன்பாடு அவளது குடும்பத்திற்குத் தேவையில்லாத சூழலில் - தனது தனிப்பட்ட ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவள் வேலைக்குச் செல்லும்போது - அது தனது குடும்பத்திற்கு அவள் இழைக்கும் துரோகம் என்றே கருதுபவர்களையும் கூடச் சமூகத்தில் காண முடிகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தின் மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் ஒரு பெரிய மனிதர் 'பொருளாதார வசதியுள்ள பெண் வேலைக்குப் போவதென்பது, குடும்பத்தின் மீதான அவளது அக்கறையின்மையின் வெளிப்பாடு' என்று ஒரு மகளிர் சிறப்பிதழுக்கே துணிவாகப் பேட்டி அளித்திருந்தார். இதைக் காணும்போது பெண்ணின் பங்குநிலைகளை முடிவு செய்வதிலும், அவளது கடமை மற்றும் உரிமைகளை வரையறுப்பதிலும் ஆண் மேலாதிக்க உணர்வுகளே இன்னும் பங்கு வகிப்பதைப்புரிந்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி, உயர் பொறுப்பில் பணியாற்றுதல் போன்றவை கூடக் கருத்தில் கொள்ளப்படாமல் பெண்களை இரண்டாம் பாலினமாக மட்டுமே கருதுவதையும், பாலியல் துன்பங்களுக்கு ஆளாக்குவதையும் எல்லா மட்டங்களிலும் காண முடிகிறது. இந்தியஆட்சிப்பணி
(IAS) போன்ற மிக உயர்ந்த அரசுப் பதவிகளில் அமர்ந்திருக்கும் பெண்களும் கூடப் பாலின அடையாளங்களாகக் கீழ்மைப்படுத்தப்பட்டு வருவதற்கு ரூபன் தியோல் பஜாஜ் என்ற பெண் அதிகாரி, காவல் துறை அதிகாரியான கே.பி.எஸ்.கில் மீது தொடர்ந்த வழக்கு ஓர் எடுத்துக்காட்டு. பெரும் பொறுப்புக்களில் உள்ள பெண்களே பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் சூழலில்முறைப்படுத்தப்படாத பணிகளில்... கட்டிடக்கூலிகளாகவும், விவசாயக்கூலிகளாகவும், வீட்டுப் பணியாளர்களாகவும் செயல்படும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள கணக்கற்ற பெண்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் தடையின்றிக் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டே இருப்பதில் வியப்பில்லை அது அவர்களது வாழ்வில் ஓர் அன்றாடநிகழ்வாகவே கூட ஆகிப் போயிருக்கிறது என்று கூடச் சொல்லி விடலாம். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்களாகவும், அறிவிப்பாளர்களாகவும் வேலை செய்யும் பெண்கள் அதே துறையில் ஈடுபட்டிருக்கும் ஆண்களைப்போலத் திறமையின் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்படாமல் அழகை அளவுகோலாக வைத்தும் தேர்ந்தெடுக்கப்படுவதால் குறிப்பிட்ட (மிகக் குறைவான) வயது வரம்பு அவர்களது பணிக்கு நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது என்பது , மனதில் கொள்ள வேண்டிய ஒரு செய்தி.

இந்திய வெளியுறவுத் துறையின் உயர் பதவியில்
( IFS )  இருந்த முத்தம்மா என்னும் பெண் அதிகாரிக்கு, அவர் திருமணமானவர் என்ற ஒரே காரணத்தால் வெளிநாட்டுத் தூதுவர் பதவி சில ஆண்டுகளுக்கு முன்பு மறுக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணையர் வழங்கிய தீர்ப்பில் 'திருமணமான ஆணுக்குள்ள உரிமை, திருமணமான பெண்ணுக்கு இல்லை என்ற அயல்நாட்டுப் பணி விதி முறையே இந்திய அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது' என்ற தெளிவான தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

கலைத் துறைகளில் தாங்கள் எதிர்கொள்ள நேரும் சிக்கல்களையும், மன அழுத்தங்களையும் மீறிய வண்ணம் சாதனை படைத்து வரும் பெண்கள் ஒரு புறம் இருந்தபோதும் இத்துறை சார்ந்த படைப்புக்கள், பெண்ணின் தனி மனித இயல்புகளை விடவும் பெண்ணுடல் சார்ந்த கவர்ச்சிக் கூறுகளையே முதன்மைப்படுத்திப் பால் அடையாளப் பொருளாக அவளைக்காட்டுவதிலேயே கருத்துச் செலுத்தி வருகின்றன. குறிப்பாகப் பெருவாரியான மக்களைச் சென்றடையும் திரைப்பட ஊடகம் பெண்ணைக் கவர்ச்சிப் பொருளாகக் காட்டுகிறது அல்லது அனுதாபத்துக்கும் பரிதாபத்துக்கும் உரிய ஒரு அபலையாகச் சித்திரிக்கிறது. சிந்தனைத் திறன் அதிகம் பெற்றிராத கேலிப்பொருளாகப் பெண்ணைக் காட்டுமளவுக்குத் தன்னம்பிக்கையும் துணிவும் வாய்க்கப்பெற்ற பெண்ணைக் காட்டுவதில் இக் கலை வடிவத்துக்கு அக்கறையில்லை என்றே கூற வேண்டும். இவ்வகையான சித்திரிப்புக்கள் தொலைக்காட்சித் தொடர்களையும் ஆக்கிரமிப்பது ஒரு புறம் இருக்க இத் துறையில் படைப்பாளிகளாக இருக்கும் பெண்களும் மிகக் குறைவானவர் களாகவே இருக்கிறார்கள். 'ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் அவனுக்குச் சமமாகவோ கொஞ்சம் சிறப்பாகவோ பெண் வந்து விட்டால் அவனுக்குப் பயம் வந்து விடுகிறது' என்று ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் நடிகையும்,இயக்குநருமான சுகாசினி.

பெண்களும் காதலும்

காதல் என்ற மெல்லுணர்வு மனித உயிரி என்ற வகையில் பெண்ணுக்கும் உரியதுதான் என்றாலும் அதனைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதில் 'பெண்' காலங்காலமாகப் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்தே வந்துள்ளாள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் காதல் கவிதைகளைப் பொறுத்தவரையில், அவை பெரும்பாலும் ஆண்களால் பாடப்படுபவை, ஆண்கள் தம்மைப் பெண்களாகப் பாவனை செய்து பாடியவை என்ற இரு போக்குகளைப் பிரதிபலிக்கின்றன. தமது அகவயப்பட்ட காதலுணர்வைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவது பெண்களின் இயல்புக்கு மாற்றமானது என்ற கருத்துநிலையே அக்காலத்தில் மேலோங்கி இருந்தது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பெண்களுக்குரியன என்பன போன்ற கருத்தியல்கள் சமூகத்தில் வேரூன்றியிருந்தன. அந்த வகையில், ஆங்காங்கே பெண்களின் காதல் பற்றிய ஒரு சில வெளிப்பாடுகள் இருப்பினும் அவற்றுக்குக்கூட வௌ;வேறு முலாம்களும் முகமூடிகளும் போடப்படும் நிலையே வழக்கில் இருந்தது எனலாம் (உதாரணம்: 'ஒளவைப்பாட்டி' என்ற விம்பம்). அல்லது அவை முதன்மைப்படுத்தப்படாமல் மறைக்கப்பட்டன அல்லது ஓரங்கட்டப்பட்டன. சங்க காலப் புலவர்களில் அகநானூறு, குறுந்தொகை ஆகிய தொகைநூல்களில் சுமார் 26 காதல் பாடல்களைப் பாடியுள்ள ஒளவையார், நன்னாகையார், வெள்ளிவீதியார், பல்லவர் காலத்தில் நாச்சியார் திருமொழி, திருப்பாவை போன்றவற்றைத் தந்த ஆண்டாள் போன்றோர் காதல் உணர்வை வெளிப்படுத்திப் பாடிய தமிழ்ப் பெண்களில் முக்கியமானவர்கள்.

இலக்கியத் துறையில் ஈடுபடும் பெண்கள் 'பெண் எழுத்தாளர்' எனத் தனிப்பிரிவினராக வகைப்படுத்தப்படுவதையும் சில வேளைகளில் இரண்டாந்தர எழுத்தாளர்கள் என்ற நிலையிலேயே அவர்கள் வைக்கப்பட்டிருப்பதையும் கூடக் காண முடிகிறது.

இலக்கியத்தில் ஆணின் வாழ்வு எழுதப்படுகையில் அது மானுடம் தழுவிய பிரதிபலிப்பு என ஏற்கப்படுகிறது. அதே வேளையில் பெண் தனது அனுபவங்களை, பிரச்சினைகளை எழுத்தாக வெளிப்படுத்துகையில் அது பெண்கள் சார்ந்த குறுகிய ஒரு வட்டத்துக்கு மட்டுமே உரியதாக மதிப்பிடப்படுகிறதேயன்றி,அதுவும் கூட மானுட அக்கறையின் மீதான வெளிப்பாடுதான் என்ற எண்ணம் எவருக்கும் எழுவதில்லை.

சமயக் களம் (அது எந்தச் சமயமாயினும்) என்பது, அன்று முதல் இன்று வரையில் பாலின வேறுபாடுகளை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் நிறுவனமாகவே நீடித்து வருகிறது. செவ்வாடை புனைந்து சக்தியின் வடிவங்களாகச் சமய வழிபாடுகளில் பெண்ணுக்குச் சமத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறப்படும் இடங்களிலும் 'சிவப்பு' என்ற குறியீடு , இன மறு உற்பத்தியின் அடையாளமாக வாரிசைப் பெற்றுத்தரும் செழுமை பெற்றவளாய் அதற்குரிய தகுதிப்பாட்டோடு பெண் இருப்பதையே சுட்டுகிறது.

தந்தை வழிப்பட்ட சமூக அமைப்பில் பெண்ணுக்குச் சாதகமான சமூக மாற்றங்கள் நிகழ வேண்டுமெனில் அது அவர்களுக்கு அரசியல் உரிமை தருவதன் வாயிலாகவே சாத்தியமாகும் என்று சமூகவியல் அறிஞர்கள் குறிப்பிடுவர். எனினும் விடுதலை பெற்றுப் பல ஆண்டுகள் சென்ற பின்பும் தங்களது குடும்பப் பின்புலங்களால் வெளிச்சத்துக்கு வந்த ஒரு சில பெண் அரசியல்வாதிகள் தவிர ...அரசியல் களத்தில் பெண்ணின் பங்கேற்புக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்றே கூற வேண்டியிருக்கிறது.

ஆட்சியிலுள்ள ஆண்கள் ஊழல் செய்கையில் தனி மனிதர்களாக மட்டுமே அவர்களை அடையாளப்படுத்தும் சமூகம், பெண் அரசியல்வாதிகள் ஊழல் செய்யும்போது மட்டும் பாலின அடையாளத்தோடு கூடிய விமரிசனங்களைக் கூசாமல் முன் வைக்கத் தவறுவதில்லை.

பெண் என்பவள் இரண்டாம் பாலினம் என்ற உணர்வு, நடப்பியலில் காலங்காலமாக..வெகு ஆழமாக வேர் பிடித்து வளர்ந்து விட்டிருக்கிறது.

ஆணிடம் மட்டுமன்றிப் பெண்ணின் உள்ளத்திலும் தலைமுறை தலைமுறையாய் நிலைப்பட்டுப் போயிருக்கும் ஆணாதிக்கக் கருத்தியலையும், அது சார்ந்த மூளைச் சலவைகளையும் ஒழிக்க உணர்ச்சி பூர்வமான தொடர்ச்சியான பன்முனைத் தாக்குதல்கள் தேவைப்படுவதை மனத் தடைகள் இன்றி உள் வாங்கிக் கொள்ளும் மன நிலை இரு பாலார்க்குமே வாய்த்தாக வேண்டும்.

''ஆணின் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்ணுக்கு உண்மையான விடுதலையை அளித்து விட முடியாது'' என்றார் பெரியார்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தங்கள் மீது விதிக்கப்பட்ட நடைமுறை மரபுகளையும், வாழ்க்கை முறைகளையும் வாய் திறக்காமல் ஏற்றுக் கொண்டு தங்களைத் தாங்களே தியாகச் சிலுவைகளில் அறைந்து கொள்ளும் மனப் போக்கிலிருந்து பெண்கள் விடுபடும்போதும்,

பால் அடையாளமாக மட்டுமே இனங்காட்டப்படுவதையும்,
பாலின சமத்துவம் மறுக்கப்படுவதையும்

விழிப்புணர்வோடு எதிர்க்கும் எழுச்சி அவர்களிடம் முழுமையடையும்போதும்தான் உண்மையான விடுதலை என்பது பெண்களுக்குச் சாத்தியமாகும்.