'பெண்களின் கட்சி பேசுகிற ஆண்மை வீரர்'

முனைவர் நிர்மலா மோகன்


ருபதாம் நூற்றாண்டின் விடியலில் இணையற்ற கவிஞராக விளங்கியவர் பாரதியார். அவர் பெண் விடுதலையையும், மண் விடுதலையையும் தம் இரண்டு கண்களாகக் கொண்டவர். 'பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா, பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா' என்று கூத்தாடியவர்; பெண் விடுதலைக்காக முனைப்புடன் குரல் கொடுத்தவர்; பெண்கள் படும் துன்பத்திற்காகத் துடித்தவர்; 'பெண் இனிது' ('வசன கவிதை') என்றும், 'பெண்மை தான் தெய்வீகமாம் காட்சியடா' ('குயில் பாட்டு') என்றும் பெண்மையை வானளாவப் போற்றியவர்; 'கண்ணன் பாட்'டில் கண்ணனைப் பெண் குழந்தையாகவும் காதலியாகவும் தாயாகவும் குல தெய்வமாகவும் பாடிப் பெண்மைக்கு ஏற்றம் நல்கியவர்; 'புதுமைப் பெண்'ணைப் படைத்துக் காட்டியவர்; பாரத நாட்டைப் 'பாரத மாதா'வாகவும், தமிழ்நாட்டைத் 'தமிழ்த் தாய'hகவும், சுதந்திரத்தைச் 'சுதந்திர தேவி'யாகவும், கவிதையைக் 'கவிதைத் தலைவி'யாகவும் பார்த்தவர். தம் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், வசன கவிதைகள் அனைத்திலும் பெண்மையை உயர்த்திப் பிடித்தவர் அவர். 'பாரதி பெண்களின் கட்சி பேசுகிற ஆண்மை வீரர். இப்படி அவர் பெண்களின் கட்சி பேசுகிற இரகசியத்தை அவருடைய கவிதைகளே பல இடங்களில் பறைசாற்றுகின்றன' என்பது 'தீபம்' நா.பார்த்தசாரதி பாரதியாருக்குச் சூட்டும் புகழாரம்.

பாரதியாரின் 'தாய்ப் பாசம்'

பாரதியார், தமது இளம்வயதில் - ஐந்து வயதில் - தாயை இழந்தவர்.

'என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில்
ஏங்கவிட்டு விண்எய் திய தாய்'


என்று அன்னையின் இழப்பிற்காக – இறப்பிற்காக – ஏங்கிப் பாடியவர் அவர். அன்னையைப் பிரிந்த ஏக்கம், அவருடைய ஆழ்மனத்தில் அழுந்தப் பதிந்திருந்தது. எனவே, நாட்டைப் பாடுவதாக இருந்தாலும் தாயாக – பாரத மாதாவாக – உருவகித்துப் பாடுகிறார்; தமிழைப் பாடுவதாக இருந்தாலும் 'தமிழ்த் தாயாக'ப் போற்றுகிறார். 'அம்மா' என்ற சொல்லே அவரைப் புளகிக்கச் செய்யுமாம். தமது அன்பையெல்லாம் தேசமாகிய தாயிடம் பொழிந்து அதைக் கவிதையுருவில் வெளிப்படுத்தியிருக்கிறார் பாரதியார். 'பாரத மாதா திருத்தசாங்கம்'. 'பாரத மாதா நவரத்தின மாலை', 'பாரத மாத திருப்பள்ளியெழுச்சி', 'தாயின் மணிக்கொடி' என்றெல்லாம் பாடி, அவர் பாரத மாதாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

பாரதியாரின் 'புதுமைப் பெண்'

'நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்'


என்று பெண்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர் பாரதியார். 'நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யாரக்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்; விலகி வீட்டில் ஒரு பொந்தில் வளர்வதை வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பராம்; மூடக் கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம்' என்று வீரப் பெண்களின் செயல்களைப் பட்டியலிடுகிறார் பாரதியார். 'புதுமைப் பெண்', 'இளைய நங்கை', 'பெண்மைத் தெய்வம்', 'செம்மை மாதர்', 'உதய கன்னி', 'வீரப் பெண்' - இங்கே பெண்களுக்குக் கவியரசர் சூட்டி மகிழும் அடைமொழிகள் தான் எத்தனை எத்தனை!

'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ்வையந் தழைக்குமாம்'

எனப் பெண்ணுக்கு ஆணுக்கு நிகரான ஏற்றத்தினை நல்குகின்றார் பாரதியார்.

பாரதியார் - நிவேதிதை அம்மையார் சந்திப்பு

பாரதியார் பெண்ணை ஏற்றிப் போற்றிப் பாடுவதற்குக் காரணமாக அமைந்தது வீரத் துறவி விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதையுடன் அவருக்கு நேர்ந்த சந்திப்பு ஆகும்; அவரது வாழ்க்கையில் - சிந்தனைப் போக்கில் - இச் சந்திப்பு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 1905-ஆம் ஆண்டில் சூரத் மாநகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்ற பாரதியார், நிவேதிதா தேவியைச் சந்திக்கின்றார். 'மனைவியை அழைத்து வரவில்லையா?' என்று அவர் வினவ, 'அவ்வாறு அழைத்து வருதல் வழக்கம் இல்லை' என்கிறார் பாரதியார். அப்பொழுது நிவேதிதை அம்மையார், 'மகனே! புருஷர்கள் அனேகம் பேர் படித்தும் ஒன்றும் அறியாத சுயநல வெறி கொண்டவர்கள். ஸ்திரீகளை அடிமைகளென மதிப்பவர்கள். ஒரு சிலர் உன் போன்ற அறிவாளிகள். அவர்களுங் கூட இப்படி அறியாமையில் மூழ்கி ஸ்திரீகளுக்குச் சம உரிமையும், தகுந்த கல்வியும் கொடுக்காவிட்டால் எப்படி நாடு சமூகச் சீர்திருத்தம் அடையும்? சரி, போனது போகட்டும். இனிமேலாகிலும் அவளைத் தனியென்று நினைக்காமல் உனது இடக்கை என்று மதித்து, மனத்தில் அவளைத் தெய்வமெனப் போற்றி நடந்து வருதல் வேண்டும்' என்றாராம்.

இச்சந்திப்பினால், இயல்பாகவே பெண்கள் மீது பரிவும் பாசமும் கொண்ட பாரதியாருக்கு, அவர்கள் விடுதலைக்காகவும் பாடுபட வேண்டும் என்னும் எண்ணம் மிகுதியாக எழுந்தது.

பெண்ணுக்கு மட்டுமே கற்பு நெறி என வலியுறுத்தப்பட்டு வந்த காலகட்டத்தில், பெண்ணின் கற்பு போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டும் என்றால், ஆணும் கற்புடையவனாக விளங்க வேண்டும் என்பதை மக்கள் மனத்தில் பதியும் வண்ணம் தம் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் எடுத்துரைக்கின்றார் பாரதியார்.

'ஆணெல்லாங் கற்பை விட்டுத் தவறுசெய்தால்
அப்போது பெண்மையுங் கற்பு அழிந்திடாதோ?
நாணற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால்
நலமான கூரையும்தான் எரிந்திடாதோ?


என்று வினவிய கவியரசர்,

'கற்புநிலை என்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்'


என்று அறுதியிட்டு உறுதியான குரலில் எடுத்துரைக்கின்றார்.

பாரதியார் படைக்கும் பாஞ்சாலி

பாரதியார் படைக்கும் பாஞ்சாலி, அவர் கனவு கண்ட புதுமைப் பெண்ணின் முழு வடிவம் - ஒட்டுமொத்தமான வார்ப்பு. எனவே தான், தன்னைத் தன் கணவன் சூதாட்டத்தில் பணயப் பொருளாக வைத்துத் தோற்று அடிமையாக்கினான் என்பதைக் கேள்விப்பட்டதும் வாளாவிராமல் - அடங்கிப் போகாமல் - பொங்கி எழுகிறாள். அவைக்குத் தன்னை அழைத்துச் செல்ல வந்த பணியாளிடம்,

'வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம்
என்னை முன்னே கூறி இழந்தாரா? தம்மையே
முன்னம் இழந்து முடித்து என்னைத் தோற்றாரா?
சென்று சபையில் இச்செய்தி தெரிந்து வா'


என்று சீற்றத்துடன் வினாக்களைத் தொடுக்கிறாள்; அவள் கேள்விக்கு விடையிறுக்க இயலாமல் திணறும் பணியாளிடம்.

'நாயகர்தாந் தம்மைத் தோற்றபின் - என்னை
நல்கும் உரிமை அவர்க்கு இல்லை'

என்று தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து உரத்துக் குரல் கொடுக்கிறாள்.
இங்ஙனம் அநீதியை எதிர்த்துப் போராடுகின்ற பெண்ணாகப் பாஞ்சாலியைப் படைத்துக் காட்டுகிறார் பாரதியார். மகாபாரத்தில் எத்தனையோ பகுதிகள் இருக்கப் பெண்ணின் எழுச்சியைக் காட்டும் 'சூதுப்போர் சருக்க'ப் பகுதியை எடுத்துக் கொண்டு. 'பாஞ்சாலி சபதம்' என அதற்குப் பெயரிட்டிருப்பது பெண்கள் எழுச்சி பெற வேண்டும் என்னும் பாரதியாரின் விழைவையே வெளிப்படுத்துகிறது எனலாம்.

பெண் விடுதலையின் ஆரம்பப் படிகள்

பாரதியார் தம் கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டும் பெண் விடுதலையின் ஆரம்பப் படிகள் வருமாறு:

'பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்கியமான ஆரம்பப் படிகள் எவையென்றால்:

  • 1. பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.
     

  • 2. அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
     

  • 3. விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.

  • 4. பிதுரார்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸம பாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது.

  • 5. விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும்.

  • 6. பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக் கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்து விட வேண்டும்.

  • 7. பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.

  • 8. தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது.
     

  • 9. தமிழ்நாட்டின் ஆண்மக்களுக்கே ராஜரீக சுதந்திரம் இல்லாமல் இருக்கையிலே, அது பெண்களுக்கு வேண்டுமென இப்போது கூறுதல் பயனில்லை. எனினும் சீக்கிரத்தில் தமிழருக்கு சுய ராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும். சென்ற வருஷத்து காங்கிரஸ் சபையில் தலைமை வகித்தவர் மிஸஸ் ஆனி பெஸண்டு என்ற ஆங்கிலேயே ஸ்திரீ என்பதை மறந்து போகக்கூடாது.'
    'சாத்வீக எதிர்ப்பு முறை'

    பெண் விடுதலையை முழுமையாகச் சாதிப்பது எப்படி? காந்தியடிகளின் வழியில் 'சாத்வீக எதிர்ப்பைப் பின்பற்ற வேண்டும்' என்கிறார் பாரதியார்:

    ''நான் எல்லா வகையிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால் இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போடமாட்டேன். நீ அடித்து வெளியே தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாவேன். 'இந்த வீடு என்னுடையது, இதை விட்டு வெளியேறவும் மாட்டேன்' என்று கண்டிப்பாகச் சொல்லி விடவும் வேண்டும். இதனால், நம்முடைய புருஷர்களாலும், புருஷ சமூகத்தாராலும் ஏற்படக் கூடிய கொடுமைகள் எத்தனை-யோயாயினும், எத்தன்மையுடையனவாயினும் அவற்றால் நமக்கு மரணமே நேரிடினும், நாம் அஞ்சக் கூடாது. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. தர்மத்துக்காக மடிகிறவர்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஸாமான்ய ஜனங்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஆதலால் ஸஹோதரிகளே, பெண் விடுதலைக்காக இந்த Ñணத்திலேயே தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம். நமக்கு மஹாசக்தி துணை செய்வாள்'.

    மேற்கூறிய அனைத்தையும் நிறைவேற்றப் பெண்ணுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது கல்வி. கல்வி என்னும் தோணியைப் பற்றிப் பெண் தன்னிடம் உள்ள அரிய திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது பாரதியாரின் தணியாத ஆசை.

    'பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
    பேணி வளர்த்திடும் ஈசன்;
    மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
    மாதர் அறிவைக் கெடுத்தார்...
    பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
    பேதைமை யற்றிடும் காணீர்'


    என்று பாடுகிறார் பாரதியார்.

    அரசியல் ஈடுபாடு

    பெண்கள் முழு விடுதலை பெற வேண்டுமானால் கல்வியறிவில் தலைசிறந்தவர்களாக ஆவதுடன், அரசியலிலும் ஈடுபாடு கொள்ள வேண்டும் எனத் தம் கட்டுரைகளில் வலியுறுத்துகிறார் பாரதியார்.

    '... ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய விவகாரங்களிலே தலையிட்டால் ஆனி பெஸண்டுக்கு ஸமானமாக வேலை செய்வார்கள். ஸரோஜினி நாயுடு எவ்வளவு தைரியமாகப் பேசுகிறார்கள் பார்த்தீர்களா? உலகத்தில் எங்குமே புருஷனைக் காட்டிலும் ஸ்திரீகள் அதிக புத்திசாலிகள் என்றும், தைரியசாலிகள் என்றும் தோன்றுகிறது. மற்ற தேசங்களில் எப்படியானாலும் இங்கே, பெண்ணுக்குள்ள தைர்யமும் புத்தியும் ஆணுக்குக் கிடையாது' என்று தம் கட்டுரைகளில் பல இடங்களில் பாரதியார் பெண்களின் அரசியல் ஈடுபாட்டை வலியுறுத்திப் பேசுகிறார்.

    பாரதியாரின் பெண்ணியம் சார்ந்த கருத்துக்கள் இன்றவும் முக்கியமானவையாக விளங்குகின்றன. தாம் படைக்கும் புதுமைப் பெண், பழைமை எண்ணங்களினின்றும் முற்றிலுமாக விடுபட்டு, கல்வி கேள்விகளில் சிறந்து வையத் தலைமை பெற்று, அறத்தை நிலைநாட்டி தீமையைக் கிள்ளிக் களைந்து, சாதம் படைப்பவளாக மட்டுமின்றித் தெய்வச் சாதி படைக்கும் ஆற்றலும் பெற்றவள் என்பதைத் தம் படைப்புகளில் நிறுவியுள்ளார் பாரதியார்.


     

முனைவர் நிர்மலா மோகன்
தகைசால் பேராசிரியர்
தமிழ்த்துறை
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்
காந்திகிராமம்