காண வேண்டும் 'கவிதா மண்டலம்'  

கவிஞர்  மீரா

னிதனின் மகோன்னதமான உணர்வுகளைக் கவிதைதான் காப்பாற்றி வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று அந்த உணர்வுகள் மங்கி மரத்துப் போய்க் கிடக்கும் மனிதனை அந்த உணர்வுகளாலேயே உயிரூட்டி எழுப்பும் சக்தி கவிதைக்குத்தான் உண்டு. புற விபத்துக்களிலிருந்து மட்டுமல்ல, அக விபத்துக்களிலிருந்தும் அவனைக் காப்பாற்றக் கவிதையால்தான் முடியும்.

கவிதை மனிதனை புதிய புதிய வானங்களை நோக்கிப் பறக்கச் சிறகுகள் கொடுக்கும். (ஆறாவது விரல்).

கவிதை ஏன் வேண்டும், எதற்காக வேண்டும் என்பதை மேற்கண்டவாறு விவரிப்பவர் கவிஞர் அப்துல் ரகுமான். ஜூலை 19-ஆம் நாள் மணிவிழாக் காணும் ரகுமான் மரபுக் கவிதை, புதுக்கவிதை இரண்டிலும் சாதனை புரிந்த விரல் விட்டு எண்ணக்கூடிய கவிஞர்களுள் முதல்வர்.

கவிதையைத் தவிர வேறெதுவும் தன்னைப் பங்குபோட அனுமதிக்காதவர். நூற்றுக்கு நூறு கவிஞர். முழுநேரக் கவிஞர்.

கம்பனைச் சுவைக்கச் செய்ய ரசிகமணி டி.கே.சி. இல்லையே என்ற குறையை இன்று தம் சுவையமுதக் கட்டுரைகள் மூலம் தீர்த்து வைப்பவர். எந்த ஒரு மரபுக் கவிஞரின் கவிதை மாண்பினையும் உணர வைப்பவர். அதேசமயம் புதுக் கவிதையின் புதிய புதிய முகங்களை நாம் தரிசிக்க வைத்திருப்பவர். முந்திய காலங்களில் இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் சிறந்த கவிஞர்கள் தத்துவ ஞானிகளாகவும் விளங்கியுள்ளார்கள். அண்மைக் காலத்திய இவருடைய எழுத்துக்களைப் படிக்கும்போது இவரும் அவ்வாறே பரிணாமம் பெற்று வருகிறார் என்று சொல்லலாம்.

ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலி, ஜெர்மன், ஸ்பானிஷ், லிதுவேனியா போன்ற மேலை நாட்டு மொழிகளின் கவிஞர்களையும் ஜப்பான், சீனம் போன்ற கீழைத் தேயக் கவிஞர்களையும் அரபு உலகக் கவிவாணர்களையும் பல இந்தியக் கவிஞர்களையும் தமிழ் வார இதழ்கள் வாயிலாக நம்மிடையே உலவ விட்டிருக்கிறார்.

வாணியம்பாடியில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றுவதைவிட வானம்பாடியாய்ச் சிறகடித்துக் கானம் பாடவே அவர் விரும்பினார். அதனால்தான் ஓய்வு பெறுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கல்லூரிப் பணிக்கு முழுக்குப் போட்டுவிட்டு வெளியே வந்தார்.

ரகுமான் போன்றவர்கள் கவிதைக்காகப் பதவியையே துறந்தாலும் கவிதைக்கு குறிப்பாகத் தமிழ்க் கவிதைக்கு எங்கே உரிய கௌரவம் தரப்படுகிறது? சாகித்ய அகாதமி இதுவரை எந்த ஒரு சிறந்த தமிழ்க் கவிதைக்கும் பரிசு வழங்கவில்லை. பேராசிரியர் .சீனிவாச ராகவனின் 'வெள்ளைப் பறவை'க்கு வழங்கப்பட்ட பரிசு கூட ஒரு பேராசிரியர் என்பதற்காக வழங்கப்பட்ட மரியாதையாகவே கருதப்பட்டது. பாவேந்தருக்கு இறந்தபின் அளிக்கப்பட்ட பரிசுகூட அவரது நாடகம் ஒன்றுக்காகத்தான். கவிதைக்கு அல்ல. அதேபோல்தான் கண்ணதாசனுக்கும்.

அரசியல் ஆதாயங்களுக்கோ பகட்டான பதவிகளுக்கோ பரபரப்பான செய்திகளுக்கோ தன்னை ஆளாக்கிக் கொள்ளாமல் 'கவிதை, கவிதை' என்று மட்டுமே வாழும் கவிக்கோ மணிவிழாக் காணும் வேளையில் கவிதை மேம்பாடு கருதி ஒரு மணியான கோரிக்கையை முதல்வர் கலைஞர் முன் வைக்கலாம் என்று தோன்றுகிறது.

'நாமக்கல் கவிஞர், கவியரசு கண்ணதாசனுக்குப் பிறகு ஆஸ்தான கவிஞர் நியமனமில்லையே, ஏன்?'

என்று கலைஞரிடம் முன்பொருமுறை கேட்டனர். அப்போதும் முதலமைச்சராயிருந்த கலைஞர் 'நான் இருக்கிறேனே, போதாதா?' என்று பதிலளித்தார். ஒரு முதலமைச்சர் தன்னைக் கவிஞர் என்று சொல்லிக் கொள்வது, கவிஞர்களுக்குத் தம்முள் ஒருவர் தமிழ்நாட்டை ஆள்கிறார் என்ற தெம்பை அளிப்பதாய் இருந்தது. இன்றும் இருக்கிறது. அந்த உணர்வின் உந்துதலில் கலைஞர் ஆட்சிக் காலத்தில் கவிஞர்கள் 'கவிதா மண்டலம்' காண வேண்டும்.

ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்று தன் கைப்பட எழுதிய குறிப்புடன் பாவேந்தர் பாரதிதாசனின் 'எங்கெங்கு காணினும் சக்தியடா' கவிதையை சுதேசமித்திரன் பத்திரிகைக்கு மகாகவி பாரதி அனுப்பியதாக அறிகிறோம்.

பாரதியைத் தன் குருவாக பாரதிதாசன் ஏற்றுக்கொண்டதைப் போல், பாரதிதாசனைத் தன் சீடராக (முதலும் முடிவுமான சீடர்) பாரதி அங்கீகரித்த ஓர் உண்மையை மேற்கண்ட குறிப்பு புலப்படுத்துவதாகப் பேசும் பாரதி அன்பர்கள், ஆய்வாளர்கள்  'கவிதா மண்டலம்' என்னும் வார்த்தையைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. சிறுசிறு பிரசுரங்களாகத் தம் கவிதையைத் தொகுத்து வெளியிட ஓர் அமைப்பை (தீரர் சத்திய மூர்த்தியின் ஆலோசனைப்படி) உருவாக்க நினைத்த பாரதி அந்த அமைப்புக்கு 'பாரதி ஆசிரமம்' என்று பெயர் சூட்டியிருக்கிறார். பாரதி ஆசிரமம் போல் பாரதியின் இன்னொரு கனவு கவிதா மண்டலம். போகிற போக்கில் உதிர்த்த வெறும் வார்த்தையல்ல. 'பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட' நினைக்கும் பாரதியால் தாகூரைப்போல் ஒரு சாந்தி நிகேதனை உருவாக்க முடியவில்லை. பாரதி நூற்றாண்டு விழா கொண்டாடிப் பல ஆண்டுகள் ஆன பிறகும் வங்கத்தில் உள்ளதைப்போல் அப்படி ஓர் அமைப்பை நாம் ஏற்படுத்த முடியவில்லை.

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் மாபெரும் ஏரிக்கரையில் மேட்டுப்பாங்கான இடத்தில் 'பாரத் பவன்' உள்ளது. அது வெறும் மண்டபம் அல்ல. கலைகள் குடியிருக்கும் ஆலயம்.

ஒரு பக்கத்தில் ஓவியக் கூடம். இன்னொரு பக்கத்தில் நாடக சாலை. இடையில் கவிதை அரங்கம். இப்படி மூன்று பகுதிகளுடன் அமைந்துள்ள பாரத் பவனில் ஒவ்வொரு நாளும் 'இயக்கம் இருக்கிறது'. ஓவியர்களின் கண்காட்சி, சந்திப்பு, கலந்துரையாடல், கவிஞர்களின் சங்கமம், கவிதை வாசிப்பு - இப்படிக் கலை வளர்கிறது அங்கே.

தமிழகத்தில் கலை வளர்த்த மகாபலிபுரத்துக்குப் போகும் சாலையில் சோழமண்டலம் என்னும் ஓவியக் கலைஞர்களின் மையம் உள்ளது. ஏறக்குறைய இருபது வீடுகள், விதவிதமான அமைப்புடன் நல்ல இயற்கைச் சூழலில் கட்டப்பட்டுள்ளன. நடுநாயகமாக ஓவியங்கள் அந்த அரங்கில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. வெளிநாட்டிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வரும் கலை அன்பர்கள் அவற்றைப் பார்க்கிறார்கள். விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

மகாபலிபுரம் சாலையில் சோழமண்டலம் போல் ஒரு கவிதா மண்டலம் உருவாக வேண்டும்.

மகாபலிபுரம் சாலையில் கடற்கரையோரம் குறைந்தது பத்து ஏக்கர் பரப்பளவில் கவிதா மண்டலத்துக்காக இடத்தை அரசு ஒதுக்கலாம். ஒரு பகுதியில் பத்திரிகையாளர் குடியிருப்புப் போல் கவிஞர்களுக்கும் ஒரு குடியிருப்பை ஏற்படுத்தலாம். வசதி படைத்தவர்களிடம் வீடுகளுக்கு உரிய தொகையைப் பெறலாம். வசதியற்றவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கலாம். வெளிநாட்டிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வரும் கவிஞர்கள் தங்கியிருக்கத் தனியாக குடில்கள் அமைக்கலாம். தமிழில் வெளிவந்த - வெளிவரும் கவிதை நூல்களை அனைத்தும் இருக்கும்படியான ஒரு நூலகம். கவிதை வாசிப்பு, கவிஞர் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கான இயற்கை அரங்கம் அமைக்கலாம். இளங்கவிஞர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள வாய்ப்புத் தரலாம்.

பாரதி பராசக்தியிடம் வேண்டினான். நாம் 'பராசக்தி'யைப் படைத்த கலைஞரிடம், தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் வேண்டுகிறோம். கவிக்கோ மணிவிழாவின் இனிய நினைவுகளுடன் தமிழ்நாட்டில் 'கவிதா மண்டல'த்தை உருவாக்க வேண்டுகிறோம்.

கவிக்கோ அப்துல் ரகுமானின் மணிவிழாவையொட்டி தினமணி (19.7.1998) இல் வெளிவந்த கட்டுரை.

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்