தமிழர் வாழ்வியல் - பண்பாட்டுக் கருவூலத்தில் தொல்காப்பியரின் பங்களிப்பு

த.சிவபாலு MA


'பண்பாடு என்பது மிகவும் இணக்கமுற்ற, ஒருங்கிநை;த ஒரு ஒன்றிமாகும். இதனுள் உள்ள கூறுகள் அனைத்தும் செயல்நிலையில் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன. ஒவ்வொரு கூறும், பண்பாடு என்னும் முழுமைக்குள், மிகவும் ஏற்ற நிலையில் பொருத்தப்பட்டுள்ளது' என பக்தவச்சல பாரதி (1993 பக். 571) குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதனைச் சற்று விளக்கமாக வண.பிதா. தனிநாயகம் அடிகளார் தந்தை செல்வாவின் நினைவுப்பேருரை நிகழ்த்தியவேளை 'பண்பாடு என்றால் ஒரு இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், சமூகச் சட்டங்கள், சமயங்கள், வழிபாட்டு முறைகள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்திணை, புறத்திணை மரபுகள், இலக்கிய மரபுகள், அரசியலமைப்புக்கள், ஆடை அணிகலன்கள், திருவிழாக்கள், உணவு, பொழுதுபோக்கு விளையாட்டுகள் ஆகியவற்றையெல்லாம் குறிக்கும்' என்று குறிப்பிட்டுள்ளமை (வண.பிதா. தனிநாயகம் அடிகளார் 'தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும்' 1980) மிகப் பொருத்தமானது.

தமிழரின் பண்பாடு உயர்ந்த பண்பாடு என்று கொள்ளவதற்கு நம்முன்னோரின் அளிக்கைகள், தொண்டுகள், தியாகங்கள் என்பன எனலாம். எமது பண்பாட்டை அறிவதற்கு முதன்நூலாகத் திகழ்வது தொல்காப்பியம். தொல்காப்பியம் தனியே ஒரு இலக்கண நூலாக அன்றி தமிழரின் பண்பாட்டைப் பேசுகின்ற ஒரு சிறந்த இலக்கியப் பனுவலாகவும் திகழ்கின்றது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது கணியன் பூங்குன்றனார் தமிழரின் உயர்ந்த மனப்பாங்கையும் பண்பாட்டையும் உலகறியச் செய்கின்றது. பொதுமை பேசுகின்ற நிலையிலிருந்து பண்பாட்டுக்கூறுகளை மனிதனின் வாழிடத்தையும் அவன் செய்யும் தொழிலையும் அடியாவைத்து நோக்கியவர் தொல்காப்பியர். அவர் ஆக்கியளித்த நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் வழி அவர் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பு யாது என்பன் கண்ணோட்டமே இவ் உரை ஆகும்.

தொல்காப்பிய மரபு சுமேரியநாகரிக காலந்தொட்டு தொடர்ந்து வருகின்ற மிகப் பழமைமிக்க ஓர் மரபாகும். தொல்காப்பியர் தனக்கு முந்தைய அறிஞர்களைப் பற்றிப் பல இடங்களில் 'என்மனார் புலர்' எனக் குறிப்பிடுதலால் ஊகித்துக்கொள்ள முடிகின்றது. தமிழர் மரபு உலகில் காணப்படும் இன மரபுகளில் சிறப்புடையதாகும். மூன்று அதிகாரங்களாகப் பகுக்கப்பட் தொல்காப்பியத்தில் மிகச் சிறப்பானது பொருளதிகாரமே யாகும். இவ்வதிகாரத்தை சிறப்பாக விளங்கிக்கொள்ளவே மொழியியல் அடிப்படையில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்பன முன்வைக்கப்பட்டுளன.

தொல்காப்பியரின் பங்களிப்பு

ஒரு இனத்தின் பண்பாடு அந்த இனத்தின் தனித்துவத்தைக் கட்டிக்காத்து நிற்பது. வேற்றுப் பண்பாட்டின் வேற்றுமைகளை அறிந்துகொள்ள உதவுவது. உலகில் வாழும் இனங்களின் பண்பாடுகள் காலத்திற்கக்காலம் மாற்றம் பெற்று வந்தாலும் தமிழனின் தனிப்பண்பாட்டைப் பேண, அது தொடர்ந்தம் இடம்பெற வைத்ததில் தொல்காப்பியம் பெரும் பங்காற்றியுள்ளது. 'தமிழர் பண்பாட்டை ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாககத் தமிழ் மக்கள் வளர்த்துவந்த இலக்கியங்களும், கவின் கலைகளும் எடுத்துக்காட்டுகின்றன. ஆயினும் ஒரு சில நூல்களை மட்டுமே தமழர் பண்பாட்டின் களஞ்சியங்களாகக் குறிப்பிட வேண்டுமாயின் ஐந்து நூல்களைக் குறிப்பிடுவேன். அவை தொல்காப்பியப் பொருளதிகாரம், குறுந்தொகை, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் என்பன' (வண.பிதா. தனிநாயகம் அடிகளார் 'செல்வநாயம் நினைவுப்பேருரை') ஆரியர்களின் வருகையால் அவர்களின் சமய- சமூக கொள்கைகள் தமிழ் நாட்டிலும் பரவின. ஆனால் அடிப்படைப் பண்பாடு மாறவில்லை என்பதனை அவர் குறிப்பிடுவதினை நொக்கும் போதும் முதலில் அவர் வைத்துள்ளமை தொல்காப்பியம் என்பதனையும் ஈண்டு குறிப்பிடுதல் பொருத்தமாகும்.

தொல்காப்பியம் தமிழில் கிடைத்துள்ள பண்டைய நூல். தொல்காப்பியம் தமிழரின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டும் இலக்கண நூலாகும். இலக்கியத்திற்கு இலக்கணம் தேவையென்பதை உணர்ந்து இலக்கியமாகவே இலக்கணத்தைப் படைத்துள்ளார் தொல்காப்பியர். தமிழரின் பண்பாட்டை, அவர்தம் விழுமியங்களை, சால்புகளை உணர்த்தி நிற்கின்றது தொல்காப்பியம். தொல்காப்பியரால் எழுதப்பட்டமையால் தொல்காப்பியம் எனப்பெயர் பெற்றது என தொல்காப்பியத்திற்கு உரை கண்ட பனம்பாரனர் பின்வரும் பாயிரத்தால் குறிப்பிடுகின்றார்:

தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே'

எனபதன் வழி தொல்காப்பியரே தனது பெயரால் தான் எழுதிய நூலுக்குப் பெயர் தந்துள்ளார் எனக் கொள்ளமுடிகின்றது. தொல்காப்பியம் இரண்டு முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று இலக்கணம் இன்னொன்று இலக்கியம். இந்நூல் 1. எழுத்தியல், 2. சொல்லியல், 3. பொருளியல் என முப்பெரும் பகுப்புக்களைக் தன்னகத்தே கொண்டுள்ளது.

எழுத்தியல், சொல்லியல் ஆகிய இருபிரிவுகளும் தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறை செய்து நிற்க மூன்றாவதாக வைக்கப்பட்டுள்ள பொருளதிகாரம் மக்கள் வாழ்வியலை எடுத்துக் காட்டுகின்றது. இந்நூல் மொழி இலக்கணத்தையும் அந்த இலக்கணத்தால் அமைந்த மக்கள் வாழ்க்கை முறைமையையும், அவர்கள் வாழ்ந்த இயற்கையோடு ஒட்டியதாக வரையறைப்படுத்துவது அதன் சிறப்பாக அமைகின்றது.

தமிழகூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளும் ஆயிருமுதலின்


எழுத்துச் சொல்லும் பொருளும் நாடி' என்னும் பாயிரத்தால் நன்மக்கள் வழங்கும் வழக்கும் செய்யுளும் என்று குறிப்பிடுவதன் மூலம் செந்தமிழ் என்னும் பதம் தொக்கு நிற்பதனை அறியலாம். எழுத்தும் சொல்லும் உயர்ந்தவர் மாட்டாக வரும் புலமையுள்ளோரின் படி செய்யுளையும் கொண்டு தமிழின் உயர்நிலையை எடுத்து இயம்பும் தன்மை தொல்காப்பியருக்கு முன்னோர் வழங்;கிவந்து உயர்நிலைத் தமிழைக்குறிக்;கின்றது என்பதன் மூலம் தமிழ் மொழியினது தரத்தையும் அதன்வழி அக்காலத்திற்கும் அதற்கும் முன்பானதுமான வாழ்வியல் நிலையையும் எடுத்தாண்டுள்ளார் என்பதன் மூலம் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் அதன் பண்பாட்டிற்கும் எத்தகைய பங்களிப்பபைச் செய்துள்ளார் என்பது வெளிப்படை.

செய்யுள் மருங்;கின் மெய்பெற நாடி
இழைத்த இலக்கணம் பிழைத்தன போல
வருவன உளவெனும் வந்தவற் றியலால்
திரிபின்;றி முடித்தல் தௌ;ளியோர் கடனே'
(தொல்.பொரு.544)

தனது நூலில் இறுதியல் வைத்தள்ள பொருளதிகாரம் இலக்கியக் கோட்பாடு பேசும் நூலென்பதற்கு அதில் காணப்படும் பொருள் வைப்பின் அடிப்படையில் விளக்கங்களை இளம்பூரணர், நச்சினாக்கினியர் முதலியோர் தந்துள்ளனர். அடிப்படிடை இலக்கணத்தை செய்யுளுக்கு ஆக்கித்தந்த பெருமை தொல்காப்பியரையே சாரும். செய்யுள் இலக்கணத்தை அவர் படைத்தமை போன்று வேறு மொழிகளில் குறிப்பாக மேனாட்டு மொழிகளில் இல்லையென்றே கூறலாம். எனவே செவ்;வியல் இலக்கியமாகத் தமிழ் காண்பபடுவதற்கு செய்யுள் இலக்கணத்தின் பிதாமகர் எனக்கொள்ளத்தக்கதாக அவர் செய்யுளியலுக்கான வரையறைகளைத் தந்திருப்பது பிரமிப்பை ஊட்டுகின்றது.

இயற்கையோடு ஒட்டிய வாழ்வு:

வடவேங்கடம் முதல் தென் குமரிவரை அமைந்த நிலப்பரப்பே தமிழ்கூறும் நல்லுலகமாகத் திகழ்ந்தது. அந்த நிலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகள் அவர்களின் வாழ்வாதாரம் என்பன இயற்கையோடு ஒட்டியதாக இருந்துள்ளது. இதனை இயற்றைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவாக நோக்கி பொருளதிகாரத்தில் தந்துள்ளார். எனினும் இலக்கண வரையறைக்குள் நின்று இவற்றை எவ்விதம் இலக்கியத்தின்பாற் கொள்ளலாம் என்பது அவரது இலக்கணக்கட்டமைப்பாக அமைந்துள்ளது. பாடு பொருளும் அப்பொருளைக் கூறும் முறையும், எவ்வித வரன்முறையில் கூறப்படவேண்டும் என்பதற்கான இலக்கண அமைதியை பொருளியல் அதிகாரம் கொண்டுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.

மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்
வருணன் மேய பெரு மணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே
காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்


என அவர் தமிழகத்தில் காணப்பட்ட நிலத்தின் பாகுபாட்டையும் அவ்வவ் நிலத்தியல்புகளையும் நன்கு ஆய்ந்து பகுத்து நோக்குகின்றார். காடும் காடுசார்ந்த இடமும் முல்லை எனவும், மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனவும், வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனவும், மணலும் மணல் சார்ந்த இடமும் நெய்தல் எனவும் இனங்கண்டு அவற்றோடு மக்கள் வாழ்க்கைக்கு உண்டான தொழில் முறைகளையும் வாழ்வியல் முறைகளையும் வரையறை கண்டு தந்துள்ளார். இதனை நோக்கும் போது மொழியின் பங்கு, பண்பாட்டின் பகுதியாக அமைந்து அப் பண்பாட்டின் படிமுறைகள், வேறுபாடுகள், ஒற்றுமை என்பன எவ்விதம் இடத்திற்கும் காலத்திற்குமேற்ப மாறுபடுகின்றன என்பனவற்றைக் கட்டமைத்துத் தரும் பாணியில் அமைந்துள்ளது பொருளதிகாரம். அது தனியே இலக்கணத்தோடு மட்டும் நின்றுவிடாது மக்களின் வாழ்வியலை உள்ளடக்கி மொழிக்கும் மக்கள் வாழ்;வியலுக்குமான தொடர்பைத் தெளியவைப்பதாக அமைந்துள்ளது என்பது பொருளதிகாரத்தால் தெளிவாகின்றது. 'உண்மையில் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமையையும் பார்க்கும்பொழுது அது இலக்கியத்தின் உள்ளடக்கம், உருவம், இலக்கிய வகை, இலக்கியத்தின் பயன், இலக்கியத்தைப் புரிந்துகொள்ளுகின்ற முறை ஆகியவற்றை விளக்கும் ஒரு பாவியல் நூல் என்பது புலனாகும்' என உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்த தொல்காப்பியக் கருத்தரங்கத்தின் முன்னுரையில் குறிப்;பிட்டிருப்பதனை அவதானிக்கலாம். 'பலர் தொல்காப்பியம் ஒரு பாவியல் நூல் (Pழநவiஉள) என அண்மைக்காலத்தில் குறிப்பிட்டுள்ளமை கருத்திற்கொள்ளற்பாலது. பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் (1965), மு.வ. வரதராசன், ஜி. சுந்தரமூர்த்;தி (1974), பேராசிரியர் செவலபில், பேராசிரியர் பொற்கோ (1994:90) போன்றவர்கள் இவ்வரிசையில் அடங்குவர். துரதிஷ்டவசமாக இன்றும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை ஒரு படைப்பிலக்கியமாகவே கருதுகின்றனர். வாழ்;வியல் நூலாகவே கொள்ளமுடிகின்றது. பாவியல் நூலாகக் கருதப்படுவதில்லை. இவ்வாறு பிழைபட உணருவதற்கு காரணம் தொல்காப்பியரின் கவித்துவப் பண்பு எனக்கூடக் கூறலாம்' என முனைவர் அகஸ்தியலிங்கம் (தொல்காப்பிய இலாக்கியக் கோட்பாடுகள் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1998)அவர்கள் குறிப்பிடுவது கருத்திற்கொள்ளற்பாலது.

பொதுவாகக் கொள்ளும்போது நாடகவியல், செய்யுளியல், என்பனவற்றோடு வரும் கிளவியாக்கம், மெய்பாட்டு இயல்களும் இணைந்தே வருகின்றன. இதனால் அனைத்து ஒழுக்கங்களையும் அகம், புறம் எனப் பிரித்து அவற்றை ஏழுதிணைகளுக்குகள் தொகுத்துத் தந்துள்ளார் தொல்காப்பியர். தமிழர் பண்பாட்டினை அன்பின் ஐந்திணையாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவற்றை வகுத்துள்ளார். இவற்றிற்குப் புறம்பாக ஒருதலைக்காமம் குறிக்கும் கைக்கிளையையும், ஒவ்வாத காமத்திற்குப் பெருந்திணையையும் குறித்து எழுவகையாகத் தந்துள்ளார். ஐந்திணை மருங்கில் போற்றுதற்குரியனவாக மாயோன், சேயோன், இந்திரன், வருணன், கொற்றவை ஆகியவற்றைத் தந்த தொல்காப்பியர் கைக்கிளை, பெருந்திணைகளுக்கு தெய்வ ஆட்சியே இல்லாத நிலையையும் காட்டியுள்ளார். இவை அனைத்தும் இன்றுவரை மக்களால் போற்றப்படும் அல்லது பின்பற்றப்படும் பண்பாட்டுக் கூறுகளே.

தொல்காப்பியர் எமக்களித்த பெருந்திணை உண்மையிலேயே இன்று சிக்மண்ட் புறோயிட் (ளுபைஅரனெ குசநரன) என்னும் உளவியல் அறியஞரின் கருத்தை ஒத்ததாக அமைந்துள்ளமை மனித வாழ்வியலின் பண்பாட்டுக் கூறுகளை எடுத்துக்காட்டும் உன்னத நூலாகவே கொள்ளமுடிகின்றது. ஈராயிரம் ஆண்டுகள் காலங்கடந்தும் அறியமுடியா மனதின் இயல்பை தொல்காப்பியர் எடுத்து விளம்பியிருப்பது தமிழர் சால்பின் முதன்மைத் தன்மையன்றோ? ஒவ்வாக் காமத்தால் அல்லது ஒருதலைக் காமத்தால் உளத்தில் ஏற்படும் மனநிலையைத் தொல்காப்பியம் எடுத்தியம்பிற்றென்றால் தமிழர் பண்பாட்டிற்கு அளித்த பங்களிப்பே யாம். திருமூல நாயனார் இவைபற்றி மேலும் தெளிவாகப் 'பதி' என்பது இட் எனப்படும் அகத்தையும் அதனை முதன்மைப் படுத்தும் ஈகோ என்றும் ஒவ்வாத காமத்தைக் கண்டிக்கும் சுப்பர் ஈகோ என்றும் கொள்ளமுடிகின்றது. என்றால் தொல்காப்பியர் எவ்வளவிற்கு உன்னதமான பங்களிப்பைச் செய்திருக்கின்றார் என்பது புலனாகும். இது தமிழர் பண்பாட்டிற்கு அவர் செய்த பங்களிப்பே ஆகும்.

தொல்காப்பிய மரபு இன்னும் அழியாத புகழோடு வாழ்ந்து வருவதோடு தமிழர் தம் பண்பாட்டை வளர்த்து வருகின்றது. தமிழ் நாட்டில் புத்தமதம், வைணவம், சைவம் போன்ற சமயங்கள் காலத்திற்குக் காலம் தமிழர் கள் கைக்கொண்டு ஒழுகியும் வளர்த்தும் வந்துள்ளன. ஆனால் தமிழ் மொழியின் ஆதிக்கம் என்றுமே அழிந்ததும் இல்லை மறைந்துபோகவும் இல்லை. சிவஞானபோதத்தைத் தந்த மெய்கண்டார் தொல்காப்பியத்தைப் பின்பற்றியுள்ளார் என்பதற்கு பற்பல ஆதரங்களைக் காட்டலாம். 'என்மனார் புலவர்' என்பன போன்ற சொல்லாடலை நாம் சிவஞான போதத்தில் காண்கின்றோம். எனவே தமிழர் பக்தி இலக்கியத்திற்கும் பாரிய பங்களிப்பை வழிகாட்டலைத் தொல்காப்பியர் நல்கியுள்ளார் என்பது தெளிவு.

அறிவியல் தொடர்பாக இன்றும் தெளிவில்லாத பலவற்றில் அவர் எவ்விதம் அறிந்திருந்தார். எடுத்துக்காட்டாக அவரது உயிரின வகைப்பாடு வியக்க வைக்கின்றது.

புல்லும் மரனும் ஓரறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
(தொல்.பொரு. 1528) எனவும்

'நந்தும் முரலும் ஈரறிவினவே' எனவும் 'சிதலும் எறும்பும் மூ அறிவனவே' எனவும்
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே' எனவும் மாவும் புள்டளும் ஐ அறிவனவே' எனவும் 'மக்கள் தாமே ஆறறிவுயிரே' என பாகுபடுத்திக் காட்டியிருப்பது விஞ்ஞானிகளையே சிந்திக்க வைக்கின்றது. அவ்வாறே

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதிர் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
(தொல்.பொரு. 1520)

தொல்காப்பியர் எவ்விதம் உயிரினப் பாகுபாட்டையும் அவற்றின் புலனறி சக்திளையும் பாகுபடுத்திக் காட்டியுள்ளமை தமிழர் பண்பாட்டின் விழுமியத்திற்கு அவர் தந்த பெருமையும் பங்களிப்புமாகும்.

தொல்காப்பியத்தில் இல்வாழ்க்கை:


'அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை' என்னும் தத்துவத்தின் பாற்பட்டது தமிழர் வாழ்வியல் 'அகம், புறம் என இருவகையாகப் பகுத்து விளக்குகின்றது தொல்காப்பியம். 'ஒத்த அன்புடையராகிக் கணவனும் மனைவியும் இணைந்து வாழும் குடும்பவாழ்வினை அகவாழ்வென்றும், இவ்விதம் இணைந்த குடும்பங்கள் சேர்ந்து வாழ்வதற்குரிய அரசியல் வாழ்வினைப் புறவாழ்வென்றும் வகுத்துரைத்தல் பழந்தமிழர் பண்பாட்டின் பாற்படும். 'இல்லறம் அல்லது நல்லறம் இல்லை' என்னும் தொன்மொழி இல்வாழ்வின் உண்மைத் தத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இல்வாழ்க்கை சிறப்புடையதாக அமைந்துள்ளமையை தொல்காப்பியர் பதிந்துள்ளமை அவர் தமிழரின் பண்பாட்டுக்கு ஆற்றிய முக்கிய பங்களிப்பாகவே கொள்ளமுடிகின்றது.

அறம்,பொருள், இன்பம் என்பனவற்றை மும்முதற்பொருள் எனப் பாராட்டிப் போற்றினர் தமிழர். இன்பத்திற்கான அடிப்படை பொருள். அந்தப் பொருளை ஈட்டுதற்குரிய நெறிமுறை அறம் எனப்பட்டது. இல்லத்தலைவன் பொருளீட்டற்பொருட்டு மனையைத் துறந்து செல்லுதலும் அறவழியில் பொருள்தேடலும், தலைவன் திரும்பிவரும் வரை விருந்தினரை வரவேற்று இன்முகத்தோடு தலைவனின் பெயருக்கு இழுக்கு நிகழாவண்ணம் அடிசில் படைத்து வரவேற்பது தலைவியின் கடமை என்பதும் பதிவாக்கப்பட்டுள்ளது. தமிழனின் தலையாய பண்பாட்டு நிலைகளில் விருந்தோம்பல் மிகவம் உன்னதமானது.

அக ஒழுக்கத்தை குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்திணை ஒழுக்கங்களோடு; கைக்கிளை, பெருந்திணை ஆகிய ஏழு வகையான ஒழுக்க மரபினைச் சங்ககாலத் தமிழர் கொண்டிருந்தனர் என்பதினை நாம் அறியமுடிகின்றது. தமிழரின் பண்பாட்டுக் கூறுகளில் மணவினை எவ்விதம் இடம்பெற்றுள்ளது அதன் சிறப்பில்புகள் எவை என்பனவற்றைத் தொல்காப்பியம் பதிவுசெய்துள்ளது. பண்பாடு என்பது மாற்றம் கண்டு வருவது. பண்டைய தமிழ்ப் பண்பாட்டில் இருந்து நாம் கற்றுக்கொள்ளுவதென்பதற்கு அடிநாதமாக அமைவது தொல்காப்பியமே. ஐம்பெரும் காப்பியங்கள் தமிழரின் சால்புபற்றி அறியத்தருகின்றது. ஆனால் பண்பாட்டிற்கு வரையறை தந்துள்ளது தொல்காப்பியமே. இல்வாழ்க்கைத் தத்துவக்கோட்பாட்டை தெளிவாக தெரிவிக்கின்ற அருமைப் பனுவலைப் படைத்த தொல்காப்பியனின் பங்களிப்பு தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்த கொடையே. தமிழனின் பண்பாடு இதுதான் இப்படித்தான் இருந்தது, இருந்தும் வருகின்றது என்பதற்க அவராற்றிய தொண்டு அளப்பரிய தன்றோ? எனவே அவர் எவற்றை எல்லாம் நாம் அறிந்தகொள்ள வழிவகுத்துள்ளார் என்பதனைப் பார்ப்பது பொருத்தமானதே!

களவொழுக்கம்:


அன்பின் ஐந்திணை ஒழுக்கம் 'களவு, கற்பு' என இரு வகைப்படும். ஒருவும், திருவும், உணர்வும் என்பனவற்றால் ஒத்து விளங்கும் தலைவனும் தலைவியும் விதியின் வழி தாமே ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டு, அன்பினால் வயப்பட்டு ஒருவர்க்கொருவர் இன்றியமையாதவராய் உலகத்தார் அறியாவண்ணம் மறைந்தொழுகுதல் களவாகும். 'மறைவில் நிகழும் ஒழுகலாறு' என்னும் கருத்தியலே 'களவு' எனப்படும். இவ்விதம் மறைந்தொழுகுதலைத் தவிர்த்து பெற்றோர் உடன்பாடு பெற்று இருவரும் உலகத்தால் அறிய மணங் கொண்டு மனையறஞ் செய்தலே 'கற்பு' எனப்படும். ஆதலால் களவும் கற்பு நெறியின் பாற்படும் என்பதே பொருளாகக் கொள்ளப்பட்டது. 'களவு என்னும் பெயரீட்டைக் கற்பு என்னும் பெயரீட்டிற்கு எதிர்மறையாகக் கொளல் பிழை. முன்னைய அகவாழ்வின் முதல் நிகழ்வு களவு, தொடர் நிகழ்வு கற்பு என்று கொள்ளுதல் வேண்டும்' என முனைவர் சு.ப.அறவாணன் அவர்கள் குறிப்பிடுவது கருத்திற்கொள்ளற்பாலது.

களவின் வழிவந்த கற்பிற் புணர்ச்சி
கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே
உடன்போய் வரைதலும் உண்மை யான'


இயல்பாக தலைவனும் தலைவியும் இணைந்து வாழ்வதற்கு அவர்கள் தாமே விரும்பி தேர்ந்து வாழுதல் அல்லது பெற்றோர் முறைப்படி வரன்பார்த்துக் கட்டிவைத்தல் என்னும் இருமுறைகள் முக்கியமானவையாகத் தமிழர்களிடையே பயின்று வந்துள்ளது என்பதனை தொல்காப்பியர் எடுத்துக் காட்டுகின்றார். தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் சந்தித்து, விரும்;;பி இணைவதனைக் களவொழுக்கம் எனக்கூறினர். அது எவ்விதம் நிகழ்கின்றது என்பததை தொல்காப்பியம்; எடுத்துக்காட்டுகின்றது:

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்
கன்பொடு புணர்ந்து ஐந்திணை மருங்கில்
காமக் கூட்டம் காணுங் காலை
மறை ஓர் தேயத்து மன்றல் எட்டணுற்
துறையமை நல்லியாழ்த் துணைமையார் இயல்பே
(தொல். காஞ். 89)

பருவம் எய்திய பெண்ணும் ஆணும் அவ்வவ் நிலங்களின் தன்மைக்கேற்ப அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தம்முள் காமக்கிளர்ச்சியின் கண் விருப்புண்டாகி களவொழுக்கத்தில் நிற்பதனை அந்தந்தந்த நிலத்துக்கு உரியனவாக மட்டுமன்றி வௌ;வேறு நிலத்து மக்களிடையேயும் காதல் தோன்றி கடிமணம் புரியும் முறை இருந்துள்ளது.

மணம் என்பது தமிழர் வாழ்வில் வெறும் உடலுறவு மட்டும் என்னும் கருத்தைக் கொடுப்பதாக இல்லை. அது உள்ள உறவு என்று கொள்ளுதல் சாலப் பொருந்தும். உள்ள உறவு என்பது ஒருத்தனுக்கும் ஒருத்திக்கும் இடையேயான முன்னரான, நிகழ்கால, பின்னரான உறவினைக் குறித்து நிற்;கின்றது என்பது அறிஞர்களின் கூற்று. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களுக்குரிய ஒழுக்கத்தையும் கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றையும் அகம் என்று தொல்காப்பியர் வரையறைப் படுத்துவதனைக் காணலாம்.

கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே
(தொல்.பொரு. கற். 1)

பெற்றோர் அறியாவண்ணம் தலைவனுடன் தலைவி செல்லுதல் உடன்போக்கு என்பதாக விபரிக்கப்படுகின்றது. ஒத்த காதலனும் காதலியும் யாருமறியாவண்ணம் கரந்தொழுகி, பெற்றோர் விருப்பமின்றி தாமே சேர்ந்து வாழ நினைத்துச் செல்லும் மரபும் இருந்துள்ளது.

கொடுப்போ ரின்றிக் கரண முண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான
(தொல். பொருள்.)

காலப்போக்கில் தான்விரும்பிக் காதலித்த தலைவியைக் கைவிட்டு வேற்றாளை நாடிய நிலைகள் அதிகரித்தமையால் ஊரறிய, சமூகமறிய மணவினைகள் இடம்பெறலாயிற்று. இந்த மணவினை முறைகளுக்குச் சாட்சியம் தேவைப்பட்டது. களவு மணத்தைத் தடுத்து திருமணம் என்னும் கட்டுக்குள் எல்லோருமறியச் செய்து வைக்கும மணவினைமுறைகள் இடம்பெறத்தொடங்கியதை தொல்காப்பியர் எடுத்துக் காட்டுகின்றார்.

பொய்யும் வழுவுந் தோன்றிய பின்ன
ரையர் யாத்தனர் கரண மென்ப
(தொல். பொருள். கற்)

ஏமாற்றிச் செல்லும் அல்லது மறுத்து நிற்கும்நிலைகளைத் தவிர்த்துக் கொள்வதற்காக கரணம் என்னும் மணவினைச் சடங்குகளை அந்தணர்கள் ஏற்பாடு செய்துகொண்டனர் எனப்படுகின்றது. இந்த மணவினைகள் சமுதாயத்தின் உயர்மட்டத்தில் உள்ள அந்தணர், வணிகர், அரசர் ஆகியோருக்கு மட்டும் உரித்துடையதாக அல்லது அவர்களுக்கு மட்டுமென இடம்பெற்று வந்துள்ளது. ஆனால் அது பின்னர் உழவுத்தொழிலை மேற்கொள்ளும் சாதாரண மக்களிடத்தும் ஏற்படத் தொடங்கியுள்ளமையை தொல்காப்பியர் எடுத்தியம்பத் தவறவில்லை.

'மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே'
(தொல். பொருள்-கற்பியல், 3)

வடக்கிருந்து வந்தவர்களிடையே நிலவிய மணவினை முறைகள் எட்டு அவற்றுள் காந்தர்வம் எனப்படும் காதல் மணம்; தமிழர்களிடம் இடம்பெற்றுள்ளது என்பதனை எடுத்து விபரிக்கின்றார்.

திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும் நிலைமையும் அங்குஇருந்துள்ளமையை உய்த்துணர முடிகின்றது. அதாவது திருமணம் செய்யப்போகும் தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள தகமைகள் பற்றிக் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர். தலைவனும், தலைவியும் பத்துவகைப் பண்புகளால் ஒத்திருத்தல் வேண்டும்.

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருபு நிறுத்த காமவாயில்
நிறைய அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே


இப்பண்புகள் ஒத்தில்லாது தலைவன் மிக்கிருந்தாலும் குற்றமில்லை. ஆனால் தலைவிக்கு பண்புகள் மிக்கிருத்தல் கூடாது எனக்குறிப்பிடுகின்றார். பெண் தலைவனுக்குக் கீழ்ப்பட்டவளாக வாழ்தல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தலைவன் தலைமகளுக்குரிய பண்புகள் தொல்காப்பியரால் வரையறை செய்யப்டுகின்றது. தமிழர் சால்பின் மேன்மையைக் காட்டும் நிலை அங்கு மிளிர்கின்றது.

பெருமையும் உரனும் ஆடூஉ மேன' தொல் பொரு. 7

ஆண் வலிமை பொருந்தியவன் வெளியே சென்று பொருள் தேடிவரும் திடகாத்திரமும் ஆண்மையும் பலமும் அவனிடத்தே உண்டு. அவன் பொருள்தேடி தனது குடும்பத்தைப் பாதுகாக்கும் தன்மையைக் கொண்டவன். என்னும் தமிழியல் பண்பாட்டை எடுத்துரைக்கின்றார்.

அதேபோன்று பெண்களுக்குரிய பண்புகளையும் அவர் குறிப்பிடத்தவறவில்லை.

அச்சமும் மடனும் நாணும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப.
(தொ.பொரு. 8)

அச்சம், நாணம், பேதைமை ஆகிய மூன்றும் பெண்டிர்க்குரிய பண்புகளாகக் கொள்ளக்;கிடக்கின்றன. இந்த மூன்று பண்புகளும் பின்னர் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்னும் நான்காக விரித்துரைக்கப்பட்டது. அச்சம், நாணம், பேதைமை ஆகிய மூன்றும் பெண்டிர்க்குரிய இலக்கணமாகும். இவ்வாறு பண்புகளை உடைய தலைவனும், தலைவியும் மேற்கொள்ளும் இல்வாழ்க்கை அறம், பொருள், இன்பம் இவற்றால் சிறப்புறுவதாகும். தலைவன் இவ்வாறு தன் குடிப்பெருமை விளங்க மனைவாழ்க்கை நடத்துவான் என தொல்காப்பியம் கூறுகிறது. பெண்களின் பண்புகள் குறித்து பின்வரும் வரிகள் விளக்குவதையும் அது களவு' ஒழுக்கத்தின் பாற்படுவதையும் வரைகின்றார்.

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணு வரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இச்
சிறப்புடை மரபினவை களவு என மொழிப.
(தொல்.கள 9)

ஆசைமிகக் கொள்ளுதல், மற்றவர் அறியாவண்ணம் தலைவன் மாட்டுக் காதல் கொள்ளுதல், அதனால் உடல் நலிதல், தன்னிடம் நேர்ந்தது என்ன என தோழிக்கு எடுத்துக்கூறுதல், வெட்கப்பட்டு சிந்தித்திருத்தல், காண்பதெல்லாம் தனது மனதிற்பட்டவையாகவே தோன்றுதல், அடிக்கடி என்ன செய்வதென்பதனையே மறந்து செயலிழந்திருத்தல், நினைவழிதல், வேதனை மிகுதியால் இறந்துபோனாலென்ன என எண்ணுதல் போன்ற அனைத்தும் களவு ஒழுக்கத்தின பாற்படுவதாக கொள்ளப்படுகின்றது. நன்னெறிப் படரும் தொல் நலம் பொருளினும் (தொல்.கற்பு.5)

நன்னெறி என்பது அறம், பொருள், இன்பம் தவறாத நெறி பிறழாது தலைமகனும் தலைமகளும் இணைந்து வாழ்வதே இல்வாழ்க்கை எனப்படும். களவொக்கத்தையும் கற்பொழுக்கமாகவே தொல்காப்பியர் வரைத்துள்ளார். இது தமிழர் பண்பாட்டின் அடிநாதமன்றோ? காதலித்தவளைக் கைவிடாத உயர்ந்த பண்பாட்டைக் காட்டி நிற்கின்றது. களவொழுக்கம் கற்பொழுக்கமாகப் பேணப்படும் பண்பாடு தமிழரிடம் நிலைகொண்டிருந்தது. அது இன்று எவ்விதம் உள்ளது என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. பண்பாட்டு நெறி முறைகளுக் கமைய வாழ்ந்து வருபவர்கள் தமிழர்கள். இன்று சட்டம்போட்டுக் காக்கவேண்டிய நிலையைக் காண்கின்றோம். தொல்காப்பியர் பெற்றோர், தோழி, பாங்கன், செவிலி என வாயில்களைப் படைத்து அவற்றின் வழி ஊரலரை அடைக்கும் பண்பைக்காட்டினார். மனத்தக்கான் மாண்புடையளாகி

கற்பொழுக்கம்:

தொல்காப்பியர் காலத்தில் நானிலங்கள் இருந்தமைத பற்றிக்குறிப்பிட்டு அவற்றிற்கான தனிப்பண்புகள் பேசப்படுகின்றன. மக்கள் வாழிடங்களுக்கேற்ப அவர்களது தொழில் பழக்கவழக்கங்கள் வேறுபட்டுக்காணப்படும். கற்பெனப் படுவது தலைவனுக்கு தலைவியை முறையோடு திருமணம் செய்து கொடுத்தல் எனத் தொல்காப்பியம் கூறுகிறது.

ன்றே வேறே என்று இரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியம் காண்ப
மிக்கோன் ஆயினும் கடி வரை இன்றே
சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப.
(தொல்.பொரு. களவி 1)

இன்று போலவே காதல் திருமணம் பற்றியும் தொல்காப்பியர் குறிப்பிட்டு அங்கும் தமிழரின் உயரிய பண்பை எடுத்துரைக்கின்றார். தனியிடத்துத் தனித்துச் சந்தித்து மகிழும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பி களவுவழி ஒழுகலை பெற்றோர் அறிந்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பது கற்பொழுக்கம் என வரையறுக்கின்றார் தொல்காப்பியர். களவொழுக்கத்தையம் கற்பொழுக்கமாகவே அவர் காட்டுவது தமிழர் பண்பாட்டிற்கு அவர் மேன்மையாகும்.

சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப இழிந்துழி இழிபே சுட்டலான (தொல்.பொரு.களவி 2)

வண்டே இழையே வள்ளி பூவே
கண்ணே அலமரல் இமைப்பே அச்சம் என்று
அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ்
நின்றவை களையும் கருவி என்ப
நாட்டம் இரண்டும் அறிவ உடம்படுத்தற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்
குறிப்பே குறித்துக் கொள்ளும் ஆயின்
ஆங்கு அவை நிகழும் என்மனார் புலவர்.'
தொல்.பொரு. களவி 3)

களவொழுக்கதில் பிறரறியாது ஒழுகிவரும் தலைமகளையும் தலைவனையும் பெற்றோர் அறிந்து அவற்றை வினவி, அவர்கள் அவ்விதம் ஒழுகுவது உலகுக்குத் தெரியும் முன்னர் அவர்களுக்குத் திருமணம் முடிக்கவேண்டும் என விளைந்து அதன்வழி அவர்கள் இருவரையும் இணைப்பதற்கான ஏதுக்களானவை என்ன என்பதனைக் கண்டறிவதும், தலைமகளிடம் ஏற்பட்டள்ள மாற்றத்தின் விளைவுகள் குறித்து அறிந்து கொண்டு அவர்கள் இருவரையும் சேர்த்துவைக்கும் முறையினையும் பெற்றோர் கொள்கின்றனர். என்பது தமிழர் சால்பு. கற்புக்கெடாவண்ணம் ஊர் அலர் பேசமுன்னர் ஊர்வாயை அடைப்பதற்கான முயற்சிளைப் பெற்றோர் செய்து திருமணத்தி;னைச் செய்துமுடிக்கும் பாங்கினை எடுத்துரைத்து தமிழர் பண்பாட்டின் பாங்கினை நயமாகக் குறிப்பிடுகின்றார்.

கைம்மை மகளிர் பற்றித் தொல்காப்பியம்:

பண்டைக் காலத்தில் தமிழர் இயற்கையாகவே மறப்பண்பு படைத்தவராக விளங்கினர். அவர்களுடைய பழக்கவழக்கம் தொழில், விளையாட்டு போன்றவை யாவும் போர்ப் பண்புடன் இருத்தலைக் காணலாம். தொல்காப்பியத்தில் புறத் திணைகள் ஏழு என்று கூறப்பட்ள்ளது. அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை ஆகிய திணைகள் போரைப் பற்றியும், வாகைத் திணை போரின் வெற்றியையும் கூறுகிறது. காஞ்சித் திணை நிலையாமையைப் பற்றிக் கூறுகிறது.

பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே
(தொல்.பொரு.காஞ். 78)

நிலையாமையாவது இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை என மூன்று வகையாகக் கூறப்பட்டுள்ளது.

மகளிர் பெருமை பேசும் தொல்காப்பியம்:
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல் இயல் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
முகம் புகல் முறைமையின் கிழவேற்கு உரைத்தல்
அகம் புகல் மரபின் வாயல்கட்கு உரிய.
(தொல்.பொரு. கள. 10)

பண்டிற்கழகு சொற்றிறம்பாமை என்று ஒளவையார் கூறுவார். கற்பு நெறி வழுவாது வாழத்தலைப் படலே ஆண், பெண் இரு திறத்தார்க்கும் உரிய உயரிய ஒழுக்கம் எனப்படுகின்றது. ஆனால் பெண்களுக்கு மட்டும் சிலவற்றை விதந்து கூறப்பட்டுவருவது தொல்காப்பியர் காலம் தொட்டு இன்றுவரை தொடர்கின்றது. கற்பொடு ஒழுகுதல், துணைவனின் காமப் பசியைத் தீர்த்தல், நன்நெறியொடு ஒழுகுதல் மென்மையான இயல்பும், எதனையும் பொறுத்து நிற்கும் பொறுமைக்குணமும், எல்லாவற்றிலும் நிறைவைக்காணும் பண்பும், மிகவும் கடினமாக உழைத்து தனது மனைக்குவந்துற்ற விருந்தினரை உபரித்து உணவளித்தலும் போன்ற பிறவும் குடும்பத்தலைவிக்கு உரிய மாண்புகள் எனத் தொல்காப்பியம் கூறுகின்றது.

முகம் புகல் முறைமையின் கிழவோற்;கு உரைத்தல்
அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய
(கற். 11)

கணவன் இறந்த வலியினாலேயே மனைவி தன் உயிரைப் போக்கிக் கொண்டாள் என்று தொல்காப்பியம் கூறுகிறது. அவ்வளவு தூரம் கணவன்மீது பாசம் வைத்திருந்ததோடு அவனின்றி வாழாக் கவரிமானின் மாண்பு கொண்டவள் தலைவி என உரைக்கின்றார்.

நீத்த கணவன் தீர்த்த வேலின்
பெயர்த்த மனைவி வஞ்சியானும்
நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பாடு அஞ்;சிய மகட்பாலானும்
(தொல்.பொரு. காஞ் 18)

போரில் புண்பட்டுக் கிடக்கும் தன் கணவனைப் போர்களத்தில் பேய்கள் நெருங்க விடாது பாதுகாத்த பெண்ணின் பெருமை பற்றி கூறப்பட்டுள்ளது.

இன்னகை மனைவி பேஅய் புண்ணோன்
துன்னுதல் கடிந்த தொடா அக் காஞ்சியும்
(reference)

இவ்வாறு மகளிரின் மாண்புகளை தொல்காப்பிய நூற்பாக்கள் தெளிவாக விளக்குகின்றன. மகளிரின் பண்புகளைக் கூறும் தொல்காப்பியர் மகளிர்க்கு ஒவ்வாத குணங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்
(தொல். பொரு. 25)

அழுக்காறு, அறனழிய பிறரைச் சூழும் சூழ்ச்சி, தம்மைப் பெரியராக நினைத்தல், புறம் கூறல், கடுஞ்சொல், முயற்சியின்மை, தம் குலச்சிறப்பை எண்ணி இன்புறல், பேதைமை, மறதி, தான் காதலித்தவரை பிறரோடு ஒப்பிடல் போன்றவை தமிழர் பண்பாட்டின் பாற்படாது என்பதனைத் தொல்காப்பியர் வரையறுத்துள்ளார்.
தனிமனிதர்களிடம் தோன்றும் பண்பாடே சமுதாயப் பண்பாடாக அமைகின்றது. சமுதாயத்தின் அடிப்படை குடும்பம். தூய்மையான இல்லற ஒழுக்கத்தால் குடும்பம் மேன்மை அடைகிறது. இல்லறம் சிறப்பாக இருந்தால் சமுதாயம் சிறப்படையும். அதனால் தொல்காப்பியர் காட்டும் பண்பாடு எக்காலத்திற்கும் பொருந்துவதாகவும் நாடு சிறப்படைய வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது.

விருந்தோம்பல்:

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பு தமிழரின் வாழ்வியல்முறை உலகில் முதன்மை பெறுகின்றது. விருந்தோம்பல் தமிழரின் சிறந்த சால்பு. தமிழரின் பண்பாட்டில் மிக முக்கிய இடம் பிடிப்பது விருந்தோம்பல். அது தமிழரின் ஓர் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஏழ்மையிலும் கூட ஒரு பகுதி தானியத்தைப பயன்படத்தாமல் பாதுகாத்து வைத்து, திடீரென வரும் விருந்தினருக்கு அல்லது யாத்திரீகர்களுக்கு விருந்துபடைக்கும் மேன்மைமிகு பண்பாடு தமிரின் இரத்தத்தில் ஊறியது. விருந்தோம்பல் தமிழரின் அடையாளமாக மட்டுமன்றி மாக்களிலிருந்து மக்களை இனங்காட்டும் பண்பினையும் இது கொண்டுள்ளது. அன்பு கொண்ட இதயத்தோடு பசித்தோருக்கு புசிக்கக்கொடுத்து அதனால் தான் நிறைவு காண்பவனாக தமிழன் இருக்கவேண்டும் என்பதனை தொல்காப்பியம் வலியுறுத்துகின்றது.

விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே (தொல்.பொ. கற் 231)

தம்மை நாடிவரும் விருந்தினரை இன்முகத்தோடு வரவேற்று உண்டி முதலியவைகளை அளித்து அன்போடும் ஆர்வத்தோடும் அவர்களை உபசரிப்பது இல்வாழ்வோர்க்குரிய தலைசிறந்த பண்பாடாகத் தமிழகம் போற்றியது. இதனைத்தான் தொல்காப்பியம் விருந்து புறந்தருதல் என மனைவிக்குரிய மாண்புகளுள் ஒன்றாகக் கூறுகிறது. இல்வாழ்க்கையுடைய மகளிர்க்கு விருந்தோம்பி வாழ்வதே சிறப்புடையதாகக் கருதப்பட்டது.

'விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும்....'
(தொல். பொருள்.

விருந்தினரோடு நல்ல செயல்களை விருப்பதோடு செய்தலும் மொழிதலும் வேண்டும்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
(குறள் 90)

தமிழரின் பாரம்பரிய பண்பாட்டை தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. பொருளதிகாரத்தை ஒன்பது இயல்களாக வகுத்து அவற்றுள் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல் ஆகிய ஆறனுள்ளும் மனித வாழ்வியல் எத்தன்மை உடையது என்பதனை வரையறுத்துள்ளார். அத்தோடு மரபு இயல் பற்றிக் குறிப்பிடும் அவர் அரசன், உளவர், வணிகர், தொழிலாளர் என்பதற்கான மரபு முறைகளையும் வரையறை செய்து தந்துள்ளமை தமிழர் வாழ்வியலைப் படம்பிடித்துக்காட்டுவதாக அமைகின்றது. யார் யார் அரச அதிகாரத்தில் இருக்கலாம், அவர்களுக்குரிய உடமைகள், அதிகாரங்கள் எவை என்பனவற்றையும் கூல வணகர் எதனைச் செய்யலாம், அவர்களது அதிகாரப் பரப்பு எத்துணை என்பதும், உளவர் தமது நிpலத்தில் உழுதுண்டு வாழ்தல் சிறப்புடைத்து என்பதனை பதிந்து தமிழர் பண்பாட்டிற்கு அவர் பங்களிப்புச் செய்துள்ளார் என்பதனை நாம் அறியமுடிகின்றது. எனவே இல்லத்தலைவி யாரையும் எதனையும் கேட்காமல் தானே முனைந்து செயற்படும் ஆற்றலைக் கொண்டவளாகக் காணப்பட்டாள் என்பதனைத் தொல்காப்பியம் வலியுறுத்துகின்றது. இல்லத் தலைவன் ;இல்லையென பேசாமடந்தையாக அவள் இருக்கவில்லை. தம்மில் நாடிவந்தோரை வரவேற்று அறமாற்றியுள்ளாள். இது ஒன்றே பெண்ணின் பெருமை பேசுவதற்குப் போதுமானதாக உள்ளது.

பெண் அடிமைத்தனத்திற்கு தொல்காப்பியம் உடந்தையாக இருக்கவில்லை. இல்வாழ்க்கை நன்முறையில் அமைய தலைவனுமக் தலைவியும் புரிந்துணர்வு விட்டுக்கொடுப்பு என்பனவற்றை கொண்டு சிறப்புற வாழ்ந்துள்ளனர். 'காமத்திற்கழகு ஊடல்' என்பதன் பொருள் என்ன? கணவன் தவறு செய்யும்போது மறைமுகமாகக் கண்டிக்கும் தன்மையன்றோ? ஆம் கணவன் தன் தவறை உணர்ந்து மனையாளை அற்றுப்படிடுத்தி தன்வயப்படுத்தும் பாங்கு தமிழரின் பண்பன்றோ? கண்டதும் காதல் தொட்டதும் துண்டித்தல் என்னும் நிலை தொல்காப்பியத்தில் காணப்படவில்லை.

நாகரிகம் படைத்த தமிழன் மிக உயர்ந்த நோக்கோடு வாழ்ந்துள்ளான் என்பதனை தொல்காப்பிய வழி நாம் அறியமுடிகின்றது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர். .. . .' (கணியன் பூங்குன்றனாரின் என்ற புறநாநூற்று அடிகள் தொல்காப்பியக் கோட்பாட்டின் வழிவந்ததாகவே கொள்ள முடிகின்றது. மிகவும் பரந்த நோக்கம் கொண்ட உயர்ந்த நிலையில் தமிழன் இருந்துள்ளான் என்பதனைத் தொல்காப்பியம் நிறுவுகின்றது. தமிழரின் பண்பாடு பற்றிப் பேசுவதற்கு தமிழ் மொழியையும் தமிழ்மொழியில் உள்ள பண்டைய கருவூலங்களையும் அறிந்துகொள்ளவதன் மூலமே முடியும். தமிழின் தொன்மை வரலாறும் தமிழனின் தொன்மைப் பண்பாடும் தமிழனைத் தலைநிமிர வைக்கும். எமது பண்பாட்டு விழுமியங்களை உலகறிய வைப்பது கைகூடிவரும் என உணர்ந்து தமிழை வாழ்வில் கற்றுக்கொள்ள முயற்சித்தல் வேண்டும்.

தொல்காப்பியர் வழி நாமும் தமிழையும் தமிழர் பண்பாட்டையும் அழிந்துபோகவிடாது பாதுகாப்பது இன்றியமையாதது. தொல்காப்பியம் தொட்டு திருக்குறள் தழுவி சங்க இலக்கியங்கள், பக்கி இலக்கியங்கள் என்பன தமிழரின் பண்பாட்டை வியக்கவைக்கும் அழகிய பனுவல்கள். இவற்றை நாம் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு கடத்திவிடவேண்டும். எனவே தொல்காப்பியர் குறிப்பிடுவது போன்று நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலநெறி வழக்கினும்' என்பதற்கேற்ப எமது மொழியின் ஆழத்தை அறிந்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். இலகு மொழியில் மக்களை அடைதலும் அவசியமாகும். சாதாரண மக்கள் புரிந்துகொள்ள வழிவகுத்தல் பயன்தரும்.
 



 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்