நம் முன்னோர் அளித்த அருஞ் செல்வம்

வ.அழகலிங்கம்


லகிலுள்ள ஒவ்வொரு தாயும் ஓர் அதி அழகான குழந்தையைப் பெறுகிறாள். தமிழ்த் தாயும் தமிழ் என்ற அழகான குழந்தையைப் பெற்றாள்.

வழமான சமூகவாழ்க்கை என்பது அரசியற் கோரிக்கைகள், சமூகநலக் கோரிக்கைகள், பொருளாதாரக் கோரிக்கைகள் என்ற மூன்று ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த கோரிக்கைகளால் ஆனது. பிரஜாவுரிமை, வாக்குரிமை, மொழியுரிமை, சுயநிர்ணயவுரிமை போன்றன அரசியற்கோரிக்கைகளாகும். இலவசவைத்தியவசதி, இலவசக்கல்வி, வதிவிடவசதி, வயதானகாலத்து ஓய்வூதியம், பிரசவகாலத்து ஓய்வு என்பன சமூகநலக் கோரிக்கைகளாகும். சம்பளஉயர்வு, வரிகுறைப்பு, பணவீக்கத் தடுப்பு, 8 மணி வேலை, அதிக பணப்புழக்கமும் சந்தையில் பற்றாக்குறை ஜீவனப் பொருட்களும், பற்றாத பணப்புழக்கமும் உபரி வினியோகப் பொருட்களும் ஏற்காமை போன்றன பொருளாதாரக் கோருக்கைகளாகும். இந்த மூன்று கோரிக்கைகளில் ஒன்றின் அழிவில் மற்றொன்றை வெல்வது அல்லது ஒரு கோரிக்கையை மாத்திரம் உயர்த்திப் பிடிப்பது அரசியற் பிழையாகும்.

'அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்ற' என்றது சிலப்பதிகாரம். இங்கு சொல்லப்படும் ''அறம்" என்பது என்ன.

ஏன் சிலகாலங்களில் அணைகடந்த காட்டாற்று வெள்ளம்போல ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கான பொறுமையிழந்த மக்கள் ஒன்று திரண்டு அரசுகளுக்கு எதிராகத் தன்னிச்சையாகக் கிளர்ந்தெழுந்து போராடுகிறார்கள் என்று சிந்திக்கக் கார்ல் மாக்ஸ் தலைப் பட்டார். ஈற்றில் மக்களின் வாழ்நிலமைகளே மக்களின் சிந்தனையைத் தீர்மானிக்கின்றனவே ஒழிய மனிதர்களின் சிந்தனைகள் மனிதர்களின் வாழ்நிலமைகளைத் தீர்மானிப்பவை அல்ல என்று முடிவுக்கு வந்தார். சிந்தனைகள், போதனைகள், சட்டங்கள் என்பன வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்று மனோமூலவாதிகளே எண்ணுவார்கள்.

பசி, பட்டினி, பஞ்சம், கடன்சுமை, கொடியவரிச்சுமை, வீடின்மை வேலையில்லாத் திண்டாட்டம், உற்பத்தியின்மை, நோய்கள், பயம், எதிர்காலத்திற்கான உத்தரவாதமின்மை, இயற்கை அனர்த்தங்களிலிருந்தும் மீள வழியின்மை, பகைவர்களின் பயம், யுத்தம் போன்றன நாட்டில் நிலவும் தருணங்களிலே மக்கள் சட்டத்திற்கோ, வாழையடி வாழையான வழக்கங்களுக்கோ கட்டுப்பட மாட்டார்கள். சட்டம,; நீதி, நானாவித மனிதஉரிமைகள் எல்லாமே மக்களை ஏதோ ஒரு விதத்தில் வாழ வழிவிட்டால் மாத்திரம்தான் செல்லுபடியாகும். எல்லா உரிமைகளுமே பொருளாதாரத்திற்குக்; கட்டுப்பட்டது. ஜனனாயகமோ சர்வாதிகாரமோ வாழ வழிவிட்டால் மாத்திரமதான்; செல்லுபடியாகும். இல்லையேல் மக்கள் கிளர்ந்து எழுவார்கள். இதுவே சிலப்பதிகாரம் சொன்ன அரசியல் பிழைத்தோர்க்கு ஷஅறம்| கூற்று என்பதுவாகும். அரசியல் என்பது பொருளாதாரத்தின் செறிவாகும். திரட்சியாகும். ஒட்டுமொத்தமாகும். சிலகாலகட்டங்களில் வெகுசனங்கள் ஓரிரு பிரச்சனைகளுக்கு எதிராக மட்டும் போராட மாட்டார்கள். ஒட்டுமொத்த எல்லாப் பிரச்சனைகளுக்கும் எதிராகவும் போராடுவார்கள். ஒடுக்குமுறைகள் எல்லாவற்றிற்றிற்குமெதிராக அவை எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும் அவைகளுக்கு எதிராகப் போராடுவார்கள். இதுவே வெகுசன எழுச்சி வடிவத்தை எடுக்கிறது. இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகத் திரண்ட சமூகமூரண்பாடுகளைத் தீர்க்க வேண்டிய காலங்கனிந்ததால் எழுவதாகும். இந்த எழுச்சிகளின் போது புதியதொரு சமுதாயம் ஏற்படாவிட்டால் நாட்டில் காட்டுமிரண்டித்தனம் முந்தயதிலும் பலமடங்கு கொடூரமாக நடந்தேறும். இதுவே வாழையடி வாழையான வரலாறுகளின் பொதுமைப் படுத்தலாகும்.

சிலப்பதிகாரம் என்னும் காவியம் ஏன் எழுந்தது? அதற்குக் காரணம், இளங்கோவடிகளே சொல்லுகிறார்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பதூஉம்


எனும் மூன்று உண்மைகளை நிலைநாட்டுவதற்காக 'நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்' என்று இளங்கோவடிகள் கூறியுள்ளார்.

'பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென
ஆதிரை யிட்டனள் ஆருயிர் மருந்தென்.'

என்று மணிமேகலை கூறிற்று.
ஆதிரை நல்லாள் ஆருயிர் மருந்தாகிய அன்னத்தை நிலவுலகம் முழுவதும் பசி நோய் அறுக என்று கூறி இட்டனள்.

ஆருயிர் மருந்து இட்டனள்.

உணவு என்பது உயிர்க்கு அமுது. பசி என்பதோர் பிணி. முதலிற்பசி என்ற பிணியை அகற்ற வேண்டும். வள்ளலாரோ, 'வீடு தோறும் இரந்து பசி அறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்' என்கிறார். ஒளவையோ, 'ஈயென பல்லைக் காட்டி இரந்து தின்பது இழிவானது, ஆனால் அவர்க்கு இல்லை என்று சொல்வது அதனைவிட இழிவானது' என்கிறார். உணவைப் பாழாக்குகிறவர் பெரும் பாவிகள். உணவை அனுபவிப்பதற்கு பசியே முக்கியமான தேவை. உலகம் பசியாமலே சாப்பிடும் நாடுகளாகவும் சாப்பிட்ட பின்பும் பசிக்கும் நாடுகளாகவும் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.

'வறியோர்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து'


என்கிறார் வள்ளுவர். இல்லாதவனுக்குக் கொடுப்பதே ஈகை. மற்றெல்லாக்; கொடுப்பனவும் பிரதிபலன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது. கைம்மாறு கருதாத உதவியே உதவி. மற்றெல்லாம் றால் போட்டுச் சுறா பிடிப்தாகும்.

'பசிப்பிணி, ஒருவரின் குடிப்பிறப்பினால் வந்த தகுதியை அழித்துவிடும். நற்குணங்களைச் சிதைத்து விடும். வாழ்வுக்குப் பற்றுக்கோடாகப் பற்றிக்கொண்ட கல்வியாகிய நல்லாண்மையைப் போக்கிவிடும். நாணமாகிய அணிகலனையும் நீக்கிவிடும். மேன்மைபொருந்திய அழகினை எல்லாம் சீர்குலைக்கும். மனைவியோடு சென்று பிறரிடம் பிச்சை எடுக்க வைக்கும். அத்தகைய பசி என்ற பாவியாகிய கொடுமையை முதலிற்போக்க வேண்டும். அங்ஙனம் போக்கியவர்களது புகழை அளவிட்டுக் கூற எந்த நாவாலும் முடியாது.,,

கடன்பட்டார் நெஞ்ஞம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்-என்றான் கம்பன்.

கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன்பட்டவர்கள் படும் கஷ்டத்தை இராவணனுக்கு உவமையாகச் சொல்கிறார் கம்பர். கடன் காலைச் சுற்றிய பாம்பு போல என்பார்கள். காலைச் சுற்றிய பாம்பிடம் இருந்து தப்புவது சிரமம்.

'விடம்கொண்ட மீனைப்போலும் வெந்தழல் மெழுகு போலும்
படம்கொண்ட பாந்தள்வாயிற் பற்றிய தேரை போலும்
திடம்கொண்ட இராமபாணம் செருக்களத் துற்ற போது
கடன்கொண்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்.'


கம்பன் உயர்வு நவிர்ச்சி அணியின் உச்சக் கட்டத்திற்குப் போபவன்.

பெற்றோரை இழந்த கலக்கம், பிள்ளைகளை இழந்த கலக்கம், தாரத்தை இழந்த கலக்கம,; காதலை இழந்த கலக்கம், தாய் நாட்டை இழந்த கலக்கம் என்பனவெல்லாம் சின்னக் கலக்கங்கள்;. இந்தியாவிலே வருடாவருடம் முப்பதுனாயிரத்திற்கு மேலான விவசாயிகள் வங்கிக் கடனைக் கட்ட வக்கில்லாததால் தற்கொலை செய்து கொண்டார்கள். இலங்கையிலே சில வருடங்களுக்கு முன்னர் கேகாலை என்ற ஒரேயொரு மாவட்டத்திலேயே 380 விவாசாயிகள் வங்கிக் கடன் கட்ட வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டார்கள். கம்பனுக்கு உலகிலேயே பெரிய கலக்கம் கடன் பட்டவர்க்கே உண்டு என்பதாகும்.

இன்றய யதார்த்தம் மக்கள் மட்டும் கடனால் நசிபடவில்லை. அரசாங்கங்கள், வங்கிகள் போன்றன எல்லாமே கடனில் அமிழ்ந்தியுள்ளன. உலகின் பெரிய கடனாளி ஐக்கிய அமெரிக்கா. இலங்கையின் மொத்தக் கடன் வருடாந்த உற்பத்தியிலும் மூன்று மடங்கு. பட்டகடனுக்கான வட்டியைக் கட்ட வரியாற் கிடைக்கும் அரச வருமானம் போதாது. கஜான எப்பொழுதுமே காலி. அதனோடு கூட அரசாங்கம் அச்சடித்து விற்ற 'பொண்ட்,, என்று சொல்லப்படும் உறுதிப் பத்திரங்கள் (தரலாம் கடன்)ஒரு கொள்ளை. சிறீலங்கா எப்போது பட்டகடனை இறுக்கமாட்டேன் என்று சொல்கிறதோ ஆரறிவார் பராபரமே. ஓர் அரசு கடனாளியாகி விட்டால் அந்த நாட்டை அழிக்க வெளியில் இருந்து ஒரு பகை வரவேண்டிய அவசியமில்லை. கறையான் பிடித்த வேலிபோலத் தானே அந்த அரசு அழிந்துவிடும்.

'...நீணிலம் ஆளும்
அரசர் தாமே அருளறம் பூண்டால்
பொருளும் உண்டோ, பிறபுரை தீர்த்தற்கு!
ஷஅறமெனப் படுவது யாது எனக் கேட்பின்
மறவாது இது கேள்ளூ மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும் அல்லது
கண்டதுஇல'
எனக்-,,(மணி 24-225-230).

பெரிய நாட்டை ஆளும் பொறுப்புடைய அரசர் தாமே அருளற வொழுக்கத்தினை மேற்கொண்டால், உலகின் பிற குறைபாடுகள் போவதற்கு ஏற்றன செய்யுமோர் வேறு வழியும் உளதாமோளூ அறம் என்று சொல்லப்படுவது என்னவென்று கேட்பாயாயின், மறந்துவிடாமல் யான் சொல்லும் இதனைக் கேட்பாயாக: மன் உயிர்களுக்கெல்லாம் உணவும், உடையும், தங்கும் இடங்களும் அளிப்பதன்றி, வேறு அறமென எதனையும் ஆன்றோர்கள் கண்டதில்லை.,,

'இதுவேதான் மேற்குலக நவீன பொருளியலின் அத்திவாரமாகும்.,,


நவீன அரசாட்சிகளின் முக்கியமான அரசியற்கோட்பாடுகள் என்று சொல்பவைகளைத் தமிழிலக்கியங்கள் 2000 வருடங்களுக்கு முன்னரே சொல்லி வைத்தன. தமிழர் ஆட்சிகள் கடைப் பிடித்தன.

சீரோடு வாழ்ந்தோம் வேரோடு சாய்ந்தோம் என்பதைக் கண்டறிய வேண்டுமானால் தமிழுக்குள்ளேயே தேடவேண்டும்.

'தன் நிலமை தாழாமை தாழ்ந்த பின் வாழாமை,, என்பதே தமிழர் மூலதர்மம்.

நடந்த இடத்தில் தவழக் கூடாது என்பது பழந்தமிழர் சம்பிரதாயம்.

தங்களது கடந்த கால வரலாறு, தோற்றம், கலாச்சாரம் ஆகியவற்றை அறியாத மக்கள் வேரற்ற மரம் போன்றவர்கள் என்று மூதறிஞர் மார்க்கஸ் கார்வே கூறியுள்ளார்.

நடந்துவந்த பாதை தெரியாதவர்களுக்கு நடக்கப் போகும் பாதை தெரிய வராது. நடந்துவந்த பாதையை மறந்த தமிழர்கள் ஐரோப்பாவிலே அர்த்தராத்தியிற் குடைபிடிக்கிறார்கள்.

'அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு,,
-என்கிறான் வள்ளுவன்.

ஒருவனுக்கு இல்லாமை எல்லாவற்றுள்ளும் மிகப்பெரிய இல்லாமை அறிவில்லாமையே ஆகும். மற்றப் பொருளில்லாமயை உலகத்தார் இல்லாமையாகக் கொள்ளமாட்டார்கள்.

பெரும்பாலான தமிழ் மக்களின் வாழ்வையும் வாழ்வியல் பண்புகளையும் நிகழ்வுகளையும் தன்னிடத்தே கொண்டதால்தான் சிலப்பதிகாரம், மகாகவி பாரதி சொன்னதுபோல இன்னும் நெஞ்சை அள்ளிக்கொண்டிருக்கிறது. அது உலகிற் தோன்றிய முதலாவது குடிமக்கள் காப்பியம்.

ஞானம்பெற மிக எளிதான வழி ஒன்று உண்டு. அது நம் தாய்மொழியை மனம் படிந்து பயில்வதுதான். தெளிந்த மெய்ப்பொருள்களைக் கொண்ட தமிழ் ஞானத்தமிழ் ஆகும். நல்ல ஞானம், நல்ல காட்சி, நல்ல ஒழுக்கம் என்ற மும்மணிகளை வாழ்க்கை முன்நோக்காகக் கொண்டது தமிழர் பண்பாடு.

தமது தாய்மொழியை ஐயம்திரிபறக் கல்லாதவரிடம் கலாச்சாரமோ நாகரீகமோ இருக்கும் என்று சொல்லுவது கடினம். எம்தாய்மொழியாம் தமிழ் ஒரு வாழ்க்கை வழிகாட்டி. அரசியல் வழிகாட்டி. அறவியல் வழிகாட்டி. அந்தக்கால அறிவியல் வழிகாட்டி.

'அரிய கற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.,,
(503) என்கிறது குறள்.

சிறந்த அருமையான நூல்களைக் கற்றறிந்த குற்றங்கள் எதுவும் இல்லாதவர்களிடத்திலும் நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் அறியாமையென்பது இல்லாதிருப்பது அருமையோயகும்.

கற்றிந்த பேரறிஞர்களிடத்தும் ஏதாவாதொரு பலவீனம் இருக்கும். அதிமுட்டாளிடமிருந்தும் கற்றுக் கொள்ள ஏதாவது ஒன்றிருக்கும். உலகில் எந்த மனிதனும் உதவாக்கரையாகவோ பெறுமதியற்றவனாகவோ இல்லை. இயற்கையின் அதியுயர் படைப்பு மனித மூளை என்று ஹேகல் சொல்லுவார். உலகில் அதிஉயர் அழகான படைப்பு மனிதப் படைப்பே என்று உலகம் மெச்சிய ஓவியக் கலைஞர் பிக்காசோவின் கருத்தென்று கூறுவார்கள்.

திட்டினாலும் தமிழிலே திட்டு. அது தேவகானமாக எனது காதில் ஒலிக்கும் என்று அருணகிரிநாதர் கூறுவார்.
'அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே'' என்று கொங்கணகிரி திருப்புகழ் கூறுகிறது.

மன வெம்மையை மாற்றித் தணிக்கும் மழைத்துளிகள்போல் குளிர்ந்த சொல் முத்துக்கள் தமிழில் நிரம்ப உள்ளன. ஷஷதண் தமிழின் மிகுநேய முருகேசா|| என்று சிறுவாபுரி திருப்புகழிலும் ஷஷதண்தமிழ் சேர் பழனிக்குள் தங்கிய பெருமாளே|| என்று பழனித் திருப்புகழிலும் வருகின்றன.

தமிழ்ச் சொற்கள் அமிழ்தினும் இனியன. பொருள் வளமும் அழகு நலமும் பொலிவன. அருணகிரிநாதர் நிம்பபுரம் திருப்புகழில் ஷஷவந்த சரணார விந்தமதுபாட வண்தமிழ் விநோதம் அருள்வாயே|| என்று முருகனிடம் வேண்டுகிறார். வண்தமிழில் அற்புதக் கவிபாட அருள்செய்.

தமிழ் மொழியை ஆய்ந்து மெய்மை காணும் வழியை, அதன் நுட்பத்தை த் தந்து அருளு என்று அருணகிரிநாதர் வேண்டுகின்றார்.

ஆதி சிவன் பெற்ற தமிழ் அகத்தியன் வளர்த்த தமிழ் மொழிகளில் முற்பட்டது முதன்மையானது ஷஷமுந்துதமிழ் மாலைக் கோடிக்கோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி|' என செந்தூர்த் திருப்புகழில் பாடியுள்ளார்.

தித்திக்கும் தமிழ் - இன்பத்தமிழ், இனிய தமிழ் எனப்படும். பொதியமலை முனிவனின் மனம் நனிமகிழ, அவர் புகழ், செவி குளிர இனிய தமிழை குமரன் பேசுகிறான்.

'சிவனை நிகர் பொதியவரை முனிவன் அகமகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே'


தமிழிலே பொதிந்துள்ள, அரசியற்கோட்பாடுகள், அரசியற்பொருளாதாரக் கோட்பாடுகளைக் காட்ட முனைவதுவே இந்தக் கட்டுரையின் நோக்குநிலையும் குறிக்கோளுமாகும். எப்படி உயிர்வாழ்வுக்குப் பிராணவாயு அவசியமோ அதேபோல உயிர்வாழ்வுக்கு அரசியலும் அத்தியாவசியமாகும். அசுத்தமான காற்றைச் சுவாசித்தால் எப்படி நோய்வாய்ப் படுகிறோமோ அப்படியே பிழையான அரசியலைக் கிரகிக்க நிர்பந்திக்கப்பட்டால் வாழ்வே நரகமாகி விடும். எப்படி நச்சு உணவை உட்கொண்டால் உடல் நலம் கெட்டுவிடுமோ அதே மாதிரியே நச்சு அரசியலை உட்கொண்டால் வாழ்வு கெட்டுவிடும். அரசியலை விட்டு மக்கள் ஓடலாம். ஆனால் அரசியல் மக்களை விட்டு ஓடாது. எப்படி ஊழ்வினையை விட்டு மக்கள் தப்ப முடியாதோ அதேபோல் அரசியலை விட்டும் மக்கள் தப்ப முடியாது.

'மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்
பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம்
குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்லெனத்
துன்னிய துன்பம் துணிந்துவந் துரைத்த
நன்னூற் புலவற்கு நன்கனம் உரைத்தாங்கு,,


மழைவளம் மாறுபடுமானால் மிகப் பெரிய அச்சம், யாதானும் ஒரு காரணத்தால் உயிர்கள் வருத்தமுறின் அதனினும் பெரிய அச்சமுண்டாகும், குடிகளை அறத்துடன் காத்து வரும் செயலை மேற்கொள்ளும்போது, தட்டித் தவறிக் கொடுங்கோன்மை ஆகிவிடுமோ என்று அஞ்சியும், மக்களைக் காத்துவரும் நல்ல மன்னர் குடியிலே பிறத்தல் என்பது என்றும் துன்பமேயல்லாது போற்றத்தக்கதன்று, என்று மனம் உளைந்து, பாண்டியனுக்கு உற்ற துன்பத்தினைத் தெளிவாக அறிந்துவந்து உரைத்த நன்நூற் புலவரான சாத்தனாருக்கு, மிக வருத்தத்தோடு கூறினான் சேரன் செங்குட்டுவன்.

இதைப்போலத் தன் பொறுப்பை உணர்ந்ததுபோல் எத்துணைப் பேர் உணரமுடியும்? மன்னர்கள் தம் கடமைகளை உணராமல் உரிமையை நிலைநட்ட முயன்ற பொழுதுதான் 'குடியாட்சி என்ற வித்து இந்த மானிலத்தில் ஊன்றப் பெற்றது. பண்டைய அரசர்கள் தம் பொறுப்புகளையும் கடமைகளையும் பெரிதும் உணர்ந்திருந்தமையால் புறநானூற்றுப் புலவர் மோசி கீரனார், நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்-186

என்று பாடினார். மன்னன்தான் நாட்டின் உயிர் என்று அக்காலக் கொள்கையை வெளியிட்டார். காலப் போக்கில் மக்கள் குரலுக்கு மதிப்பு ஏற்பட்டது.

பாடல் பின்னணி: இவ்வுலகிற்கு மன்னன் இன்றியமையாதவன் என்பதை அறிந்து நடப்பது மன்னனின் கடமை என்று இப்பாடலில் புலவர் மோசிகீரனார் வலியுறுத்துகின்றார்.

'நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே,
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்,
அதனால், யான் உயிர் என்பது அறிகை,
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே.'


பொருளுரை: நெல்லும் உயிர் இல்லை. நீரும் உயிர் இல்லை. இந்த உலகம் மன்னனையே உயிராகக் கொண்டது. அதனால், தானே உயிர் என்பதை அறிவது வேல்களுடன் கூடிய படைகளைக் கொண்ட வேந்தனின் கடமை.

புறநானூற்றுக் காலத்தில் மன்னனை உயிராகவும். மக்களை உடம்பாகவும் காட்டப் பெற்றது. காரணம், இக்கருத்து அக்காலத்தில் நிலவி வந்ததால், கம்பன் காலத்தில் இக்கருத்து மெல்ல மெல்ல மாறி வந்து மக்கள் உயிராகவும் மன்னன் உடம்பாகவும் மாற்றப்பெற்றிருப் பதால் மக்களாட்சிக்கு வித்திட்டது போன்ற ஒரு புதுக் கருத்தைக் காண முடிகின்றது. தசரதச் சக்கரவர்த்தி நாட்டைப் பாதுகாத்தல் சிறப்பைப்பற்றிக் கூற வந்த கம்ப நாடன்,

'வயிரவான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்
செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான்.,,


ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பன் மக்கள் குரலுக்கு மதிப்பு இருந்ததை, வையம் மன்னுயி ராக அம் மன்னுயிர் உய்யத் தாங்கும் உடல்அன்ன மன்னவன்:

வயிரம் பதித்த அணிகலன்களை அணிந்த, ஆண் சிங்கம் போன்ற வலிமையுடைய தசரதன் மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிராகக் கருதிக் காப்பான். எனவே குற்றம் அற்ற அவனது நாட்டிலே உள்ள நடமாடும் உயிர்கள், நடமாடாமல் நிலைத்து நிற்கும் மரம், செடி போன்ற உயிர்கள் ஆகிய அனைத்தும் ஒன்றாகத் தங்கியிருக்கும் ஓர் உடம்பு போல இருந்தான்.

வையம் மன் உயிர் ஆக அம் மண் உயிர்
உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு
ஐயம் இன்றி அறம் கடவாது அருள்
மெய்யில் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ?


தன் நாட்டு மக்களே தனக்கு நிலைபெற்ற உயிராக, அம் மக்களை நல்வாழ்வு பெறும்படி அவற்றைத் தாங்கும் உடம்பைப் போன்ற மன்னனுக்கு, அறநெறி தவறாமல், அருளிலும் சத்தியத்திலும் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் நின்ற பின்பு, வேள்வி செய்தலும் வேண்டுமோ? வேண்டாம். அப்படியான மன்னன் முத்தியடைவது திண்ணம். எவன் தன் தொழிலைச் சிரத்தையோடு செய்கிறானோ அவன் கட்டாயம் முத்தியடைவான். செய்யும் தொழிலே தெய்வம்.

இம்மாதிரியான மன்னர் குடிப்பிறப்பு மிகவும் துன்பமானது. அரச பதவி என்பது, முட்களால் சூட்டப்பட்ட முடி என்று சொல்லுகிறான்.

இதையெல்லாம் கேட்பது ஒரு கனவாக இருக்கிறதா? இப்படி ஒரு அரசா? இப்படி ஒரு காலம் இருந்ததா? மன்னர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்தார்களா? இன்று போல குடியாட்சியில் அல்ல, ஜனநாயகக் காலத்தில் அல்ல, மன்னர் ஆட்சியில். அப்படி அறம் சார்ந்த அரசோச்சியவர்கள் தமிழ் மன்னர்கள்.

அரசன் என்ற ஆணவம் இல்லாமல், அரசன் என்பது ஒரு தொழில் என்ற அடிப்படை உண்மையைப் பேசும் இந்த சேரனின் நேர்மையான இந்த சொல் தமிழனின் நாகரீகம் சொல்கிறது! பண்பாடு பகர்கிறது.

ஒரே காலகட்டத்தில் வேற்று நாடுகளை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனும், சேரன் செங்குட்டுவனும் நேர்மையின் திறன் சொல்வது தமிழர்களின் சங்ககால நற்பண்பாட்டிற்குச் சான்றுபகர்வதாகும்!

சந்திரபாபு நாயுடு ஒருதடவை சொன்னார் 'நான் இந்த மாநிலத்தின் தலைமை அலுவலன்' தலைமைக் கூலிக்காறன் என்று சொன்னால் புளகாங்கிதம் அடையும் நாம், நம்மைத் தேட மறுக்கிறோம்! அவர் ஆட்சியில் பெங்களுர் உலகின் கணணி நகரமாகியது.

பதினெட்டு நூறு ஆண்டுகட்கும் முன்னாலேயே 'நான் அரசன் என்ற தொழிலாளி' என்று சொன்ன சேரனை மறந்து விடல் ஆகாது!

சங்ககால அரசப் பண்பாட்டைக் கடமையுணர்வையும் அறிந்து கொள்ளல் அவசியம்! வரலாறற்ற தேசங்கள் என்ற அரசியற் கலைச் சொல்லை பிடெறிக் ஏங்கல்ஸ் கையாண்டுள்ளார். வரலாறு என்பது மாபெரும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறே என்று கார்லைல் என்ற ஆங்கில அறிஞர் சொன்னார்.

மாமனிதக் கோட்பாடு 19 ஆம் நூற்றாண்டின் கருத்தாகும், இவற்றின் அடிப்படையில், மாமனிதர்களின் அல்லது ஹீரோக்களின் தாக்கத்தால் வரலாற்றை பெரும்பாலும் விளக்க முடியும்;. அவர்களின் செல்வாக்கு, உளவுத்துறை, பரஞானம் அல்லது அரசியல் திறமை ஆகியவற்றின் காரணமாக, ஒரு சக்திவாய்ந்த வரலாற்றுத் தாக்கத்தை ஏற்படுத்தித் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி வரலாற்றைப் படைப்பார்கள். இந்த கோட்பாடு 1840 களில் ஸ்கொட்டிஷ் எழுத்தாளர் தாமஸ் கார்லைல் அவர்களால் பிரபலப்படுத்தப்பட்டது. ஆனால் 1860 ஆம் ஆண்டில் ஹெர்பெர்ட் ஸ்பென்சர் இந்த வாதத்தை எதிர்த்தார். ஸ்பென்சர் சொன்னார்: 'இத்தகைய பெரியவர்கள், அவர்கள் வாழ்ந்த சமுதாயங்களின் படைப்புக்களே. அவர்கள் வாழ்த காலத்திற்கு முன்பு இருந்த சமூக நிலைமைகள் இல்லாவிடில் அவர்களது நடவடிக்கைகள் இயலாது.,, ஒரு பெரிய மனிதனின் தோற்றத்தை அவரைத் தோற்றுவித்த இனம், மற்றும் அந்த இனம் மெதுவாக வளர்ந்து கொண்டிருந்த சமூக நிலைமைகள், அவரை உருவாக்கிய சமூகத்தின் நீண்ட சிக்கலான செல்வாக்கின் தாக்கத்தை சார்ந்துள்ளது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் .... அவர் சமுதாயத்தை உருவாக்க முன், அவரது சமுதாயம் அவரை உருவாக்கியது.,,- ஹெர்பர்ட் ஸ்பென்சர், சமூகவியல் பற்றிய ஆய்வு. பிடெறிக் ஏங்கல்ஸ் எழுதிய டூறிங்குக்கு மறுப்பு என்ற புகழ்பெற்ற புத்தகத்தில் 'அரசியல் என்பது ஒட்டுமொத்த மனிதர்களின் சிந்தனையின் கூட்டுத்தொகையின் சராசரிப்; பாதையிலேயே நடைபோடும். எந்த மாமனிதனின் தாக்கமும் பங்களிப்பும் வரலாற்றைப் பொறுத்த வரை மிக மிக அற்பமும் விலக்கற்பாலதுமாகும். வரலாற்றில் ஏற்பட்ட பெரிய பெரிய சம்பவங்களுக்கிடையே நிலவிய இடைத் தொடர்புகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கத் தெரிந்தவர்கள் இதை ஒப்புக் கொள்வார்கள், என்கிறார். எது எப்படி இருந்தாலென்ன, நாட்டின் தகுதிக்கேற்ற அரசே அமையும் என்பது வெளிப்படை.

பனையளவு பண்பாடு தினையளவாய் ஆகிப்போய், பயனற்ற சமுதாயமாய் ஆகிவிடுமோ என்ற ஐயத்தில் இன்றையத் தமிழ்ச் சமுதாயம்!

சிறப்புற்ற வாழ்வில் இருந்து சிதைவுற்றுப் போகுமோ இந்த தமிழ்க் குடி? சிரிப்பாகிப் போவரோ தமிழர்? என்ற ஐயம் தோன்றாமலில்லை!

சீரோடு வாழ்ந்தோம் வேரோடு சாய்ந்தோம்.
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்
புனிதமொடு அதை எங்கள் உயிர் என்று காப்போம்
இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்
-பாரதிதாசன்

புதுவினை செய்க அஃது
பொதுநலம் ஆதல் வேண்டும்
இதுசெய்க போர்கள் இல்லை
இன்ப நல்லுலகைக் காண்பாய்
– பாரதிதாசன்

புதிய புதிய பொருள்கள் பல படைக்க வேண்டும். அந்தப் பொருள்கள் அனைத்தும் பொதுநலத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சீரிய கருத்தைச் சொன்னார் பாரதிதாசன்.

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினையே அழித்திடுவோம் என்றான் பாரதி. என்ன மிடுக்கு. இந்தச் சரியைப் பற்றிப் பாராதிக்கு ஒரு சின்ன ஊசலாட்டமும் இருக்கவில்லை.

'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்.,,
-(1062)

மனிதர்கள் பிச்சை எடுத்துத்தான் வாழுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பாயானால் நீ கடவுள் அல்லவே அல்ல. எவ்வளவு கெதியாக நீ சாக முடியுமோ அவ்ளவு கெதியாகச் செத்துப் போ! இதுதான் தமிழர் காட்டிய நன்நெறி.

தசரதன் வேண்டுகோளை ஏற்று,

இராமனின் மனை புகுந்த வசிட்டன், முடி சூடுவதற்கு முன் இராமனுக்கு சில புத்தி மதிகளை கூறுகிறார்.
உயர் அறங்களை அவனுக்கு ஓதத் தலைப்படுகிறார்.

அங்ஙனம் அவன் ஓதும் உயர் அறங்களில்,
இன்றுவரை கற்றோர் உலகம்,
உச்சிமேல் வைத்து உவக்கும் செய்தியாய்க் கொள்வது,

'யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது,, எனும் கருத்தினையேயாம்.
நட்டார், பகைவர், நடுநிலையார் எனும் முத்திறத்தாரோடும்,
பகை கொள்தலை ஒருவன் தவிர்ப்பானானால்,
புகழ் ஒடுங்காது நிற்கப் போர் ஒடுங்கும் என,
கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்க்க,
வசிட்டன் வழியுரைக்கிறான் பாரதிதாசன்.
போர் ஒடுங்கிய புத்துலகைக் காணும் வழியினை,
வசிட்டன் வாயால் வழிமொழிகிறான் கம்பன்.
'யாரொடும் பகை கொள்ளலன் என்றபின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது தன்
தார் ஒடுங்கல் செல்லாது அது தந்தபின்
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ.


-அயோத்தய காண்டம், மந்தரை சூட்சிப் படலம் பாடல் 106.(குறிப்பு:- இந்தப் பாடலே தமிழ் இலக்கியத்தில் அதிக தடவை மேற்கோள் இடப்பட்ட பாடல்.)

ஓர் அரசன் எவரிடமும் பகை கொள்ளாதவன் என்னும் நிலை உண்டான பின்பு அவன் நாட்டில் போர் இல்லாமல் போகும். ஆனால் அவனுடைய புகழ் குறையாது. அவனது படையும் அழியாது. அழியாத பெரிய படையை கண்டு மற்றவர்கள் உன் மீது போர் செய்ய மாட்டார்கள். அப்படி அன்பால் பகைவர்களை வென்ற பின் அவர்களை அழிக்கும் எண்ணம் தோன்றாது ..'அத்தகைய நன்மை உண்டான பின்பு, அந்த அரசன் வேரோடு அழியும் நிலை உண்டாகுமோ ? உண்டாகாது.,,

எல்லாரிடமும் அன்பு செய்தல் ஆக்கம் தரும் என்ற கருத்தினை
'பலத்தால் வெல்லப் பட்டபகைவன் சமயம் வாய்த்தபோது
கேடு செய்வான்;. அன்பால் வெல்லப் பட்ட பகைவன் எப்போதும் கெடுதல்
செய்யான்' என்னும் புத்த பகவான் மொழியோடு இணைத்துப்

பார்க்கலாம். 'ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'
என்னும் (கொன்றை வேந்தன் கருத்தையும் இங்கு எண்ணிப்பார்க்கலாம். அரசியல் என்பது இரத்தம் சிந்தாப் போர். போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். உலகம் முழுவதும் முன்பு நடந்தேறிய பேர்கள்கள் பற்றியும் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிற போர்கள் பற்றியும் ஸ்தூலமான அறிவில்லாத அரசியல்வாதிகள் மக்களை வழிநாடத்துவார்களே ஆனால் அழிவொளிய ஆக்கம் வரப் போவதில்லை. அரசியல்வாதிகளை அளந்தறியும் உரைகல்தான் அவர்கள் ஒவ்வொரு போரின்போதும் எடுக்கும் நிலைப்பாடுகள். ஏனெனில் நவீன அரசியல் என்பது தொண்ணூறுவீதமும் சர்வதேச இரகசிய இராஜதந்திரமாகும். அரசியல்வாதிகள் மேடைகளிலே முணுமுணுப்பதும் புலம்புவதும் மக்களின் கண்களிலே மண்ணைத்தூவும் கைங்கரியங்களாகும். உப்புச் சப்பற்ற உலுத்தர்களின் உளறல்கள்.

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் போர் ஒடுங்கும் என,
வசிட்டர் உரைத்த அரசநீதியில், தன் அனுபவப் பதிவேற்று,
மாற்றம் செய்துரைக்கிறான் இராமன்.
முன் சொன்ன போர் பற்றிய தனது கருத்தினை,
சுக்கிரீவனுக்கான அறிவுரையில்,
அவன் தெளிவுறப் பதிவு செய்கிறான்.

'நாயகன் அல்லன்; நம்மை நனி பயந்து எடுத்து நல்கும்
தாய் என, இனிது பேணி, தாங்குதி தாங்குவாரை
ஆயது தன்மையேனும், அற வரம்பு இகவா வண்ணம்,
தீயன வந்தபோது, சுடுதியால் தீமையோரை.,,


குடிமக்களிடத்து அன்பு காட்டி ஒழுகுதலும், அவ்வாறு நடக்கையில்
எவரேனும் தவறு செய்தால் குற்றத்திற்கேற்ற படி தண்டித்தலும் அரசர்க்கு
ஏற்ற முறையாகும் என்பது கருத்தாம்.

'குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்,
வடுவன்று வேந்தன் தொழில்',

'கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட்ட தனொடு நேர்',

'தக்காங்கு நாடித் தலைச் செல்லா வண்ணத்தால்,
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து';

'கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்'
(குறள் 549, 550, 561, 567)

என்னும் கருத்துக்கள் இங்கு காணத்தக்கன.

மேற்பாடலில், வசிட்டனின் கருத்தினை உள்வாங்கி, அனுபவத்தால் இராமன் செய்த மாற்றங்கள், தெளிவுற வெளிப்படுகின்றன.

இப்பாடலின் முதல் இரண்டு அடிகளில்,

அன்பினால் உலகைக் காக்கும் அவசியத்தை உரைக்கும் இராமன்,

அதே நேரத்தில் அவ்வன்பினை உணர்வார்க்கே, சமூகம் பற்றிய உயர்ந்த உணர்மையடைந்தவர்க்கே, அந்நடைமுறை சரியாம் என்பதையும் தெளிவு பட உரைக்கின்றான்.

யாரொடும் என, வசிட்டன் வகுத்த வரம்பினைச் சற்று மாற்றி,
தாங்குதி தாங்குவாரை என, இராமன் புதிய வரைவு செய்கிறான்.

அது மட்டுமன்றி தீமை வலிந்து தாக்கவரின், அற வரம்பு சிதையாவண்ணம், அதனைத் தாக்குதலும் தர்மமே என அழுத்தி உரைக்கிறான். தீயன வந்தபோது, சுடுதியால் தீமையோரை.

அற வரம்பினைக் காக்கச் செய்யும் போரில், காட்ட வேண்டிய வலிமையையும், இராமன் குறிக்கத் தவறினானில்லை. சுடுதியால் எனும் இராமனின் உத்தரவில், அக்கருத்தை நாம் உணருகிறோம்.

அரசன் நாட்டின் காவலனே அன்றித் தலைவன் அல்லன் என்பதைக் கம்பன் வற்புறுத்துகிறான்.

தேவரும் வெஃகற்கு ஒத்த
செயிர்அறு செல்வம் அஃது உன்
காவலுக்கு உரியது என்றால்,
அன்னது கருதிக் காண்டி.
(4124)

நாட்டின் செல்வம் குடிமக்களுக்கே உரியது என்ற புரட்சிக் கருத்தையும் கம்பன் எடுத்துக் கூறுகின்றான். நாட்டின் செல்வத்தைக் ;காக்கும் காவலாளியே அரசன் ஒளிய அதன் உரிமைக்காரனல்ல.

'கலம் சுரக்கும் நிதியம், கணக்கிலா
நிலம் சுரக்கும் நிறைவளம், நல்மணி
பிலம் சுரக்கும், பெறுதற்கு அரிய நம்
குலம் சுரக்கும் ஒழுக்கும் குடிக்கு எலாம்.
(69)

கப்பல்களும், நிலமும், சுரங்கங்களும் தரும் செல்வம் எல்லாம் குடிமக்கள் அனைவருக்கும் உரியவை என்பதையே கம்பன் இப்பாடல் மூலம் கூறுகின்றான். எந்த மக்கள் விரோதக் கொள்கையையும் கம்பன் ஏற்றவன் அல்லன். அரசன் எவ்வகையிலும் பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்பக் கூடாது. மேவின வெஃகல் இன்மை(4125) என்று சொல்வதன் மூலம் அச்செல்வம் மக்கள் தங்கள் உரிமையால் பெற்றது என்பதையும் உணர்த்துகிறான்.

அரசன் என்று நிருவாக வசதிக்காக ஆட்சித்தலைவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று கம்பன் விரும்பினாலும் இறையாண்மை முழுவதையும் அவனிடம் ஒப்படைக்க வில்லை. அவனுடைய அதிகாரம் வரம்புக்கு உட்பட்டது.

நாட்டின் செல்வம் யாருக்கு உடைமை என்பதே அரசாங்கத்தின்; வடிவத்தைத் தீர்மானிக்கிறது என்று அரசியல் அறிக்கைகள் கூறுகின்றன. நாடு ஒரு தனிமனிதனின் உடமை என்றால் அது முடியாட்சி. நாடு பிரபுக்களுக்குச் சொந்தமானதென்றால் என்றால் அது பிரபுத்துவ ஆட்சி. ஆளும் சிறிய நிர்வாகக்குழு நாட்டின்பெரும்பான்மைச் செல்வங்களை அபகரித்து வைத்திருந்தால் அது ஒரு குறுங்குழு ஆட்சி(ஒலிகாய்ச்சி). மக்கள் அனைவருக்கும் உடமை என்றால் அது மக்கள் பொது உரிமை ஆட்சி. இந்த விளக்கத்தின் படி கம்பன் காட்டிய அரசை முடியாட்சி என்று கூறமுடியாது. பூவலயம் இன்று தனி அன்று, பொது என்று அவன் நாட்டையும், அதன்செல்வங்களையும் மக்களின் பொதுவுரிமையாக்குகிறான். இதனை மக்கள் பொதுவுரிமை அரசு என்று கூறுவதே பொருத்மானதாகும்.

இராமன் முடிசூடுவான் என்று கேட்ட மக்களின் மகிழ்ச்சி:

'பாவமும் அருந் துயரும் வேர் பறியும் என்பார்;
பூவலயம் இன்று தனி அன்று பொது என்பார்;
தேவர் பகை உள்ளன இவ் வள்ளல் தெறும் என்பார்;
ஏவல் செயும் மன்னர் தவம் யாவது கொல்?',,
என்பார்.

இராமன் ஆட்சி செய்தால் தீவினைகளும் பெரிய துன்பங்களும் வேரோடு அழியும் என்பார் சிலர். இனிமேல் இந்தப் பூமி சிலருக்கு மட்டுமே தனியுரிமை அல்ல, எல்லார்க்கும் பொதுவானதாகும் என்பார் சிலர் (இராமன் ஆளும்போது தாங்களே ஆளுவதாகக் கருதினர்). தேவர்களுக்குப் பகையான அரக்கர் கூட்டங்களை வள்ளல் இராமன் அழிப்பான் என்பார் சிலர். இவனுக்குப் பணிபுரியும் அரசர்கள் அந்த பாக்கியத்தைப் பெற எப்பேர்ப்பட்ட தவம் செய்தார்களோ என்பார் சிலர்.

பூவலயம் இன்று தனி அன்று பொது(1592) என்று கம்பன் கூறி மகிழ்ந்த இந்த வாக்கியம் 'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டியது போல அக்காலத் தமிழரின் அரசியற் கோட்பாடு அனைத்தையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இதுவே அவன் கோட்பாடு அனைத்துக்கும் அடிப்படை. இதுவே அவன் கோட்பாட்டின் மூல வாக்கியம். இந்த மூலத்திற்கே நாம் மீண்டும் போக வேண்டும். அப்பொழுதுதான் விமோசனமோ விடுதலையோ கிடைத்ததாகும். பொது உடைமை விரோதிகள் கடைகெட்ட மக்கள் விரோதிகள். ஊரைக் கொள்ளையடித்து உலைமூடியால் மூடுபவர்கள். அரசியல்வாதிகளின் கொள்ளையடித்த காசுகளைப் போடுவதற்கென்றே வங்கிளை உருவாக்கி வைத்திருப்பது ஷபனாமாப்| பத்திரம் ஷபரடைஸ்| பத்திரம் என்று நாளாந்தம் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன.

18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஜேர்மனியைப் பிஸ்மார்க் ஆட்சி செய்த காலத்தில் ஜேர்மனி ஒன்றிணைக்கப்டாமல் சிறு சிறு சிற்றரசுகளாக இருந்தது. சிற்றரசர்கள் இடையிடையே கூடி மனங்கலப்பார்கள். ஒருமுறை இந்த ஒன்றுகூடலின்போது ஓர் அரசன் சொன்னான் நான் 25 அறைகளையுடைய ஒரு மாளிகையை வைத்திருக்கிறேன். மற்றொருவன் சொன்னான் நான் எதிரகளால் உடைக்க முடியாத கோட்டையை வைத்துள்ளேன். மற்றொரு அரசன் சொன்னான் நான் எந்தக் கோட்டையையும் உடைக்கைக் கூடிய பீரங்கிகளை வைத்திருக்கிறேன். இப்படியே எல்லாரும் தாங்கள் வைத்திருப்பவைகளைப் கூறிமுடிந்தபின் தென்மாநிலத்தைச் சேர்ந்த 'சுவாபன'; என்ற வறிய நாட்டைச் சேர்ந்த சிற்றரசன் ஒன்றும் பேசாமல் திரு திரு என்று விழித்துக் கொண்டிருந்தான். நீயும் ஏதாவது சொல்லேன். நீயும் உன் நாட்டைப்போல் ஏழையாகி விட்டாயோ என்று நக்கலும் நையாண்டியும் செய்து கல கலவென்று சிரித்தார்கள். அந்தச் சிற்றரசன் எழுந்து நிதானமாக அடிக்குரலில் 'நான் எந்நாட்டிலுள்ள எந்த வீட்டிற்குப் போனாலும் என்னை அவர்கள் தங்கள் மடியிலே உறங்க வைப்பார்கள். அவர்களது உரிமையின் பாத்திரவாளி நான். நான் என்னை இழந்து அவர்களின் இதயத்தை வென்று வைத்திருக்கிறேன். அவர்களது கண்ணீரைப் பாராது நான் சாகவேண்டும். இதுதான் எனது இலட்சியம்'

இந்தக் கதை ஷசுவாபன்| நாட்டுப் பாடப் புத்தகங்களில் இப்பொழுதும் வந்து கொண்டிருக்கின்றது. இதன் பலாபலானால் இந்த மாநிலம் ஜேர்மனியின் முக்கிய தொழில் நகரமாக இன்று திகழ்கிறது. இங்கேதான் ஜன்ஸ்டையின் பிறந்தார்.

நாடு தனியொருவனுக்கு உடைமையான தல்ல. மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்ற கருத்து குடியாட்சிக் கொள்கை பரவிய இக்காலத்தில் சாதாரணமாகத் தெரியலாம். கம்பன் இதைக் கூறிய காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்பதை நினைவில் கொண்டால்தான் இதன் மகத்துவம் புரியும்.

ஆள்பவன் ஆண்டவனுடைய அம்சம். நாடும் மக்களும் அவனுடைய உடைமைகள் என்ற கோட்பாடு கோலோச்சிய நாட்டிலும் காலத்திலும் அவன் இதைக் கூறினான்.

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெகுடை நிழற்றிய ஒருமையோர
் (புறநாநூறு.189)

என்றும்

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொது சொல் பொறாஅது
கடந்தடு தானைச் சேரலாதன
்(புறநாநூறு.8)

என்றும்

தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்(புறநாநூறு.51)

என்றும் 'பொது' என்ற சொல்லைப் பொறுக்க முடியாத மாமன்னர்களின் ஏகாதிபத்தியத்தைப் புலவர்கள் புகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஷபூவலயம் இன்று தனி அன்று, பொது| என்ற கருத்து உதிப்பது வியப்பக்குரியது மட்டுமல்ல, புரட்சிகரமானது. காலவுணர்வுக்கு மாறாக இப்படிக் கூற வேண்டுமென்றால் ஒருவனுக்கு மனிதாபிமானமமும், உண்மை அறிவும், பரஞானமும,; தூரப்பார்வையும், தீர்க்கதரிசனமும், புரட்சி மனப்பான்மையும் வேண்டும். கம்பனுக்கு இவை எல்லாம் இருந்தன. கம்பனுக்குப் பின்னாலும் கூட இந்தக் கருத்தையாரும் எடுத்தாளாதது அவனது தனித்துவத்தையே காட்டுகிறது. இது கவிதை ஆவேசத்தில் தெறித்த தற்செயலான கருத்து எனக் கூற முடியாதவாறு கம்பன் மீண்டும் மீண்டும் பல இடங்களில் இந்தக் கருத்தை வலியுறுத்துகின்றான்.

'கம்பன் கோன் நிகர் குடிகள்,,(126) என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறான். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். இதன் மூலம் மக்கள் இறையாண்மையில் சமமான பங்குடையவர் என்பதைத் தெரிவிக்கிறான்.

'காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்,,

(அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:386)

காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின் அம்மன்னனை உலகத்தார் உயர்த்திக் கூறுவர்.

இது மன்னன் உலகத்தார்மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று.

முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய், யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆகிய அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்திக் கூறும். உலகில்;

முறை வேண்டியவர்களும் வலியவரால் நலிவு எய்தினவர்களும்; குறைகூற வேண்டியவர்களும், வறுமையுற்று இருந்தவர்களும் காண்டற்கு இலகுவாக ஆட்சியாளன் இருக்க வேண்டும்.

குடிமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் நாடாள்வோன் அக்கறை செலுத்தவேண்டும். நாட்டுத்தலைவன் என்ற எண்ணத்தால் செருக்குற்று குடிகளிடமிருந்து விலகி இருக்கும் தலைவனிடம் அவர்கள் குறைகளைக் கூறமுடியாத நிலை இருந்தால் அவனால் நாட்டின் உண்மையான நிலையை அறிய முடியாமல் போய்விடும். சிடுசிடுக்கும் குணம் கொண்டவர்களிடம் தன் மனதிலுள்ளதை வெளிப்படுத்துவதில் எவருக்கும் பயம் ஏற்படும். அந்த அச்சத்தால் சொல்ல வந்த கருத்தையும் சொல்லாமலே விரைந்து வெளியேறி விடுவார்கள். அதனால் தலைவனுக்கும் நாட்டுக்குமே கூட நெருக்கடி ஏற்படலாம்.

மக்களுக்குப் பயப்படுகிற அரசாட்சியே ஜனநாயகம். மக்கள் அரசுக்குப் பயந்து வாழ்வார்களேயானால் அது ஒரு சர்வாதிகார ஆட்சியாகும்.

இதுவே ஆதிகால றோமர்களின் அரசியற்கோட்பாடு.

'உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.,,


மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.
வாழ்வும் தாழ்வும் நிலத்தைப் பொறுத்ததன்று. அந்நிலத்தில் வாழும் மக்களைப் பொறுத்தது. நற்பண்பும், நற்செயலும் கொண்ட மக்கள்; நாட்டின் புகழுக்கும் வளத்துக்கும் காரணமாக அமைகின்றனர்.

நல்லோர் இருப்பின் அது நல்ல நிலம்.
தீயோர் இருப்பின் அது தீய நிலம்.


ஒளவை நிலத்தை நோக்கிக் கூறுகிறார்..

ஏ! நிலமே..!
நீ ஒன்றில் நாடாகவும்!
ஒன்றில் காடாகவும்!
ஒன்றில் பள்ளமாகவும்!
ஒன்றில் மேடாகவும்!
எப்படி இருந்தாலும்,

மக்கள் எவ்விடத்தில் நல்லவராக இருக்கிறார்களோ அவ்விடத்து நீயும் நன்மையுடையதாக இருக்கிறாய்.

பசியும்,பிணியும், பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி

என்கிறது சிலம்பு.

பசியால் வாடாமல் இருக்க அறம் தழைத்து, மழை பொய்க்காது, உழவு சிறந்து, விளைச்சல் பெருகியிருக்கவேண்டும். முடியாது வளர்ந்துகொண்டே இருக்கும் நோய்கள் மக்களின் தீய பழக்கவழக்கங்களால் ஏற்படுவது. அத்தகைய தீய வழக்கங்களைக் கொண்டோர் வாழாத நாடாக இருக்கவேண்டும். நல்ல அமைச்சர்களும், அரசனும், அரசனுக்குப் பின்னால் வரும் சிறந்த குடிமக்களும், உறுதியுடன் உடனிருப்பதால் கொல்லுகின்ற எத்தகைய பகையும் வெல்லமுடியாததாக இருக்கவேண்டும். இதையே சிலப்பதிகார வரிகளும் 'பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி' (சிலம்பு:5:72-3) என்கிறது. சீவக சிந்தாமணியும், 'பொன்றுக பசியும் நோயும் பொருந்தலில் பகையுமென்ன' (சீவக:2375) என்கிறது.

'ஒன்றுடன் பதினை யாண்டைக்கு உறுகடன் இசைவன் விட்டான்
இன்றுளீர் உலகத் தென்றும் உடனுளீ ராகி வாழ்மின்
பொன்றுக பசியும் நோயும் பொருந்தலில் பகையும் என்ன
மன்றல மறுகு தோறும் மணிமுரசு ஆர்த்த தன்றே,,.
-(2375)

மன்னன் சீவகன் இன்று முதல் பதினாறு ஆண்டுகளுக்கு உரிய வரிகளை நீக்கிவிட்டான். இன்றுபோல் நீங்கள் என்றும் உலகத்துடன் ஒட்டி வாழ்வீராக. மக்களைத் துன்புறுத்தும் பசியும், பிணியும், பொருந்தாத பகையும் நீங்குக என்று அப்பொழுது மணம் கமழும் இராசமாபுரத்தின் வீதிகள் தோறும் அழகிய முரசம் முழங்கியது.

'நோக்கொழிந்து ஒடுங்கின் ஈர்க்கும் நோய்கொளச் சாம்பின் ஈர்க்கும்
பூக்குழல் மகளிர் கொண்டான் புறக்கணித் தடப்பட் டீக்கம்
கோத்தரு நிதியம் வாழக் கொற்றவன் நகரோடு என்ன
வீக்குவார் முரசம் கொட்டி விழுநகர் அறைவித்தானே
.-(2376)

மேலும், 'கண்பார்வை இழந்து மெலிந்தவர்க்கும், நோயுற்று மனம் தளர்ந்வர்க்கும், மலர்க் கூந்தலுடைய பரத்தையிரிடம் கொண்ட வேட்கையாலே கணவனால் புறக்கணிக்கப்பட்ட மனைவியர்க்கும் வாழ்வுக்குரிய வீடும், இடையறாப் பெருஞ்செல்வமும் மன்னவன் நல்குவான்,,

என்று அந்தச் சிறந்த நகரிலே இழுத்துக் கட்டப்பட்ட வாரையுடைய முரசினை அறைந்து அறிவித்தான்.

மக்கள் இன்பத்தோடு வாழ்தல்

'திருமகன் அருளப் பெற்றுத் திருநிலத்து உறையும் மாந்தர்
ஒருவனுக்கு ஒருத்தி போல உளமகிழ்ந்து ஒளியின் வைகிப்
பருவரு பகையும் நோயும் பசியும்கெட்டு ஒழிய இப்பால்
பெருவிறல் வேந்தர் வேந்தற் குற்றது பேச லுற்றேன்.,
,-(2377)

இவ்வாறு மாமன்னன் அருள, அவன் நாட்டு மக்கள் துன்பத்தைத் தரும் பகை, நோய், பசி ஆகியன தொலைய, ஒருவனுக்கு ஒருத்தி என மனமகிழ்ந்து புகழுடன் வாழ்ந்து வந்தனர். இனி, பேராற்றல் மிக்க மன்னர் மன்னனான சீவனுக்கு நேர்ந்ததைக் கூறத் தொடங்கினான்.

சமூகநலம் பேணும் ஆட்சியின் இன்றியமையாத தன்மையைத் தமிழர் தொன்று தொட்டே உணர்ந்து இருந்தனர்.

'பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.,,
(குறள் 732: நாடு அதிகாரம்)

நல்ல நாடு என மதிக்கப்பெறும் நாடொன்று மிகுந்த செல்வ வளம் பெற்று, அதனால் பிறநாட்டு மக்களும் புலம் பெயர்ந்து குடியமர வருவதற்கு விழையும் நாடாகவும், கேடு என்பதே அரிதாகி இல்லாமல் ஒழிந்து, உற்பத்திப் பொருட்களால் நிரம்பி சிறந்ததாகவும் இருப்பதேயாம்.

'பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.,,
(குறள் 738: நாடு அதிகாரம்)

பிணியின்மை – நோயின்மை
செல்வம் – ஆக்கம், பொருளுடைமை
விளைவு – செழிப்பான விவசாயமும், விளைச்சலும்
இன்பம் – மகிழ்ச்சி
ஏமம் – பாதுகாப்பான காவல்
அணியென்ப – அணிகலம் போன்றன
நாட்டிவ் வைந்து – ஒரு நாட்டுக்கு இந்த ஐந்தும்

நோயற்ற மக்களும், ஆக்கமாகியச் செல்வச் செழிப்பும், மக்களின் உணவுத் தேவைகளை நிறைவுசெய்யும் மிகுந்த விளைச்சலும், மக்கள் பொதுவாக மகிழ்ச்சியுடன் இருப்பதும், பாதுகாப்பாக இருப்பதாக உணர்வதும் ஆகிய இவ்வைந்துமே ஒரு நாட்டுக்கு அணி அல்லது அழகு செய்வதாக நூல் வல்லோர்கள் கருதுவர் என்கிறது இவ்வெளிய குறள்.

'சர்வாதிகாரிகள் படைப்பாளிகள் அல்ல. அவர்களே படைக்கப் பட்டவர்கள். பற்றாக்குறைப் பொருளாதாரம்தான் சர்வாதிகாரிகளைப் படைக்கிறது என்று கார்ல் மாக்ஸ் 18 ஆம் புறுமேயர் என்ற புத்தக்த்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். பற்றாக்குறைப் பொருளாதாரம் நிலவினால் மக்களின் ஒரு பகுதியனருக்கு வஞ்சகம் செய்ய வேண்டிவரும். அவர்களைத் திருப்திப்படுத்தி ஆளமுடியாது. அவர்கள் தேவைப் பொருட்கள் போதும் போதுமென்ற அளவுக்கு உற்பத்தி செய்யும் மட்டத்திற்குத் தொழில் நுட்பமும் விஞ்ஞானமமும் வளாந்தால் மாத்திரம்தான் பொதுஉடைமைச் சமுதாயம் வரும் என்பதைத் திட்டவட்டமாகப் பிரகடனப் படுத்தியுள்ளார். அதுவும் உலகமேடையில் மாத்திரம்தான் சாத்தியமாகும் என்பதை அடித்துக் கூறியுள்ளார். குண்டான் சட்டிக்குள் குதிரைவிட்டுக்கொண்டு பொதுவுடமை பேச இயலாது.

பொருளியல் என்பது பற்றாமையை நிர்வகிப்பது, பற்றாப் பயன்பொருள்களைப் பகிர்வது, பரிவர்த்தனை செய்வது என்றே அர்த்தப் படுத்தும். மறக்குல மகளிர் மன்னனை வாழ்த்தும்போது பெருநில மன்னன் ஆளும் நாடு முழுவதும் பசியும் பிணியும் பகையும் நீங்கி மழையும் வளமும் சுரப்பதாக என்று சாமியாடிக்கொண்டு கூறுவதாக ' பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் பசியும் பிணிiயும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி' என்று நாட்டு வளத்தையும் மக்கள் நலனையும் இணைத்துக் குறிப்பிட்டுப் பாடுகிறார், இளங்கோவடிகள். இந்தப் பாடல் அடிகள், இளங்கோவடிகளின் மிக உயர்ந்த மனிதாபிமான தத்துவஞானக் கருத்தைக் குறிக்கிறது. உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பசி நீங்க வேண்டும். வயிறார அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும். பிணிகள் நீங்கி மனித சமுதாயம் நல்வாழ்வு பெறவேண்டும். போர்கள் ஒழிந்து, பகைகள் நீங்கி, நாடுகளும் மக்களும் அமைதியான சேதமில்லாத வாழ்க்கையைப் பெறவேண்டும். மழை பொழிந்து, நீர்வளம் பெருகி, நாடு அனைத்து வளங்களையும் பெறவேண்டும் என்பது இளங்கோவடிகளின் சீரிய சிந்தனைகளாகும்.

ஒரு நாட்டில் இருக்க வேண்டுவனவற்றுள் தலையாயது தள்ளா விளையுள் ஆகும் எனக் கூறியதற்கு ஏற்ப, ஒரு நாட்டில் இருக்கக் கூடாதன வற்றுள் தலையாயது பசித்துன்பம் என்று கூறியுள்ளார்;. பசி வந்திடின் பகை வந்திடும். பகைக்குக் காரணம் பசியே ஆதலின், நாடு பகைப்பயம் அற்று வாழ வேண்டுமாயின் பசிநோய் அற்று வாழ வேண்டும்;. ஆகவே, முதற்கண் அகற்றப்பட வேண்டுவது பசிப் பேயே. ஆகவேதான்,

'உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு'

என நாட்டிற்கு நலிவு தரும் நோய்களுள் பசி நோயை முதற்கண் கூறியுள்ளார் வள்ளுவர். 'பசியும், பிணியும், பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி' என வாழ்த்துக் கூறும் போதும், பசி நீங்கி வாழும் வாழ்வினையே முதற்கண் வைத்து வாழ்த்தியுள்ளார்கள் சிலம்பாசிரியர் அடிகளாரும், மேகலை ஆசிரியர் சாத்தனாரும். ஆகவே, பகை வளரக் காரணமாவது பசியே. பற்றாமையால் வந்துற்ற பசித் துன்பத்தைப் போக்கவே, பொருளென்னும் பிரிவில் அரசியலைத் திருவள்ளுவர் அமைத்திருக்கின்றார். அரசர்கள் தமக்குக் கிடைத்த அதிகாரம் பிறருக்கு நன்மைசெய்யும் பொருட்டே என்பதை அறிந்திருந்தார்கள். குடிகளுடைய நலத்தைத் தம் நலமாகக் கொண்டிருந்தார்கள். காவலன் கோல் கோடின் உலகு அழிந்துவிடும் என்பது அவர்கள் கொள்கை.

,,குடிபழி தூற்றுங் கோலோனாகுக.' என்கிறது புறநாநூறு.

'ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
கவலன் காவான் எனின்.,,
-(560)

காத்தற்குரிய காவலானான அரசன் தன் ஆட்சிக்குட்பட்ட உயிர்களைக் காப்பாற்றானாகில் அறம் இல்லாத அவன் நாட்டு உற்பத்தி சொய்யும் தொழிலைச் செய்பவர்கள் தங்களது தொழிற்கலையை மறந்து விடுவர்.

ஓர் அராஜக நாட்டில் பரம்பரம்பரையாக, வாழையடி வாழையாக வளர்ந்து வந்த உற்பத்தி நுட்பங்பளை மக்கள் மறந்துவிடுவர். நிர்வாகம் சீரற்ற நாட்டிலே முதலில் அழிவது தொழில்களாகும்.

அது என்ன 'அராஜகம்'?
அராஜகம் என்பது வடமொழிச் சொல். இந்தச் சம்ஸ்கிருதச் சொல்லின் பொருள் அ-ராஜகம:; அதாவது அரசன் அற்ற நாடு அல்லது ஆட்சி அற்ற நிலமை. பிற்காலத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெடும்போது ஏற்படும் குழப்ப நிலைக்கும் இதைப் பயன்படுத்தத் துவங்கினர்.

ஒரு நாட்டிற்கு அரசாட்சி; என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும், அரசன் இல்லாத நாடு எப்படிச் சீரழியும் என்றும் இந்தியர்கள் நன்கு கணக்குப் போட்டு வைத்தனர். வால்மீகி ராமயணத்தில் தசரதன் இறந்தவுடன் பரதனுக்கோ அல்லது இட்சவாகு வம்சத்தைச் சேர்ந்த யாராவது ஒருவருக்கோ உடனே முடிசூட்ட வேண்டும் என்று சொல்லும் இடத்து, அராஜகம் பற்றி நீண்ட சொற்பொழிவு வருகிறது..
இது மிகவும் படித்துச் சுவைக்க வேண்டிய பகுதி — .காரணம் என்னவென்னில் இதையே திருப்பிப் பார்த்தால், அரசன் நேர்மையாக ஆண்டால், என்ன என்ன கிடைக்கும் என்பதை ஊகித்து அறியலாம்.

ஒரு நாட்டில் அரசன் இல்லாவிட்டால் — அதாவது அராஜகம் — ஏற்பட்டால் என்ன நடக்கும்?

வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டத்தில் ஸர்கம் 67ல் இது பற்றிக் கூறப்படுவதாவது:

1.தேவையான அளவு மழை பெய்யாது

2.கைப்பிடி விதை கூட கிடைக்காது

3.தந்தை சொல்லை மகன் கேட்கமாட்டான்

4.கணவன் சொற்படி மனைவி நடக்கமாட்டாள்

5.நியாய சபைகள், பூந்தோட்டங்கள், சத்திரங்களை மக்கள் கட்டமாட்டார்கள்

6.பிராமணர்களுக்கு பெரிய வேள்விகளில் கிடைக்கும் தட்சிணைகள் கிடைக்காது.

7.விவசாயிகளும் கால் நடை வளர்ப்போரும் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்கமாட்டார்கள்.
8.யானைகள் மணிகளுடனும், தந்தங்களுடனும் சாலைகளில் போகாது.

9.அம்புப் பயிற்சியால் எழும் சப்தம் எங்கும் கேட்காது

10.மக்கள் விரதங்களைப் பின்பற்றார். கடவுளுக்குப் படைப்பதற்கு மோதகம், மாலைகள் செய்யப்பட மாட்டா.

11.அரச குமாரர்கள் சந்தனம், அகிலுடன் பூசித் திரியமாட்டார்கள்.

12.சாஸ்திரப் பயிற்சி உடையார் வனங்களிலும் உப வனங்களிலும் அமர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.

நீரில்லாத நதிகள் போல புல்லற்ற காடுபோல இடையரற்ற பசுக்கள் போல அரசனற்ற ராஜ்யம் இருக்கும்

தேர் இருப்பதைக் காட்டுவது அதன் கொடி.
தீ இருப்பதைக் காட்டுவது அதன் புகை.
தெய்வத் தன்மை இருப்பதைக் காட்டுவது அரசர்.

அப்பேற்பட்ட அரசர் (தசரதர்) தெய்வத் தன்மை அடைந்து விட்டார்.

அரசனற்ற ராஜ்யத்தில் யாருக்கும் எதுவும் சொந்தம் இல்லை. பெரிய மீன்கள் சின்ன மீன்களை விழுங்குவது போல ஒருவர் ஒருவரை அழிப்பார்கள்.

நாஸ்தீகர்கள், தர்ம விதிகளை மீறுவோர், தண்டனைக்குப் பயந்து சும்மா இருந்தவர்கள் எல்லோரும் துணிந்து நடப்பார்கள். நாஸ்தீகர் தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்தத் துணிவார்கள்.

அரசன்தான் தாயும் தந்தையும்.
அரசந்தான் தர்மமும் சத்தியமும்.
அவனே நற்குடிப் பிறந்தோருக்குத் தலைவன.;
அரசன் இல்லாத நாடு இருளில் மூழ்கும்.


எவ்வாறு கடல் அதன் எல்லையைத் தாண்டாதோ அவ்வாறே நாங்கள் உங்கள் உத்தரவை சிரமேற் கொண்டு நடந்தோம். பிராமண உத்தமரே ! உடனே இட்சுவாகு குலத்தவன் ஒருவனை அரசனாக நியமியுங்கள் என்கிறது வால்மீகி ராமாயணம்.

அரசனே தந்தை என்று புற நானூறும் கூறும். அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்றும் சங்க இலக்கியம் செப்பும்.

சின்ன மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்கும் உவமையை மஹாபாரதமும், கௌடில்யரின் — சாணக்கியரின் அர்த்த சாஸ்திரமும் கூறுகிறது.

வால்மீகி சொன்னதை அப்படியே திருவள்ளுவரும் சொல்வதைக் கேளுங்கள்:

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப் படும
்  — குறள் 388

பொருள்: –நல்ல ஆட்சி நடத்தும் மன்னன் கடவுள் போன்றவன்

அரசன் முறை செய்யாவிடில்

பசு பால் தராது. பிராமணர்கள் வேதங்களை மறந்து விடுவார்கள்:
உலகம் மழையை நம்பி இருப்பது போல மக்கள் மன்னன் பாதுகாப்பை நம்பி வாழ்வர்.
பிராமணர்கள் ஒழுங்காக வேதம் ஓதுவதற்கு மன்னன் ஆட்சியே காரணம்.
கொலைகாரர்களுக்கு மரண தண்டனை விதிக்க அரசன் வேண்டு

வள்ளுவர் தனது குறளில் அராஜகம் என்ற சொல்லைக் கூறாமல் அரசன் இருந்தால் என்ன என்ன கிடைக்கும் என்று சொல்கிறார்.

'மாண்ட அற நெறி முதற்றே அரசின் கொற்றம்'
– என்கிறது புற நானூறு 55- 9
'குடி புறம் காத்து ஓம்பும் செங்கோலான்' – என்கிறது கலித்தொகை 130-19

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.

மணிமேகலை.

'நீணிலம் ஆளும்
அரசர் தாமே அருளறம் பூண்டால்
பொருளும் உண்டோ, பிறபுரை தீர்த்தற்கு!
'அறம் எனப் படுவது யாது எனக் கேட்பின்
மறவாது இது கேள,; மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்'
எனக் (மணி 24-225-230)

நெடிதான நிலத்தினை ஆளும் பொறுப்புடைய அரசர் தாமே அருள் அற வொழுக்கத்தினை மேற்கொண்டால், உலகின் பிற குறைபாடுகள் போவதற்கு ஏற்றன செய்யுமோர் வேறு பொருளும் உளதாமோ. அறம் என்று சொல்லப்படுவது தான் யாதோவெனக் கேட்பாயாயின், மறந்துவிடாமல் யான் சொல்லும் இதனைக் கேட்பாயாக:

செறிந்துள்ள உயிரினங்கட்கு எல்லாம் உணவும் உடையும் தங்கும் இடங்களும் அளிப்பதன்றி, வேறு அறமென எதனையும் ஆன்றோர்கள் கண்டதில்லை!,, என்றனள்.

மணிமேகலைக் காப்பியம் படைத்த புலவர் வழியில், பசி வந்திட மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமுறுதல் ஆகிய பத்தும் பறந்துபோகும் என்று ஒளவையார் கூறுகிறாரே!

'மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை-தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப் பத்தும் பறந்து போம்.,,

குடிப் பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்;
பிடித்த கல்விப் பெரும்புணை விடூ உம்;
நாண் அணி களையும்; மாண் எழில் சிதைக்கும்;
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப் பிணி என்னும் பாவி
(மணி 11-76)

Food, Shelter and clothing are three essential things for Economy.

உணவு, உடை, உறைவிடம் என்று இன்று பொருளியல் அறிஞர்கள் சொல்லுவதை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னார் சாத்தனார்.

தேசங்களின் செல்வம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தில் ஆடம் ஸ்மித் 1776 இல் முதல் முதலில் எழுதினார். தேசங்களின் செல்வத்தின் இயற்கை மற்றும் செயற்கையான உற்பத்திக் காரணங்கள் பற்றிய ஒரு விசாரணை, பொதுவாக அதன் சுருக்கப்பட்ட தலைப்பு தேசங்களின் செல்வம் என்பதாகும். இந்தப் புத்தகம் உலகின் முதன்முதலாகச் சேகரிக்கப்பட்ட எது ஒரு தேசத்தின் செல்வத்தை வழங்குகிறது என்பதற்கான விளக்கங்களைக் கொடுத்துள்ளது. இன்று இது பாரம்பரிய பொருளாதாரத்தில் அடிப்படையை விளக்குகிறது. இதுவே இன்றய பொருளியலின் அத்திவாரமாக அமைந்துள்ளது. இதை றிக்காடோ மல்த்தூஸ் கார்ல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின் போன்றோர் பின்பற்றித் தங்களது அரசியல் வேலைத்திட்டத்தை வகுத்தார்கள். இது பொருளாதாரம் பற்றிய நவீன பட்டப் படிப்புக்கு முன்னோடியாக இருக்கிறது.

ஞானமும் கல்வியும் நாழி அரிசியின் பின். என்பது பழமொழி
ஞானத்துக்கும் கல்விக்கும் உணவு மிக முக்கியம்.

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர
ே (மணி.11-92)

கைம்மாறு செய்யும் சக்தி உடையவர்களுக்குப் பிரதிஉபகாரமாக ஒரு பொருளைக் கொடுப்பவர் அறத்தின விலைகூறி விற்பவராவார். கைம்மாறு செய்வதற்கும் வக்கில்லாத ஏழைகளின் பெரும் பசியினைப் போக்குபவரே உண்மையாக அறம் செய்பவர்கள். மெய்ந்நெறியோடு கூடிய வாழ்க்கை என்பதும் கொடுத்து மகிழும் அத்தகையோரின் வாழ்க்கையேயாகும். அணுசெறிந்த இந்த உலகத்திலே வாழ்பவர்களுக்கு எல்லாம் உணவு கொடுத்தவர் எவரோ, அவரே உயிர் கொடுத்தவரும் ஆவார்.

இவைகள்தான் தமிழின் ஜனநாயகக்; கருத்துக்கள்

2000 ஆண்டுகளுக்கு முன்பு நறுக்காக்காக்கப்பட்ட மனித சிந்தனையின் மாண்புகளைத் நம்முன்னோர்கள்; கூறியுள்ளார்கள். பல நவீன ஜனநாயகக் கொள்கைகளைப் போதித்தார்கள். இது நவீன காலத்திற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய அர்த்தமுள்ள பயன்பாட்டை வழங்குகிறது.

ஜனநாயகம் பற்றி நம் முன்னோர்கள்; ஒரு பாரபட்சமற்ற, தர்க்கரீதியான பகுப்பாய்வை வழங்குகினார்கள். அவர்கள் ஜனநாயகம் பற்றிய ஒரு மேம்பட்ட மற்றும் துல்லியமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அவர்களது காலத்தய முடியாட்சியில் பல்வேறு ஜனநாயகக் கோட்பாடுகள் நடைமுறையில் இருந்ததைக் காட்டியுள்ளார் திருவள்ளுவர.; இப்படியான கோட்பாடுகளைக் குறிப்பிட்டதோடு நில்லாமல் அந்த ஜனநாயகம் என்றால் என்ன என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், அரசின் உயர்ந்த, ஆளும் அதிகாரத்தின் முன்னிலையில் தமது சொந்தக் கருத்துக்களை வெளிப்படுத்த முழு சுதந்திரத்தையும் பெற்றிருந்தனர். பொறுப்பும் கடமையுணர்வும் உள்ள அரசன் அதைப் பெரிதாகப் பொருட்படுத்த வேண்டும். சகிப்புத் தன்மையும், திறந்த மனப்பான்மையும், அரசியலமைப்பின் பகுதியாக ஆரோக்கியமான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதும் ஜனநாயக அரசாங்கத்தின் அடிப்படையாகும்.

'செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
--(389)

தன்னோடு துணையாக இருப்போர் செவியாற் பொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைப் பேசினாலும் ஆட்சியின் நன்மையைக் கருத்தாகக் கொண்டு அதைப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும். அமைச்சர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களாக இருந்தபோதும் அவர்கள் மக்களைப் பிரநிதித்துவப் படுத்தும் உண்மையான அரசஅலுவலர் ஆதலால் யதார்த்த நடைமுறையில் செயல்படுவது அவர்களது கடமையாகும் என்பதால் அரசின் மிகுந்த துல்லியத்தில் அரசாங்கத்தின் குறுகிய செயற்பாட்டையும் கூடாத கூட்டினையும் பற்றாக்குறைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டும் அளவிற்கு செல்ல வேண்டும். கடுமையான, ஆக்கபூர்வமான விமர்சனத்தைச் சொல்வதற்கான முழு சுதந்திரமும் அவர்களுக்கு உண்டு. இப்படியான மந்திரிகளின் அமைச்சரவை அல்லது ஆலோசகர்களின் குழு இல்லாத ஒரு அரசர் காலப்போக்கில் தன்னைத்தானே அழிப்பார்.

'இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்.
-(447)

தீயன கண்டால் இடித்துச் சொல்லும் துணையுள்ளவர்களைக் கொண்டிருந்தால் அந்த அரசைக் கெடுக்கக் கூடிய பகைவர்கள் யார்?

'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
-(448)

தக்க நேரத்தில் இடித்துப் புத்தி சொல்லுபவர்களைத் துணையாகக் கொள்ளாத பாதுகாவலற்ற அரசு பகையாய்க் கெடுப்பவர் இல்லாவிட்டாலும் தானே கெட்டுவிடும்.

ஈழ வேந்தன் ஏன் அழிந்தான் என்று சொல்ல வந்த கம்பன்
வீடுகொளுத்திற இராசாவுக்கு நெருப்பெடுக்கிற மந்திரிகளால் அழிந்தான் என்கிறான்.
'கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம் கவிக்கின்றோயை
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி
இடிக்குநர் இல்லை உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை
முடிக்குநர் என்றபோது முடிவு அன்றி முடிவது உண்டோ?

'கண்டாரைக் கடித்துக் கொல்லும் பாம்பும் மந்திரம் கேட்டு அடங்கி நடக்கும். செருக்குற்று நிற்கின்ற உன்னை, ஷஇது தக்கது, இது தகாதது| என்று இடித்துச் சொல்லித் திருத்துபவர் உன் அமைச்சர் அவையில் ஒருவரும் இல்லை. உன்னைக் கெடுப்பவரே உன் அமைச்சர் அவையில் அரசியல் ஆலோசகர்களாக உள்ளனர். இவ்வாறு இருக்கும்போது, நீ அழிவதைத் தவிர வேறு வழி உனக்கு உண்டோ? இல்லை!
-சுந்தர காண்டம், நிந்தனைப் படலம்-(464)

கடிந்து பேசிய சீதை நயமொழிகளாலும் அறநெறி கூறல்.-

எனவே, எதிர்க்கட்சியின் அத்தியாவசியத்தின் கரு திருக்குறளிலிம் கம்பராமயணத்திலும்; காணப்படுகிறது என்பது தெளிவானது.

இன்றய தமிழர் உலகில் ஒரு தலைவனை உருவாகத் தமிழ்சமுதாயம் விடுவதில்லை. பந்தம் பிடிப்பதும் லஞ்சம் கொடுப்பதும் தலைவனைப் புழுகு புழுகொன்று புழுகிக் கெடுத்துவிடுவார்கள.; இது இன்றய தமிழ் உலகத்தின் கலாச்சாரமாகப் படிமமாகி விட்டது. ஒரு மனிதனின் இயற்கையான வளர்ச்சி புகழ்ச்சியாலும் தடைப் பட்டு விடும்.

இகழ்ச்சியாலும் தடைப்பட்டு விடும் என்பதை அறிய வேண்டும். ஆனால் அதீத புகழ்ச்சி அவனைக் கொல்வதாகிவிடும். ஸ்டாலினோடு இருப்பவர்கள் ஸ்டாலினக்கு ஆமாம்போட்டு ஸ்டாலினையே கெடுக்கிறார்கள் என்று லியொன் ரொக்ஸ்சி சோவியத் யூனியனின் மத்திய குழுவில் பேசியது பதிவாகி உள்ளது. தமிழ் மக்களுக்குள் ஒரு மூலதர்மமுள்ள தலைமை தோன்ற இந்த ஆமாம் சாமிக் கூட்டம் இன்றுவரை விடவில்லை என்பதுதான் நவீன தமிழர் வரலாறு.

'கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்
காடறியு மறவனை நாடாள்வாய் என்றேன்
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்.
போர் முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்
மல்லாரும் புயம் என்றேன்;, சூம்பல் தோளை
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றாய்
யானும் என்தன் குற்றத்தால் ஏகின்றேனே.


என்று ஒரு புலவர் தாம் செய்த பாபத்திற்காக இரங்குகிறார். தமிழ்ப் புலவர்களுள் இவர் ஒருவர்தான் தாம் செய்தது பாபம் என்று இரங்கிப் பாடியவர்.

வரலாறு இல்லாமற்போகும் சில தேசிய இனங்களைப் பிறடெறிக் ஏங்கல் வகைப் படுத்தியுள்ளார். அந்த இலட்சணங்களில் இன்றய தமிழ் சமூகமும் இருப்பதை எண்ணினால் வேதனையால் வெதும்ப வேண்டி வரும்.
அடுத்து வரும் முக்கிய ஜனநாயகக் கொள்கை குடிமக்கள் பயத்திலிருந்து விடுபடுவதாகும். பயத்தோடும் எதிர்காலத்தின் உத்தரவாதம் இல்லாமலும் இருக்கும் நாடு தாய் நாடாகாது. எந்த நாடு மனக்கிலேசமில்லாத உளச் சுகத்தைத் தருகிறதோ அதுதான் தாய் நாடு. அல்லது அது நரகம்.

'கொடுங் கோன் மன்னன் ஆழும் நாட்டிலும்
கடும்புலி வாழும் காடு நன்றே,,
என்கிறார் ஒளவையார்.

ஒவ்வொரு குடிமகனும் தான் போதுமான பாதுகாப்புக்கான உத்தரவாதத்தோடு இருப்பதாக உணர வேண்டும். பயத்தோடும் பீதியோடும் மக்கள் வாழும் வாழ்வு வாழ்வல்ல. அவர்கள் வாழும் அந்த நாடும் நாடல்ல. திருவள்ளுவர் இராணுவ பலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தத் தவறவில்லை. உண்மையில், வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டை பாதுகாப்பதில் இராணுவ சக்தியின் முக்கியத்துவத்தையும் அதன் முக்கிய பாத்திரத்தையும் புரிந்து கொள்வதன் மூலம், திருவள்ளுவர் அரசாங்கத்தின் ஆறு செயலாண்மைகளை விவரிக்கும் போது இராணுவப் படைக்கு முதல் இடத்தைக் கொடுத்துள்ளார்.

'படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறம்
உடையான் அரசருள் ஏற
ு.-(381)

படையும,; குடிமக்களும், பொருளும், அமைச்சும், நட்பும், அரணும் ஆகிய ஆறும் இருக்க வேண்டும் என்கிறார்.

'பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.
-(735)

பற்பல காரணங்காளால்(வர்க்க நலன்களினால்) மாறுபட்டுத் தோன்றிய அரசியற் கட்சிகளும், உடனிருந்தே பாழாக்கும் உட்பகையும், சமயம் வந்தால் அன்னியக் கெட்டவரோடும் அன்னிய ஏகாதிபத்தியங்களோடும் சேர்ந்து இராஜதந்திரக் கூலிகளாக அரசுக்குக் கேடுவிளைவிக்கின்ற கூலிக்குக் கொலைத்தொழில் செய்கின்ற குறும்பரும் இல்லாததே நாடாகும்.

இந்த விடயங்கள் உண்மையான ஜனநாயகத்தில் பயத்திலிருந்து விடுபடுவதற்கான முக்கியத்துவத்தை தெளிவாக வலியுறுத்துகின்றன.

நாட்டின் பொருளாதார உற்பத்தியும் பற்றாக் குறையற்ற அம்சமுமே சுதந்திரம் ஆகும். ஒவ்வொரு குடிமகனின் பொருளாதார நிலையையும் அத்தியாசிப் பொருட்களை விலைக்குவாங்கும் சக்தியும் மேம்பட்டு மதிக்கத்தக்கதாகவும் இருக்க வேண்டும். வறுமையும் தரித்திரமும் ஜனநாயகத்திற்கு ஏற்படும்; பெரும் அடியாகும்.

'உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சேரா தியல்பது நாடு,

மிக்க பசியும் நீங்காத நோயும், அழிவினைத்தரும் பகையும் இல்லாமல் இனிதாக நடப்பதுவே நாடாகும்.

பல்வேறு புதிய உற்பத்தி ஆதாரங்களை உருவாக்குதல், உற்பத்தியானவற்றைத் தொகுத்தல் அவர்களிடமிருந்து வருமானம் பெறுதல், தேசியசெல்வத்தை அழியவும் அபகரிக்கவும் விடாமல் காப்பாற்றுதல், குடிமக்களின் தேசிய நலனுக்காக மற்றும் நல்வாழ்வுக்கான சிறந்த சமநிலையான விநியோகம் ஆகியவை திருவள்ளுவரால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்ட தேசிய பொருளாதாரத்தின் நான்கு முக்கிய அம்சங்களாகும்.

'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு,,
-(385)

கார்ல் மார்க்ஸ் வினியோகமும் ஒரு பொருளாதார வகையினம் என்று கண்டு பிடித்தார். இதுவே கார்ல் மார்க்ஸ்சை மற்றய பொருளியல் வல்லுனர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

வள்ளுவன் 2000 வருடங்கள் முன்னதாக மார்க்ஸ்சுக்கும் பலபடிகள் மேலே போய் பின்வருமாறு கூறியுள்ளான்.

'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம்தலை,,
-(322)

பலருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணவேண்டும். உயிர்களையெல்லாம் காப்பாற்ற வேண்டும். அறநூல்களெல்லாம் தொகுத்துக் கூறியவற்றுள் இதுவே மேலானதாகும். தலைசிறந்ததாகும். இதனிலும் சிறந்த நன்னெறியோ அறிவோ கிடையாது. அப்பாலுக்கு அப்பால் வள்ளுவன் போயிருக்கிறான். பகிர்ந்து கொடுத்தல் வள்ளுவனது இரத்திலும் தசையிலும் ஓடிக்கொண்டே இருந்தது. தானும் தனது தேவைகளும் தவிர மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று எண்ணும் காட்டுமிராண்டிக் கலாச்சாரத்திலிருந்து தமிழர் கலாச்சாரத்தைக் காப்பாற்றப் பாடுபட்டான்.

இதை வேறோர் இடத்தில் வேறுவிதமாகச் சொல்கிறான்.

'காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
-(527)

உண்ணத் தகுந்த பொருள் கிடைத்தால் அதைத் தன்னந் தனியாகத் தின்னும் சிறுமையும் அற்ப குணமும் சுயநலமும் காக்கையிடம் இல்லை. உடனே ஷகா, கா| என்று குரல் கொடுத்து, தன் இனத்தை அவ்விடத்திற்கு அழைக்கும். வந்த காகங்களோடு கலந்து தானும் உண்ணும். இவ்வாறு காக்கையர் காட்டும் நல்ல வழியைக் கடைப்பிடித்து வாழும் மக்களுக்கே ஆக்கம் உண்டாகும் என்று கூறுகின்றார் திருவள்ளுவர்.

உண்;மையில் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் தேசிய வளத்தை அதிகரிப்பதையும் பண்டங்களையும் வளங்களையும் பகிர்வதன் மூலம் சமுதாயத்தை இசைந்து இயங்க வைப்பதையும் நோக்காகக் கொண்டிருந்தார் வள்ளுவர். வாழ்க்கையில் ஓரடி முன்நோக்கிப் போகவேண்டுமானாலும் ஒட்டுமொத்த சமுதாயத்தோடு ஒன்று சேர்ந்து பீடுநடை போட்டால் மாத்திரம்மதான் அது சாத்தியமாகும். ஒரு தனிமனிதன் தான் முன்னேற விரும்பினால் தனது குடம்பம் முழுமையோடு சேர்ந்தே முன்னேற முடியும். தனித்து அகலக் கால் வைத்தல் விரக்திக்கு இட்டுச் செல்லும்.

கல்வியறிவு இல்லாத மக்கள் அரசியலில் இருப்பதுவே ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும். கல்வியின் முக்கியத்துவமும,; மக்கள் பகுதியின் மீதான கற்றல் மற்றும் அறிவாற்றல் ஆகியவையே ஜனனாயகத்தைப் பாதுகாக்க வல்லனவென்பதே வள்ளுவனின் முடிவாகும்.

'கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலைக்குப் பொறை.
-(570)

கடுங்கோலனாகிய அரசன் நீதி நூல்களைக் கல்லாதாரைத் தனக்கு அங்கங்களாக வைத்துக் கொள்ளுவானே ஆகில் அக் கூட்டத்தினரையும் விடப் பூமிக்கு அதிகமான பாரம் வேறு எதுவும் இல்லை.

இனி, மக்களைக் குறித்து சிலர் எழுதியுள்ள பாடல்களைப் பார்க்கலாம். மக்களைப் பற்றிப் பாடுவதில் புராணங்களுக்கு இடமில்லை. ஆகவே, தோத்திரப் பாடல்களும், பிரபந்தங்களுமே மக்களைப் பற்றிக் கூறியுள்ளன. புராணங்களில் பொய்யின் பேரெல்லையை நாம் காணலாம். உண்மை என்பது மருந்துக்கும் இல்லாமல், உயர்வு நவிற்சியையே எப்போதும் பயன்படுத்தி உண்மையின் இயல்பை இப்புலவர்கள் மறந்துவிட்டார்கள். சொல்வதை ஆத்ம சுத்தியோடு சொல்ல வேண்டும் என்ற நினைப்பும் இவர்களுக்கு இல்லை. 'மனம் வேறு, சொல் வேறு, மன்னு தொழில் வேறு' என்ற நீதி வெண்பாக் கூற்றிற்கேற்ப, அதாவது மனமும் சொல்லும் செயலும் வேறு வேறுபட்டதாய் இருக்கும் இவர்களின் இயற்கை அமைந்துவிட்டது. 'கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப் பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசும்,, என்கிறார் பட்டினத்தார். 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்.' மனத்துக்கண் மாசில னாதலே அறமாம்' எனவும், 'நினைத்தலும் செய்த லோடு ஒக்கும்' எனவும் தமிழ் கூறும்.

குறள் 268:

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.


குறள் விளக்கம் : தனது உயிர் என்கிற பற்றும், தான் என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.

'எங்கோ னியல்குணன் ஏதமில் குணப்பொருள்
உலக நோன்பிற் பலகதி உணர்ந்து
தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்
இன்பச் செவ்வி மன்பதை யெய்த
அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின்
அறக்கதி ராழி திறப்பட உருட்டிக்
காமற் கடந்த வாமன் பாதம்
தகைபா ராட்டுத லல்லது யாவதும்
மிகைநா வில்லேன் வேந்தே வாழ்கென
உரை,,:


தான் எமக்கு அருளிய -அவன் எமக்கு அறிவுறுத்த, எங்கோன் இயல்குணன் ஏதமில் குணப்பொருள் - எம்முடைய இறைவன் இயல்பாகவே தோன்றிய குற்றமில்லாத குணங்களை யுடையவன,; குற்றமற்ற குணங்களின் பொருளாயுள்ளோன், உலக நோன்பின் பலகதி உணர்ந்து தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் -உலகசீலத்துடன் பல பிறப்புக்களிலும் பிறந்து பிறந்து உணர்ந்து உயிர்கட்கு நல்லறிவு புகட்டிய தனக்கென்று உயிர் வாழாத பிறர்க்கே உரிமைபூண்டொழுகுபவன், இன்பச்செவ்வி மன்பதை எய்த-நிர்வாணமடைதற்குரிய பருவத்தை உயிர்ப்பன்மைகள் அடைய, அருள் அறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின் - அருளாகிய அறத்தினைப் பூண்ட ஒப்பற்ற பெரிய மேற்கோளினாலே, அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டி-அறமாகிய கதிர்களையுடைய ஆழியை உலகத்திற் பலவகையாக உருட்டி, காமற் கடந்த வாமன் பாதம் - மாரனை வென்ற புத்தனது திருவடிகளை, தகை பாராட்டுதல் அல்லது யாவதும் மிகைநா இல்லேன் - பாராட்டித் துதித்தலையன்றி வேறுபொருள் களைப்பற்றிச் சிறிதும் பேசாத நாவினையுடையேன், வேந்தே வாழ்க என-மன்னவ வாழ்வாயாக என்று சுதமதி கூற

அவன் யார்? அவன்தான் புத்த பகவான்! இருள் அடர்ந்த மனமாசு தீரத் தோன்றிய புத்த ஞாயிறு.

தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் என்றும், தன் உயிர்க்கு இரங்கான் பிறஉயிர் ஒம்பும் மன்உயிர் முதல்வன் என்றும் போற்றப்படுபவன். ஒவ்வொரு கணமும், உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் பிற உயிருக்கு பாதகம் விளைவிக்காமல் இன்புற்று வாழ வேண்டுமென்ற தயா மூலதர்மத்தை உப தேசம் செய்தவன்.

மனிதன் மாத்திரம் அன்று, விலங்கினங்களும் பகைத்திறங் கடிந்து வாழவேண்டுமென்று அறம் உரைத்த அருளாளன்.
ஆதிமுதல்வன் என்று தமிழ் நூல்கள் தப்பாமல் புத்த பகவானைப் போற்றுகிறன.

புத்தன் தனக் கென வாழாப் பிறர்க்குரியாளன் என்ற கருத்து 'பிறர்க்கற முயலும் பெரியோய்,' 'தன்னுயிர்க் கிரங்கான் பிறவுயி ரோம்பும் மன்னுயிர் முதல்வன்' பசிப்பிணி மருத்துவன் (புறம்-173). என்று தமிழில் அடுக்கிக்கொண்டே போகலாம்.

28. உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையுஞ் சஞ்சலமே தான்.

-ஒளவை-

ஒவ்வொருவருக்கும் உணவிற்கு ஒரு படி அரிசியும், உடுப்பதற்கு நான்குமுழத்துணியும் தேவை. இப்படியிருக்க, மனதால் எண்ணக்கூடிய காரியங்களோ எண்பது கோடியாகும். எனவே, அகக்கண்ணாகிய அறிவிழந்த மாந்தரின் குடும்பவாழ்க்கையானது, மண்ணால் செய்யப்பட்ட பாண்டம் போல இறக்கும்வரையிலும் துன்பமே ஆகும் (மேலும் மேலும் ஆசைப்படுபவர் துன்பமே அடைவர் என்பது கருத்து. ஷமனோநாசம்| என்று வசிட்டன் வஷிட்டாவத்தில் இராமனுக்கு உபதேசித்தான், மோகத்தை வென்றுவிடு என்றான் பாராதி). உள்ளதே போதும் என மனம் அமைந்திராதவர்கள் இறக்கும் வரையில் சஞ்சலமே அடைவார்கள். சமூகவாழ்க்கை என்பது எண்பது கோடி விதம் விதமாக எண்ண வல்ல சக மனிதர்களோடு சஞ்சரிக்க வேண்டும். மனங்கள் கலப்பதே மானிட வாழ்க்கை. உடலங்கள் ஒன்றுபடுவதல்ல உள்ளங்கள் ஒன்றுபட வேண்டும். கோயிலிலே மற்றவனை நேசிக்கும் அருளைத் தா என்று ஆண்டவனைத் தாயுமானவர் வேண்டுகின்றார். வாடின பயிரைக் கண்டால் வாடினேன் என்கிறார் வள்ளலார்.

'ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்

மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்.,, என்கிறன் வள்ளுவன். எம்மோடு கூடிவாழ நிர்ப்பந்திக்கப்பட்ட சகமனிதனோடு, அயற் தேசத்தோடு, உலகமக்களோடு ஒத்துப்போகத் தெரியாதவன் செத்தவன் என்கிறான் வள்ளுவன். நடமாடும் பிணங்கள். 'செத்த பிணத்தருகே இனிச் சாம் பிணங்கள் மொய்துக் கிப்பதைப் பார்,, என்கிறார் பட்டினத்தார். ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் என்ற அளவு கோலால் தமிழனை அளக்க வேண்டும். தமிழ், தமிழ் என்று கத்துகின்ற கற்றுக் குட்டிகளெல்லாம் தமிழராக மாட்டார்.

முக்காலுங் காக்கை முழுகிக் குழித்தாலும் வெள்ளைக் கொக்காகுமா?

அரசியலிலே அரிசி பொல்லாதது. 1953 ஆம் ஆண்டு இலங்கையில் டட்லி சேனனாயக்கா அரிசிவிலையை 25 சதத்திலிருந்து 75 சதமாக உயர்த்தினார். அதற்கெதிராக இலங்கையின் ஒட்டு மொத்த மக்களும் கிளர்ந்தெழுந்து ஹர்த்தால் என்று சொல்லப்படும் வெகு ஜன எழுச்சியாக வெடித்தது. டட்லி சேனனாயக்கா கொழும்புத் துறைமுகத்திலிருந்த பிரித்தானியப் போர்க்கப்பலில் ஓடி ஒழித்துக் கொண்டார். அந்தப் போராட்டம் பிரித்தானியரின் இலங்கைக் கடற்படைத் தளத்தை அகற்றுவதற்கு மாத்திரமல்ல இலவச அரிசி, இலவசக் கல்வி, இலவச மருத்தவ வசதி, இலவச நீர்ப்பாசனம் என்று ஒரு தொகை ஜனனாயக உரிமைகளை வெல்ல வழிவகுத்தது. இவைகள் தான் ஜனனாயகம். இலங்கை பிரித்தானிய முடியாட்சியின் முதலாவது முடிக்குரிய காலனி. இந்தியா பர்மா இந்தோனேசியா போன்றவை கிழக்கிந்தியக் கொம்பனி என்ற ஒரு கொம்பனியின் காலனி. மேற்கண்ட சமூக நலன்கள் கிடைத்தவற்றின் மர்மத்தில் அதுவுமொன்று. ஜனநாயகம் என்றால் தேர்தலிலே வாக்குப்போடுவது மட்டுமே என்று குறுமனத்தேர்டு எம்மவர் சிந்திக்கின்றனர். அமெரிக்கப் புரட்சியோடு, பிரெஞ்சுப் புரட்சியோடு தொடங்கிய ஜனனாயகப் போராட்டம் 1924 இல் தான் இங்கிலாந்தில் வெகுஜன வாக்குரிமை வெல்லப் பட்டது. இலங்கையை விட 7 வருடங்களே முந்தியது. 1931 லேயே இலங்கைக்கு வெகுஜன வாக்குரிமை வந்துவிட்டது. ஜனனாயகத்தை வென்ற மூத்த நாடு இலங்கை. இன்றுகூட அமெரிக்காவிலே வெகுஜன சர்வவியாபக மருத்துவ வசதி என்ற மிகமுக்கியமான ஜனனாய உரிமை வெல்லப்படவில்லை. விவாசாயிகளுக்கான இலவச நீர்ப்பாசன உரிமை இலங்கையைப் போல் உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லை.

அன்றிலிருந்து இலங்கையின் அரசியல் 'அரிசி இயல்' ஆகியது.

1970 தேர்தலின் போது சிறீமாவோ பண்டாரநாயக்கா தான் சந்திரனிலிருந்து அரிசி கொண்டுவருவதாகக் கூறியே ஆட்சியைக் கைப்பற்றினார். இலவச மற்றும் சமூக நல ஆட்சி முறையிலிருந்து மீள்வதற்கு ஒரோயோரு சர்வரோக நிவாரணி தான் இருந்தது. பிரித்தாள்வது. தமிழ் விரோத அரசியலைச் சத்தியெடுப்பது. அவர்கள் 1983 வரை பகீரதப் பிரயத்தனப்பட்டே இனஅழிப்பை கொண்டு வந்தன் மூலம் இந்தச் சமூக நல நிர்மாணங்களை நசுக்கினார்கள். இருந்தும் அவர்கள் அதிலே முற்றாக வெற்றிபெறவில்லை.

'தாங்கொணா வறுமைவந்தால் சபைதனிலே செல்ல நாணும்
வேங்கைபோல் வீரங்குன்றும் விருந்தினர் காண நாணும்
பூங்கொடி மனையாட்கஞ்சும் புல்லருக் கிணங்கச் செய்யும்
ஓங்கிய வறிவுகுன்றி வுலகெலாம் பழிக்குந் தானே.,,
-விவேகசிந்தாமணி.

சகிக்கவே முடியாத வறுமை ஒருவனுக்கு வந்தால் சபையிற் செல்ல வெட்கப்படுவான். புலிபோன்ற வீரமமுங் குறையும். விருந்தினரைப் பார்க்கவே வெட்கப் படுவான். பூங்கொடிபோன்ற இடையை உடைய மனைவிக்குப் பயப்பட வேண்டிவரும். அற்பர்களையும் நண்பர்களாக்க வேண்டிவரும். மேன்மேலும் வளரத்தக்க அறிவு வளராமல் குன்றிவிடும். உலகமெல்லாம் பழித்தற்கிடமுண்டாகி விடும். பசியின்கொடுமையும் வறுமையின் கொடுமையும் சொல்லற்பாலதோ!

பிரிக்க வேண்டியவர்களைப் பிரி. ஒட்ட வேண்டியவர்களை ஒட்டு, என்கிறன் வள்ளுவன்.

'பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்ச
ு.-(633)

தக்க காலத்தில் பிரிக்க வேண்டியவர்களைப் பிரித்தலும், வேண்டிவர்களை நன்கு ஆதரித்துப் பிரியவிடாமல் வைத்துக் கொள்ளுதலும், பிரிந்தவர்களைப் பொருத்த வேண்டின் பொருத்துதலும் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சனாவான்.

சாணக்கியனுக்கு முன்னுக்கு மாக்கியவல்லிக்கு எவ்வளவோ காலத்திற்கு முன்னுக்கு வள்ளுவன் இதைச் சொல்லியுள்ளான்.

பிரித்தாளும் கலையும் பினாமியுத்த சகாப்தமும்

'பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குக் குர்ரானைப் போன்ற ஒரு வகையான புத்தகம் உள்ளது. இந்தப் புத்தகம் பல ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் சீலெயால் வெளியிடப்பட்டது. மேலும் இந்தப் புத்தகம் பிரிட்டிஷ் காலனிகளுக்கு அனுப்பப்படும் அரசஆளுநர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த புத்தகத்தில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒரு கற்ற வழக்கறிஞரான சீலெ, ஒரு பிரச்சனையைத் தனது விவாதத்திற்கு எடுத்துள்ளார். எப்படி ஆங்கிலேயரின் சொற்ப எண்ணிக்கையுள்ளவர்கள் மில்லியன்;கணக்கான இந்தியர்களைத் தங்கள் காலடிக்குக் கீழ் வைத்து நசுக்கி ஆளமுடிந்தது? அவர் இதிலே மாயவித்தையோ சூனியமோ எதுவும் இல்லை என்று பதிலளிக்கிறார். இந்தியாவில் மக்கள் தொகையில் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு எதிராக பிரித்தானியாவின் மூலதனத்தின் ஆட்சிக்குச்; சார்பாகப் போராடுகிறார்கள். ஒரு விடுதலைக் கிளர்ச்சி எழுச்சி வடக்கில் வெடிக்கும் என்றால், தென் இந்திய விவசாயிகளைத் திரட்டி, அவர்களைப் போர்வீரர்களாக்கி, அவர்களின் உதவியுடன் வடக்கில் எழும் எழுச்சியை அடக்குவோம். இந்தியாவின் மேற்கிலே ஒரு விடுதலைக் கிளர்ச்சி எழுச்சி ஏற்பட்டால், நாம் கிழக்கில் வாழும் இந்தியார்களைக் கிளர்ச்சிக் காரர் மேல் தூக்கி எறிவதன் மூலம் அதாவது ஓர் இந்தியர்களுக்கு எதிராக மற்ற இந்தியர்களைப் பயன் படுத்தி நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் அவர்கள் அனைவரையும் வைத்திருப்போம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முண்டான இந்த அறிஞர் மேலும் சொல்கிறார், அங்கே பட்டினியாற் சாகும் இந்தியர்கள் ஒரு வெகுஜனப் புரட்சியைச் செய்யப் போகிறார்கள் என்று எமக்குச் சிலர் சொல்லுவார்கள். அது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று நான் பதிலிறுப்பேன். 'அவர்கள் அங்கே வாழ முடியாது என்றால், சாவார்கள்.,, வாழ முடியாது என்றால் புரட்சி வரும் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. பிரிட்டனில் ஒவ்வொரு பிரித்தானியப் பிரஜைக்கும் பசியால் வாட நேர்ந்தால் சாவதற்குச் சுதந்திரம் இருக்கிறது. பசியால் வாடிய மக்கள் சாகாது விட்டால் ஒரு புரட்சி வரும் என்று அர்த்தம் இல்லை.

ஒரு புரட்சி ஏற்பட வேண்டுமானால் என்ன அவசியம் என்று அவர் கூறுகின்றார். முதலில் வெகுசனங்களுக்கு விடுதலைக்கான நம்பிக்கையின் ஒளிக் கீறுகள் தெரியவேண்டும். அவர்கள் தங்களின்; பலத்தை உணரவேண்டும்.

'பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒரு வகையான குhரான்' என்ற புத்தகம் ஜே.ஆர்.சீலெ எழுதிய 'இங்கிலாந்தின் விரிவாக்கம்,, என்பது. இது 1883 இல் வெளியிடப் பட்டது. இதன் ஆசிரியர், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் நவீன வரலாற்றுப் பேராசிரியர். இந்தப் புத்தகம் எழுதியதற்காக 'செயின்ட் மைக்கேல்|| மற்றும் 'புனித ஜார்ஜ் மறத்தளபதி|| பட்டம் அவருக்கு வழங்கப் பெற்றவர். மேலே குறிப்பிட்ட இந்தப் பந்தி பக்கம் 233-234 இல் உள்ளது. (சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்புகளும் அந்தகர்க்கு உண்டாகுமோ கிளியே அலிகளுக்கு இன்பமுண்டோ-பாரதி).

1789 இல் பிரெஞ்சு மன்னனான 14 ம் லூயியின் மனைவி, மக்கள் பாண் இல்லை என்று கோரிய பொழுது, பாண் இல்லாவிட்டால் கேக்கைச் சாப்பிடுவது தானே என்று விடையிறுத்தாளாம். அதைக் கேட்டு வெகுண்டெழுந்த மக்கள் பாஸ்டில் சிறையை உடைத்து பிரெஞ்சுப் புரட்சியைச் செய்து மன்னராட்சியை ஒழித்துக் குடியரசை ஏற்படுத்தினார்கள்.

1917இல் முதலாம் உலக யுத்ததின் மத்தியில் ரஸ்சியாவில் பாண் விலையேறியதோடு பாண் பற்றாக்குறையாகிய போது தாய்மார்கள் பேக்கரிகளை உடைத்து பாண்களை எடுத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க முற்பட்டது மன்னர் சார் இரண்டாம் நிக்கொலஸ்சை அகற்றியாதோடு மாபேரும் சோவியற் புரட்சிக்கும் வழிவகுத்தது.
பசி பொல்லாத சமூகவியற் காரணி. ஆட்சியாளர் அதனோடு விளையாடினால் அழிவது திண்ணம்.

'அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.,,
குறள்

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லாததைப் போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு மேலுலகத்துப்பேரின்ப வாழ்க்கை
இல்லையாம்.

பொருளியல் (
economics) என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய உற்பத்தி, பகிர்வு, நுகர்வு, என்பன பற்றி ஆராயும் சமூக அறிவியல் ஆகும். உற்பத்தி, பகிர்வு என்பன பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதினும் 1776 ல் வெளிவந்த ஆடம் சிமித் என்பாரின் வெல்த் ஆஃப் நேஷன்ஸ் (வுhந றுநயடவா ழக யேவழைளெ நாடுகளின் செல்வம்) எனும் நூலில் சிமித் அனைத்து பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து பொருளியல் என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெற்றது. இவர் அரசியல் பொருளியலின் தந்தை என அறியப்படுகிறார்.


தொடக்க்க காலத்தில் தொழிற்புரட்சியால் நாட்டில் பண முதலீடுகளாலும் இயந்திரப் பயன்பாட்டினாலும் செல்வம் பெருகியதால் ஆதம் சிமித் வரையறுத்த பொருளியலில் செல்வம் முதன்மை பெற்றது. இன்றய பொருளுற்பத்தி முறை பண்டங்களின் பொருந்திரட்டலாகக் காட்சி தருகிறது. இங்கு செல்வம் எனப்படுவது மனித விருப்பங்களை நிறைவு செய்யும் அனைத்துப் பண்டங்களையும் குறிக்கும். இந்தப் பண்டம் நமக்குப் புறத்தேயுள்ள பொருள். அது தனது குணங்னளைக் கொண்டு ஏதேனும் ஒரு விதமாக மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது. அது வயிற்றின் பசியாக இருந்தாலென்ன மனத்தின் பசியாக இருந்தாலென்ன பரவாயில்லை. மனத்தின் பசியே இச்சை. உடலுக்குப் பசி எப்படியோ அதேபோலவே மனப்பசியும் சகிக்கப்பாலது அல்ல. உலகில் அதிகமான பொருட்கள் இந்த மனப்பசியைப் பூர்த்தி செய்வதன் மூலமே மதிப்புப் பெறுகின்றன. இருப்பினும் காற்று, நீர் போன்ற அளவிலாமல் கிடைக்கும் பண்டங்கள் செல்வமாக கருதப்படுவதில்லை. செல்வ உற்பத்தி மற்றும் செல்வப் பகிர்வு சார்ந்த செயல்முறை அறிவியல் என்று வரையறுக்கப்பட்டது.

'பொருளியல் என்பது மாற்றுப்பயன்பாடு உள்ள, கிடைத்தற்கு அருமையான வளங்களைக் கொண்டு, மாந்தர்கள் தமது எண்ணிலடங்காத தேவைகளை நிறைவு செய்யும் நடப்புகளை ஆராயும் அறிவியலாகும்.'

இங்கு கிடைத்தற்கு அருமை (கிடைப்பருமை ) எனப்படுவது கிடைக்கின்ற வளங்கள் யாவும் எல்லாத் தேவைகளையும் பற்றாக்குறையினையும் தீர்க்க முடியாமல் போவதை குறிக்கும். பொருளியல் சிந்தனைகள் ஒரு வடிவமெடுக்கும் முன் பழங்காலந்தொட்டு கவிஞர்கள் மற்றும் தத்துவ அறிஞர்களின் கூற்றுகளில் இது தொடர்பான எண்ணங்கள் பரவிக்கிடந்துள்ளன. வள்ளுவர் காலத்திலே இந்த அறிவியல் பெரிதாக வளர்ந்திருந்ததைப் பின்வரும் குறள் நிரூபிக்கின்றது.

'ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.,,
-(464)

பின்பு வரக்கூடிய லாபத்தைக் கருதி முன்பு பெற்றுள்ள முதலினையும் இழப்பதற்குக் காரணமான தொழிலினை அறிவுடையோர் மேற்கொள்ள மாட்டார்கள்.

'தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.,,


முதலிடுவதால் நட்டம் வந்து தனக்கு அவமானம் வந்துவிடுமோ என்று அஞ்சுபவர்கள், ஆராய்ந்து நட்டம் வராது என்று துணியப்படாத தொழிலினைத் தொடங்கார்.

'அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்தூ உம்.,,

ஒரு தொழிலைச் செய்யத் தொடங்கும் பொழுது, அதனால் எவ்வளவு முதல் விரயமாகும், எவ்வளவு லாபம் வரும் என்பதை ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்த பின்பே முதலிட வேண்டும்.

'தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.


தாம் தெரிந்துகொண்ட ஒரு தொழிலை அந்தத் தொழில் பற்றிய அறிவும் அனுபவமும் உள்ள நம்பிக்கையானவர்களோடு ஆராய்ந்து, அந்தத்தொழிலை இடையில் விட்டு ஒடாமல் பொறுமையோடு முடிப்பவர்களை வேலைக்கு அமர்த்த வல்லவர்களுக்கு அடைவதற்கு அரிய பொருள் யாதொன்றும் இல்லை.

'இதனைஇதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.,,


இத்தொழிலினை இக்கருவியினால் (இவ்வகையான யந்திரத்தினால் இவ்வகையான தொழில் நுட்பத்தினால்) இவன் முடிக்க வல்லவன் என்று வகைப்படுத்தி ஆராய்ந்து, அவையனைத்தும் ஒத்திருந்தால் அத்தொழிலினை அவனிடம் ஒப்படைத்து விடுதல் வேண்டும்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, செய்த பொருளைச் சந்தையிலே விற்கும்பொழுது அதற்குப்; போட்டியாக வரும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணையாக யார் யார்(வங்கி, அரசியல்வாதிகள்) வருவார் அவர்களின் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.

இந்த நேரத்திலே ஒரு வரலாற்று முக்கிய நிகழ்சியை அறிவது விளங்குவதற்கு உதவியாகும். 1926 இங்கிலாந்தில் ஒரு பொதுவேலை நிறுத்தம் வெடித்தது. போர்ட் கார் கொம்பனியின் முதலாளி ஹென்றி போர்ட் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு முன்நிலையில் தோன்றி இப்படிப் பேசினார். 'நீங்கள் நினைக்கிறீர்கள் நான் கார் செய்பவனென்று. நான் ஷகார் உற்பத்தி செய்பவனல்ல. நான் லாபம் உற்பத்தி செய்பனேயொளியக் கார் உற்பத்தி செய்வனல்ல. 24 மணித்தியாலங்களுக்குள் நீங்கள் வேலைக்குத் திரும்பாவிட்டால் கொம்பனியை நிரந்தரமாக மூடிவிட்டு அந்தக் காசைக் கொண்டுபோய் வேறு லாபம் தரும் தொழிற்துறையில் முதலிடுவேன்.' இந்தச் செயற்பாட்டாலேயே அந்தப் பொது வேலை நிறுத்தம் முறியடிக்கப் பட்டது. இந்தப் பொது வேலை நிறுத்தம் தோற்கடிக்கப் பட்டது பின்நாளில் இரண்டாம் உலக யுத்தம் வருவதற்கான துணைக் காரணிளுள் ஒன்று. பேக்கரிக் காரன் பாண் செய்வது மக்களுக்குப் பசிக்கும். பாவம். சாப்பிட வேண்டும் என்பதற்காக அல்ல. லாபத்திற்காக. நவீன தொழிற்துறை முதலீடுகள் எல்லாம் லாபம் கறக்கும் முதலீடுகள்.

கிறீஸ்துவுக்கு பின்(69-79) இல் வேஸ்பாசியன்(ஏநளியளயைn) என்ற றோமச் சக்கரவர்த்தி கிரேக்கத்தை ஆண்டு வந்தான். அவன் பவனி வரும்பொழுது அவன் மலசலம் கழிப்பதற்காக ஒரு மலகூடத்தைத் தூக்கி வருவார்கள். அந்த நடமாடும் மல கூடத்தில் முதலிட்ட முதலாளி பெருந்தொகை பணத்தை இதன்மூலம் ஈட்டினான். பின்பு அவன் விழாக்களின் போது வெகுசனங்கள் மலசலங் கழிப்பதை ஏற்பாடு செய்தான்.
இதைக் கார்ல் மாக்ஸ் தனது மூலதனம் நூலில் 'அழநெல னழநள ழெவ ளவiமெ' என்றார். 'மலசலம் விற்ற காசு நாறுவது இல்லை.'

Pecunia non olet ('money does not stink') is a Latin saying. The phrase is ascribed to the Roman emperor Vespasian (ruled AD 69–79). Vespasian imposed a Urine Tax .

சாக்கடையில் எடுத்த காசோ கருவாடு விற்ற காசோ அரிச்சனைக்கு உதவாமல் விடுவதில். குப்பை விற்றுப் பெற்ற 100 ரூபா பூமாலை விற்றுப் பெற்ற 100 ரூபாவிலிருந்து வித்தியாசமாகி விடுவதில்லை. இங்கேதான் சமுதாயத்தொழில்கள் அத்தனையும் தம்மிடையே சமத்துவமாகி விடுகின்றன. லாபம் என்பது உபரி உழைபைச் சுரண்டுவது என்பதை நிறுவுவதற்கு கார்ல்ஸ் மார்க்ஸ் இந்த மேற்கோளை ஒரு தடைவை காட்டியுள்ளார்.

வரிக்கொடுமை


'வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.'
-(552)

செங்கோல் கொண்டு ஆட்சி புரியும் மன்னன், மக்களை சரியாக புரிந்து கொள்ளாமல், அவர்கள் வருமானத்தை அறிந்து கொள்ளாமல் ,அதிகாரத்தைப் பயன்படுத்தி கூடுதல் வரி அல்லது வேறு பொருள் கேட்டு நிற்பது, வழிப்பறி கொள்ளைக்காரன், வேல் போன்ற ஆயுதங்களை கொண்டு மக்களிடம் பணம் பறிப்பதற்கு சமமாகும் எனக் கூறுகிறார் வள்ளுவர். மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரி, மற்றும் பிற வருமானங்கள்(அரசு சேவைகளுக்கு), அரசாங்கத்தை வழி நடத்த இன்றி அமையாதது ஆகும். ஆனால் அது மக்களின் சுமை அறிந்து, அவர்களின் கொடுக்கும் தகுதி அறிந்து, அளவோடு இருக்க வேண்டும். மனம் போன போக்கில் லாபத்தை கணக்கில் கொண்டு, மக்களின் மேல் திணிக்கப்படும் வரியோ, அல்லது வேறு வகையிலான பொருள் கோருதலோ, வழிப்பறிக்குச் சமமாகும்.

ஒரே சமயத்தில் மக்களின் கூடுதல் சுமை அறியாமல் அரசால் விலை ஏற்றப்பட்ட பால், பேருந்து, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை கூறலாம்.

அது போக, அரசே வியாபாரியாக, லாபம் கருதி, மதுவை விற்கும் அவலத்தையும் கூறலாம்.

குலேபகாவலி என்ற சினிமாவில் ஓர் இசைப்பாடல் வரி:

'தனிமையாக ஒரு வாலிபன் இருந்தால் தரவேணும் பிரமச் சாரி வரி.

தாலி கட்டியே குடும்பம் நடத்தினால் அவனும் தரணும் சம்சாரவரி.' வரிக் கொடுமைகளை எழுதியே முடிக்க முடியாது.

ஒவ்வொரு நாட்டின் அரசாங்கங்களும்;, தம்;நாட்டு மக்களிடம் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் வரிகளை வசூல் செய்கின்றன. ஒருவர், தன்னுடைய வருமானத்தின் மீது செலுத்தும் வரி, வருமான வரி எனப்படுகிறது. இதில் வரியைச் செலுத்துபவரும் வரியின் தாக்கத்தை ஏற்பவரும் ஒருவரே. எனவே இதனை நேர்முக வரி என்கிறார்கள்.

ஆனால் விற்பனை வரி போன்றவற்றில், பொருளை விற்பவர் வரியைச் செலுத்தினாலும் இறுதியில் அதன் சுமையை ஏற்பவர் பொருளை வாங்குபவர்தான். இதில் வரியைச் செலுத்துபவர் வேறு. அதன் சுமையை ஏற்பவர் வேறு. அதனால்தான் இது மறைமுக வரி எனப்படுகிறது. உற்பத்தி வரி, விற்பனை வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி போன்றவை மறைமுக வரிக்கு எடுத்துக்காட்டுகள். அரசாங்கங்களின் 80 வீதமான வருமானம் இந்த மறைமுகவாரியாலேயே பெறப்படுகிறது.

ஒரு பறவை இன்னொரு பறவையிடமோ, ஒரு விலங்கு மற்றொரு விலங்கிடம் உதவியோ கடனோ கேட்டு அலைவதும் இல்லை... அவமானப்படுவதும் இல்லை. அவற்றின் வாழ்வு அவ்வளவு மகிழ்வாகவும் தனித்துவமாகவும் இருப்பதுபோல நமது வாழ்வு இல்லை. 'இதுநாள் வரை பத்து சதம் கூட யாரிடமும் கடன் என கேட்டதும் இல்லை... வாங்கியதும் இல்லை' என்கிற நமது முந்தைய தலைமுறையினரின் பெருமையை காப்பாற்ற தவறியவர்களாகி விட்ட குற்றவுணர்வுகூட நம்மிடமில்லை இப்போது!

உலகமயமாக்கலின் புதிய புதிய தந்திரமான வியாபாரச் சந்தைகளில் ஏகப்பட்ட கடன் அட்டைகளோடு உலவிக் கொண்டிருக்கும் நுகர்வு அடிமைகளாக மாறிக்கொண்டிருக்கிறோம் நாம். மக்கள் தொடர்பு ஊடகங்களில் மாறி மாறி வரும் எல்லா விளம்பரங்களும் எதையாவது வாங்கச் சொல்லி நுகர்வு சார்ந்த ஒரு படையெடுப்பை மறைமுகமாக நம் மீது நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றன. இதனால் கடன் பட்டாவது எல்லாவற்றையும் வாங்கிவிடும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் நாம். இதுவே மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துவிட்டதைப் போன்ற மாயையை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் சராசரி கடன் 30 ஆயிரம் ரூபாய் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இத்தேசத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கடனுடன் பிறப்பதையே இது நமக்குக் காட்டுகிறது. எனவே, நாம் விரும்பியோ விரும்பாமலோ மறைமுகமாகவேனும் கடனாளியாகவே வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம்.

கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன்பட்டவர்களின் மன வேதனையைப் பற்றி முன்பெல்லாம் சொல்வார்கள். ஆனால் தற்காலத்தில் எங்கும் கடன், எதற்கும் கடன் என்ற சூழ்நிலை நிலவுகிறது.

உலகத்திலுள்ள முழு அரசுகளும் கடனுள் மூழ்கியுள்ளன. ஒரு நாடு கடன்கார நாடானால் அதைத் தோற்கடிப்பதற்கு ஓர் எதிரி தேயையில்லை. அது தானே அழிந்து விடும.; ஒரு காலத்தில் ஸ்பானியா உலக வல்லரசாகி இருந்தது. அது யுத்தங்களினால் கடன்கார நாடாகி அதன் பின் தன் நிலமை தாழ்ந்தது. வீழ்து பட்டது. பின்பு பெரிய பிரித்தானியா சூரியன் அஸ்த்தமிக்காத ஏகாதிபத்திய வல்லரசாகி இருந்தது. இரண்டு உலக மகா யுத்தங்களிலும் அமெரிக்காவிடம் கடன் பட்டு தனது உலக ஆளுமையை அமெரிக்கவுக்குத் தாரை வார்த்தது. அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக சோஷலிசத்திற்கு எதிராக 70 வருடங்கள் போரடியது. 1991 உலக சோஷலிசம் வீழும் தறுவாயில் பெரும் கடன்கார நாடாகி இந்தாபிடி பொறிந்து கொட்டுப் படுகிறேன் என்ற நிலையில் உள்ளது. அதிகமாக யுத்தங்களே தேசங்களைக் கடன்கார நாடாக்கி விடுகின்றன.

வரிச் சலுகை

'ஒன்றுடன் பதினை யாண்டைக்கு உறுகடன் இசைவன் விட்டான்
இன்றுளீர் உலகத் தென்றும் உடனுளீ ராகி வாழ்மின்
பொன்றுக பசியும் நோயும் பொருந்தலில் பகையும் என்ன
மன்றல மறுகு தோறும் மணிமுரசு ஆர்த்த தன்றே,,.
-(சீவக சிந்தாமணி- 2375)

மன்னன் சீவகன் இன்று முதல் பதினாறு ஆண்டுகளுக்கு உரிய வரிகளை நீக்கிவிட்டான். இன்றுபோல் நீங்கள் என்றும் உலகத்துடன் ஒட்டி வாழ்வீராக. மக்களைத் துன்புறுத்தும் பசியும், பிணியும், பொருந்தாத பகையும் நீங்குக என்று அப்பொழுது மணம் கமழும் இராசமாபுரத்தின் வீதிகள் தோறும் அழகிய முரசம் முழங்கியது.

'நோக்கொழிந்து ஒடுங்கின் ஈர்க்கும் நோய்கொளச் சாம்பின் ஈர்க்கும்
பூக்குழல் மகளிர் கொண்டான் புறக்கணித் தடப்பட் டீக்கம்
கோத்தரு நிதியம் வாழக் கொற்றவன் நகரோடு என்ன
வீக்குவார் முரசம் கொட்டி விழுநகர் அறைவித்தானே.
-(சிந்தாமணி-2376)

மேலும், 'கண்பார்வை இழந்த மெலிந்தவர்க்கும், நோயுற்று மனம் தளர்ந்வர்க்கும், மலர்க் கூந்தலுடைய பரத்தையிரிடம் கொண்ட வேட்கையாலே கணவனால் புறக்கணிக்கப்பட்ட மனைவியர்க்கும் வாழ்வுக்குரிய வீடும், இடையறாப் பெருஞ்செல்வமும் மன்னவன் நல்குவான்,,

என்று அந்தச் சிறந்த நகரிலே இழுத்துக் கட்டப்பட்ட வாரையுடைய முரசினை அறைந்து அறிவித்தான்.

மக்கள் இன்பத்தோடு வாழ்தல்

'திருமகன் அருளப் பெற்றுத் திருநிலத்து உறையும் மாந்தர்
ஒருவனுக்கு ஒருத்தி போல உளமகிழ்ந்து ஒளியின் வைகிப்
பருவரு பகையும் நோயும் பசியும்கெட்டு ஒழிய இப்பால்
பெருவிறல் வேந்தர் வேந்தற் குற்றது பேச லுற்றேன்.,,
-(2377)

இவ்வாறு மாமன்னன் அருள, அவன் நாட்டு மக்கள் துன்பத்தைத் தரும் பகை, நோய், பசி ஆகியன தொலைய, ஒருவனுக்கு ஒருத்தி என மனமகிழ்ந்து புகழுடன் வாழ்ந்து வந்தனர்.

வணிகம்:

பாரம்பரிய பரம்பரைச் சம்பிரதாயமும் பொருளாதாரச் செழுமையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சீலத்தையும் செல்வத்தையும் உறுதி செய்கின்றன.

'கலம்சுரக்கும் சுரக்கும் நிதியம் கணக்கு இலா
நிலம் சுரக்கும் நிறை வளம் நல்மணி
பிலம் சுரக்கும் பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எல்லாம்,,
-கம்பன்.

அந்நாட்டில் உள்ள குடிமக்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் வணிகக் கப்பல்கள் கொண்டுவந்து குவித்தன. நிலம் நிறைவான வளத்தைக் கொடுத்தது. சுரங்கங்கள் பெறுதற்கரிய வேண்டிய மூலப்பொருட்களைக் கொடுத்தன. அவர்கள் பிறந்த வீட்டின் பண்புகள் செல்வத்தால் பெறமுடியாத நல்லொழுக்கத்தைக் கொடுத்தன.

தீயனபயிலாமை


'கூற்றம் இல்லை ஓர் குற்றம் இன்மையால்
சீற்றம் இல்லை தம் சிந்தையின் செம்மையால்
ஆற்ற நல் அறம் அல்லது இன்மையால்
ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே'
-கம்பன்

அந்நாட்டு மக்களிடம் தீய செயலாகிய குற்றம் இருக்கவில்லை. அதனால் மரண பயம் இருக்கவில்லை. அவர்தம் உள்ளத்தில் நேர்மைக் குணமே நிறைந்து இருந்ததால் அவர்கள் சீற்றம் அடைவதில்லை. அவர்கள் செய்வது அறமே தவிர வேறொன்றும் இல்லை. ஆதலால் அவர்கள் மேலும் மேலும் முன்னேறிக் கொண்டே இருதார்களேயொளியத் தாழ்வடைந்து போகவில்லை.

நல்ல நினைப்பு

'நல்ல நினைப் பொழிய நாள்களில் ஆருயிரைக்
கொல்ல நினைப்பனவுமங் குற்றமு மற்றொழியச்
செல்வ வயற் கழனித் தென்திருவார் புக்
கெல்லை மிதத் தடியேன்என்று கொல் எய்துவதோ.'
-சுந்தரமூர்த்தி நாயனார்

மாசற்ற நெஞ்சம் மனத்தமைந்திட்டால் ஈசனைக் காட்டும் உடம்பு.

-ஒளவையார்-

பொறாமை, கோபம், பயம்;, கூடாததிட்டல்களைத் தவிர்ப்போமானால் உடம்புக்கு நோய்கள் ஏதும் வராது. கெட்ட இராசாயனங்களை உடம்பு சுரக்காது. எல்லா நோய்களின் ஊற்றிடமும் சித்தமாகும் என்பதே ஆயுள் வேதத்தின் முதலாவது சுலோகமாகும்.

'சிந்தனைதான் மனிதன். என்னத்தை மனிதன் சிந்திக்கிறானோ அந்தச் சிந்தனைதான் அந்த மனிதன்.'-புத்தர்-
இல்லாமை இல்லாத நிலை

'வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இன்மையால்
ஒண்மை இல்லை பல் கேள்வி ஓங்கலால்,,
-கம்பன்.

அந்நாட்டில் வறுமை ஏதும் இல்லாததால் கொடைச் சிறப்பு வெளிப் படையாகத் தெரியவில்லை. எதிர் நின்று போரிடும் பகைவர் இல்லாமையால், வலிமையின் சிறப்புத் தெரியவில்லை. பொய் பேசுதல் இல்லாமையால் உண்மை வேறுபட்டுத் தெரியவில்லை. அனைவரும் பலபக்க அறிவைச் சிறப்பாகக் கற்றிருந்ததால், வெறும் ஏட்டுக் கல்வியறிவு பலப்படவில்லை.

பல துறைகளில் அறிவு இருப்பதே உலகில் கிடைத்தற்கரிய செல்வமாகும்.

வர்த்தகம்

'உயரும் சார்வு இலா உயிர்கள் செய்வினைப்
பெயரும் பல் கதிப் பிறக்குமாறு போல்
அயிரும் தேனும் இன் பாகும் ஆயர் ஊர்த
தயிரும் வேரியும் தலை மயங்குமே.

மோட்சம் என்னும் உயர்ந்த கதியை அடைவதற்கு உரிய பற்றுக் கோட்டைப் பெற்றிருக்காத உயிர்கள் தாம் செய்த வினைப்பயனை நுகரும் பொருட்டு, மாறி மாறி வரும் மக்கள், தேவர், நரகர், விலங்குகள் போன்ற பலபிறப்புக்களைப் பிறந்து இறந்து மாறுவதைப் போல சர்க்கரை -தேன்-இனிய வெல்லப பாகு- இடையர் ஊரில் கிடைக்கும் தயிர் ஆகியன போன்றவற்றிடையே பண்டமாற்று இடம்பெறும். அதிஅற்பதமான உவமை.

பணம் புழக்கத்திற்கு வராத காலத்தில் பண்டப் பரிவர்த்தனை ஒரு பண்டம் வேறொரு பண்டத்திற்கு மாற்றீடாகக் கொடுக்கப்பட்டது. இன்றோ சப்பாத்து பணமாக மாறும். அந்தப் பணம் மீண்டும் துணியாக மாறும். துணி மீண்டும் பணமாக மாறி அந்தப் பணம் மீண்டும் செருப்பாக மாறும்;. இரண்டு பண்டமாற்றுக்கு இடையே பணம் வந்துவிடும். பணம் ;இரண்டுதரம் மாறுவதற்கு இடையில் ஒரு பண்டம் வந்துவிடும். எப்பொழுதும் ஓர் இடைநிலைப் பாத்திரத்தைப் பணம் வகுக்கும். மக்கள் இறைவனடி சேர்ந்து பின் தேவராய்ப் பிறப்பர். தேவர் இறைவனடி சேர்ந்து மீண்டும் நரகராகப் பிறப்பர். நரகர் இறைவனடி சேர்ந்து மீண்டும் விலங்காகப் பிறப்பர். இரண்டு பிறவி எடுத்தலுக்கு இடையில் இறைவன் வருவார். ;இரண்டுதரம் இறைவனடி சேர்வதற்கு இடையில் ஒரு பிறவி வரும். முன்பு கடவுள் வகுத்த பாத்திரத்தை இப்பெழுது காசு வகுக்கிறது. 'காசேதான் கடவுளப்பா. கடவுளுக்கும் அது தெரியுமப்பா. கைக்குக் கைமாறும் பணமே...என்கிறான் கண்ணதாசன். என்பன கம்பனின் உவமானம். கார்ல் மாக்ஸ் இதை வாசித்திருந்தால் பிரமித்திருப்பார்.

(குறிப்பு:- யாழ்ப்பாணக் குடா நாட்டில் ' பிச்சைக்கு மூத்தது கச்சை வடம்,, என்றொரு வழக்காறு உண்டு. அதாவது வர்த்தகம் செய்யும் தொழிலானது பிச்சை எடுக்கும் தொழிலை விடச் சிறிதே மேலானது. அந்தச் சமூகத்தின் வர்த்தக விரோத வாணிப விரோத வழக்கத்தால் பாழ்பட்ட பழக்கத்தால் உலகத்தோடு பீடுநடை போடும் தகைமையை அந்த சமூகம் நிரந்தரமாக இழந்தது. ஏனெனில் வர்த்தகமும் வாணிபமும் பிறசமூகத்தோடு ஒத்துப்போய் செய்யும் கைங்கரியம். பகைத்துச் செய்யக் கூடியதல்ல. நாம் வாழும் இன்றய உலகம் பண்ட உற்பத்திச் சமூகம். உலகிற்கு விற்பனைப்பெறுமதியுள்ள பண்டங்களை உற்பத்தி செய்து அனுப்பினால்தான் உலகத்திலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களை நுகரும் உரிமை எமக்குண்டு. இல்லையேல் நாம் சமுதாய ஒட்டுண்ணிகள் ஆகிவிடுவோம். அரிசிக்கு விலையும் பூமிக்குப் பாராமுமாகி விடுவோம். உற்பத்தி செய்யக் கூடிய கடைசித் தொழில் நுட்ப அறிவைப் பெற்றால் மாத்திரம்தான் நாம் உலக நாகரீக மக்களோடு இரண்டறக் கலக்க முடியும். தொழில் நுட்பம் தான் முதலாளித்துவம். தொழில் நுட்பம்தான் சோஷலிசம். 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும். பஞ்ச பூதக் கலைகள் கொண்டிங்கு சேர்ப்பீர்|| என்கிறான் பாராதி.

வர்த்தகம் நாகரீகத்தின் உச்சநிலையாகும்

பண்டங்களைப் பரிவர்த்தனை செய்வதன் மூலம் உலகளாவிய மக்களிடையே உறவுகள் ஏற்படுகின்றன. இன்றய உற்பத்தி முறையானது எதுவுமே ஒரு தனிமனிதனால் உற்பத்தியாவதில்லை. ஒரு தனி நாட்டிலும் உற்பத்தியாவதில்லை. எண்ணற்ற உழைப்புப் பிரிவினை, சர்வதேச உழைப்புப் பிரிவினையால் செய்யப்படும் பொருள்கள் சர்வதேசச் சந்தையிலே பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. வாங்குவதும் விற்பதும் கோடானு கோடிமுறை நடைபெறுகின்றன. இதன்விழைவால் மானிட உலகளாவிய உறவுகள் ஏற்படுகின்றன. இரண்டு உலகமகா யுத்தங்களும் உலகமயமாகிவிட்ட உற்பத்தி மற்றும் விற்பனை முறைக்கும் தேசிய அரசமுறைக்குமிடையே ஏற்பட்ட முரண்பாட்டால் ஏற்பட்டது என்பதிலே சமூகவிஞ்ஞானிகளுக்கிடையே உடன்பாடின்மை அற்பமுங்கிடையாது. தேசிய அரசுகள் தமது நாட்டின் தொழிற்துறையைப் பாதுகாக்குங் சட்டங்களைத் தன்னகத்தே கொண்டவை. குறுமன அற்ப தேசிய நலனுக்கு உலக நலன் ஒருநாளும் அடிபணியப் போவதில்லை. உலகச் சந்தை, சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி என்று எண்ணிலடங்கா உலக இயக்கங்கள் உருவாகி விட்டன. எந்தத் தேசிய அரசியலும் உலக அரசியலின் ஒருபாகமாகவே நடைமுறைச் சாத்தியமானது. எந்த அரசியல் வேலைத்திட்டமும் உலகஅரசியலின் ஒரு அற்ப பாகமாகவே அமைய முடியும். தேசியநலனுக்கு ஒரு பொழுதும் உலக நலன் அடிபணிந்து போகாது. சந்தைகளிலே ஒவ்வொரு செக்;னும் பண்டங்களை விற்பதும் வாங்குவதும் ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் உலகிலுள்ள முழுமனிதர்களுக்குமிடையேயும் ஒரு சிக்கலான தொடர்புகளால் தங்கி வாழ்வதால் ஒரு பிரிக்க முடியாத மானிட உறவை ஏற்படுத்தியுள்ளது. இதன் உச்சவடிவமாகவே வர்க்க உறவுகள் ஏற்பட்டன. எந்தநாட்டு அரசியலும் இந்த மானிட உறவின் ஒரு பாகமாகவே ஏற்படுகின்றது. ஆதலால் அரசியலை உலகச் சந்தையே தீர்மானிக்கின்றது. உலகில் நடைபெற்ற போர்கள் எல்லாவற்றையும் தேசியப் போர் உட்பட மனித உறவுகளே தீர்மானித்தன. எந்தப் போரின் வெற்றியையும் தோல்வியையும் இந்த மானிட உறவே தீர்மானித்தது. அதாவது வர்க்க உறவே தீர்மானித்தது. ஆயுத பலங்கள் போரை வெல்வதுமில்லை. தோற்கடிப்பதுமில்லை. தோற்றுவிற்பதுவுமில்லை. நுனிப்புல் மேய்ந்தவர்களுக்கும் கற்றைக் குட்டிகளுக்கும் அப்படித் தோன்றும். விஞ்ஞானத்தை இலகுவாகக் கற்பதற்கு ஒரு வழியும் கிடையாது. அதுவும் சமூக விஞ்ஞானம் செக்கனுக்குச் செக்கன் மாறும் ஒரு கலை. வரலாற்றுக்குச் சதி செய்தவர்களும் குறுக்குவழி தேடினவர்களும் அழிந்து பட்டதே வரலாறு.

போக மாநகர் அயோத்தி

'தௌ; வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும்
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மக்கள்
கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லையாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பவர்களும் இல்லை மாதோ.


அயோத்தி நகரத்தில் தெளிவான நீரைப் பொழியும் மேகங்களும்-அலைகளை உடைய கடலும் கேட்டு அஞ்சும்படி, வாரினால் கட்டிய முரசங்கள் நாள்தோறும் முழங்கும். அந்நகரத்தில் வாழும் மக்களில் களவு செய்பவர்கள் எவரும் இல்லாமையால், எவரும் தம்பொருளைக் காப்பதும் இல்லை. எப்பொருளையும் யாசித்துப் பெறுபவர்கள் இல்லாமையால் கொடை கொடுப்பவர்களும் இல்லை. நுகரத்தேவையான பெருள்கள் போதுமான அளவு இருந்தால் மாத்திரம்தான் சமூக முரண்பாடுகள் அகன்று போகும். நுகர்வுப் பொருள்கள் இருந்தால் மாத்திரம் போதாது. அவற்றைக் கொள்வனவு செய்யும் விலைக்குவாங்கும் சக்தியும் போதுமானதாக இருக்க வேண்டும். உழைப்புச் சக்தி போதுமான அளவு காசாக மாறினால் மாத்திரம்தான் வாங்கும் சக்தியைப் பெற முடியும். வேறு குறுக்கு வழி ஏதும் கிடையாது. மக்களின் விலைக்கு வாங்கும் சக்தியை உயர்த்துவதாக அரசியல் இருக்க வேண்டும். உழைப்புச் சக்தி காசாக மாறுவதற்கு நவீன தொழில்நுட்பக் கலைகளைக் கற்றிருக்க வேண்டும். அத்தொழில் நுட்பக் கலைகளைப் பிரயோகிப்பதற்கு நவீன தொழிற்சாலைகள் அமைய வேண்டும். அனுட்டானத்திற்கு உதவாத அறிவும் ஏட்டுச் சுரைக்காய் வித்தகமும் வேலை இல்லாத் திண்டாட்டத்தையும் வறுமையையும் அவமானத்தையும் மாத்திரம் படைக்கும்.

'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை. திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணங்கச் செய்தல் வேண்டும்.-பாரதி-

'கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் கல்வி முற்ற
வல்லாரும் இல்லை அவை வல்லார், அல்லாரும் இல்லை
எல்லோரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலால்
இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை மாதோ,,

அந்நகரத்தில் பல்வகைக் கல்விகளைக் கல்லாதவர்கள் என்று பிரித்துச் சொல்லத்தக்கவர்கள் யாரும் இல்லை. அக்கல்வியில் வல்லமை இல்லாதவர்களும் இல்லை. மக்கள் அனைவரும், கல்விச் செல்வம் உட்பட எல்லா வகையான சிறந்த செல்வங்களையும் பெற்றிருப்பதாலே, அங்கே ஏழைகளும் இல்லை. பணக்காரர்களும் இல்லை. ஏழை பணக்காரன் என்று வேறுபடுத்திச் சொல்லத் தக்கவர்களும் இல்லை. ஏழை பணக்காரன் இல்லாமையைக் கனாக் கண்டான் கம்பன். இன்றய உலகமோ வரவர ஏழையை ஏழையாக்குகிறது. வர வரப் பணக்காரர்களைப் பணக்காரர் ஆக்குகிறது. முடிவு நாம்வாழும் உலகம் நாளுக்கு நாள் நரகமாகிக் கொண்டே போகிறது. கடன் கடனை உற்பத்தி செய்கிறது. வட்டி குட்டி ஈனுகிறது. எண்ணற்ற மக்களுக்கு ஏழைகள் என்ற பேரைச் சூட்டியுள்ளது.

'ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண் இல்கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கி அருந் தவத்தின்
சாகம் தழைத்து அன்பு அரும்பித் தருமம் மலர்ந்து
போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே.

அந்நகரம், கல்வி என்னும் ஒரு விதையானது முளைத்து வளர்ந்து, அளவற்ற கேள்விகள் என்னும் அழகிய சிறந்த வலிய கிளைகளை வளரவிட்டு, செய்தற்கு அரிய தவம் என்னும் இலைகள் தழைக்கச் செய்து, அன்பு என்னும் மலரை மலரச் செய்து பேரின்பம் என்னும் பழத்தைப் பழுக்கச் செய்தற்கு ஏற்ற இடமாக உள்ளது. பூமியிலே சொர்க்கம் கால்களிலே தடக்குப்படுகிறது.

சமுதாய நோய்க்கு மருந்தான மன்னன்

'தாய் ஒக்கும் அன்பின் தவம் ஒக்கும் நலம் பயப்பின்
சேய் ஒக்கும் மன் நின்றுஒரு செல் கதி உய்க்கும் நீரால்
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி
ஆயப் புகும்கால் அறிவு ஒக்கும் எவர்க்கும் அன்னான்.,,


அந்தத் தசரதச் சக்கரவர்த்தி, எல்லோருக்கும் அன்புடைமையால், பெற்ற அன்னையை ஒத்திருப்பான். எல்லா நன்மைகளையம் தருவதால் தவத்தை ஒத்திருப்பான். தான் முன்னிலையில் நின்று செல்லுதற்கு உரிய நல்ல கதியில் செலுத்தும் தன்மையால், புதல்வனை ஒத்திருப்பான். யாரேனும் ஒருவர் நோய் பொற்று தீமை உடையவரானால், அத்தீமையைப் போக்கும் மருந்தினை ஒத்திருப்பான். நுட்பமான நூல்களை ஆராயும் தன்மையில் அறிவை ஒத்திருப்பான்.

'வையகம் முழுதும் வறிஞன் ஓம்பும் ஓர்
நெய் எனக் காத்து இனிது அரசு செய்கிறான்.,,


தசரதன் இவ்வுலகம் முழுவதையும், வறியவன் ஒருவன் பாதுகாக்கும் ஒரு சிறு வயலைப் போலப் பாதுகாத்து மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்தான். கம்பன் ஏன் வறியவன் காக்கும் வயலை உதாரணத்திற்கு எடுத்தான் என்பது தெரியவில்லை. ஆனால் யாழ்பாணக் குடா நாட்டில் காணிச் சண்டைகளும் காணி வழக்குகளும் அதிகம். கதியாலுக்குச் சண்டைப்பட்டுக் காணி விற்று வழக்குப் பேசுவார்கள். கூலிக்குக் கொத்தப் போய் வேலிச்சண்டையில் ஈடுபட்டான் என்பது யாழ்பாணப் பழமொழி. இதன் காரணமாகக் காணி வழக்குப்பேசும் சட்டத்தரணிகளும் குப்பை. பாராளுமன்ற வாதிகளும் காணிவழக்கில் வெற்றியீட்டிய சட்ட வல்லுனராகத்தான் அதிகமாக இருந்தார்கள். முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சி வராததால் நிலப்பிரச்சனை தீரவில்லை. விவாசாயிகளின் நிலப்பிரச்சனையோடு தேசிய இனப்பிரச்சனை எப்படிப் பின்னப் பட்டுள்ளது என்று கார்ல் கவுட்ஸ்கி தனது விவசாயப் பிரச்சனை பற்றிய நூலில் எழுதியுள்ளர்ர். அதிலே அவர் விவசாயப் பிரச்சனை தீராமல் தேசிய இனப் பிரச்சனை தீpராது என்று அடித்துச் சொல்கின்றார். வறியவன் காக்கும் வயல் என்ற உவமையைக் கூற கம்பன் சமூகத்தை எவ்வளவு நுணுக்காமாக அவதானித்திருந்தான் என்பது தெரிகிறது.

இன்றோ கொல்லும் கலை அத்தனையும் தெரிந்த ஆட்சியாளர்களுக்கு ஆட்சிகலை தெரியாமல் இருக்கிறது.

பூவலயம் பொதுஉடைமை

'பாவமும் அருந்துயரும் வேர் பறியும் என்பார்
பூவலயம் இன்று தனி அன்று பொது என்பார்
தேவர் பகை உள்ளன இவ் வள்ளல் தொறும் என்பார்
ஏவல் செய்யும் மன்னர் தவம் யாவதுகொல் என்பார்.,,


'இராமன் மன்னனாவதால் பாவமும் தீராத துயரங்களும் அடியோடு அழியும்|| என்பார் சிலர். 'இம் மண்ணுலகம் இனிமேல் தனியுடமை அன்று, உலகினர் அனைவருக்கும் இது பொது உடைமை|| என்று சிலர் சொல்லுவார். தேவர்களது பகை நீங்கும் என்பார் சிலர். இராமனுக்குக் கீழ்ப்பட்ட மன்னர்கள் என்ன தவம் செய்தார்களோ என்பார் சிலர். கார்ல் மாக்ஸ்சுக்கு ஆயிரம் வரடத்திற்கு முன் கம்பன் பொதுவுடமை பற்றியும் உலகசோஷலிசம் பற்றியும் பேசியுள்ளான்.

தொழிலாளியின் மேன்மையைப் பற்றி வள்ளுவன்:

'நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு.'

தொழில் செய்பவன் மனம் கோணாது இருந்தால் உலகம் கோணாது. ஆகையால் மன்னவன் நாள்தோறும் அவன் செயல் முறைகளை ஆராய்ந்து கவனித்தல் வேண்டும் என்கிறான். தொழிலாளி மனங்கோணினால் உலகபிரளயம் வந்துவிடும் என்பது கடந்த நூற்றாண்டின் முடிவுறாத அனுபவமாகும். தொழிலாளியின் கூலியை அவனது வேர்வை வற்றமுன் கொடு என்று சட்டம் போட்டிருக்கிறது குர்ரான். தொழிலாளி தான் செய்த வேலையின் கூலியை வாங்குவதற்காக அவனை விடியும்வரை காத்திருக் வைக்காதே என்கிறது பைபிள். சமூக அமைதியென்பது உழைப்பவனின் மனங்கோணாமையை முன் அனுமானிக்கிறது.

அரசன் நாட்டின் காவலனே அன்றித் தலைவன் அல்லன் என்பதைக் கம்பன் வற்புறுத்துகிறான்.

தேவரும் வெஃகற்கு ஒத்த
செயிர்அறு செல்வம் அஃது உன்
காவலுக்கு உரியது என்றால்,
அன்னது கருதிக் காண்டி.
(4124)

நாட்டின் செல்வம் குடிமக்களுக்கே உரியது என்று அக் காலக் கோட்பாடுகளுக்கு மாறான புரட்சிக் கருத்தையும் கம்பன் எடுத்துக் கூறுகின்றான்.

'கலம் சுரக்கும் நிதியம், கணக்கிலா
நிலம் சுரக்கும் நிறைவளம், நல்மணி
பிலம் சுரக்கும், பெறுதற்கு அரிய நம்
குலம் சுரக்கும் ஒழுக்கும் -குடிக்கு எலாம்.
(69)

கப்பல்களும், நிலமும், சுரங்கங்களும் தரும் செல்வம் எல்லாம் குடிமக்கள் அனைவருக்கும் உரியவை என்பதையே கம்பன் இப்பாடல் மூலம் கூறுகின்றான். எந்த மக்கள் விரோதக் கொள்கையையும் கம்பன் ஏற்றவன் அல்லன். அரசன் எவ்வகையிலும் பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்பக் கூடாது. மேவின வெஃகல் இன்மை(4125) என்று சொல்வதன் மூலம் அச்செல்வம் மக்கள் தங்கள் உரிமையால் பெற்றது என்பதையும் உணர்த்துகிறான்.

அரசன் என்று நிருவாக வசதிக்காக ஆட்சித்தலைவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று கம்பன் விரும்பினாலும் இறையாண்மை முழுவதையும் அவனிடம் ஒப்படைக்க வில்லை. அவனுடைய அதிகாரம் வரம்புக்கு உட்பட்டது.

நாட்டின் செல்லவம் யாருக்கு உடைமை என்பதே அரசாங்கத்தின் வடிவத்தைத் தீர்மானிக்கிறது என்று அரசியல் அறிகை கூறுகிறது. நாடு ஒரு தனிமனிதனின் உடமை என்றால் அது முடியாட்சி. பிரபுக்களுக்கு உடைமை என்றால் அது பிரபுத்துவ ஆட்சி. ஆளும் சிறிய நிர்வாகக்குழு நாட்டின் பெரும்பான்மைச் செல்வங்களை அபகரித்து வைத்திருந்தால் அது ஒரு குறுங்குழு ஆட்சி(ஒலிகாய்ச்சி). மக்கள் அனைவருக்கும் உடமை என்றால் அது மக்கள் பொது உரிமை ஆட்சி. இந்த விளக்கத்தின் படி கம்பன் காட்டிய அரசை முடியாட்சி என்று கூறமுடியாது. பூவலயம் இன்று தனி அன்று, பொது என்று அவன் நாட்டையும், அதன் செல்வங்களையும் மக்களின் பொதுவுரிமையாக்குகிறான். இதனை மக்கள் பொதுவுரிமை அரசு என்று கூறுவதே பொருத்மானதாகும்.

மக்கள் செல்வத்தைக் கொள்ளையடிப்பவர்.

'எஃகு எறி செருமகத்து ஏற்ற தெவ்வருக்கு
ஒஃ கினான் உயர் வுளர்த்து உண்ணும் ஆசையான்
அஃகல் இல் அறநெறி ஆக்கியோன் பொருள்
வெஃகிய மன்னன் வீழ் நரகின் வீழ்க யான்.'

படைக் கருவிகளை வீசும் போர்க்களத்தில், பகைவருக்குப் பயந்து பணிந்தவன், ஆடு, மாடு போன்ற உயிர்களை வளர்த்து, அவற்றைக் கொன்று தின்னும் ஆசை உடையவன், குறைவுபடாத அதர்ம நெறியிலே மிகுந்த பொருளை மக்களிடமிருந்து கவர்ந்து கொள்ள விரும்பும் மன்னன் ஆகியோர் செல்லும் நரகத்தை நான் இப்போதே சேர்வேனாக என்று பரதன் சூழுரைக்கிறான்.

அரசியல் முன்னுக்கு உயர்த்திப் பின்னர் வீழ்த்திவிடும்.

'தெருளுடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி
இருளுடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான்
உருளுடைச் சகடம் பூண்ட, உடையவன் உய்த்த கார் ஏறு
அருளுடை ஒருவன் நீக்க அப்பிணி அவிழ்ந்தது ஒத்தான்.


தெளிந்த மனத்தைப் பெற்ற தசரதனது கட்டளையை மீறுவதற்கு அச்சம் கொண்டு, மயக்கத்தை உடைய உலகத்தைக் காக்கின்ற துன்பத்தைத் தரும் அரசாட்சியை மேற்கொள்வதற்குச் சம்மதித்து நின்றான், இராமன். கைகேயி சொன்ன சொல்லைக் கேட்ட பின்பு அதே இராமன், சக்கரங்களை உடைய வண்டியில் பூட்டி, அதனை உடையவன் செலுத்திய கரிய காளை, கருணையுள்ள மற்றொருவன் அவ்வண்டியின் பிணிப்பிலிருந்து அவிழ்த்துவிட, பாரத்திலிருந்து விடுபட்ட நிலையை, அடைந்தான். ஆட்சியை விட்டதே ஆகப் பெரிய விடுதலையாக அவன் உணர்கிறான்.

அரசாட்சி என்பது பின்பு பல குற்றங்களைத் தர வல்லது.

'பின் குற்றம் மன்னும் பயக்கும் அரசு என்றல் பேணேன்
முன் கொற்ற மன்னன் முடி கொள்க எனக் கொள்ள மூண்டது
என் குற்றம் அன்றோ இகல் மன்னவன் குற்றம் யாதோ
மின் குற்று வெயில் தீக்கொண்டு அமைந்த வேலோய்.,,


மின்னலை வென்று விளங்கும் வெயில் தீ ஆகியவற்றின் வெம்மையையும் ஒளியையுங் கொண்ட வேலை உடையவனே! வெற்றியை உடைய தசரதச் சக்கரவர்த்தி முன்பு 'முடி சூடிக்கொள்' என்று கூறினார். அரசாட்சி என்பது பின்பு பல குற்றங்களைத் தர வல்லது|| என்பதை எண்ணிப் பார்க்காமல், அதனை ஏற்றுக் கொள்ள முயன்றது நான் செய்த குற்றம். இது தசரதனோ கையேயியோ செய்த குற்றமல்ல.

தமிழின் உலக நோக்கு

'உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும்.....


என்றது கம்பனின் கடவுள்வாழ்த்து.

'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன' என்று பெரிய புராண ஆசிரியர் ஆரம்பித்தார்.

'உலகம் உவப்ப'
என்று நக்கீரர் தன் திரமுருகாற்றுப் படையைத் தொடங்கினார்.

திரு வள்ளுவரும் 'முதற்றே உலகு' என்று முதற் குறளில் உலகை வைத்துப் பேசினார். வள்ளுவர் 27 முறைகள் உலகு என்ற சொல்லை எடுத்தாண்டுள்ளார்.

இவ்வாறு பெருங் கவிஞர்கள் அனைவருக்கும் உலகம் பற்றிய சிந்தனையையும் உலகம் உவக்க வேண்டும், உலகம் ஒழுங்கான பாதையில் செல்ல வேண்டும் என்ற ஆசையும், கவலையும் இருந்துள்ளமை தெரியவருகின்றது.

'போர் ஒடுங்கும் ஆனால் புகழ் ஒடுங்காது'
என்ற உலக அமைதிச் சிந்தனையைக் கம்பன் வழங்கினான். நமக்காக உலகமல்ல நம்மில்தான் உலகம்.

'ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலக இயற்கை'
எனப் புறநாநூறு பேசும்.

'உலகத் தொழிலாளாகளே ஒன்றுபடுங்கள்'
என்ற கோசம் பிறப்பதற்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே நம் முன்னோர்கள் உலகமுன் நோக்கை நம் முன்னோர் கொண்டிருந்ததால் அவர்களிடம் குறுமனத் தேசியவாதம் இருக்கவில்லை. அன்று அவர்கள் சீரும் சிறப்போடும் வாழ்ந்ததன் இரகசியம் அவர்களிடம் உலகக் கண்ணோடட்மும் ஒட்டுமொத்த உலகப் பார்வையும் இருந்தது. அந்தப் பரந்துபட்ட உலகப்பரஞானமே அவர்களை அவ்வாறு வாழ வழிவிட்டது.

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்