பசிப்பிணி மருத்துவன்..

முனைவர்.இரா.குணசீலன்

"உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு"
(குறள்-734)

சி, பிணி(நோய்), பகை இவையின்றி இருப்பதே நல்ல நாடு என்பர் வள்ளுவர். இம்மூன்றும் இல்லாத நாடு எது? என்பதே எல்லோருக்கும் தோன்றும் கேள்வி..

சங்க காலத்திலும் பசியிருந்தது...
பசி என்னும் வயிற்றுத் தீயை தணிக்கும் நீராக அக்கால அரசர்கள் இருந்தார்கள்.
வறுமையும் புலமையும் சேர்ந்தே பிறந்ததால் பசியோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் இரவலர்களுக்கு உண்டி கொடுத்து உயிர் கொடுத்தவர்களாக அக்கால மன்னர்களும் வள்ளல்களும் விளங்கினர்..

இரவலர்களுக்கு புரவலர்கள் உணவளித்துப் பசியைப் போக்கியதையே ஆற்றுப்படை இலக்கியங்கள் இயம்புகின்றன. இரவலர்களின் பசிப்பிணியைப் போக்கியதால் புரவலன் 'பசிப்பிணிமருத்துவன்' என்றழைக்கப்பட்டான்.

பசிப்பிணி மருத்துவர்கள் குறைந்துவிட்டதால் தான் பசி... பசி.. பசி.. என்னும் கூக்குரல் ஓயாது கேட்டுக்கொண்டே இருக்கிறது.

பண்ணனிடத்துப் பரிசில் பெறப்போகும் பாணன், பரிசில் பெற்றுவரும் பாணனை வினவுவது போல அமைந்த புறநானூற்றுப் பாடல் சங்க காலத்தில் பசியின் கொடுமையையும் பசிப்பிணி மருத்துவர்களின் சேவையையும் இயம்புவதாக அமைகிறது.

'மரம் பழுத்துவிட்டால் புள்ளினங்கள் கூடி பழத்தை உண்டு ஆரவாரம் செய்வது இயல்பு. அந்த ஆரவாரரம் போல ' பண்ணன்' என்னும் வள்ளலின் அரண்மனையில் இரவலர்கள் ஊண் உணவை உண்டு மகிழ்ந்து பேராரவாரம் செய்த ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.

பழுக்காத மரத்தையும், ஈயாத செல்வரையும் தேடி யாரும் செல்வதில்லையே... இரவலரின் பசிப்பிணியைத் தீர்ப்பவன் பண்ணன் என்பதால் இவ்வொலி கேட்டுக்கொண்டே இருந்தது.

எறும்புகள் மழை வருவதை உணர்ந்து தம் முட்டைகளைச் சுமந்து மேட்டுப்பாங்கான பகுதிகளுக்குச் செல்வது போல, உணவுண்ட கையினைக் கொண்டவராக சுற்றத்தாரோடு சிறுவர்கள் சென்றனர். அவர்களைக் கண்டும்,
பசி வருத்தத்தாலும்,
வழி நடந்த வருத்தத்தாலும்,
மென் மேலும் பெருவிதுப்புற்றவர்களாக இருக்கும் இரவலர்கள் (பாணர்கள்) பரிசில் பெற்றுவரும் இரவலர்களைக் கண்டு கேட்டனர்.....

பசி என்னும் நோய் தீர்க்கும் மருத்துவனாகிய பண்ணனின் இல்லம் பக்கமா..? தூரமா..?

பாணர்களின் பசியென்னும் நோயைத் தீர்ககும் 'பண்ணன்' நான் வாழும் நாளையும் சேர்த்து வாழ்வானாகுக என்று பரிசில் பெற்ற பாணனை நோக்கி பெறவிரும்பும் பாணன் வினவுகிறான்..
பாடல் இதோ...

யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர் ! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்,
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்,
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்;
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே,'


173. யான் வாழுநாள் வாழிய!
பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

எல்லா சமயத்தாரும் 'விரதம்' என்னும் பட்டினி கிடப்பதைக் கடைபிடிக்கின்றனர். அதன் உண்மையான நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே...!

விரதம் இருப்பதன் உண்மையான நோக்கம் தான் என்ன..?
பசி என்றால் என்ன..?
பசித்தவன் வலி என்ன..?
வயிற்றில் தீ எறிவது போன்ற பசியோடு அவன் படும் பாடு என்ன....?
என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே கடவுளின் பெயரால் விரதம் இருப்பதால் என்ன பயன்..?

நமக்கும் பசிப்பது போலத் தானே பசித்தவனும் வலியுணர்வான் என்பதை உணர்தாலே நாமெல்லாம் பசிப்பிணி மருத்துவர்களாகிவிடுவோம்.





gunathamizh@gmail.com