பரம இரகசியம்


பொன் குலேந்திரன்



'என்ன சிவம் கையுக்குள்ளை எதையோ மூடிவைத்திருக்கிறாய் எனக்கும் காட்டேன்.'

'முடியாது.. அது பரமசிவத்தின பரம இரகசியம்.'

'உன் நண்பன் சந்திரனான எனக்குத் தெரியக் கூடாத பரம இரகசியாமா?. உனக்குள் மட்டும் அந்த இரகசியம் இருந்துவிட்டால் அப்படி ஏதும் நடக்கக் கூடாதது ஒன்று உனக்கு நடந்து விட்டால் பிறகு அந்த இரகசியம் ஒருத்தருக்கும் பயன் இல்லாமல் மறைந்து போகும்'

'உண்மைதான். ஆனால் நான் கண்டுபிடித்த விஷயத்தை வேறு யாரும் கொப்பியடித்தால் அல்லது பிழையாகப் பாவித்தால்.....'

'சந்திரா. அதுக்குத் தான் கொப்பிரைட்டும் பேட்டெண்டும்
(copyright and patent) இருக்கே. நீ யோசிக்காதே. நான் உன்னோடு பல காலம் பழகினவன் அல்லவா. நானும் உன்னைப் போல் தொழில் நுட்பப் பட்டதாரிதான். நீ கைக்குள் வைத்திருப்பதை எனக்கு காட்டினால் நான் எதாவது ஆலோசனை சொல்லலாம் அல்லவா?' அவனை நான் விடவில்லை.

அவனுக்குத் தெரியும் எனது பிடிவாதக் குணம்.

'சரி வா அந்த பெஞ்சில் முதலில் போய் இருப்போம்' என்று என்னை அழைத்துக் கொண்டு போனான் பரமசிவம். அருகில் உள்ள மரத்தின் கீழ் இருந்த பெஞ்சில்; இருவரும் போய் அமர்ந்தோம்.

பரமசிவம்; கிறுக்குத் தனமானப் போக்குள்ளவன். ஆனால் கிறுக்கன் அல்ல. அதிமேதாவி என்றும் சொல்லலாம். சில சமயம் தான் என்ன செய்கிறேன் என்று அறியாமலே சிந்தித்த படி நடப்பான். ஒரு சமயம் ஷேர்ட்டின் பொத்தானை தலைகீழாக மாட்டிக்கொண்டு, ஒரு காலில் செருப்பும்; மறு காலில் சப்பாத்துடனும் என்னோடு புறப்பட ஆயத்தமானான். தலை கூட வாரவில்லை. அவனைப் பார்க்க எனக்கு சிரிப்பு வந்தது.

'என்னடா சந்திரா இதென்ன புது பெஷன்' என்றேன் அவன் முதுகில் தட்டிய படி.. அப்போது தான் சுயநிலைக்கு அவன் வந்தான். சில சமயங்களில் வானத்தையும், மரங்களையும் பார்த்தபடி சிந்தனையோடு இருப்பான். பார்க்கப் பரிதாபமாக இருக்கும். அவன் நிலையறிந்து அவனுக்குப் பெண்கொடுக்க ஒருவரும் முன்வரவில்லை. பிரமச்சாரியாகவே வாழ்ந்தான். பெற்றோருக்கு அவன் ஒரே பிள்ளை. பெற்றோhர் விட்டுச்சென்ற பெரிய வீட்டில் தனிமையாக ஒரு பெரிய அறையில் வாழ்ந்தான். அந்த வீட்டின் பெரும் பகுதியை எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்துக்கு வாடகைகக்கு விட்டிருந்தான். அந்த வருமானம் அவனுக்கு போதுமானது.

எலக்ரோனிக் என்ஜினியராக முதலாம் வகுப்பில் பட்டம் பெற்றும் ஒரு ஸ்தாபனத்திலும் அவனால் நிரந்தரமாக வேலை செய்யமுடியவில்லை. அவனது ஒற்றைப் போக்கு பலருக்கு சரிப்பட்டு வரவில்லை. மற்றவர்களுடன் அவன் தொடர்பு கொள்வதும் அரிது. தலை வாரமாட்டான். உடைகளில் கூட கவனம் கிடையாது. படிக்கும் போது பௌதிகத்திலும் கணிதத்திலும் எனக்கு போட்டி அவன்தான். சில சமயம் நான் கோட்டை விட்ட கணக்கைக கூட அவன் சிரமப்படமால் செய்துவிடுவான். பள்ளிக்கூடத்தில் இருந்தே அவன் என் நண்பன். சக மாணவர்கள் அவனோடு பழகத் தயங்கினர்.

அந்த வீட்டு அறை தான் அவன் உலகம். படுக்கையறையாகவும் தனது ரேடியோ பரிசோதனைக் கூடமாகவும் பாவித்தான். வானொலிகளில் உள்ள பிழைகளை கண்டுபிடித்து திருத்திக் கொடுப்பதில் கெட்டிக்காரன். அதற்கு கூலி கேட்க மாட்டான். கொடுத்தால் வாங்குவான். கிடைத்த உதிரிப்பாகங்களை வைத்து ஒரு புதுமையான சக்திவாய்ந்த வானொலி ஒன்றை உருவாக்கியிருந்தான். அதைப் பார்த்து நான் வியந்தேன். அதன்மூலம் உலகில் பலருடன் தொடர்பு கொண்டு பேசினான். 'என்னடா சந்திரா உனது திறமையை இந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அறிந்திருந்தால் உன்னை கடத்திக் கொண்டு போய்விடுவார்கள் என்பேன். அவன் மௌனமாகச் சிரிப்பான். ஒரு நாள் அவன் உருவாக்கிய வானொலியில் ஏதோ இருவர் புரியாத பாசையில் பேசவதைக் கேட்டேன். பின்னணியில் துப்பாக்கிச் சூடும் குண்டுகள் விழும் சத்தமும் கேட்டது. என்னடா சிவா யார் பேசுகிறார்கள் எனக்கு அவர்கள் பேசும் பாஷை விளங்கவில்லை என்றேன். 'உது அரேபிய மொழி' என்றான் சிவம். எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. உனக்கு எப்படி அது அரேபிய மொழி என்று தெரியும் என்று கேட்டேன். அவன் சிரித்தான். அதோ பார் என்றுஇ புத்தகங்கள் உள்ள அலுமாரியைக் காட்டினான்; அதில் சில அரேபிய மொழி புத்கங்கள் இருந்தன. என்னால் நம்பமுடியவில்லை.

'சிவா எனக்கு ஏன் நீ இதை இவ்வளவு காலமும் சொல்லவில்லை?'.

'அது தான் பரமரகசியம்' என்றான் கண்ணைச்சிமிட்டியபடி.

'உனது மொழி பெயர்ப்பின் படி அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று எனக்கும் சொல்லன் என்றேன்.'

' போரில் தாக்குதலைப் எப்படி நடத்த வேண்டும் என்பதைப் பற்றி பேசுகிறார்கள். நாளை ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தை தாக்கப் போகிறார்களாம். அதற்கான நடவடிக்கைகள் பற்றி குறி மொழி மூலம் பேசுகிறார்கள்'

'எந்த இடமிது...'

'அனேகமாக ஆப்கானிஸ்தானாக இருக்கலாம். அவர்கள் பேச்சில் இருந்து கண்டுபிடித்தேன், என்றான்.

'ஐயோ கடவுளே, அப்போ பயங்கரவாதிகளின் சம்பாஷணையை ஒற்று கேட்கிறாயா? என்ன வேலையடா சிவா நீ செய்கிறாய். சரியான ஆபத்தான காரியமாச்சேயடா?' என்றேன் பதட்டத்துடன்.

'யார் பயங்கரவாதி. இதெல்லாம் தமது சுயநலத்திற்காக கொடுக்கப் பட்டப் பெயர். உரிமைக்காக போராடுபவர்கள் கூட பயங்கரவாதிகள் என பட்டம் சூட்டப்படுகிறார்கள்.' சந்திரன் அமைதியாக பதில் அளித்தான்.

'சிவா நீ சரியான ஒற்றுக் கேட்பவனாய் இருக்கிறாய். இதை பொலீஸ் அறிந்தால் உனக்கு ஆபத்து. கவனமாயிரு.' நான அவனை எச்சரித்தேன்

'அதனால் தான் பரம இரகசியம் என்றேன். உனக்கும் எனக்கும் மட்டுமே இந்த வானொலியின் மகிமை தெரியும். நீ எனக்கு சகோதரனைப் போல' என்றான் அவன். அவன் பேச்சில் நம்பிக்கை தொனித்தது.

சிவாவின் செயல் எனக்கு ஆபத்தாகப்பட்டது. நெருப்போடு விளையாடுவது போன்ற உணர்வு எனக்கு. அவன் பள்ளிக் கூடக் காலம் முதல்கொண்டே புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்டவன். மக்களின் உரிமைகள் ஒதுக்கப் படுவதை முற்றாக வெறுப்பவன். உலக அரசியலில் அவனுக்கு நல்ல அறிவு இருந்தது. எந்த எந்த நாடுகளில் மக்கள் ஒடுக்கப்பட்டு புரட்சியாளர்கள் இயக்கம் தோன்றியது போன்ற விபரங்கள் அனைத்தையும் அவன் அறிந்து வைத்திருந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. அரேபிய மொழியை அவன் எதற்காக கற்றான் என்பது எனக்கு புதிராயிருந்தது. அதுவும் தொழில் நுட்பத் துறையில் ஈடுபாடுள்ளவன் பிற மொழியைக் கற்க வேண்டிய காரணம் என்ன?. என் சந்தேகத்துக்கு முழுமையான விடையை சந்தர்ப்பம் வரும் போது அவனிடமிருந்து பெற்றாக வேண்டும் என்றது என் மனம். அந்த நிலையில் அவன் 'பரமரகசியம்' என்று சொல்லிக் கொண்டு ஒரு பொருளை வைத்திருக்கிறான் என்று தெரிந்த போது அதைப்பற்றி அறிய நான் ஆவல் கொண்டதில் தவறு ஒன்றும் இருந்ததாக எனக்குப் படவில்லை. அதுவும் ஒரு வித ஒற்று வேலை பார்க்கும் கருவியோ? என்று யோசித்தேன்

'சந்திரர். நீ பௌதிகத்தில் ஒத்த அதிர்வெண்ணைப் பற்றி படித்திருப்பாயே. அது ஞாபகம் இருக்கிறதா உனக்கு' என்ற பீடிகையுடன்; ஆரம்பித்தான் சிவா

'ஏன் இல்லை. பொளதிக ஆசரியர் ஒத்த அதிர்வெண்ணை விளங்கபபடுத்து அமெரிக்காவில காற்று வீசியதால 'ரெசனன்சால'' முறிந்த கதை சொன்னார். அதற்கும் உன் கையில் வைத்திருப்பதற்கும் என்ன சம்பந்தம்'

'சம்பந்தம் இருக்கு. ஒருவர் நினைப்பதை அறியக் கூடிய வல்லமை படைத்தது நான் கண்டுபிடித்த இந்தக் கருவி'

' என்ன விசர் கதை சொல்லுகிறாய். நீ என்ன ஞானி என்ற நினைப்போ?'

' அப்படித்தான் என்று சொல்லேன். இப்போது இக்கருவியி;ன் மகிமையை உனக்கு காட்டப் போகிறேன் பார்கிறாயா' என்றான் சிவம், கையில் இருந்த கறுப்புப் பொருள் ஒன்றை விரித்து எனக்குக் காட்டியபடி. அதைச்செய்யுமுன் யாராவது தன்னைப் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றம் பார்த்தான். அவன் காட்டிய கருவியைப் பார்த்தேன். கைக்குள் அடங்கும் விதத்தில் இருந்தது. மூன்று பொத்தான்கள் தெரிந்தன. அதை வாங்கி பரிசோதிக்க எனக்குப் பயமாயிருந்தது. ஒரு வேளை அவன் சொல்வதில் உண்மையிருக்குமோ.

'என்ன யோசிக்கிறாய். உன்னில் தான் நான் முதல் தடவையாக பரீட்சித்துப் பார்க்ப்போகிறேன்.'

' என்னிலா?'

'ஆமாம் அப்போ தான் உனக்கு நம்பிக்கை வரும். இன்னும் சில வினாடிகளில் என்ன நினைக்கிறாய் என்று சொல்லட்டுமா? என்று ஒரு பொத்தனை அழுத்தி தனது தலையுடன் கருவியை வைத்தான். சில நேரத்தில்.

'ஏய் நீ இப்ப உன் மனைவி வீட்டுக்கு வந்திருப்பாளா?. என்ன இரவு சாப்பாட்டுக்கு சமைக்கப் போகிறாள். இந்த விசரன் என் நேரத்தை வீணாக்கிறான் என்று நினைக்கிறாய் அப்படித்தானே' என்றான் சிரித்தபடி.

எனக்கு அவன் சொன்னது ஆச்சரியமாய் இருந்தது. நான் நினைத்ததும் அதுவேதான். நான் வாயடைத்துப் போனேன்.

' என்ன பேசாமல் இருக்கிறாய். நான் சொன்னது சரியா?' என்றான் சந்திரன்.

'ஓம். நீ சொன்னதைத் தான் நினைத்தேன். அது எப்படி உன்னால் முடிந்தது'

கொஞ்சம் பொறு விளக்குகிறேன். அதோ நாலைந்து பேர் பாதையில் போய்க் கொண்டு இருக்கிறார்களே பார்த்தாயா?

'தெரிகிறது. அவர்களை என்ன செய்யப்போகிறாய்?',

'அவர்களில் ஒருவனை பரிசோதனைக்கு உட்படுத்தப் போகிறேன். வழுக்கை விழுந்த தலையுடன் போகிறவன் முன்னுக்கு போகிறவனை பிட்பொக்கட் அடிக்கப் போகிறான்'; என்றான் சந்திரன்.

'என்ன சொல்கிறாய். அதை தடுத்து நிறுத்த வேண்டியது தானே?' என்று நான் சொல்லுமுன் சிவா சொன்ன மாதிரி நடந்து விட்டது. அந்த சம்பவம் என்னை திகைக்க வைத்துவிட்டது. 'ஐயோ பாவம் பணத்தைப் பறிகொடுத்தவனைக் காப்பாற்று' என்றேன்;.

'கொஞ்சம் பொறு அவனைக் காப்பாற்றத் தேவையில்லை. அவன் மாபியா குழுவைச் சேர்ந்தவன். அந்தக் காசை அவன் சம்பாதித்தது தீய வழியில். அவனது கையில் உள்ள சூட்கேசுக்குள் போதை மருந்து இருக்கிறது. அதை விற்று பணமாக்கும் எண்ணத்துடன் போகிறான்' என்றான் பரமசிவம. ஆவன் குறிப்பிட்ட மனிதன் கையில் ஒரு சூட்கேஸ இருந்தது. அவன் சொன்னது போல் சூட்கேஸ் எதிராக வந்த ஒருவனிடம் கைமாறியது. அவன் பதிலுக்கு சூடகேஸ் வைத்திருந்தவன் கையில் ஒரு பார்சலை திணித்தான். ஒரு வேளை பணமாக இருக்குமோ?

'உடனே பொலீசுக்கு போன் செய்யப் போகிறேன் நான்' என்றேன்;.

'அதைச் செய்யாதே பிறகு நாங்கள் இருவரும் வம்பில் மாட்டிக்கொள்வோம்' என்றான் சிவா.

'எனக்கு அங்கிருக்கப் பயம் பிடித்துவிட்டது. ' சந்திரா நீ ஒரு ஜீனியஸ். உந்தக் கருவியின் செயற்பாட்டை பொலீஸ் அறிந்தால் உனக்கு ஆபத்து ஏற்படலாம். அதனால் கவனமாக நட' என்றேன்.

'உன் உபதேசத்துக்கு நன்றி. இங்கு நடந்தது உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். என்ன?' என்றான்.

'அது சரி இன்னும் விளக்கத்தை சொல்லவில்லையே நீ'.

'மிகவும் இலகுவானது. ஒவ்வொருத்தருக்கும் இயல்பான அதிர்வெண் உண்டு. அவர்களின் மூளையில் இருந்து வெளிவரும் எண்ண அலைகளி;ன் அதிர்வெண்ணுடன் ஒத்த அதிர்வெண்ணை இக்கருவிமூலம் சுருதி சேர்த்தால் அவர்கள் மனதில் உள்ளதை அறியலாம். இதைத்தான் முறனாலத்தில் ஞானிகளும் பாவித்தனர். இது உனக்கு புதுமையாக இருக்கலாம். நடக்கக் கூடியதா என்றும் நீ யோசிக்கலாம். நடத்திக் காட்டிவிட்டேனே' என்றான் பரமசிவம்.

'சரி சரி வா போவோம். எனக்கு பசி வயிற்றைக் கிண்டுகிறது என்று அவனை அழைத்துக் கொண்டு புறப்பட்டேன். எனக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. பயமும் ஒரு காரணம். போகிற வழியில் சிவத்தை அவன் வீட்டில் இறக்கிவிட்டுச்சென்றேன். வீட்டுக்குள் நான் நுளைந்தது தான் தாமதம்

'என்ன இவ்வளவு நேரம். எங்கே போயிருந்தியள்' என்றாள் என் மனைவி.

'ஒன்றுமில்லை சிவத்தை சந்தித்தனான். அவனோடு பேசிக் கொண்டிருந்ததில் எனக்கு நேரம் போனது தெரியவில்லை. '

'அந்த விசரனோடை உங்களுக்கு என்ன கதை வேண்டியிருக்கு. உங்களையும் பயித்தியமாக்கி விடுவான்' என்றாள் கோபத்துடன் என் மனைவி. அவளுக்கு சந்திரனைப் பிடியாது.

'அப்படி சொல்லாதே. அவன் உனக்கு கிறுக்கனாக தோன்றலாம். ஆனால் அவனிலை விஷயம் இருக்குது' என்றேன் நான்

'சரி, சரி. கெதியிலை வாருங்கோ கால் முகம் கழுவிப்போட்டு சாப்பிட' என்று கட்டளையிட்டு விட்டு மேசைக்கு சாப்பாடு எடுக்கப் போய்விட்டாள்.

சாப்பாடு முடிந்து நான் படுக்கைக்குப்போக இரவு பத்துமணியாகிவிட்டது. என்னை சந்திரனைப்பற்றிய சிந்தனைகள் சுற்றிக் கொண்டிருந்தது. எவ்வளவு அதிமேதாவி அவன். அந்தக் கருவியை வைத்து எவ்வளவுக்கு பணக்காரன் ஆகலாம். ஏன் அவன் உருவாக்கிய வானொலி கூட விசித்திரமானது. அனால் அவன் போக்கு தான் எனக்கு புரியாத புதிராக இருக்கிறது...ஒரு வேளை பயங்கரவாதிகளுடன் அவனுக்கு தொடர்பு இருக்குமோ? சீ அப்படியிருக்காது.. என் மனதை தேற்றிக்கொண்டேன். அவனை நினைத்தபடி தூங்கிவிட்டேன்.


விடியற் காலை, பொலீஸ் சைரன் ஒலி என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பியது. நேரத்தை பார்த்தேன். காலை ஏழு மணி. ஏதோ விபத்தாக்கும் அது தான் பொலீஸ் சைரன் கேட்கிறது என்று மனதுக்குள் நினைத்படி மறுபக்கம் திரும்பிப் படுத்தேன். வீட்டின் முன் கதவில் யாரோ தட்டிக் கேட்டது. அரைத்தூக்கத்தோடு எழும்பிப் போய் திறந்தேன். வாசலில் இரு போலீஸ்காரர் நின்றார்கள்.

'மிஸ்டர் சந்திரன் என்பவர் நீர்தானா?' என்று கேள்விக் குறியுடன் என்னைப் பார்த்து கேட்டார்கள்.

'ஆம் நான் தான் சந்திரன் என்றேன் பதட்டப் படாமல்'

'தயவு செய்து எங்களுடன் ஜீப்பில் வரமுடியுமா?' என்றார்கள்.

'நான் எதற்காக வரவேண்டும் ?.ஏதும் பிரச்சனையா?' என்றேன் பதட்டத்துடன்.

'ஆமாம் உமது நண்பர் பரமசிவம் விஷயமாக' என்றார்கள்.

'பரமசிவமா. அவனுக்கு என்ன?. நேற்று தான அவனை சந்தித்தனான.;'

'வாரும் கெதியிலை. ஜீப்பிலை விஷயத்தை சொல்லுறம்' என்றான் அவர்களில் ஒருவன்.

'கொஞ்சம் பொறுங்கள் உடுப்பை மாற்றிக் கொண்டு வாறன்' என்று உள்ளே போனேன். மனைவிக்கு விளக்கம் சொல்ல எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. எல்லாம் வந்து சொல்லுகிறேன் என்று சுருக்கமாய் அவளுக்கு பதில் சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறி பொலீசாருடன் போனேன். போகும் வழியில் தான் சந்திரனின் வீடு அன்று அதிகாலை மூன்று மணிக்கு தீப்பற்றி எரிந்துவிட்டதாகவும், பரமசிவத்தின பிரேதம் எரிந்து கருகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் எனக்குச் சொன்னார்கள். '

எனக்கு அவர்கள் சொன்ன செய்தி அதிர்ச்சியைக் கொடுத்தது.
'அட கடவுளே! என்ன சிவம் இறந்துவிட்டானா? வீட்டுக்கு யார் தீ வைத்தது?' என்று என்னையறியாமலே கத்தினேனன்.

'அது தான் தெரியிவில்லை ' என்றார் ஜீப்பில் இருந்த ஒரு போலீஸ்காரர்.

எரிந்த சந்திரனின் வீட்டுக்கு முன்னால் ஜீப் போய் நின்றது. நல்ல காலம் பக்கத்தில் வேறு வீடகள் இல்லை. அங்கு வேடிக்கை பார்க்க ஒரு கூட்டமே நின்றது. மூன்று வான்களில் பொலிசார், தீயணைக்கும் படை , ஒரு அம்புலன்ஸ் வேறு நின்றன.

'வீட்டில் இருந்த குடும்பத்துக்கு என்ன நடந்தது என்று கேட்டேன். '

'அவர்கள் லீவில் போய்விட்டார்கள். நல்ல காலம் தப்பினார்கள் அவர்கள்' என்றார் ஒரு பொலிசார்.

எரிந்த சந்திரனின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. அவனின் மூடிய பிரேதத்தை அம்புலன்சில் ஏற்றிவிட்டதாக அறிந்தேன். அவன் எனக்கு காட்டிய அதிசயக் கருவியை என் கண்கள் தேடின. காணவில்லை. அவன் உருவாக்கிய வானொலியையும் காணவில்லை. என் மனதில் பலத்த சந்தேகம் உருவாகியது. இது நிட்சயமாக திட்டமிட்டு செய்த கொலை தான். யாரோ கொலையை மறைக்க வீட்டோடு பரமசிவத்துக்கு தீவைத்திருக்கிறார்கள். ஒருவேளை சந்திரனின் பரமரகசியம் கொலை செய்தவர்களுக்கு தெரிய வந்துவிட்டதோ?. பதிலைத் தேடி என் மனம் பரதவித்தது.