வண்ணான் குறி 

எஸ்.நளீம  

'போடியார்... போடியார்...' 

 சாய் கதிரையில் சாய்ந்துகொண்டு எதோ வாசித்துக் கொண்டிருந்த மாமா பார்வையை திருப்பினார்.

'பொடியனுகள் நம்மட மெசின கடத்திட்டுப் பெயித்தானுகள் போடியார் '

பதட்டத்துடன் ஓடிவந்த ட்ரைவர் கமர் சொல்லிக் கொண்டிருந்தான். கைகள் பட படக்க குரலும் தழு தழுத்தது பதட்டமும் பீதியும் கலந்து முகம் கறுத்துக் கிடந்தது.

 'வேல் முருகுக் கட்டாடிட மகன் இயக்கத்துல இருக்கானாமே அவன்தான் ஆயுதத்தோட வந்து நம்மட மெசின கடத்திட்டுப் போறான் போடியார்' என்று முல்லைக் காரன் முஸ்தபாவும் சொன்னபோது ஜீவாதாரமாய் எஞ்சியிருந்த அந்த ஒரு உழவு மெசினையும் பறி கொடுத்ததில் மாமா ஆடித்தான் போய்விட்டார் என்றாலும் வழமையான அமைதியில் இருந்து அவர் சற்றும் கலவரமடைய வில்லை. எப்படிப் பட்ட இழப்புகளையெல்லாம் சந்தித்த தனக்கு இது ஒரு இழப்பா என நினைத்து மாமா மனதைத் திடப் படுத்திக் கொண்டாரோ என்னவோ முகம் சற்று சிவப்பேறி இருந்தது அவ்வளவுதான்.

 'வேல்முருகுட மகனாடா ?'

'ஓம் போடியார் '

'நம்மட வேல்முருகு கட்டாடிட மகனாடா?'

மீண்டும் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்ட போதும்

'அவனா இருக்காதுடா'

என எளிதாகவே மாமா மறுத்து விட்டார்

மாமா விவசாயம் செய்யத் தொடங்கிய காலம் தொட்டு முஸ்தபாதான் முல்லை காரன்  .

உழவு மெசின் வாங்கியதிலிருந்து காமரு தான் 'ட்ரைவர்.'

இருவரிலும் மாமாவுக்கு கடுகளவேனும் சந்தேகமில்லைதான்.

என்றாலும் ஏன் மாமா நம்ப மறுக்க வேண்டும்...?

 மீன் பாடும் தேன் நாட்டின் கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசம் மூன்று பிரதான ஊர்களைக் கொண்டது. ஓட்டமாவடி வயிறு என்றால் வாழைச்சேனை தலையாகவும் மீராவோடை வாலாகவும் ஒரு பாலமீன்போல நீண்டு கிடக்கும். இந்த மீராவோடையின் தெற்கே கறுவாக் கேணி, கொண்டையன் கேணி ஊடாக இன்றைய அவலங்களை நினைந்தழுத கண்ணீர் போல ஓடி வரும் ஓடை மேற்கே காவத்த முனையை பிரிக்கும் மாதுறு ஓயா ஆற்றின் தலையில் வந்து விழும்.

இந்த ஓடையை மையமாக வைத்தே ஊருக்குப் பெயர் வந்ததாக இரண்டு கதைகள் உண்டு.

ஓடைக்கு அருகில் மீரா உம்மா என்றொரு ஆதிக் குடி வாழ்ந்ததாகவும் அப்பெயரும் ஓடையும் புணர்ந்து மீராவோடையானதாகவும் மாரிகாலங்களில் அடைமழை விடாமல் கொட்டினாலும் இந்த ஓடை எல்லை மீறி ஊருக்குள் பெருக்கெடுக்காததால் மீறா ஓடை என்று அழைக்கப் பட்டு

பின்னர் மீராவோடை ஆனதாகவும் சொல்வர்.

 ஒரு பக்கம் ஓடையும் மறு பக்கம் ஆறும் மூன்றாம் பக்கம் வீதியுமாக அமைந்த இந்த முக் கோணத் துக்குப் பெயர்தான்  'வண்ணார வட்டை' இங்கேதான் வேல்முருகின் வீடும் இருந்தது.

 அழகு கொஞ்சும் வண்ணார வட்டியின் அமைப்பும் வனப்பும் இப்போது அழிந்து போய் விட்டாலும் வண்ணார வட்டை பற்றிய நினைவுகள் பசுமையாய் இன்னும் அழியாமல் இருக்கிறது 'வண்ணான் குறி'போல.

மாமாவின் மகன் அமீனுக்கும் எனக்கும் இடையிலான நட்பு இன்றுவரை விசால மானது.

 சின்ன சைக்கிளில் மதரசாவுக்கு ஓதச் செல்வது முதல் பட்டம் விடுவது வளர்த்த கொக்குக்கு மீன் பிடித்துக் கொடுப்பது சின்ன 'போட்' செய்து ஓடையில் ஓடவிடுவது புயலுக்குச் சாய்ந்த புளிய மரத்தில் பூப் பறித்து கூட்டாஞ் சோற்றுக்கு சம்பல் சமைப்பது என அனைத்து விடையங்களிலும் நாங்கள் இருவரும் இணைந்தே இருப்போம். எனது வீட்டை விடவும் மாமாவின் வீட்டிலேயே அந்த நாட்களில் எனது பொழுதுகள் அதிகம் கழிவதுண்டு.

 'அமீன்... அமீன்....ரெண்டுபேரும் வேல் முருகுட வீட்ட போய் வாப்பா அவசரமா கொழும்புக்குப் போகணுமாம் என்டு கழுவின உடுப்பக் கொண்டு வரச் சொல்லிட்டு வாங்க...'

அந்த நாட்களில் மாதத்தில் ஒரு தடவையேனும் மாமாவின் குரல் இவ்வாறு ஒலிப்பதுண்டு. சொல்லிவிட்டு மாமா மறைய கையோடு கைதட்டி இருவரும் துள்ளிக் குதிப்போம்.

வண்ணார வட்டைக்குச் செல்வதென்றால் எங்களுக்குள் அப்படியொரு அலாதிப் பிரியம்.

 மாமாவின் வீட்டுக்கு முன்னால் பாலம். பாலத்துக்கு அருகால் செல்லும் ஒழுங்கையால் சென்று நிமிர்ந்தால் வண்ணார வட்டியின் வனப்பை கண்களால் பருகிக் களிக்கலாம் பசும் பாலை 'பவுசர்' களில் கொண்டு வந்து கொட்டி விட்டது போல நீர் அதில்  சவர்க்கார நுரையாலான சின்னச் சின்ன தாஜ் மஹால் மொட்டுகள் கரை ஒதுங்கும் .

இருகரையிலும் வெள்ளை வெள்ளையாய் வட்ட வட்டக் கற்கள் முழங்காலளவு நீரில் நல்லதம்பி, மயிலன் கட்டாடி, தெய்வம், கண்மணி பதக்கை என ஆண்களும் பெண்களும் கல்லோடு விளையாட எழும் 'சக், சக்என்ற சத்தம் மனதுக்குள் தாளம் கொட்டும். அதி காலைச் சூரியன் உதிக்க காகம் கரைவது போல, கோழி கூவுவதுபோல விசேடமாய் எங்களூரில் அந்தச் 'சக், சக்' கும் தவறாமல் கேட்கும். பாம்பு வேகத்தில் நகரும் நீரில் கால் வைக்க ஓடை கால்களில் கொலுசாகக்  குலுங்கும்

பாட்டமாய் வரும் பொட்டியான் மீன்களும் பால் மொன்காங்களும் செல்லமாய் விரல்களைக் கவ்வி கூச்சமூட்டும். மிதந்து வரும் பந்துக்காய் பொறுக்கி எறிந்து கிறுக்குத் தனமாய் விளையாட நீர் கலங்கி மயிலன் கட்டாடியின் ஏச்சோடு கரையில் கால் வைத்தால் வெள்ளைச் சீனிபோல குருத்து மண் காலில் ஓட்டும் .

அந்த வெண் மணல் மேட்டில் வான் மேகங்கள் சிறகுலர்த்தும் அழகாய் பாடசாலைப் பிள்ளைகளின் வெள்ளை ஆடைகள் விரிந்து உலரக் கிடக்கும்.

பட்டு மணலில் காலூன்றி கணுக் கால் புதைய நடந்து நிமிர்ந்தால் உடல் சில்லிடும் தேத்தா மரத்தின் நிழலால்.

 கோடை காலங்களில் ஓடையில் நீர்வற்றி ஓடை மெலிந்து எலும்புக் கூடாகிக் கிடக்கும் போதும் இவர்களின் பிழைப்புக்காக எதோ ஒரு சமூக நிறுவனத்தினால் அமைத்துக் கொடுக்கப் பட்ட நீர் தாங்கிகளும், கிணறும் அவ்விடத்துக்கு இன்னும் குளிர் சேர்க்கும்.

அங்கே நிதானித்து அவ்விடத்தை விட்டு அகல்கையில் கால் சட்டைப் பைகள் இரண்டும் உப்பித் தொம்மென்றிருக்கும் தேத்தம் கொட்டைகளால்.

அதை கிணறுகளில் போட்டால் நீர் குளிரடையும் என்பதோடு அந்த நாட்களில் நவிசுக் குரும்பையோடு சேர்த்து தேத்தம் கொட்டைகளையும் தின்றதான ஞாபகம்.

அங்கிருந்து சிறு தூரம் நடந்ததும் புளியடித் துறை வீதி. எதிரே ஒரே ஒரு கல்வீடு அது செல்லத் துரையின் வீடு .

அங்கிருந்து மூன்றாவது வீட்டுக்கு எதிர் வீடு வேல் முருகுக் கட்டாடியின் வீடுதான்.

'கேட்' இல்லாமல் மரக் குச்சிகளை நட்டுக் கட்டிய வேலி வாசலில் உயர்ந்து வளர்ந்த பெரிய செவ்வருத்தையும் இன்னும் மரங்களும் அதற்கருகில் நான்கு கம்புகள் நட்டு கோழிக் கூடுபோல சீலையால் அடைத்து ஒரூ பக்கம் திறந்தான அமைப்புக்குள் சாமிப் படம். பூக்கள் ஊதுபத்தி எரியும். அதைப் பார்த்துக் கொண்டிருக்க தைரியமின்றி ஓடி நடக்க வேல் முருகுக் கட்டாடி யின் வரவேற்ப்பு மகிழ்ச்சியை தரும்.

அங்கே போடியாருக்குரிய மரியாதை எங்களுக்கும் கிடைக்கும். முற்றத்தில் வெள்ளாவிப் பானை நெருப்புடன் கொஞ்சமும் ஒத்தாசை இல்லாத மகனை நச்சரித்துக் கொண்டே வேல் முருகின் மனைவி பெரிய வண்ணாத்தி அழுக்குத் துணியுடன் வேர்வை சிந்தி உழைப்பாள்.

வேல் முருகின் எங்கள் வயதை ஒத்த மகன் கருங்காலிக் கம்பு போல் கரு கருவென உடலுடன் கொஞ்சம் கூட கூச்சமின்றி முழு நிர்வாணமாய் நின்று எங்களைப் பார்த்து முறைப்பான்.

வேல் முருகுக்குத் தெரியாமல் ஒரு சுட்டு விரலில் மறு சுட்டு விரலை வைத்து அறுப்பது போல் பாவனை செய்து 'சுண்ணி வெட்டிய சோனி ' என்று ஜாடை காட்டுவான்.

 'வாப்பாவுக்கு அவசரமா உடுப்புத் தேவையாம் உங்களைக் கொண்டு வரட்டாம்'

அமீன் சொல்ல இருவரும் விடை பெறுவோம்.

மீண்டும் தேத்தா மரம் மணல் மேடு, ஓடை பால் மொங்கான் என விளையாடி வீடு வந்து சேர  கம கமக்க அயன் செய்து மடித்த ஆடைகளின் அடுக்கு மாமாவின் வீட்டு மேசையில் இருக்கும்.

சாம்பல் பூத்த நெற்றி இபெரிதான தாடி இல்லை என்றாலும் கிரமமாக 'சேர்வ்' செய்யாத முகம் சற்று நீளமாய் பின்பக்கம் கோதி விடப்பட்ட முடி, கண்ணுக்குக் கீழே கறுப்பாய் ஒரு மச்சம், வெள்ளை வேட்டி, திறந்த மேனி, தோளில் ஒரு துண்டு, சற்று வளைந்த உருவம், அறுபதை அண்மித்த வயது. இவை வேல் முருகுக் கட்டாடியை தெரிந்து கொள்ள சில குறிப்புகள்.   

ஏனோ மாமாவுக்கு வேல் முருகின் மீது ஒரு தனியான அன்பும், விருப்பமும் இருந்தது. மாமா மாமியிடம் அடிக்கடி கேட்டுத் தெரிந்துகொள்ளும் இரண்டு விடையங்கள் உண்டு.

வேல் முருகு வந்தானா, பீரிக்கு சாப்பாடு போட்டியா...? இந்த இரண்டுக்கும் மாமியின் பதில் ஆம் என்பதாகவே இருக்கும். ஒவ்வொரு பொங்கல் தினத்துக்கும் வேல்  முருகுக்கு ஒரு வேட்டியும் மனைவிக்கு ஒரு சாரியும் எடுத்துக் கொடுப்பதோடு ஒரு தொகைப் பணமும் வழங்குவது மாமாவின் வழக்கம்அத்தோடு வேல் முருகு உதவி வேண்டி வந்தால் வழங்கும் படி மாமியிடம் கண்டிப்பான உத்தரவும் இருந்தது. என்றாலும் வேல் முருகு அதைப் பயன்படுத்தி தொந்தரவு கொடுக்கவில்லை. அத்தியாவசியத் தேவைகள் தவிர வருடத்தில் ஒருமுறைவரும் 'நாக தம்பிரான்' கோவில் திரு விழாவுக்கு வசூல் பெற்றுச் செல்வார் அவ்வளவுதான். மாமா மீது வேல் முருகு கட்டாடியும் அப்படித்தான் நடந்து கொள்வார். மாமா எவ்வளவு எடுத்துச் சொன்ன போதும் மாமாவின் முன்னால் அமர்ந்திருக்க மாட்டார். தோளில் கிடக்கும் துண்டை கையில் எடுத்துக் கொண்டு எழுந்து நின்று நன்றியுணர்வோடு வாலில்லாமலே குழைவார். அத்தோடு பொங்கல் தினத்தில் பெரியதொரு பொங்கல் பொட்டலம் மாமாவின் வீட்டுக்கு வரும்.

மாமாவின் வீட்டில் பொங்கல் தின்பது குறித்து விவாதம் நடப்பதுண்டு.

'எங்களைவிட தமிழர்கள் சுத்தம் புதுப்பான, புது சட்டி வாங்கித்தான் அவங்க பொங்கிற' .

'என்னண்டாலும் சாமிக்கிப் படைச்சத தின்னக் கூடாது' என்ற இருபக்க நியாயங்களும் மொழியப்பட்டு இறுதியில் 'பிஸ்மி'ச் சொல்லாமச் சமச்சத தின்னப்படா என்பதே வேல் முருகின் வீட்டுப் பொங்கலை நிராகரிக்கப் போதுமானதாய் இருக்கும்.

பகலுணவு உண்ட கழிவுகளையெல்லாம் மாமி துப்பரவு செய்து அள்ளியெடுத்து ஒதுக்குப் புறமாய் நின்ற பலாவடியில் கொண்டுபோய் கொட்ட  பசியோடிருந்த பீரி உச்சுக் கொட்டி ரசித்துக் கொண்டிருந்தது.

 'புள்ள புள்ள' என்ற சத்தத்துக்கு குசினிக்குள் எதோ செய்து கொண்டிருந்த மாமி முற்றத்துக்கு வந்தார்வெயிலில்  திரிந்த களை தீர முற்றத்துக் கொய்யா மரநிழலில் குந்தி ஆசுவாசப் பட்டுக் கொண்டிருந்தார் வேல் முருகு.       

'எங்க கட்டாடி போன... நேத்து முந்தனாத்தெல்லாம் கானயுமில்ல '.

'கொஞ்சம் உடம்பு சரியில்ல புள்ள  அதான் '

'நீ..வராதது உடெல்லாம் ஊத்த உடுப்பாத்தான் கிடக்கு'

 என்றவாறு உள்ளே போய் கிடந்த ஆடைகளை எல்லாம் கொண்டுவந்து குவித்துக் கொண்டிருந்தா மாமி.

வேல் முருகு ஒரு சீலையை தரையில் விரித்து அதற்குள் அனைத்து ஆடைகளையும் அடக்கி முடிந்து தோளில் போட்டுக் கொண்டு,

'எல்லாம் 24 துண்டு இரிக்கி புள்ள. நான் வாறன்.'

'தேயில வச்சிருக்கன். குடிச்சிட்டுப் போ கட்டாடி

'இல்ல புள்ள. விடியக் கழுவின உடுப்பெல்லாம் மணல்ல கிடக்குமேயப்போன மாடாடு வந்திச்சுன்டா மிதிச்சுப் போடும்.'

சொல்லிவிட்டு வேல் முருகு விடை பெற்றார். மாமி மீண்டும் குசினுக்குள் நுழைந்து தின்ற பாத்திரம்களையெல்லாம் கிணற்றடியில் கொண்டு போய் போட்டு கழுவிக் கொண்டிருந்தா.

 உச்சி வெயில் சாய்ந்து கொண்டிருந்தது. பள்ளி வாசலில் அசர் தொழுகைக்கு பாங்கு சொல்லும் ஆயத்தமாக ஒலி பெருக்கி கரகரத்துக்கொண்டிருந்தது. தூக்கத்தில் இருந்த மாமா எழும்பி முகம் கைகால் அலம்பி பள்ளி செல்லத் தயாரானவர் அங்கும் இங்குமாகத் தேடிவிட்டு,

 'மரியம் பீபிட உம்மா... மரியம் பீபிட உம்மா ..' மாமா மாமியை அழைப்பது அப்படித்தான்.

'முல்லைக் காரன் கொண்டு வந்த காசி பத்தாயிரத்தையும் எடுத்து வச்சியா?' 

'நான் காணல்ல அங்கதான் வெச்சிருப்பீங்க நல்லாத் தேடிப்பாருங்க'

 கிணத்தடியில் இருந்தவாறே குரல் கொடுத்தா மாமி. மீண்டும் தேடி ஏமாந்த மாமா

'அங்கேயே குந்திக் கொண்டிரு. வந்து தேடிப் பாக்காம'

சற்று கடினமானது மாமாவின் குரல்.

 'நான்  என்ன சும்மாவா இருக்கன் உட்டுட்டு வந்தா இங்கே  எல்லாத்தையும் நாய் மூச்சு உட்டுரும். திரும்பவும் நான்தானே கழுவனும்.

மாமி அலுத்துக் கொண்டார். தொடர்ந்து மாமாவின் குரல் தடித்துக் கொண்டிருந்தது. அதற்கு மாமியின் பதிலும் எதுவாக இருந்தது.

'புள்ள ....புள்ள..'

உள்ளே அங்கும் இங்குமாக பணத்தைத் தேடிக்கொண்டிருந்த மாமா வெளியே வந்தார். வேல் முருகு கையில் பணத்துடன் நின்றுகொண்டிருந்தார். அப்போதுதான் தான் வெளுக்கப் போட்ட சேர்டுகளின் பைகளை கவனியாமல் கவனயீனமாக நடந்து கொண்டது மாமிக்கும் உறைத்தது.

 'புள்ள கழுவப் போட்ட உடுப்புக்குள்ள பத்தாயிரம் பணம் இருந்திச்சி போடியார்.' சாதாரணமாகவே மாமாவிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வேல் முருகு சென்று விட்டார். மாமியின் கவனயீனம் காரணமாக வேல் முருகுக்கு இதே போன்று பல முறை நேர்ந்திருக்கிறது. இப்படியாக வேல் முருகின் நேர்மையுடனும் விசுவாசத்துடனும் மாமாவுக்கிருந்த நம்பிக்கையின் விசாலம்தான் வேல் முருகின் மகன்தான் மேசினைக் கடத்திச் சென்றான் என்ற உண்மையை கடைசி வரை நம்பாமலேயே மாமா மௌத்தாகவும் போய் விட்டார்.

 

naleemart@gmail.com