வரம் தா தேவி

மன்னார் அமுதன்

ஆழி தமிழ்மொழி - அதன்
அடி நுதல் அறியேன்
பாடிப் பரவசம் கண்டதால் நானும்
பாவினைத் தொழிலாய் ஆக்கினேன் தேவி

பாடுதல்இ ஆடுதல்இ கூத்தினைப் பயின்றே
பாக்களை ஆக்கினேன் பயனென் மாதா
மாடுகள் கூட மந்தையாய் வாழ - என்
மக்கள் மட்டுமேன் மறந்தனர் கூடல்

வாழிய நின் புகழ் தமிழ்த் தாயேயுன்
கூரிய மொழியின் கொற்றம் வாழ்க
பாவலன் எழுத்தினால் பார் மாறாது
பாடற் கரசி நீ வரமருள்வாயோ

வரங்கள்:

சாதனைகள் ஆயிரம் நாம் படைக்க வேண்டும் - மக்கள்
வேதனைகள் பொடிப்பொடியாய் உடைக்க வேண்டும்
பாதகர்கள் செயல்களையே படிக்க வேண்டும் - பாட்டால்
பயத்தினிலே அவர் இதயம் துடிக்க வேண்டும்

இல்லற இன்பங்கள் நிறைய வேண்டும் - நாட்டில்
இனிய தமிழ்க் குழந்தைகள் பெருக வேண்டும்
நல்லறத்தை நம்மவர்கள் அறிய வேண்டும் - எவர்க்கும்
நலம்தரும் செயல்களையே புரிய வேண்டும்

சோதனைகள் எம்மைச் சீர்தூக்க வேண்டும் - வாழ்வில்
சோர்வென்ற சொல்லை நாம் நீக்க வேண்டும்
பார் போற்றும் பண்புடனே வாழ வேண்டும் - அயலில்
பசித்தோரைக் கண்டு உளம் நோக வேண்டும்

புசிக்கையிலே பசித்தவர்க்கும் ஈய வேண்டும் - ஊர்வாய்ப்
புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் தாங்க வேண்டும்
சில நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் - கவிதையால்
பல கோடி நல்லிதயம் ஆள வேண்டும்




amujo1984@gmail.com