நெருப்புக்குரல் எழுப்பிய கறுப்புக்குயில் (1891- 04-29)

முனைவர் ச.சந்திரா



பாட்டுக்கொரு புலவன் பாரதியின் சீடன்
புதியதோர் உலகம் படைத்த புதுமைகவிஞன்
மூடத்தனத்தின் முதுகெலும்பை முறித்த மூத்த கவிஞன்
முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முரட்டு கவிஞன்
இல்லாமைக்கும் இருப்பிற்குமான இடைவெளி கண்டவன்
இளமையில் பரிமாறும் அன்பைச்சொல்ல
அவனியில் பலகவிஞர்கள் இருக்க
'முதுமையில் அன்பு' பாடிய முத்தான கவிஞன்
சுயமரியாதை கொள்கைக்கு சுடர்விளக்கு ஏற்றியவன்
சமத்துவ சமுதாயத்திற்கோ சாமரம் வீசியவன்
விடுதலை வேள்வி இயற்றிய வித்தகன்
இயற்கை வில்லில் பொதுவுடைமை எனும்
அம்பை எய்தி சமூகம் சாடிய சாமர்த்தியவாதி!
சமுதாயத்தின் கறை குறை களைந்தெறிந்த
சாகாவரம் ப்ற்ற சாமானிய கவிஞன்
அகிலம் முழுவதையும் அழகின் சிரிப்பில்
அடக்கிய அபூர்வ கவிஞன் இவன்!
அவலத்தைக் கருவாக கொண்டு
அற்புத கவிதை படைத்த அரியகவிஞன்!
கண்ணில் கனல் சிந்தும் பெண்ணைக்
காவிய நாயகியாகப் பாடிய கவின்மிகுகவிஞன்
பெண்ணுரிமைக்கென செங்கோல் ஏந்திய
பேராண்மைக்கவிஞனும் இவனே!
புவியை நடத்து!அதுவும் பொதுவில் நடத்து !என
அன்பு கட்டளையிட்ட அருமைகவிஞனும் இவனே!
மனிதசக்தியை மதித்த மாண்புறுகவிஞன்!
பிறநத நாள் - நினைவுநாள் என்றில்லாமல்
போட்டி பரிசுகளுக்காக மட்டுமல்லாமல்
பாவேந்தனை நினைவுகொள்ளுவோம் எந்நாளும்!





neraimathi@rocketmail.com