பிணமென்றே பெயர் வைத்தேன்

வித்யாசாகர்

பிணங்களின் எரியும் புகையில்

புகுகிறது பள்ளி சீருடைகள்;

 

பிணங்களின் அழுகிய நாற்றத்தில்

மறந்தன மரண பயம்;

 

பிணங்களின் முறிந்த உறுப்பில்

முடங்கின உயிர் பறித்த வலி;

 

பிணங்களின் தெருவோர குவியலில்

அறுந்தன உயிரின் ஆசை;

 

பிணங்களின் பிணமென்னும் பெயரில்

கிடக்கின்றன எம் - வீரமும் உறவுகளும்;

 

பிணமென்றே பெயர்வைத்தேன்

வேறென்ன எம்மக்கள் -

பிணமாகிப் போகவே படைத்தாயே

 

வெடித்த குண்டுகள் வீரம் பேச 

உழைத்த உழைப்பெல்லாம் மண்ணாய் போக

பயமும் கதறலுமாய் பதறித் திரிந்த உடம்புகளில் -

ஈக்கள் மொய்க்க..,

எலும்பு கடித்து நாய்கள் திரிய..,

உடம்பு காட்டி என் தமிழச்சிகள் கருக..,

வெட்டிசாய்த்த மரம் போல -

எம்மக்கள் வீழ்ந்து குவிந்திருப்பதை கண்டாயோ?

 

பற்றி எரிகிறது மனம்

வெறும் படமென்று எண்ணி

உச்சு கொட்டி போகிறது உலகம்

 

மறந்தோர்  மறந்து

வலித்த உணர்வுகளையும் தொலைத்து

மிச்சம் மீதிக்காய் அழுது -

வெறும் வரலாற்றில் கணக்காகிப் போயினறே என்மக்கள்;

 

வேறென்ன சொல்ல எமை -

முடிவில் -

பிணமென்றே பெயர் வைத்தேன்; அதில்

என்னையும் பூட்டிவைத்தேன்!!



vidhyasagar1976@gmail.com