நந்தவனக்காரன்

வேதா. இலங்காதிலகம்.  டென்மார்க்.

விழியில் விழும் காட்சிக்கு
வானவில் விதானமமைத்து
வித்தியாச நோக்குத் தேடுவான்.

வான், நீர் கடலெனும்
வசந்த இயற்கை வாசலால்
வளமாய் மகிழ்ந்து நடமிடுவான்.

கரடு முரடுப் பாதையிலும்
நெருடும் மனதைச் சீராக்க
வருடித் தமிழ் மலர் தூவுவான்.

மௌனம் என்ற தோழியுடன்
மாயங்கள் பின்னி வாழ்வின்
சாயல்கள் மாற்றி மகிழ்ந்திருப்பான்.

சோகம் துடைக்க மொழியிலே
மேகத் திரைகள் போட்டு
மோகச் சல்லாபம் செய்வான்.

கழி மண்ணில் பொம்மை செய்து
களிக்கும் குழந்தையாய் மொழி
நந்தவனமமைத்து களிக்கிறான் கவிஞன்.


kovaikkavi@gmail.com