அதிரவைக்கும் எந்திரன் ( திரை விமர்சனம்)

வித்யாசாகர்

லகத்தின் வாசலை
எனக்காய் திறந்து விட்டுக் கொண்ட ஒரு சந்தோஷம்..

ஒரு தமிழனின் வெற்றியை
உலகின் நெற்றியிலெல்லாம் திறமையால் ஒட்டிவிட்ட ஒய்யாரம்..

ஒரு சாமானியனின் முயற்சிக்கு
ஒரு படைப்பாளியின் கனவுக்கு கிடைத்த கம்பீர பரிசு..

ஒரு வண்ணக் கனவிற்கு வாய் முளைத்து கைமுளைத்து
தன்னை கணினியில் புகுத்தி -
மீண்டும் கணினியிலிருந்து புதியதாய் பிறந்து
மொழி கடந்து இனம் கடந்து உலக உருண்டையை வலம்வர செய்த
ஒரு கணினி திரை காவியம்..எந்திரன்!

ரஜினி என்ற மந்திரத்தின் சக்தியை மறக்கடித்த
சங்கர் எனும் திறமைசாலியின் -
ஒரு நல்ல பிரம்மிக்கத் தக்க படைப்பாளியின்;
மோதிரப் படைப்பு..எந்திரன்!

எதையேனும் செய்வேன்.. செய்வேனென்று தேடி
தடுக்கி விழுந்த இடமெல்லாம் தெரியும் குற்றங்களை
தன் திரை சித்திரமாய் தீட்டியவர் - சற்று குற்றங்களை மறந்து
நம் வல்லமையை உலகிற்கு காட்ட இரவுபகல் பாராது
ரசனை; சொட்ட சொட்ட உழைத்த உழைப்பு..எந்திரன்!

கொடுத்ததை கொடுக்கும் கணினியின் சிந்தனையில்
கொடுக்காததை எல்லாம் நினைக்கும் 'மனதின் உணர்ச்சி புகுத்திய
ஒரு ஒற்றை மனிதனின் ரசனை ஜாலம்;
அந்த ஒற்றை மனிதனின் ரசனை ஜாலத்திற்கு - மொத்த
குழுவும் ஒத்துழைத்த உழைப்புப் பொக்கிஷம்..எந்திரன்!

ஒரு பெண்ணின் அழகை -
மனசு கொச்சையுறாமல் ரசிக்க வைத்த வித்தை;
அசைந்து அசைந்து அவள் நகரும் ஒவ்வொரு துளியிலும்
ஆண்களின் இதயத்தை ஸ்ட்ரா போடாமலே உறிஞ்சி குடிக்கும்
ஆட்டம் பாட்டு அட்டகாசம்.. எந்திரன்!

ஒரு அடடா... எனும் அலுப்பினை கூட
தமிழச்சி அச்சு மாறாமல் காண்பித்த நடிப்பின் அபாரம்,
காமத்தை உடலெல்லாம் புதைத்துக் கொண்டு -
கண்களில்; கோபத்தையும் காதலையும் புன்னகையாய் பூக்கும் ஒரு
இந்திரஜால திகைப்பு, எந்திரன் கதாநாயகி...யின் உழைப்பு!

ஒரு சாதனை நாயகனின் வெற்றி ஏக்கத்தை
தோல்வியின் வலியை, கோபத்தை, கருணையை, பயத்தை,
பொறாமையை, காதலை, ஸ்டெயிலை.........
இத்தனை வயதிலும் காட்டும் வசீகரனின்
ரஜினி என்னும் - நல்மனதின்; நம்பிக்கையின், பலன்..எந்திரன்!

நடனத்திலிருந்து சண்டை காட்சியிலிருந்து
கைசுழற்றி பேசிடாத வசனம் வரை -
இயக்குனர் சொன்ன பக்கமெலாம் திரும்பி நின்ற ரஜினியின்
உழைப்பும் நம்பிக்கையும் ஒரு கண்ணிய படைப்பாளிக்கு அவர் தந்த
மதிப்பும் தொழில்பற்றும் ரஜினியை ரஜினி என்று ஒப்புக் கொள்ளவைக்கிறது
இந்திரனின் இரண்டாம் பாகத்திற்கு அச்சாரம் போடச் சொல்கிறது!

படம் முடிந்து வெளியே வருகையில்; ரோபோடா.. ரோபோடா... இது ரோபாடா...
தமிழன் ஜெயிச்சாண்ட.. ஜெயிச்சாண்டா...
தமிழன் தமிழன் ஜெயிச்சாண்டா... என்று மார்தட்ட வைக்கிறது -
இசை புயலின் வேகமும் 'அழகில் மொத்தமும் நீயா..எனும் ரம்யபாடலும்..
இன்னும் நிறைய இடங்களுமென நிறைகிறான்.. எந்திரன் மனதிற்குள்!

கிளிமாஞ்சாரோ பாட்டின்; அரிமா அரிமா.. பாட்டின்
ஒவ்வொரு காட்சியிலும் தயாரிப்பாளர் இயக்குனருக்கு தந்த சுதந்திரமே
இப்படத்தின்; ஒரு உண்ணத கலைஞனின் 'திறமையின் சவாலுக்கான
வெற்றியின் திறவுகோல் என்பதை -
மறைக்காமல் ஒப்புக்கொள்ள வைக்கிறது.. எந்திரன்!

உலகத் தரத்திற்கு பிரம்மாண்டத்தை மட்டுமே எடுத்து
அதற்கு பல ஆஸ்கார் விருதுகளை கொடுத்துக் கொண்ட அந்நிய தேசத்திற்கு
'உன் பிரம்மாண்டத்திற்கு சற்று என் உணர்வுகளை தருகிறேன்,
எங்களின் மண்ணின் உணர்ச்சியை தருகிறேன் பார் என்று
ஒரு தமிழன் அடித்த உணர்வு பறை; பறைசாற்றிய வெற்றி;
என்னாலும் எங்களாலும் உன்னலவிற்கு உழைக்க முடியும்,
உன்னை மிஞ்சி நிற்க முடியும் என்று -
இந்திய வாசலில் நின்று ஒரு தமிழனும் தமிழர் கூட்டமும்  காட்டிய
வீரிய வீராப்பு - ஒரு பிரம்மிக்க தக்க படம்.. எந்திரன்!

தமிழகம் தாண்டி -
இந்திய திரையுலகை சற்று அதிர்ச்சியோடு பார்க்கவைத்து
ஒரு பிடி அதன் தரத்தை வெற்றிகளின் போராட்டத்தை -
தொழில்நுட்ப நூதனங்களை அறிவியல் ஆதாரபூர்வத்தோடு
அறிவின் மேன்மையோடு சற்று மேலேற்றி விட்டுவிட்ட சாதனை..எந்திரன்!

ஆங்கிலம் புரியாத மொழிப்படங்களை
என் கிராமத்து கொட்டகையில் அமர்ந்து வாய்பிளந்து பார்த்த
எனை போன்றோருக்கு -
அதே என் கிராமத்து கொட்டகையில் அமர்ந்து
புரியும்; இனிக்கும்; என் அழகு தமிழில் பார்த்து ரசிக்கக் கிடைத்த
அதே; அனகோன்டா வரிசைகளை உடைத்துப் போட்ட -
முதல் தமிழ் படம்.. எந்திரன்!

பார்ப்பவர் ஆயிரம் பேசலாம்
தன்  எண்ணத்தில் வந்தவாறு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்,
இதிலாவது என் தமிழன் வென்றான் என்று நான்
மனதார ஒரு நிம்மதி மூச்சுவிட்டு - மூன்று மணிநேரத்தை
என் வரவுக் கணக்கில் எழுதிக் கொண்டேன்..,

ஒரு 'இந்தியன்' படமெடுத்தார் - சங்கர்
லஞ்சத்தின் புரட்சி இந்திய எல்லை வரை தொட்டது,
அந்நியன்  படமெடுத்தார் -
அங்குலம் அங்குலமாக எம் தவறுகளின் அவலம் காட்சியாகி
உலகின் கடைகோடி தமிழனையும் இந்தியனையும்
இதலாம் தவறு தானே என்று சிந்திக்க வைத்தது,
இப்பொழுது எந்திரனை இயக்கி -
உலகின் கண்களில் என் தமிழன் கலைதிறனை காட்டி
ஊசிவைத்து குத்தாமல் உச்சுகொட்டவைத்து -
என் மண்ணில் விதைக்க கணினியை விதையாக்கி
பல கனவுகளை நாடாவாக நட்டு - நாளைய பல பிரம்மாண்டத்தின்
இன்றைய முதல் புள்ளிகளாகிவிட்டனர் சங்கரும்.. அவர் குழுவினரும்..

பாடல் வரிகளில் நியூட்டனை அழைத்து
வசனத்திற்கு வசனம் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்து
நம் பொன்னான நேரங்களை எழுத்தாக கரைத்துக் கொண்ட
கவிப்பேரரசு, ஐயா சுஜாதா மற்றும் ஏனைய எழுத்தாளர்களுக்கும்
நம் அன்பிற்குரிய ரஜினிக்கும்,
உலகின் அழகுகளின் அழகுதேவதை ஐஸ்வர்யா ராய் அவர்களுக்கும்,
வெள்ளித்திரையில் மட்டுமே சென்று பார்க்க தன் இசைதிறனால்
கட்டாயப் படுத்தாது கட்டாயப் படுத்திய .ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும்,
மற்றும் இணை இயக்குனர்கள், சில காட்சிகளில் வந்தாலும் சிரிக்க வைத்த கருணாஸ்,
சந்தானம் மற்றும் சண்டை காட்சி, ஒளிப்பதிவு, காட்சிசீரமைப்பு,
நடன இயக்கம், கட்ட்டிடக் கலை, ஒப்பனை, இடம் தேர்வு செய்த குழு,
இன்ன பிற உதவியாளர்கள்,
கைகாட்டிய இடத்திற்கெல்லாம் கொண்டு சேர்த்த வாகன ஏற்பாடு போன்ற
திரையின் பின்னால் உழைத்த அத்தனை பேருக்கும்,
இவர்களை வழி நடத்திய சரித்திர நாயகன் சங்கருக்கும்,
இந்த மொத்த பேருக்குமே ஒரு உயர்ந்த வாய்ப்பினையளித்த
கலாநிதி அவர்களுக்கும் நம் மனமார்ந்த பாராட்டினை -
எந்திரன் - பாகம் இரண்டு' எடுக்குமளவு வெள்ளித் திரையிலேயே காட்டுவோம்!

தமிழ் திரையின் ஒரு உச்சபட்ச கதவினை தன்
வியாபார அறிவினால் திறந்து நம்பி -
என் தமிழரின் திறமையை ஒரு திரைபடத்தின் வாயிலாக
உலகரங்கம் வரை கொண்டு சென்ற கலாநிதிமாறனுக்கு என்
மனம் நிறைந்த நன்றியை சமர்பித்து -
இப்படத்திற்கென உழைத்த அத்தனை பேருக்குமே -
அத்தனை ஆஸ்கார் கிடைத்த மகிழ்வினை பரிசாக்கி
ஒருவேளை, இப்படத்திற்கு அவ்விருது கிடைக்காவிடில் 'இனி
அதை விருதென்றே எண்ண மறப்போம்; முடிந்தால் மறுப்போம்!

இதுபோன்ற உழைப்பின் திரைசித்திரங்களுக்கு மீண்டும் நம் கனவினையே
விருதென எண்ணி உலகின் மொத்தபரப்பிலும் விரிப்போம்!

தமிழிலேயே பார்க்க தகுந்த ஒரு உலகத் தர திரைப்படத்தை கைதட்டி வரவேற்போம்!!




vidhyasagar1976@gmail.com