இக்கரைக்கு அக்கரை

பத்மாஷனி மாணிக்கரட்னம்,  ஜேர்மனி

இக்கரைக்கு அக்கரை.....?
எண்ணமதில்
துணிவுடையார்க்கு
இதிலில்லை
அக்கறை.
இருக்கும்
கரையொன்றே
எப்போதும்
என்கரை
என்பதொன்றே
எண்ணமானால்
இனியெதற்கு
மறுகரை?
தாவுகின்ற
மந்தியாய்
மனந்தனைப்
பாயவிட்டு
அதுவா
இதுவாவென
தடுமாற்றமது
கொண்டு
மறுகரையை
எடைபோடும்
மடமையினை
மறந்து
உள்ளுவதெல்லாம்
உயர்வுள்ளலென
வாழ்வோர்க்கு
வாழுமிடமும்
வளமீந்து
நலஞ்சேர்க்கும்
இலையுதிர்
காலத்தில்
வெறுமையான
மரங்களெல்லாம்
இருக்குமிடத்தில்
நிலைகொண்ட
உரம்மாறா
உறுதியினால்
இன்னொரு
வசந்தமங்கு
இடந்தேடி
வருகின்றன....
காலமது
மாறும்போது
கலைந்துசென்ற
பறவையினம்
வசந்தமது
மலரும்வேளை
வாழ்வுக்காய்
மீண்டும்;;வருகின்றன.
மனமுண்டானால்
இடமுண்டென்பதனை
மறுப்பின்றி
மனதிலேற
இக்கரைக்கும்
அக்கரைக்கும்
ஏதுமில்லை
பேதமென
இக்கரையில்
அக்கறையொடு
அமைதியாய்
வாழ்ந்திடுங்கள்.



pat.manick@googlemail.com