நீயில்லாத பயணங்களில் 

மன்னார் அமுதன்                               
                                           
நீயில்லாத பயணங்களில்
முழு
இருக்கையில்
முக்கால்
இருக்கையை
எவனோ
ஆக்கிரமித்துக் கொள்கிறான்

எவனையோ 
அலைபேசியில்
அழைத்து
ஆரிப்
நல்லவனென
நற்சான்றழிக்கிறான்

இரால் வடையையும்
இஞ்சிக்
கோப்பியையும்
சத்தம்
கேட்குமாறு
சப்பித்
தின்றுவிட்டு

உன்னைச் சுமந்த
என்
தோள்களில்
தூங்கிப்
போகிறான்

பேய்க்கனவு கண்டதாய்
திடுக்கிட்டு
கடை
வாய் எச்சியை
என்னில்
துடைத்துக்கொண்டே
மீண்டும்
அலைபேசுகிறான்

யாரோ ஒருத்தியையும்
அவள்
தாயையும் 
தமக்கையையும்
வார்த்தைகளால்
கற்பழிக்கிறான்

எதுவுமே உறைக்காமல்
உனக்குப்
பிடித்த 
சாளரக்
கம்பிகளில்
முகம்
புதைக்கிறேன்

என்னைப் போலவே 
உணர்வற்று
 
பள்ளம்
, மேடுகளில்
ஊர்கிறது
பேருந்து


amujo1984@gmail.com