என் எல்லாமாய் ஆனவளே

வித்யாசாகர்

மினுக்கும் தங்கத்தில்
சிணுங்கி
பிறந்தவளோ,
ஒரு
சிங்கார சிரிப்பிற்குள்
எனை
உயிரோடு கொள்பவளோ

கடக்கும் பொழுதெல்லாம்
எனை
காதலால் குடிப்பவளோ,
ஒரு
கையளவு மனசாலே -
எனை
காலத்திற்கும் சுமப்பவளோ

தொடும் காற்றோ
தொடாது
சிலிர்க்கும் பூவிதழோ,
உள்புகும்
ஆசை நெருப்போ -
உயிர்வரை
பதிபவளோ

உணர்வுகடலில் உயிர்த்தெழுந்த
ஒற்றை
பாடலின் ரெட்டை அர்த்தமோ
எதுவாகியும்

எனக்காய்
வாழ்பவளோ

கடலோர மணற்பரப்பாய்
மனசெல்லாம்
நிறைந்தவளோ,
நான்
தொட்டிடாத ஒரு கணத்தில் -
கவிதையாய்
சிலிர்ப்பவளோ

கடைத்தெரு நடக்காமல்
முகத்தில்
தாவணி வீசிய புன்னகையோ,
கனவுகளுக்குள்
புகுந்து பகலை -
இருட்டிற்குள்
தொலைப்பவளோ

காற்றிடம் பேசி எனை
தென்றலாய்
தறிப்பவளோ
நதியிடம்
சொல்லிக் காதலை -
இதயக்
கடலுக்குள் கரைப்பவளோ

மனசெல்லாம் பல் தைத்து
ஒரு
ஓரப் பார்வையில் தின்பாளோ,
ஒரேயொரு
யுத்தம் செய்தேனும் -
என்னை
ஏழுபிறப்பிற்கும் கொள்வாளோ

தென்றலோ  நிலவோ மலரோ
 எல்லாம் கடந்தவளோ
நீ
இவை
ஏதுமற்ற காதலியோ -
எனக்கே
எனக்காய் பிறந்த நீ –  என் எல்லாமாய் ஆனவளோ!!

 


vidhyasagar1976@gmail.com