காற்றுவெளியில் காத்திருப்பு...

இராமசாமி ரமேஷ் , அளம்பில், முல்லைத்தீவு.

காற்றுவெளியில்
என் கவிதைகளை
உலவிவரச் செய்கிறேன்
ஏனெனில்...
சிலவேளைகளில்
நீ வானில்
வலம் வரும்போது
அவைகளை இரசிக்கக்கூடும்
என்பதினால் சகியே...

அந்திமப் பொழுதுகளில்
அஸ்தமனத்தை இரசித்தவாறு
கடற்கரைகளில் காத்திருக்கிறேன்...
ஏனெனில்...
நீ மேனிமிளிர
வெண்பஞ்சு மேகங்களிடையே
மிதந்துவந்து
என்னுடன் சங்கமிப்பாய் எனும்
நம்பிக்கையில்...

சந்தனங்களையும்
சங்குகளையும்
உனக்காய் சேமிக்கிறேன்...
நீ
பாலருந்த சங்குகளும்
பள்ளிகொள்ள
சந்தனமுமாய் இருக்கவே தோழி...

வெள்ளி நிலவே...
நீ
என்னில் நிறைந்திருந்து
காதல் செய்யச் சொல்கிறாய்
இந்த பிறப்பில்
இருவரும்
இணையாது போனால்
இனிவரும் மறுமைகளிலும்
உன் நினைவுகளோடே
வாழ்ந்திடுவேன்...
நிலவின் காதலன் எனும்
அடைமொழியோடு....

       

ramasamy.mullai@gmail.com