அந்த நாளின் வருகைக்காய்...

இராமசாமி ரமேஷ் , அளம்பில், முல்லைத்தீவு.

நீ உதைத்த போதெல்லாம்
உள்ளம் மகிழ்ந்து
உணர்வுகளோடு வாழ்ந்தபடி
நீ
கைகளில் தவழும்
நாளுக்காய் காத்திருந்தேன்

என்
ஜீவநாடியை அடக்கி
உன் வருகையின்
வலியைப் பொறுத்துக்கொண்டு
பூரிப்படைந்தேன்
உன் பூமுகத்தை
தரிஷிக்கப் போகும் திருப்தியில்...

என்
உணவுதனை சுருக்கி
உன் பசிக்காய்
ஓய்வில்லாமல் உழைத்தேன்
தந்தையில்லா வலி
உனக்கு
வந்துவிடக்கூடாதென்று...

நீ
வாலிபம் தரித்தபோது
உன் வாழ்க்கைக்காய்
என் முதுமையைப் பாராது
கல்விக்கும் செலவுக்கும்
விழி மூடாமல்
வழி தேடினேன்...

என்
எதிர்பார்ப்பைக் கலைத்து
என்னவள் இவளென்று
நீ காட்டிய பெண்ணை
சேர்த்து வைத்தேன் உன்னோடு
விருப்பப்பட்டு விட்டாயே
என்பதினால்...

குடியிருந்த வீட்டையும்
சோறு போட்ட நிலத்தையும்
கூறுபோட்டேன் உனக்காக
என் பிள்ளை
வசதியாக வாழ வேண்டும்
என்பதற்காக...

நீயோ...
தலைநகரம் ஓடினாய்
தொழில் செய்தாய்
கை நிறையச் சம்பாதித்தாய்
மழலைகளைப் பெற்றெடுத்தாய்
மனநிறைவோடு வாழ்கிறாய்;...

நான்
உன் உழைப்பையோ
உனதான சொத்துக்களையோ
கேட்கவில்லை...

ஒருதடவை
ஊர்வந்து
அம்மா என அழைத்து
ஒருவேளை ஒன்றாக
என்னோடு உணவருந்தினாலே
போதுமடா மகனே!
போதும்...!

அதற்காகத்தான்...
இத்தனை நாட்களாய்
பிரியப்போகும்
என்னுயிரைப் பிடித்தபடி
காத்திருக்கிறேன்...
நீ வரும்
அந்த நாளுக்காய்...!

    

ramasamy.mullai@gmail.com