கறுப்பு யூலை

வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.

இனக்கலவரத்தில் அன்று நீராடி
இன்னுயிர் காக்கச் சுழியோடி
தினம் தினம் மனதில் பயமோடி
வாழ்ந்தது சில காலம் வெறுப்போடி.
ஆடிக் கலவரங்களால் மக்கள்,
திரண்ட செல்வம், மனையெரிப்பு,
திருவான அங்கங்கள், கற்பு இழந்து
பெருவாரி உயிரும் அறுவடையானது.

தின்னவேலியில், வெலிக்கடையில்
திசையெங்கணும் தமிழருக்குத் துன்பம்.
கசையடி, கொலையென இனத்துவேசம்.
எம் இனம் சனத்தை ஒதுக்கும்
இனசங்காரப் போர், அரசின்
இனச் சுத்திகரிப்பு இயக்கத்தின்
உச்ச கட்டம் கறுப்பு யூலையென
இனம் காணப்பட்டுள்ளது.

திக்கெங்கும் புலம்பெயர் தமிழர்
துருப்புச் சீட்டாகத் தம் வசதிகளையாக்கி
விருப்புடன் நம்மின விடுதலைக்குத்
திறப்பாகப் பாவித்தல் ஒரு நல்ல
பொறுப்புடை வாய்ப்பு என்றும்,
நெருப்பாயெரியும் காலம் வெறுப்பு
கறுப்பு யூலையென கூறுமிது விடுதலைத்
திருப்பு முனையாக மாறிடவும் கூடும்.


vetha@stofanet.dk