மீன்குஞ்சுகள்

துவாரகன்

கண்ணாடித் தொட்டியில் இருந்த
மீன்குஞ்சுகள்
ஒருநாள் துள்ளி விழுந்தன

மாடுகள் தின்னும்
வைக்கோல் கற்றைக்குள்
ஒளிந்து விளையாடின

வேப்பங் குச்சிகளைப்
பொறுக்கியெடுத்து
கரும்பெனச் சப்பித் துப்பின

வயலில் சூடடித்து நீக்கிய
'பதர்' எல்லாம்
பாற்கஞ்சிக்கென
தலையிற் சுமந்து
நிலத்தில் நீந்தி வந்தன

வீதியிற் போனவர்க்கு
கொல்லைப்புறச் சாமானெல்லாம்
விற்றுப் பிழைத்தன

திருவிழா மேடையில் ஏறி
ஆழ்கடல் பற்றியும்
அதன் அற்புதங்கள் பற்றியும்
நட்சத்திரமீன்களின் அழகு பற்றியும்
அளந்து கொட்டின

இப்படித்தான்
வைக்கோலைச் சப்பித் தின்னும்
மனிதமாடுகள்போல் கதையடிக்கின்றன
தொட்டியில் இருந்து துள்ளிவிழுந்த
மீன்குஞ்சுகள்.

 

kuneswaran@gmail.com