உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள் !!

வித்யாசாகர்

நாட்கள் தொலைத்திடாத
அந்த நினைவுகளில்
சற்றும் குறையாமல் இருக்கிறாய் நீ;

உனை பார்த்த பழகிய உன்னோடு பேசிய
முதல் பொழுது முதல் தருணம் -
உடையாத கண்ணாடியின் முகம் போல
பளிச்சென இருக்கிறது உள்ளே;

ஓடிவந்து நீ
சட்டென மடியில் அமர்ந்த கணம்
என்னை துளைத்து துளைத்து பார்த்த
இருவிழிகள்,
எனக்காக காத்திருக்கும் உனது தவிப்புகள் என
எல்லாமே உன்னை எனக்குள் -
மறவாமல் வைத்திருக்கிறது இன்னும்;

எனக்காக இல்லையென்றாலும்
உனக்காகவேனும் வந்து -
உன் வாசலில் நின்று நீ ஓடிவந்து கட்டிக் கொள்ளுமுன்
ஸ்பரிசத்தை எல்லாம் சேகரித்து -
இன்றுவரை பத்திரமாக உணர்வுகளில்
வைத்திருக்கிறேன்;

பெரிதாக அதையெல்லாம் எண்ணி
கதையெழுதும் காதலெல்லாம்
அல்ல; நம் காதல்;

காதலென்ற வார்த்தை கூட நம்
உதடுகளை ஒருவேளை சுடச்செய்யலாம்,
அதையெல்லாம் கடந்து
நமக்கிடையான ஒரு புரிதல்; ஒரு ஆழமான அன்பு அது.

திரும்ப எடுக்க இயலா நீளக் கிணற்றுக்குள்
தவறிப் போட்டுவிட்ட - கல் போல
மனதிற்குள் மனதை போட்டுவிட்டு
யாரிடமே சொல்லிக் கொள்ளாத தவிப்பு அது.

சொல்லியிருந்தால் மட்டும் உலகம்
அதற்கு என்ன பெயர் வைத்திருக்குமோ
தெரியாது - ஆனால் -

காதலென்னும் அவசியமோ
நட்பென்று சொல்லும் பெரிய வார்த்தைகளோ
அல்லது 'அத்தனை' இடைவெளியோ கூட
அவசியப்பட்டிருக்க வில்லை நமக்கிடையே;

அப்படி -
சேருமிடமே தெரியாத
வானமும் பூமியும் போல்
எங்கோ ஒரு தூரத்தில்
ஒட்டிக் கொண்டு கிடந்தது நம் மனசு;

நானென்றால் நீ ஓடிவருவதும்
நீயென்றால் நான் காத்திருப்பதும்
எச்சில் பாராமல் -
தொடுதலுக்கு கூசாமல் -
ஆண் பெண் பிரிக்காமல் -
எந்த வரையறையுமின்றி -
உரிமையே எதிர்பாராது - மனதால் மட்டும்
நெருங்கியிருந்த உணர்வு
சொன்னால் மட்டுமிப்போ யாருக்குப் புரிந்துவிடும்???

தெரிந்தால் புரிந்துக் கொள்ளக் கூட
திராணியின்றி நகைக்கும்
உலகம் தானே இது;
அட, உலகமென்ன உலகம்;

உலகத்தை தூக்கி வீசிவிட்டு
நாம் கூட நம்மை வெளிப் படுத்திக் கொள்ள
தயாரில்லை என்பதற்கான காரணத்தை
காலம் மட்டுமே ஒருவேளை
அறிந்திருக்கக்கூடும்;

எப்படியோ; யார்மீதும்
குற்றம் சொல்வதற்கின்றி பிரிந்தபின்
இன்று - அறுத்துப்போட்ட உயிர்போல வலிக்கிறதே
உனக்கும் எனக்கும் மட்டும்;

தூரநின்று கண்சிமிட்டும்
அந்த குழந்தையின் சிரிப்புப்போல
நீ சிரிக்கும் அந்த சிரிப்பின்
நினைவுகளில் தான்
கட்டிவைத்திருக்கிறேன் என்னை -
வாழ்விற்குமாய்; இப்போதும்!!

இப்படியே கடந்து கடந்து
ஓர்நாளில் -
என் உயிர்முடுச்சு அவிழ்ந்து
நான் கீழே விழுகையில் -

ஒரு சொட்டுக் கண்ணீராகவாவது
நீ வந்து நிற்கையில் -

என் உடம்பு சாம்பலாய் பூத்திருக்கும்
நீ விழுந்து அழுது புரண்டால் - உனக்கு
வலிக்காமல் தாங்கிக்கொள்ளும்!!



vidhyasagar1976@gmail.com