காதல ஆத்திச்சூடி !

சி. ஜெயபாரதன், கனடா

காதலனே ! காது கொடு !
மனதைப் பறிகொடுத்து
கனவுக் கன்னி
மனதைப் பிடிக்க
உண்ணாமல் உறங்காமல்
ஊமையாய்
இராப் பகலாய்க்
கடும் தவம் புரியாதே !
காதல் இலக்கணம் இது !

கண்வழிப் போகாதே
காலரைத் தூக்கி விட்டு !
செவிவழிப் புகாதே
சினிமாப் பாடல் முணுமுணுத்து !
கண்ணீரைச் சிந்தி
வெந்நீரால்
காவிரியை நிரப்பாதே !

உடலை முறுக்கி
உன் தசையைக் காட்டாதே !
கதையைக் கட்டிக்
கன்னிக்கு
களிப்பூட்ட முயலாதே !
கவிபாடிக் கனவில்
காட்சிக்கு மேல் காணாதே !

கிரிகெட் விளையாடி
அரிவை உனை நாடி
வருவாள் என்று
தெரு நோக்கி நில்லாதே !
நெஞ்சைப் பிளந்து
எலும்பு எண்ணச் சொல்லாதே !
புறாவைத் தூது விட்டுத்
தொலைநோக்கி ஆகாதே !

ஆற்றில் குதித்து உயிரைப்
போக்கிட முனையாதே !
தோட்டத்துக் கொடி வழியே
தொத்தி நீ ஏறாதே !
காதல் நோய் பீடித்துக்
கடிதத்தை நனைக்காதே !

இலக்கணம் முற்றியது !
என்னதான் செய்வது ?
அத்தனையும் செய்யப்பா
அத்தனையும் செய் !
பொத்தென விழாது
ஓரடியில்
வித்துள்ள பலாக்கனி !

 

jayabarathans@gmail.com