காத்திருத்தல்

ஆத்மார்த்தி

மதுபானக் கூடத்திலிருந்தேன்.
அங்கே விளக்குகள் இருளோடு இசைந்து
ஓளிர்ந்து கொண்டிருந்தன..
ஆங்காங்கே சிலர் மட்டும் அமர்ந்திருந்தனர்
எனக்குப் பிடித்தமான
பானத்தைச் சொல்லிவிட்டுக்
காத்திருந்தேன்.

எனக்கெதிரே ஒருவர் வந்தமர்ந்தார்
அவரது தோற்றம் எனக்குப் பரிச்சயமானதாயிருந்தது.
அவர் இளமையானவராயிருந்தார்.
எனது சிறுவயதில் விரும்பிய
பானத்தைக் கையிலேந்தியிருந்தார்.

இன்னொரு நாற்காலியில்
வந்தமர்ந்தவர் புன்னகைத்தது
எனக்கு மிகவும் நெருக்கமாயிருந்தது.
அவரை எங்கே எப்படி சந்தித்தேன்
என யோசித்துக் கொண்டிருந்தேன்.

மற்றொரு நாற்காலியில் ஒரு சிறுவன்
வந்தமர்ந்தான்.
அவன் கையிலிருந்த கோப்பையில்
பழரசம் இருந்தது.
அவனைப் பார்த்தவுடனே
நான் கேட்கலானேன்..
"யார் நீ..?"என்று.

புன்னகைத்த அந்தச் சிறுவன்
"நான் தான் உனது பால்யம்"என்றான்.
அந்த முதியவர் மெல்ல சொன்னார்
"நான் உனது முதுமை".
இன்னொருவர் கம்பீரமான குரலில் தன்னை
அறிமுகப்படுத்திக் கொண்டார்
"நான் உன் வாலிபம்".

தள்ளாட்டத்துடன் எழுந்து கொள்கிறேன்.
மேசையைத் தள்ளி நடக்க எத்தனிக்கிறேன்.
என் முகம் பார்க்கும் அந்த மூவரிடமும்
பொதுவாய்ச்சொன்னேன்
"சந்தித்ததில் மகிழ்ச்சி"

மூவரில் ஒருவன் வாய்திறக்கிறான்.
இன்னும் ஒருவர் உனைப் பார்க்க
வந்து கொண்டிருக்கிறார்
என்று.

இன்னும் யாரது..?
நான் கேட்கிறேன்.மெழுகுவர்த்தி
காற்றில் அணைகிறது.
பதில் வருகிறது
"உனது மரணம்"

 

aathmaarthi@gmail.com