வயிற்றரிசி இனாம் வேண்டாம்; ஒற்றை நல்ல அரசு போதும்

வித்யாசாகர்

றிகடைகளில் உயிர்பயத்தில் நிற்கும்
கோழிகளாகவே நாங்கள் ஓட்டளித்துவிட்டு
வீடுவந்த உயிர்பலிகள்!

அம்மா வந்தால் மாறும், ஐயா வந்தால் மாறும் என்று
நம்பியிருப்பவர்களை
எந்த கொய்யா வந்தும் அத்தனை
மாற்றிடவில்லை

இருந்தும் சரியானவர்களை தேடித் தேடியே
நீள்கிறதிந்த இழிபிறப்பு!

அரசியல் ஒரு சாக்கடை என்றே நம்பி வளர்ந்த
சங்கிலி யானையான எங்களுக்குஇன்னுமந்த
சங்கிலி அறுக்கவோ சாக்கடை சீர்செய்யவோ இயலவேயில்லை!

இன்னும் ஒரு தேர்தல், இன்னொரு ஆட்சி
இன்னொரு நாயகன் வருவானென்று நம்பி நம்பியே
மரணத்தை முட்டிவிட்ட வரலாறுகளே எங்களிடம் மிச்சம்!

நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சிபோல்
பட்டென விழுந்துவிட்டாலும் பரவாயில்லை
அரிசிக்கும் பருப்புக்கும் அறுபட்ட மின்சாரத்திற்கு
மிடையே

வெற்று வயிறு பற்றி எரிவதற்கான காரணம்
இத் தேசத்தின் அரசியலும் -
அரசியல்வாதிகளின் சுயநலமுமன்றி வேறென்ன?!

உள்ளூர் தபால் நிலையத்திலிருந்து
வெளியூர் வியாபாரம் வரை -
தினசரி நாளேட்டிலிருந்து படிக்கும் படிப்புவரை

காவலாளிகள், பதிவாளர்கள், கடவுச்சீட்டு அலுவலர்கள்
ஆசிரியர்கள், தனியார் நிறுவனங்களைக் கடந்து
தனி நபர்வரை - திருந்தவேண்டுமெனில்

விமானநிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடம்
கூட்டுறவு மையம், அறவழி நிலையம், ஆலய ஒருங்கிணைப்பு,
சந்தை வரை மாறவேண்டுமெனில்

நல்ல அரசொன்றே வேண்டும்; அடிக் கோடிட!!--



vidhyasagar1976@gmail.com