தீபாவளி வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி

அன்பு என்பினும் அறிவு என்பினும் தீபம் தீபம்
அழகு என்பினும் அமுது என்பினும் தீபம் தீபம்
இரக்கம் என்பினும் ஈகை என்பினும் தீபம் தீபம்
உதயம் என்பினும் உச்சம் என்பினும் தீபம்
தீபம்

கனவு காதல்
நளினம் நாணம்
நட்பு நேயம்
உறவு ஊக்கம்
பரிவு பாசம்
அகரம் ஆதி
எளிமை ஏற்றம்
எண்ணம் ஏகம்  
யாவும் யாவும்
தீபம் தீபம்
தீபம்
தீபம்

தூளி என்பினும் தாய்மை என்பினும் தீபம் தீபம்
தவம் என்பினும் வரம் என்பினும் தீபம் தீபம்
ஞானம் என்பினும் மோனம் என்பினும் தீபம் தீபம்
கருணை என்பினும் கடவுள் என்பினும் தீபம்
தீபம்

உள்ளம் உயிர்
வளமை செழுமை
வண்ணம் மின்னல்
தனிமை இனிமை
மனிதம் புனிதம்
மஞ்சள் மாட்சி
பக்தி பூஜை
மாண்பு நோன்பு 
யாவும் யாவும்
தீபம் தீபம்
தீபம்
தீபம்

அகந்தை அறுப்பதும் தீபம்
அமைதி விளைப்பதும் தீபம்
வக்ரம் எரிப்பதும் தீபம்
வஞ்சம் தகர்ப்பதும் தீபம் 

அரக்கம் அழிப்பதும் அசுரன் கொல்வதும் தீபம் தீபம்
நரகம் ஒழிப்பதும் சொர்க்கம் மீட்பதும் தீபம்
தீபம்

தீபம் தீபம் தீபம் தீபம் தீபம் தீபம் தீபம்

*
வெளிச்சம் என்றும் நெருப்பின் எச்சம்
நிலவும் கூட நெருப்பின்
மச்சம்

நெருப்பே பெண்ணுள் கருவாய் ஒட்டும்
நெருப்பே நெஞ்சில் கவிதை கட்டும்

ஆக்கும் அழிக்கும் நெருப்பின் கைகள்
இருளை எத்தும் நெருப்பின்
கால்கள்

கல்லை எரித்துக் குழம்பாய் வார்க்கும்
கடலை எரித்து மழையாய்க்
கொட்டும்

உள்ளம் எரித்துத் தர்மம் காக்கும்
கள்ளம் எரித்து நீதி
நிறுத்தும்

வெளிகள் எங்கும் உருளும் கோள்கள்
வெடித்த நெருப்பு கொடுத்த
துகள்கள்

நிலத்தின் நடுவில் இருப்பது நெருப்பு
அணுவின் நடுவில் வெடிப்பது நெருப்பு

நூறு பில்லியன் விண்மீன் நெருப்பு
நெருப்பின் தயவில் அண்டம் இருப்பு

தீப.... ஆவளி.... தீபாவளி
தீபமென்றால் அது ஒளி
ஆவளி என்றாலது வரிசை
அழகு தீபங்களின்.... அறிவு தீபங்களின்....
இதய தீபங்களின் ஊர்வலம்தான்
தீபாவளி
தீபாவளி

*
இருளகற்றும் தீபமே இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே நிறைந்து
ஒளிரட்டும்

புதியவானம் புதியபூமி விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும் நாட்கள்
வளரட்டும்

தீயினுள்ளே தீயதெல்லாம் தீய்ந்து கருகட்டும்
துயரங்கள் துரோகங்கள் எரிந்து
முடியட்டும்

எங்கும் எங்கும் இன்பம் இன்பம் இன்பமே ஒளிரட்டும்
இனிய இதய
தீபா....வளி
தீம்பா....வழி
தீப...வொளி
வாழ்த்துக்கள்

*
தியாக வீரர்களை நினைவு கூர்ந்தார்கள் கனடியர்கள்
அது கடந்த வாரம்தான் கடந்துபோனது
அவர்களுக்கு பாப்பி தின
வாழ்த்துக்கள்

ஈழ வீரர்களை நினைவு கூர்வார்கள் தமிழர்கள் 
அது இந்த மாத முடிவில் வந்து போகும்
அவர்களுக்கு மாவீரர் தின
வாழ்த்துக்கள்

சாத்தானுக்குக் கல்லெறிந்தார்கள் முஸ்லிம்கள்
அது கடந்த மாதம்தான் கடந்துபோனது
அவர்களுக்கு ஹஜ் பெருநாள்
வாழ்த்துக்கள்

இந்த நாளோ இந்துக்களுக்கு
நரகாசுரன் என்ற கொடிய சாத்தானைக் கொன்றழித்த நாள்
அவர்களுக்கு திபத் திருநாள்
வாழ்த்துக்கள்

இத்தனை கோடி மக்களின் சார்பாவாகவும்
இதோ என் வேண்டுதல்கள் பிரார்த்தனைகள் துவாக்கள்

*
காற்றில் அலையும் பறவைகளாய்
மனிதன் காலடி உலவும் நிலைவேண்டும்
சிறுமை கட்டுகள் அறுந்து
விழவேண்டும்

அழியும் அகிலம் தொடவேண்டும்
எங்கும் அன்புப் பயிர்கள் நடவேண்டும்
வஞ்சம் அற்றுத் தழைக்கும்
நிலம்வேண்டும்

காலை எழுந்து பறந்திடணும்
பத்து கோள்கள் கண்டு திரும்பிடணும்
அந்தி கவிதை ஒன்று
எழுதிடணும்

காணும் உயிரைத் தழுவிடணும்
அன்புக் கவியால் கைகள் குலுக்கிடணும்
உள்ளக் கனவைக் கேட்டு
களித்திடணும்

மதங்கள் யாவும் இணைந்திடணும்
செல்லும் மார்க்கம் ஒன்றாய் மலர்ந்திடணும்
வானம் மனிதம் கண்டு தொழுதிடணும்

 

anbudanbuhari@gmail.com