காதலால் கருகி கசிந்துருகி..

வித்யாசாகர



ன் முகம் தீய்ந்த தீயில்
அமிலங்கள்
நெஞ்சில் சுரக்கின்றன
வாழ்நாளின் பக்கங்கள்
கண்ணீரில் கடக்கின்றன;

சமூகத்தின் குற்றத்தில்
காதலும் கைதானதே -
தான் தைத்த நாகரிகச் சட்டையை
தன் கையால்
கிழித்துப் போட்டதே;

கண்ணில் தூசெனில்
துடிக்கும் கரங்களிரண்டில்
கசங்கிப் போய் வீழ்ந்தவளே
இன்று காணாமல் போனதேன்...?

காலத்தின் தீர்ப்பில்
கலையும் மைவாங்கி
வாழ்க்கையை திருத்த எண்ணி
உன் குரலை சாட்சி வைத்தவள்
உயிரையா விட்டுப் போவாய்..?

வினோதினி என்றும்
வித்யா என்றும்
உயிர்கள்
சொட்டு சொட்டாய்
சொட்டு சொட்டாய்
கொப்பளித்து கொப்பளித்து வடிந்த ரத்தத்தில்
காதல்' அமிலத்தினும் காரமனதே, வாழ்க்கை
பெண்ணைப் பெற்றவர்க்குச் சாபமானதே;

ஒரு சமூகத்தையே துடிக்கவைத்த ரணத்தை
உடம்பெல்லாம் தாங்கி
உயிர்வலிக்க வலிக்க
நீ முனங்கிய முனகல்களில்
எரித்தவனின் கையை விட
அவனை அப்படிவளர்த்த இச் சமுகத்தின் கைகளுக்கே
அதிகம் வலித்திருக்கக் கூடும்..

இனி யாருக்கு வலித்து
யாருக்கென்ன லாபம்
நீ போனவள் போனவளில்லையா?

எரிந்தவள்
சாம்பல் தானில்லையா.. ?

ஆனால்
பெண்ணைப் பெற்றவளுக்கு
அடி வயிற்றில் எரியும் நெருப்பொன்று உண்டு
தோள்மீது தாங்கியவனுக்கு
மார்மீது சுடும் தீயொன்று உண்டு
அது இனி எல்லோருள்ளும் சுடர்விட்டு எரியும்
காட்டுத் தீயேனப் பரவி
அவனைப் போன்றோரை தேடித் தேடிக் கொல்லும்
அவர்களின் மரணத்தில் -
இனி உனைப்போன்ற வினோதினிகளும் வித்யாக்களும்
காப்பாற்றப் படலாம்..

 

vidhyasagar1976@gmail.com