வந்து வந்து போகும் அவள்.. (காதல் கவிதை)

வித்யாசாகர்
 

அத்தனை லேசாக உன்னை
கடந்துவிட முடியவில்லை..

ஒரே தெருவில் எதிரெதிரே
சந்தித்துக்கொண்டப் பார்வைகள்

நீ பேசி நான் பேசிடாத
பொழுதுகள்

நீ காத்திருந்து
நான் கடந்துவிட்ட நாட்கள்

உன்னை தெரியாமலே
எனக்குள் வலித்த தருணம்

இப்பொழுதும் -
எனை நீ நினைப்பாய்
உனை நான் -
நினைத்துக்கொண்டே யிருப்பேன்

எல்லாம் உள்ளே
வலித்துக்கொண்டே யிருக்கும்

எப்பொழுதையும் போல
நிலா வரும்
நிலா போகும்
நாட்கள் செலவாகும்
வயதுகள் மாறி -
நீ வேறாக
நான் வேறாக ஆவோம்..

அப்போதும் -
இப்படியே
உனை கடந்துவிட
தவித்துக்கொண்டே இருப்பேன் நான்!!