உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்.. (காதல் கவிதை)


வித்யாசாகர்


1
மழைப் பெய்யும்
எல்லோரும் ஓடி வீட்டினுள்
அடைவார்கள்..
நான் ஜன்னலோரம்
வெளியே நிற்பேன்
நீ ஜன்னலோரம்
உள்ளே நிற்பாய்
மழைக்கு தெரியும்
உன்னையும் என்னையும்..
——————————————————-
2
கடைக்கு
காய்கறி வாங்க வருவாய்
எழுதிவந்ததைப் போல்
மடமடவென்று சொல்வாய்
நான் அருகில்
ஒன்றையோ இரண்டையோ
உனக்காக வாங்கிக் கொண்டு
சும்மா நிற்பேன்
திரும்பிப் போகையில்
நீ முன்னே போவாய்
நான் பின்னே
பேசாமலே வருவேன்
வீடுவரை இப்படித்தான்
என்றாலும்
வீடு வந்ததும் சற்று நிதானமாக
நீ நடப்பாய்
நான்
வீடு வந்துவிட்டதே என்று
வேகமாக வருவேன்
உனக்கும்
எனக்கும்
நிழலளவில்
மனசுரசும்
நீ ஒருமுறை என்னை
திரும்பிப் பார்த்துவிட்டு
உள்ளே போய்விடுவாய்
நானந்தப் பார்வைத் தூக்கிக்கொண்டு
உலகெல்லாம் சுற்றிவருவேன்..
——————————
3
காதலுக்கு வசியமாகிற மாதிரி
உலகு
வேறெதற்கும் ஆவதில்லை
அதென்னவோ நான்
வெளிய வந்தால்
நீயும் வெளியே வருவாய்
உன்னை நினைப்பேன்
நீயும் நினைத்ததாய்ச் சொல்வாய்
ஏதேனும் வாங்கநினைத்தால்
நீயே வாங்கிவருவாய்
உன்னை பிடிக்குமென்று
சொல்ல நினைத்தால்
உனக்கும் மிக பிடிக்குமென்பாய்
ஏன்; உனக்குக்
காய்ச்சலென்றால் கூட
எனக்கும்
காய்ச்சல் வரக்காண்கிறேன்
எனக்கு இதனால் ஒரு
பெரிய பயமுண்டு –
நாளைக்கு ஒருவேளை எனக்கு
மரணம் வருமென்றால் –
உன்னை நினைக்காமலையே நான்
மரணித்துப் போகவேண்டும்..