கன்னற் காதல்
 
பா வானதி வேதா. இலங்காதிலகம்,டென்மார்க்


தென்னஞ் சோலையிலே தென்றல் வீசுகையில்
கன்னம் குழிவிழவே காத்திருப்பாள் எனக்காக
உன்னை நினைக்கையிலே உள்ளம் இனிக்கையில்
என்னை மறக்கிறேன் பூத்திருக்கும் உனக்காக

சொன்ன சொல்லையே நினைவாகக் காத்திடுதல்
என்ற உணர்வென்றும் பவுத்திரக் காதலுக்கே
அன்றொரு நாளருவிக் கரையில் அந்த
உன்னருகு அனுபவம் இன்றும் இனிக்குது.

தென்றலின் சுகத்தில் குளிர் நீரிலமிழ்ந்து
ஒன்றாய் நனைந்தது எங்கள் பாதங்கள்.
இன்னல் கரைந்தது மின்னல் புகுந்தது.
பின்னும் கரங்களால் மனதில் இன்பமடி.

தென்னோலை காற்றிசையில் நடனம் ஆட
கன்னம் சிவந்திட பயத்தில் நீயங்கு
பின்னற் சடையைப் பின்னிப் பின்னி
அன்னையின் ஏச்சுக்கு அகத்தில் பயமானாய்.

என்னைப் பிரியாதென்றும் இணை சேர்ந்து
சின்ன மகனைச் சிற்பமாய் செதுக்குவோம்
அன்னமே பேதையேயென அகத்தில் எண்ணாதே
என்ன சொல்கிறாய்! இதற்குச் சம்மதமா!

மென்மையோ வன்மையோ உன் அன்பு
பன்னீர் தெளித்தலாய் என்னைக் களிப்பாட்ட
மன்னனும் இராணியுமாய் மகிழ்ந்து வாழ்வோம்.
இன்னமுத வாழ்வை என்றும் இளமையாக்குவொம்.