குவிந்துநிற்கும் வாழ்வினிலே

எம்.ஜெயராமசர்மா - மெல்பேண்

கொஞ்சி மகிழ்வதற்கு
      குழந்தைகள் இல்லாமல்
கெஞ்சிநின்று நோன்பிருந்து
      கேட்டுநிற்போம் கடவுளிடம்
நெஞ்சறிந்த கருணைக்கடல்
       நிறையவே கொடுத்துவிட்டால்
வெஞ்சொல்லால் கடவுளையே
       வெடுக்கென்று திட்டிநிற்போம் !

பஞ்சமுடன் இருக்கையிலே
       பலகுழந்தை அளித்துநின்றால்
அஞ்சாமல் ஆண்டவனை
       அர்ச்சித்தே நின்றிடுவோம்
கொஞ்சமேனும் இரக்கமின்றி
       கொடுத்துவிட்டார் கடவுளென
கெஞ்சிநின்ற பலபேரும்
       கேள்விகேட்பார் கடவுளையே !

பணம்படைத்த பலபேரைப்
       பார்ப்பதற்குப் பிள்ளையில்லை
பிள்ளைதனைப் பார்ப்பதற்குப்
       பணமில்லார் பலபேர்கள்
உலகத்தின் விந்தைதனை
       உற்றுநோக்கிப் பார்க்கையிலே
படைத்தவனின் நோக்கமதை
       விளக்குவார் யாருளரோ !

என்னதான் நிறைந்திருந்தும்
       பேர்சொல்ல ஒருபிள்ளை
இல்லையெனும் நிலைவந்தால்
      இன்பமங்கே மறைந்துவிடும்
வறுமையொடு இருந்தாலும்
      வாசலிலே பிள்ளைவந்து
மழலைமொழி பேசிவிடின்
       வாழ்வங்கே விடிந்துவிடும் !

குழலோசை யாழோசை
       கொடுத்துவிடும் இன்பத்திலும்
குழந்தையது ஓசையது
      கொடுத்துவிடும் பேரின்பம்
அதனாலே குழந்தையினை
       ஆண்டவனோ டொப்பித்து
அனைவரும் அனைத்துநின்று
       ஆனந்தம் பெறுகின்றோம் !

இல்லறத்தின் பேறாக
       எமக்கின்பம் எதுவென்றால்
நம்குழந்தை எமைப்பார்த்து
       நாலுவார்த்தை பேசுவதே
பேசுகின்ற மழலையது
       பெரும்பேறு எனநினைத்து
பேருவகை கொண்டுவிட்டால்
       பேரின்பம் பெருக்கெடுக்கும் !

குழந்தையில்லா வீட்டினிலே
      குதூகலம் மறைந்துவிடும்
குழந்தையது சிரித்துவிட்டால்
      குதூகலமே நிறைந்துவிடும்
குழந்தைகளைத் தெய்வமாய்
       கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
குவலயத்தின் இன்பமெலாம்
       குவிந்துநிற்கும் வாழ்வினிலே !


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்