நெஞ்சமே ஏங்கிறது !

எம்.ஜெயராமசர்ம
ா - மெல்பேண்

நிலம்பெயர்ந்து போனாலும்
     நினைவுமட்டும் மாறவில்லை
மனமுழுக்க ஊர்நினைப்பே
     மெளனமாய் உறங்கிறது
தலைநிறைய எண்ணெய்வைத்து
     தண்ணீரில் மூழ்கிநின்று
குளங்கலக்கி நின்றதெல்லாம்
     மனம்முழுக்க வருகிறது !

பக்கத்து வீட்டினிலே
     பந்தல்போட்டுக் கல்யாணம்
படுஜேராய் நடக்கையிலே
     பாய்ந்துசென்று அமர்ந்திருந்து
சுட்டுவைத்த பலகாரம்
     அத்தனையும் சுவைபார்த்து
சுருட்டிக்கொண்டு ஓடிவரும்
     சுகமங்கே கிடைத்ததுவே !

பழுத்தகுலை வாழைமரம்
     இருமருங்கும் சிரித்துநிற்கும்
பழம்மீது எங்கவனம்
     விழுந்தபடி அங்கிருக்கும்
வரவேற்கும் சாட்டினிலே
     வாழைக்குலை அருகணைந்து
பழம்பறித்துப் பையில்போட்டு
     பாய்ந்திடுவோம் மறைவினுக்கு !

அப்பம்சுடும் ஆச்சிவீட்டில்
    அதிகாலை நாமிருப்போம்
துப்பரவு செய்வதற்கு
     துணிவுடனே முன்வருவோம்
பிய்கின்ற அப்பமெலாம்
     ஆச்சிதரத் சம்மதிப்பார்
பேசாமல் வாங்கியுண்டு
     பேரின்பம் பெற்றிடுவோம் !

வாத்தியார் அடித்துவிட்டால்
     வசைபாட மாட்டோம்நாம்
வாத்தியார் சைக்கிளுக்கு
     வைத்திடுவோம் நல்லஆப்பு
வீட்டுக்குத் தெரிந்துவிட்டால்
    வெளுத்தெடுத்து விடுவார்கள்
அடிகொடுத்த அப்பாவே
     அணைத்ததையும் நினைக்கின்றோம் !

திருவிழா வந்துவிட்டால்
     பெருமகிழ்ச்சி வந்துவிடும்
சின்னமேளம் பெரியமேளம்
     திருவிழாவைச் சிறப்பிக்கும்
இரவெல்லாம் கோவிலிலே
    எத்தனையே கலைநிகழ்ச்சி
எங்களுக்கு சொர்க்கமாய்
     இருந்ததைநாம் நினைக்கின்றோம் !

மல்கோவா மாங்காயை
     மரமேறிப் பிடிங்கிநின்று
மரத்தடியில் சுவைப்பதிலே
     மட்டற்ற சுவையெமக்கு
மரமேறிப் பறிக்கையிலே
     மரக்காரன் வந்துவிட்டால்
மாட்டிவிட்டு முழிப்பதனை
     மனமிப்போ நினைக்கிறது !

கவலைபற்றிக் கவலையில்லை
       காசுபற்றிக் கவலையில்லை
கல்விபற்றிக் கவலையில்லை
       கஞ்சத்தனம் எமக்குமில்லை
கிடைக்கின்ற அத்தனையும்
       பெருமகிழ்ச்சி எனநினைத்தோம்
நினைக்கின்ற போதுவிப்போ
       நெஞ்சமே ஏங்கிறது !
 






 

் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்