நிலவோடு ஒரு பயணம்

மணிமாலா மதியழகன்

விண்ணில் வலம் வரும் வட்டநிலவே
வியப்பில் என் நெஞ்சைத் தொட்ட நிலவே
உந்தன் வடிவுகண்டு மயங்காதோர்
இப்புவிதனில் எவருமுண்டோ!

என் மனங்கவர்ந்தவளின் அருகில்
பல கதைகள் பேசியபடி நானிருந்தாலும்
என் மனது மட்டும் கள்ளமாய்
உன்னிடம் காதல்கொள்ளும் மாயம் ஏனடி
காரணம் சொல்லடி சுந்தரியே!

மன்னாதி மன்னனையும் உந்தன்
மாயவலைக்குள் வீழ வைத்த பதுமையே!
உன்னழகு கண்டு கவியெழுதா
புலவரும் இப்புவியில் உண்டோ!
மழலைகளையும் உன்னில்
மயக்கி வைத்த காரிகையே!

உன்னோடு வாழ்நாள் முழுக்க
வலம்வர நான் காத்திருக்க
பணிபுரிந்த களைப்பில் நீ
மாதத்தில் சிலநாட்கள்
காணாமல் போவதேன்
எந்தன் கண்ணானவளே!

நிலாமகளுக்கு அந்த ஒய்வு
அத்தியாவசியமென என
எந்தன் அறிவுக்கு எட்டினாலும்
ஆசை மனதானது உனைக்காணாது
ஏங்கித் தவிக்குதே என் தங்கமே!


 




 

் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்