நிலவின் பாடம் !

எம்.ஜெயராமசர்மா - மெல்பேண்

வானமீதில் நீந்தியோடும் வண்ணநிலாவே - உன்
வடிவழகைப் பாடாத கவிஞரில்லையே
நானுமுன்னைப் பாடவெண்ணும் ஆசையினாலே - இங்கு
பாடுகிறேன் பால்நிலவே நின்றுகேட்டிடு !

உண்ணமறுக்கும் குழந்தைக் கெல்லாம் உன்னைக்காட்டியே - இங்கு
உணவையூட்டி உளம்மகிழ்வார் உலகில்பலருமே
விண்ணில்நீயும் ஓடியோடி விந்தை காட்டுவாய் - அதை
வியந்துவியந்து பிள்ளைபார்த்து விரும்பி மகிழ்ந்திடும் !

பூரணையாய் வந்துநீயும் பொலிந்து விளங்குவாய் - அதை
பூரிப்போடு பலரும்பார்த்து உளம் மகிழுவார்
காதலர்க்கு களிப்பையூட்ட களத்தில் இறங்குவாய் - அதை
கவிதையிலே பலகவிஞர் கண்டு வாழ்த்துவார் !

உன்வரவை ஆவலோடு உலகம் நோக்கிடும் - இங்கு
உன்வரவால் பலரும்வாழ்வில் உளம் மகிழுவார்
மின்மினிகள் வானில்சூழ விரைந்து ஓடுவாய் - நாளும்
உன்னொளியால் உலகைநாளும் உவகை யூட்டுவாய் !

இறைவனது தலையின் மீது இருக்கிறாயென - இங்கு
இந்துமதம் சொல்லியுன்னை உயர்த்தி நிற்குது
குறையுடைய நிலவேயுன்னை நிறைவு படுத்தவே - நாளும்
இறைவன் உன்னை தன்னிடத்து ஏற்றுக்கொண்டனன் !

மதியைப்பற்றி பலகதைகள் மதங்கள் சொல்லிடும் - ஆனால்
மதியைப்பற்றி யோசித்தால் நம்மதி தெளிந்திடும்
பாதிநாளில் மதியின்வாழ்வு இருண்டு போயிடும் - ஆனால்
மீதிநாளை வெளிச்சமாக்கி மதி கொணர்ந்திடும் !

உயர்வுதாழ்வு உலகவாழ்வில் இயற்கை என்பதை - இங்கு
உணர்த்திநிற்கும் செயலைநிலவே தெளிவாய் காட்டுது
வெளிச்சம் கொடுக்கநாளும் நிலவு விண்ணில்வருகுது - ஆனால்
வெளியில் குறையைக் காட்டிக்கொள்ள நிலவும்விரும்புது !

கூடுகின்ற காதலர்க்கு குளிர்ச்சி கொடுக்குது - இங்கு
வாடுகின்ற காதலர்க்கு வரட்சி காட்டுது
நிலவுஅது வானமீது தவழ்ந்து போகுது - ஆனால்
மனிதமனம் விதம்விதமாய் மாய்ந்து போகுது !

மனதில்மகிழ்ச்சி மலரும்போது நிலைவை வாழ்த்துவோம் - இங்கு
மனமகிழ்ச்சி தொலையும்போது நிலைவைத் தூற்றுவோம்
நிலவுஎன்றும் வான்வழியாய் தவழ்ந்து போகுமே - அது
கவலைகொண்டு போவதைநாம் காணமுடியுமா !

துன்பமின்ப மெல்லாமே சுழலும் சக்கரம் - அதை
இன்பமுடன் ஏற்றுக்கொண்டால் எமக்கு இன்பமே
தேய்ந்து வளர்கின்றபாதை நிலவின் பாதையே - அதை
ஆய்ந்து பார்த்தால் மனிதவாழ்வில் அமைதிதோன்றுமே !

இருட்டும்வரும் வெளிச்சம்வரும் எனவுணர்த்திட - இங்கு
எல்லோர்க்கு பாடமதை நிலவு நடத்துது
மனிதரெலாம் நிலவைப்பார்த்து மதியைத்தீட்டுவோம் - இங்கு
நிலவின் பாடம் நிதமெமக்கு வழியைக்காட்டிடும் !






 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்