பக்குவ மனம்

வேதா. இலங்காதிலகம், டென்மார்க்

சங்கீத மனதின் அபசுரம்
சங்கடமாக்கும் சுபசுரத்தை.
சந்தேகசுரம் கீதம் சிதைக்கும்.
சுகதேகத்து ஆரோக்கியம் பகைக்கும்.
நம்பிக்கை கீதம் ஆரோகணிக்கட்டும்.
அவநம்பிக்கை நாதம் அவரோகணிக்கட்டும்.

அனுபவத்தோடு அறிவு பிறக்கும்.
அகங்காரமழிந்து அன்பு தவழும்.
அறங்கள் கூடுமென்றால், மனிதம்
சிறந்ததைத் தினமும் கைப்பற்றலாம்.
உறவாடும் வழியில் குறளியாடும்
உறுத்தல்கள் முற்றாக அழிக்கலாம்.

பிரேமையானவன் பிரேமை தேடுவான்.
பிரச்சனையானவன் பிரச்சனை தேடுவான்.
பிரயோசனப் பொழுது நற் பிரசாதமாகும்.
பிரதிக்கினையோடு பக்குவம் பெறலாம்.
பிரயோசன வாழ்வின் பிரார்த்தனைகள்
பிரவாகமாகி நற் பலன் பெறும்.

விலங்கிலிருந்து விடை கொடுக்க,
கலங்குபவனுக்குக் கைகொடுக்க,
பலவீனனுக்குப் பலம் கொடுக்க,
பக்குவ மனது அடியெடுக்கும்.
பக்குவமனத்துப் பதறாத நிதானம்
சிக்கலின் போதும் சிதறாத விதானம்.



vetha@stofanet.dk