இயங்கிநிற்கும் பிரம்மா

எம்.ஜெயராமசர்மா - மெல்பேண்


டைக்கின்ற பிரம்மாவை நாம்பார்த்த தில்லை
படைப்பதனை பார்த்துவிட்டு வியப்படைந்து நிற்போம்
படைக்கின்ற பிரம்மாவும் அவர்படைப்பும் கண்முன்
பார்க்கின்ற பாக்கியத்தைப் பார்மீது காண்போம் !

எழுத்தாளர் இவ்வுலகின் இயங்கிநிற்கும் பிரம்மா
எழுத்தாலே இவ்வுலகை அவர் ஆளுகின்றார்
எழுத்தாலே எத்தனையோ எமக்களித்து நிற்கும்
எழுத்தாளர் எல்லாமே இறைவனது வரமே !

கல்லுக்குள் கலைநயத்தைக் காட்டுகிறான் சிற்பி
சொல்லுக்குள் ஆயிரத்தைத் தீட்டுகிறான் எழுத்தன்
நல்லவற்றைத் தீயவற்றை நாட்டுக்கு உரைக்கும்
வல்லமையை எழுத்தாளன் வாங்கிவந்து உள்ளான் !

வாழ்க்கையினை மாற்றுகின்ற எழுத்தாளர் தம்மை
வானவரும் போற்றிடுவார் மனமார நாளும்
வாழ்வினுக்கு ஏற்காமால் எழுதிநிற்பார் ஆகின்
வாழ்க்கையிலே நரகமதை அடைந்திடுவார் விரைவில் !

கம்பனெனும் எழுத்தாளன் கைபட்ட தமிழும்
கவிகாள மேகமது கைபட்ட தமிழும்
நம்ஐயன் வள்ளுவனார் நமக்களித்த தமிழும்
நாளுமே எம்வாழ்வில் நல்லதுணை அன்றோ !

சங்கத்தமிழ் எழுத்தாளர் சபையேறி நின்று
இங்கிதமாய் எமக்களித்த இலக்கியதைப் பார்க்கின்
எங்களது எழுத்தாளர் இவ்வுலகில் என்றும்
இறவாத வரம்பெற்று வாழ்கிறார் என்போம் !

வாழுகின்ற வாழ்நாளை வசந்தமுள தாக்கி
வருங்காலம் எம்வாழ்வில் விடிவு வருமென்று
கூறுகின்ற துணிவுதரும் எழுத்தாலே எம்மை
குதூகலத்தில் குளிக்கவைப்பர் எழுத்தாளர் அன்றோ !

வறுமைதனில் இருந்தாலும் பொறுமையுடன் எழுதி
வையகத்தார் மனங்களிலே மலர்ச்சிவர உதவி
தலைநிமிர்ந்து நிற்கின்ற தன்மையினை உடைய
தகவுடைய எழுத்தாளர் தமைப்போற்றி நிற்போம் !





                       
 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்