உளம்மகிழப் பொங்கிடுவோம் !

கவிஞர்
 எம்.ஜெயராமசர்மா,  மெல்பேண்



னங்கவரும் மார்கழியில்
       மகத்தான நாட்கள்வரும்
இந்துக்கள் கிறீத்தவர்கள்
       எல்லோரும் பங்குகொள்வர்
வைஷ்ணவமும் சைவமும்
       வாழ்த்திநிற்கும் திருவெம்பா
மார்கழியின் முக்கியமாய்
       மனமாசை அகற்றிநிற்கும் !

ஒளிவிழா எனும்பெயரால்
       உத்தமராம் யேசுபிரான்
வழிநிற்போர் அனைவருமே
       வாழ்த்துக்கூறி நிற்பார்கள்
பீடுடைய மாதமாய்
       மார்கழியும் அமைந்துதுநின்று
பெருமகிழ்சி வருவதற்கு
       தைதனக்கு வழிகொடுக்கும் !

தைபிறந்தால் வழிபிறக்கும்
       என்கின்ற நம்பிக்கை
தளர்வுநிலை அகன்றுவிட
       தானுரமாய் அமைந்திருக்கு
பொங்கலென்னும் மங்கலத்தை
       பொறுப்புடனே தருகின்ற
எங்கள்தையை எல்லோரும்
      இன்பமுடன் வரவேற்போம் !

புலம்பெயர்ந்த நாட்டினிலும்
       பொங்கலுக்குப் பஞ்சமில்லை
நிலம்பெயர்ந்து வந்தாலும்
       நீங்கவில்லை பண்பாடு
நலந்திகழ வேண்டுமென்று
       யாவருமே நினைத்தபடி
உளம்மகிழப் பொங்கலிட்டு
       உவகையுடன் இருந்திடுவோம் !

வாசலிலே தோரணங்கள்
       வடிவாகக் கட்டிடுவோம்
வண்ணப் பொடிகொண்டு
      கோலங்கள் போட்டிடுவோம்
எண்ணமெலாம் இறைநினைவாய்
       எல்லோரும் இருந்திடுவோம்
எங்கள்வாழ்வு விடிவுபெற
       இணைந்து நின்றுபொங்கிடுவோம் !

ஆரோக்கியம் ஆனந்தம்
       அனைவருக்கும் வரவெண்ணி
ஆண்டவனை மனமிருத்தி
       ஆவலுடன் பொங்கிடுவோம்
வேண்டுகின்ற அத்தனையும்
       விரைவாகக் கிடைத்துவிட
நாங்களெல்லாம் ஒன்றுசேர்ந்து
       நன்றாகப் பொங்கிடுவோம் !
 




 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்