காதலர் நாள்தன்னை வாழ்த்துவோம் வா

பாவலர் கருமலைத்தமிழாழன்

காதலர்கள் நாளென்றால் கடற்க ரையில்
       கரம்கோர்த்து உடலுரசித் திரிவ தன்று
காதலர்கள் நாளென்றால் சாலை தன்னில்
       காண்பவர்கள் முகம்சுளிக்க நடப்ப தன்று
காதலர்கள் நாளென்றால் சோலைக் குள்ளே
       கள்ளத்தில் முத்தமிட்டு அணைப்ப தன்று
காதலர்கள் நாளென்றால் காத லித்தோர்
       கடிமணம்தான் புரியும்நா ளாக வேண்டும் !

மலர்கொடுத்து புன்னகைத்து மகிழ்வ தோடு
       மணப்பதற்கு நாள்குறிக்க வேண்டும் அன்று
பலர்பார்க்க வாழ்த்துகளைச் சொல்வ தோடு
       பலர்வாழ்த்த நாள்குறிக்க வேண்டும் அன்று
அலரெழுந்து பழியுரைகள் பிறக்கு முன்னர்
      அரும்மன்றல் நாள்குறிக்க வேண்டும் அன்று
நலமாக இருவீட்டார் கலந்து பேசி
      நற்காதல் வெற்றிபெற வேண்டும் அன்று !

உளம்இணைந்த போல்சாதி மதமி ணைந்தே
      உறவாகி வேறுபாடு மறைய வேண்டும்
குலப்பெருமை பேசிமனம் பிரிக்க எண்ணும்
       குறுமனங்கள் மாறிஇசை வளிக்க வேண்டும்
களவொழுக்கம் கற்பொழுக்கம் ஆக வேண்டும்
       கனவெல்லாம் நனவாகக் காண வேண்டும்
வளமான வாழ்வமைய காத லர்நாள்
      வழிகாட்ட வேண்டுமென வாழ்த்து வோம்வா !
 


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்