புகழ்ந்து கவி பாடுவோம் !

கவிஞர் எம்.ஜெயராமசர்மா, மெல்பேண்

ண்மூடிக் காதல்கொள்ளும்
       காதலினை விட்டிடுவோம்
மண்ணிலுள்ளார் மனங்கவரும்
       காதலினைச் செய்திடுவோம்
பெண்மனமும் ஆண்மனமும்
       பேதமின்றிக் கலக்கும்படி
மண்மீது காதலினை
       மலர்ந்துவிடச் செய்திடுவோம் !

அரும்பாகி மொட்டாகி
       மலராகும் காதலினை
விரும்பாதர் இவ்வுலகில்
       இல்லையென்றே இயம்பிடலாம்
நரம்பெல்லாம் முறுக்கேற்றும்
       நற்காதல் என்றென்றும்
நம்வாழ்வின் அடித்தளமாய்
       நமையியக்கும் சக்தியன்றோ !

காதலிப்பார் வாழ்வெல்லாம்
       காணுவது பேரின்பம்
காதலனும் காதலியும்
       கனவினிலும் காதலிப்பார்
சோதியெனக் காதலங்கே
       சுடர்விட்டு நிற்குமங்கே
சொர்க்கமதைக் காதலர்கள்
       சொந்தமாய் ஆக்கிடுவார் !

காலமெலாம் காதலுடன்
       கைகோர்த்துப் பாருங்கள்
காணுகின்ற அத்தனையும்
       கற்கண்டாய் ஆகிவிடும்
ஓடியோடி உழைத்தாலும்
       உள்ளமதில் காதலின்றேல்
உங்கள்வாழ்வு உலகினிலே
       உவப்புதனை ஈந்திடுமா !

காதலர்கள் தினமதிலே
       காதலினைப் போற்றிடுவோம்
காலமெலாம் காதலது
       வாழ்கவென வாழ்த்திடுவோம்
சாதிமத பேதமின்றி
       காதலர்கள் தினமதனை
பூதலத்தில் பொலிகவென்று
       புகழ்ந்து கவிபாடிடுவோம் !
 


 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்