அன்னை மண்ணின் அழுகுரல்கள்

மானியூர் மைந்தன்


அன்னை மண்ணின்
அழுகுரல்கள்
ஆழப்புகுந்து மன
ஆணிவேரையே
அசைக்குதம்மா

உறவுகள் துடிக்கையிலே
உணர்வுகள் வெடிக்கிறது
ஒட்டிய வயிறோடும்
ஏக்கம் கொண்ட விழியோடும்
நலவாழ்வுக் கூடார
நரபலி முகாம்கள்
சாட்சியில்லாத
சாவுக்களமாகியது

தாய்மண்ணில்
வாழும் தமிழனை
முழுமையாய்
துடைத்தழித்து
ஒழித்துவிட
கையாளும்உத்திகள்
காத்திருந்த தமிழினத்தை
காவுகொள்ளும் திட்டம்

உறுப்புகள் இழந்து
தசைகள் அறுந்து
மருந்தின்றித் துடித்து
இறந்தவர் பல ஆயிரம்
உயிர்பிழைக்க வெட்டிய
பதுங்குகுழிகளே
அவர்களின் மரணக்குழிகளாய்
மாறிப்போயின

பாரினிலே
பத்துகோடி தமிழன்
பரவிக்கிடக்கின்றான்
தனக்கென்று-ஒரு
தாய்நாடு அவனுக்கில்லை
அரசியல் அநாதைகளாய்
கிடந்து அழிகின்றான்
யாரோடு நோவோம்
யாருக்கு எடுத்துரைப்போம்

விடுதலையின் வாசல்
தாழிட்டுக்கிடக்கிறது
மேலைக்கடலெங்கும்
ஈழக்காற்றடித்து
கரைமோதும் விடுதலையின் ஓசை
எதிரொலிக்கும்
உலகச்செவியதிர
 


navaas06@yahoo.de