அடிமனதின் கனத்த நினைவுகள்

மானியூர் மைந்தன்

இரத்தப் பசிகொண்ட
இனவெறிக் கழுகுகள்
கொத்தணிக்குண்டுபோட்டு
கொத்துக் கொத்தாய்
கொன்று குவித்த
பேரவலங்களின்
நினைவழியாது எமக்கு

அரைகுறையாய் புதையுண்ட
அனாதைப்பிணங்களாய்
எந்தையர் மண்ணை
இடுகாடாக்கும்
அவலங்களின்
அரங்கேற்றம்

ஏழ்மையிலும்
விருந்தினரை
உபசரிக்கும்
உயர்குணத்துக்கு
உரித்தான இனம் இன்று
ஒருவேளைக் கஞ்சிக்காய்
கால்கடுக்க
காத்துக் கிடக்குது

வரலாற்றின்
இடிபாடுகளிலிருந்து
மீண்டுவரத்துடிக்குது
தமிழினம்

உலகத்து
உறவுகளே
இந்நினைவுகளை
தொலைந்துவிடாமல்
தொகுத்து வைத்துக்கொள்ளுங்கள்
நித்திய வரலாறாய்
எங்களுக்கும் காலம் வரும்
தரணி போற்ற
தலைநிமிர்வோம்


navaas06@yahoo.de