நூல் : உன்னை நினைப்பதற்கு
தொகுப்பாசிரியர் : மருதூர் .எல். அன்ஸார்
நூல் ஆய்வு:
கலைமகள் ஹிதாயா  றிஸ்வி

தென்கிழக்கு
பிரதேசத்தின் கவிதைத் தொகுப்பு "உன்னை நினைப்பதற்கு" இன்றைய நவீன உலகில் தகவல் தொழில் நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து முழு உலகையும் வினாடிப் பொழுதில் கண்டுகொள்கின்ற எமது சமூகத்தின் மத்தியிலிருந்து இவ்வாறான எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் படைப்புக்களை தொகுத்து ஆவணப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் தன்னை அர்பணித்துக் கொண்டிருக்கும் மருதூர் .எல் அன்ஸார் அவர்களைப் பாராட்டுகின்றேன். எழுத்தாளர்களின் பேனா முனைகள் அம்புபோல் பாயும் என்பார்கள் அதனை ஒத்ததாக தாங்கள் கவிதையுடன் மட்டும் நின்று விடாமல் எமது சமூகத்தின் கல்வி,கலாச்சார,சமூக,பிரதேச ஒற்றுமை.இதர அபிவிருத்திகள் போன்றவற்றினையும் தங்களுடைய பேனா முனைகள் ஊடாக வெளிக் கொண்டுவரவேண்டும்.உன்னை நினைப்பதற்கு தொகுதியில் மொத்தம் 27 கவிஞர்களின் கவிதைகள் இத்  தொகுதியில் இடம்பெற்றுள்ளன.அவர்கள்,கவிஞர்.மருதூர் .எல் அன்ஸார்,கலைமகள் ஹிதாயா றிஸ்வி,கவிஞர்.யூ.எல்.எம்.பைஸர்,கவிஞர்.முகம்மது நவாஸ் (ஸிஹாப்),கவிதாயினி சுல்பிகா ஷெரீப்,கவிஞர்.எம்..எம்.முஜீப்,கவிதாயினி மாஹிரா முஜீப்,கவிஞர்.சம்சுதீன் ஜனூஸ்,கவிதாயினி சப்னா அமீன்,கவிதாயினி தர்பா பானு,கவிஞர்..எல்.ஜாபீர்,கவிதாயினி சுஹைதா  .கரீம்,கவிதாயினி பாயிஸா  அலி,கவிஞர் வதுறுதீன் முகம்மத் றியாத்,கவிஞர் கே.எம்.முகம்மத் சித்தீக்,கவிஞர். .முஹைதீன்,கவிதாயினி அமானுள்ளா சுஜானா,கவிதாயினி எம்.எம்.எஸ்.பஸினா,கவிதாயினி எம்.எச்,ஜிப்ரியா,கவிதாயினி தங்கராசா மெரீனா,கவிதாயினி மர்சூகா ஜெமீல்,கவிதாயினி .பவதாரினி,கவிதாயினி றிஸ்வியா தாஹிர்,கவிஞர்.சமீம் முஹம்மட் சனீம்,கவிதாயினி றிம்ஷா முஹம்மட்,கவிதாயினி எச்.எப் றிஸ்னா,கவிஞர்.ரபீக் மொஹிடீன் இந்த கவிஞர்களுள் பலரது கவிதைகள் வளரக்கூடிய தன்மை விளங்குகிறது.சில வளர்ந்த கவிஞர்களினதும் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
அவற்றுள்,

சுஹைதா .கரீமின் கவிதை

வாக்குக் கேட்டு வாஞ்சையுடன்
வாசல் வரை வருகிறார்
வார்த்தையாகவே ஜாலம் காட்டி
வாக்குப் போட கெஞ்சுகிறார்.. வெற்றி பெற்றால்
வெட்டிப் பேச்சு போலவே
வாக்கு மாறி,வந்தவரை
வேங்கையாகப் பாய்கிறார்..

கலைமகள் ஹிதாயா றிஸ்வியின்  வரிகள்...

கூடிய விரைவில்
வாழ்க்கையின் சோதனைகளையும்
வேதனைகளையும்..
துயரங்களையும்..
துன்பங்களையும்..
கஷ்டங்களையும்..
நஷ்டங்களையும்..
ஒன்றாக மூட்டை கட்டி
சவமாய் சடலமாய
வீசப் போகிறேன்அப்போது
உயிர் இருந்தும் உணர்வுகளற்ற
என் வாழ்க்கைக்கு..
கல்லறையும் கிடையாது
சமாதியும் கிடையாது
கப்றும் கிடையாது....

 எஸ்.ஜனூஸின் வரிகள்..

கறிச் சட்டிக்குள்
சோறு பிசைந்து சாப்பிட்டால்..
மீசை முளைக்காதென்று..
எனது உம்மம்மா சொன்ன..
ஐதீகமொன்றை....இன்றுகளில்
நினைத்துப்பார்க்கின்றேன்....

 பாலை வனம் ஏங்கும்

மழைத் துளியாய்...
மீசைக்காய் ஆசைப்பட்ட..
அந்த இனிய நாட்களை..
அசை போடுகிறது..
எனதான மனசு....


வதுறுதீன் முகம்மத் றியாத்

மனித ஜீவன்களிலிருந்து
வாய் பேசா மிருகங்கள் வரை
ஏன் மரம் செடி கொடி வரை
மரணம் எப்பவும் வரலாம்!
எப்படியும் வரலாம்!!
ஓர் பெண்ணின் கற்பைக் காப்பாற்றுவது
நோயோடு போராடித் துடிக்கும்
உயிரைவிட மேலானது! அவசியமானது!!


கிண்ணியா பாயிஷா அலி

அவளுக்குமென்றான பெருமித முகங்களின்
மறுபுறத்திலே பதிந்து கிடக்கிற ஆழமான கீறல்களோடே
மெல்லமாய் உணர்கிறேன்..................
வீடும் அது சார்ந்ததும் மட்டுமேயான
ஒற்றைச் சிந்தனைக்குள் நிறைவு கண்ட
உமம்மாக்கள்தான் பாக்கியவாதிகள்


வெலிகம  றிம்ஸா முஹம்மட்

புரிதல்களின்மையின் ஏக்கத்தோடு
மருண்டு போகிறது
என் இதயப் பார்வை

கணத்துக்குகணம்
பணம் பார்த்து
குணம் மாறும்
மானிடர் கண்டு சுருக்கிக் கொள்கிறது
அது தன் சிறகை

வேகமாக மிக வேகமாக
கடந்து செல்லும்
மனிதர்களின் முகம் பார்த்து
துயரங்கள்
மீள்சுழற்சியாகின்றன..........


இவ்வாறு பல கவிதைகள் இத் தொகுதியில் பல தலைப்புக்களில் இடம்பெற்றுள்ளன.இக் கவிஞர்கள் உடல் அயர்ந்தாலும் மனம் தளராத கவிப்பூக்களை தொடர்ந்தும் தர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.இத் தொகுப்பாசிரியர் அன்ஸாரின் இந்த முயற்சிக்கு என் இத பூர்வமான நல்லாசிகள்.


நூல் :உன்னை நினைப்பதற்கு
வெளியீடு:லக்ஸ்டோ நிறுவனம்
முகவரி:கைய்ரியா மன்ஸில்,
184 m/1 கடற்கரை வீதி,
சாய்ந்தமருது - 02
இலங்கை.

                                                                       
                  
                               
sk.risvi@gmail.com